நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#நிகழ்வுகள் #பயிலரங்கம் # தமிழாசிரியர்கள் #தமிழ் இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#நிகழ்வுகள் #பயிலரங்கம் # தமிழாசிரியர்கள் #தமிழ் இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூலை, 2009

புதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம்

பயிற்சியில் கலந்துகொண்ட தமிழாசிரியப் பெருமக்கள்

 புதுவை அரசு அண்மையில் கணிப்பொறி இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்னும் அளவிற்கு மிகச்சிறந்த ஒரு திட்டத்தைப் புதுவையில் நடைமுறைபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கணிப்பொறி, அகண்டவரிசை இணைய இணைப்புக்கு வழி வகை செய்துள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதன்வழி செய்திப்பரிமாற்றத்தில் மிகச்சிறந்த முன்னேற்றமும் ஏற்பட உள்ளது.

 இதனை உணர்ந்த கல்வித்துறையினர் புதுச்சேரியில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்கும் பொழுது என்னை அழைத்து அவர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றனர். இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் புதுவை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.

 07.07.2009 இல் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சற்றொப்ப அறுபதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தமிழ் இணையம் பற்றிய செய்திகளை அறிந்தனர். இவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூ உருவாக்கம், பயன்பாட்டுக்குரிய தளங்கள், தமிழ் விக்கிபீடியா, நூலகம் சார்ந்த தளங்கள், கல்வி சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

 ஓய்வுபெறும் அகவையில் இருந்தவர்கள் கூட ஆர்வமுடன் கேட்டனர். சிலர் வலைப்பூ உருவாக்கி என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினர். மூத்த, இளைய ஆசிரியப் பெருமக்களுள் பலர் இணையத்தின் வீச்சைத் தெரிந்து வைத்திருந்தனர். தமிழில் எளிமையாக எடுத்துரைப்பதை அனைவரும் பாராட்டினர்.

 தட்டச்சுப் பலகை அமைப்பு (ஒளியச்சு), என்.எச்.எம். குறுவட்டு அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

முனைவர் இராச. திருமாவளவனுடன் மு.இளங்கோவன்

பயிற்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர்

 முனைவர் இராச. திருமாவளவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழாசிரியர்கள் தமிழ் இணைய அறிவு பெற வழிவகுத்தார்.