நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
# பொ.வே.சோமசுந்தரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
# பொ.வே.சோமசுந்தரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நிதி உதவி வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி…


பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப் பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.

இதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010). அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.

இச்செய்திகள், வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப் புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார். தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பெருமழைப் புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து, அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக் கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக் குழுவினரையும் வேண்டுகிறோம்.

நன்றி:தினமணி, நக்கீரன், குமுதம், மேலைப் பெருமழை ஊராட்சி மன்றம் (22.09.2010)

திங்கள், 6 செப்டம்பர், 2010

திராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து


வரவேற்புத் தட்டிகள்

 தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.

 நூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.


பெருமழைப்புலவரின் படத்திறப்பு-திரு.மா.கல்யாணசுந்தரம்

 முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு.ந.உ.சிவசாமி அவர்கள் தாம் பெருமழைப்புலவரின் தலைமையில் திருமணம் செய்துகொண்ட சிறப்பை விளக்கினார். முன்னிலையுரையாகப் புலவர் சிவகுருநாதன் அவர்கள் புலவரின் உரைச்சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைத்தார். வழக்குரைஞர் தாயுமானவன் பெருமழைப்புலவரின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.

 முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சோ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடிப்படைக்காரணங்களையும்,பெருமழைப்புலவரின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தார். மேலும் பெருமழைப்புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோரும் புலவரின் எழுத்துப்பணிக்கு உதவிய அன்பர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

 புலவரின் குடும்ப நண்பரான திரு.வடிவேல் அவர்கள் (உதயமார்த்தாண்டபுரம்) பெருமழைப்புலவரின் இளமை வாழ்க்கையையும், அவர்களின் குடும்பச் சூழலையும் விளக்கினார். புலவரின் மாணவர் புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் தமக்கும் பெருமழைப்புலவரும் சதாசிவ அடிகளுக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.

 புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள், பெருமழைப்புலவரின் நூற்றாண்டுத் தொடக்கவிழா ஏற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.

 பெருமழைப்புலவரின் மிகப்பெரிய உரை வரையும் ஆற்றலுக்கு அடிப்படையாக அமைந்த அவரின் இலக்கிய இலக்கண நூல் பயிற்சி, சமய நூல் பயிற்சி, படைப்பாற்றல், உரை வரையும் ஆற்றல் யாவற்றையும் நினைவுகூர்ந்து தமிழுலகம் போற்றும்படியாகப் பெருமழைப்புலவர் உரைவரைவதற்கு உரிய பயிற்சி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் வழியாகக் கைவரப்பெற்றமையை அறிஞர் அவைக்கு நினைவுப்படுத்தினார்.

 மேலைப்பெருமழையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது போல் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற உள்ளதையும் தமிழர்கள் பரவி வாழும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நூற்றாண்டுவிழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்து இணையத்தில் இந்த விழா அழைப்பிதழ் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் வாழ்த்துரைத்தனர் எனவும் இவர்களுள் முனைவர் பொற்கோ, சிங்கப்பூர் திரு.முஸ்தபா, நாசா விண்வெளி ஆய்வுமையப் பொறியாளர் முனைவர் நா.கணேசன், கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா,மலேசியா பேராசிரியர் கார்த்திகேசு,சென்னை அண்ணாகண்ணன், உள்ளிட்டவர்கள் அன்பான வாழ்த்துரைத்ததை நினைவூட்டிப், பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட தினமணி,தட்சு தமிழ், தமிழன்வழிகாட்டி (கனடா), சங்கமம் லைவ் உள்ளிட்ட இணையதளங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

 புலவர் உதயை மு.வீரையன் அவர்கள் தாம் தினமணியில் புலவரின் வாழ்க்கையை எழுதியதை நினைவுகூர்ந்ததுடன் தம் ஊரான உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து நடந்துவந்து பெருமழைப்புலவரின் உரைப்பணிகளுக்குத் துணை செய்ததையும் நினைவுகூர்ந்தார். மேலும் சர்க்கரைப்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில்வாழ்ந்த புலவர் பெருமக்களின் உரைப்பணிகளுயும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்தார்.

 கரந்தைக் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.

 முனைவர் தனராசன் அவர்கள் பெருமழைப்புலவரின் உரைப்பணிகளையும், ஊர்ப் பெருமைகளையும் நினைவுகூர்ந்தார்

 கரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் அவர்கள் பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழாவின் நிறைவுப் பேருரையாற்றினார்.

 பெருமழைப்புலவரின் பல்துறைப் புலமைகளை நினைவுகூர்ந்த பேராசிரியர் புலவர் அவர்கள் எழுதிய உரை எளிய மக்களுக்கும் புரியும்படியும் அதே சமயம் ஆழமாகவும் இருந்ததைப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மானனீகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு உள்ளிட்ட நூல்களில் படிந்து கிடக்கும் உரை நயங்களை அழகுதமிழில் எடுத்துரைத்தார். புலவரின் உரைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனைக்கான வித்து ஊன்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார். பிறசொல் கலவாத ஆழம் படர்ந்த புலவரின் உரை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குப் பயன்படுவதால் உலகத் தமிழர்கள் அனைவரும் புலவருக்கு விழா எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் புலவருக்கு மணிமண்டபம் கட்ட அரசியல்துறையில் சிறப்புடன் விளங்கும் அரசியல்வாணர்கள் முன்வர வேண்டும் எனவும் நூல்கள் விரைந்து நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் புலவர் குடும்பம் ஆதரிக்கப்படவேண்டும் என்று சிறப்புடன் பேசினார்.

 விழா நிறைவில் பெருமழைப்புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையை உணர்வு வெளிப்பாட்டுடன் வெளிப்படுத்தினார்.தம் குடும்பத்துக்கு நிதியுதவி என்பதை இரண்டாவதாக வைத்து,தம் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பதை முதன்மையாக்க வேண்டும் என அரசையும், தமிழன்பர்களையும் கேட்டுக்கொண்டார்.

 விழாத் தொகுப்புரையை மயிலாடுதுறை, மன்னம்பந்தல் அ.வ.கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் சு.தமிழ்வேலு வழங்கினார்.


சி.சிவபுண்ணியம் அவர்கள் வரவேற்புரையாற்றுதல்


முனைவர் மு.இளமுருகன்


புலவர் உதயை மு.வீரையன் உரையாற்றுதல்


பேராசிரியர் சு.தமிழ்வேலு சிறப்பிக்கப்படுதல்


ந.உ.சிவசாமி அவர்கள் உரையாற்றுதல்


பேராசிரியர் அரங்க.சுப்பையா உரையாற்றுதல்


தினமணி செய்தியாளர் இரவிக்குச் சிறப்புச் செய்தல்


முனைவர் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்கிறார் சோ.இராசமாணிக்கம்


சோ.இராசமாணிக்கம் முனைவர் மு.இளமுருகனுக்குச் சிறப்புச் செய்தல்


பேராசிரியர் நா.தனராசன்


பார்வையாளர்கள்-மகளிர்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பெருநிலக்கிழார் அரங்கசாமி அவர்கள்


சோ.பசுபதியின் நன்றியுரை

ஞாயிறு, 16 செப்டம்பர், 2007

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்



 இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித் தமிழ்க்கவிதை உலகைப் புதுப்பாதையில் வழிநடத்தியதும் இந்நூற்றாண்டில்தான் நிகழ்ந்தது. பலநூற்றாண்டுகளாகத் தமிழ்மொழியில் படிந்திருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தெறிந்து தனித்தமிழ் இயக்கம் மக்கள்இயக்கமாக மாற்றம்பெற்றதும் இந்நூண்டில்தான் என்று எழுதினால் மிகையன்று.

 அத்தகு மொழிவளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகளைப் போல் பழந்தமிழ் நூல்கள் மக்களால் எளிதில் பயில்வதற்கு ஏற்றவகையில் உரை வரையப்பட்டும் பதிப்பிக்கப்பெற்றும் நாடு முழுவதும் பரவியதும் இருபதாம் நூற்றாண்டில்தான் நடந்தன. இவ்வாறு உரைவரையும் பெரும்பணியில் தமிழகத்து அறிஞர்கள் பலர் ஈடுபட்டுத் தம் அறிவையும் உழைப்பையும் நல்கி என்றும் தமிழகமக்களால் நினைக்கும்படியான அழியாப்புகழைப் பெற்றுள்ளனர்.அவ்வறிஞர் பெருமக்களுள் என்றும் தலைமேற்கொண்டு போற்றும்படியான பெருமைக்கு உரியவராகப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் விளங்குகிறார். அவர்தம் தமிழ் வாழ்வையும் உரைப்பணிகளையும், படைப்பாக்கங்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

சோமசுந்தரனாரின் இளமைவாழ்க்கை

 சோமசுந்தரனார் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்னும் ஊரில் 1909 செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் வேலுத்தேவர் என்பதாகும்.தந்தையார் உழவர்.திண்ணைப்பள்ளி வரை கற்றவர்.தம்மகனும் திண்ணைப்பள்ளிவரை கற்க இசைந்தார்.

 அக்காலத்தில் சோமசுந்தரனார் திண்ணைப்பள்ளியில் வழக்கமாகக் கற்பிக்கும் அரிச்சுவடி, ஆத்திசூடி, வெற்றிவேற்கை,நிகண்டுநூல்கள்,நைடதம், கிருட்டிணன்தூது,அருணாசலப்புராணம் முதலான நூல்களைக் கற்கும் வாய்ப்பினை முதல் ஐந்தாண்டுகளில் பெற்றார்.அதன்பிறகு சோமசுந்தரனார்க்குக் கற்கும் ஆர்வம் இருந்தாலும் தம் மகனை உழவுத்தொழிலில் ஈடுபடுத்தவே தந்தையார் விரும்பினார்.எனவே தந்தையாரின் கண்ணில்படாமல் தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார்.

 திண்ணைப் பள்ளியில் சோமசுந்தரனார்க்குப் பயிற்றுவித்த ஆசிரியர்க்கு வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சி இருந்தது.அவ்வாசிரியப் பெருந்தகை பாரதச் சொற்பொழிவு செய்யும் ஆற்றல்பெற்றவர். அவர்தம் ஆளுமை நம் சோமசுந்தரனாரை ஆட்கொண்டது.அவர்போல் நம் புலவரும் படிக்க விரும்பிப் பெற்றோர்க்குத் தெரியாமல் மடம்,கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று தனித்திருந்து படித்தார். இராமாயணம்,பாரதம் முதலான நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.

 சோமசுந்தரனார்க்குப் பத்து அகவை ஆகும்பொழுது இவர்தம் அன்னையார் மறைந்தார். தந்தையார் மறுமணம் செய்துகொண்டதால் சோமசுந்தரனார் தம் தாய்மாமன் இல்லத்தில் தங்கியிருந்தார்.அங்கும் இவர் கல்விபயில ஒத்துழைப்பில்லாமல் போனது.

மேலைப்பெருமழைக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் வாழ்ந்த சர்க்கரைப்புலவரிடம் தம் புலமைநலம் தோன்ற சில பாடல்களை எழுதிச்சென்று காட்ட சோமசுந்தரனாரின் கவிபுனையும் ஆற்றலையும் கல்வி ஆர்வமும் கண்ட சர்க்கரைப்புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பயிலப் பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

சோமசுந்தரனாரின் அண்ணாமலைநகர் வாழ்க்கை

 தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தரனார்க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய அமுதசுரபியாகத் தமிழறிவை வழங்கியது.இவர் பயின்ற காலத்தில் சோழவந்தான் கந்தசாமியார்,விபுலானந்தர் அடிகள்,பண்டிதமணி கதிரேசன் செட்டியார். பொன்னோதுவார்,பூவராகன் பிள்ளை முதாலான பேரறிஞர்கள் தமிழ்பயிற்றுவிக்கும் பணியில் இருந்தனர்.

 அண்ணாமலைப்பல்கலையில் பயிலும் மாணவர்குக்கு அந்நாளில் வழங்கப்பட்ட பன்னிரு உரூவா உதவித்தொகையைக் கொண்டு நம் புலவர் படிக்க வேண்டியிருந்தது.குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகச் சோமசுந்தரனார் கல்வி பயில்வதால் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாமல் போனது.

 எனவே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றுகல் தொலைவிலிருந்த நண்பர் ஒருவருடன் தங்கித் தாமே சமைத்துண்டு ஐந்தாண்டுகள் வறுமையோடு தமிழ்படித்ததார். அக்காலத்தில் சோமசுந்தரனார்க்குப் பேராதரவாகப் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் முதலானவர்கள் இருந்துள்ளதைப் பண்டிதமணி வரலாறு எழுதும்போது சோமசுந்தரனார் நன்றிப்பெருக்குடன் பின்வருமாறு எழுதுவார்:

...யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப்பழகும் பேறுபெற்றேன்.என்பால் பண்டிதமணியவர்களும் திரு.ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறைகொண்டு அன்பு பூண்டொழுகினர்...(பக்.46)

...அக்காலத்தில் யான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தே ஒரு தமிழ்மாணவனாக இருந்தேன்.பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபொழுது என்போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை....( பக.50)

 1941 ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் அறிவுரை தருநர் (அட்வைசர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலைநகரில் இருந்து பணிபுரிந்துவந்தார்கள்.

 ...வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற கொளடலியம் என்னும் பொருள்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். இம் மொழிபெயர்ப்புப் பணியில் யானும்,ஒரு வடமொழிவாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணைசெய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல (பக்.93,94).

 சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேறினார். சோமசுந்தரனார் தமிழறியவே கல்வி கற்க வந்தாரேயன்றி வேலைக்குச் செல்லும் வேட்கையில்லாதவர். எனவே தமிழறியாத அந்நாளைய ஆளுநர் எர்சுகின் பிரபு கைகுலுக்கி வழங்கிய புலமைச் சான்றை (டிப்ளமோ)க் கிழித்துக்காற்றில் பறக்கவிட்டு ஊர்சென்றார்.

குடும்பம்

 சோமசுந்தரனார் ஊரையடைந்து தம் முன்னோர் தொழிலான வேளாண்மைத்தொழிலில் ஈடுபட்டார்.தம் மாமன் மகளான மீனாம்பாள் என்பவரை மணம்செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.

 அண்ணாமலை நகரில் இருந்த தம் ஆசிரியப் பெருமான் பண்டிதமணியாரைப் பார்க்க ஒருமுறை சென்றபொழுது அவர் வரைந்த திருவாசக உரைப்பணியில் இவரை ஈடுபடுத்தினார்.நாற்பது உருவா ஊதியத்திற்குப் பண்டிதமணியார் உரைசொல்லவும் அதனை எழுதிவழங்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பண்டிதமணியாருடன் பணிசெய்து உரைவரையும் போக்கினைத் தெரிந்துகொண்ட சோமசுந்தரனார்க்குப் பின்னாளில் உரை வரையும் வாய்ப்புத்தேடி வந்தது. பண்டிதமணியாரின் உரைப்பணி நிறைவுற்றதும் சோமசுந்தரனார் மீண்டும் உழவுப் பணியில் கவனம் செலுத்தினார்.

 உள்ளூர் அன்பர்கள் விருப்பத்திற்கு இணங்க, சில கட்டுரைகளையும், நாடங்களையும் வரைந்த புலவருக்குக் கருப்பக்கிளர் சு.அ.இராமசாமி அவர்கள் வழியாகத் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு அமைந்ததும் அதுநாள்வரை எரிமலைபோல் உள்ளுக்குள் இருந்த புலமை நலம் யாவும் பல்வேறு உரை நூல்கள் வழி உலகெங்கும் பரவின.

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் தொடர்பு

 சோமசுந்தரனார்க்கு மருதவனம் கு.குருசாமி என்பவர் நண்பராக விளங்கினார். அவர்கள் வழியாக அந்நாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த புலவர் சு.அ.இராமசாமி அவர்களைக் கண்டு கழகத்தின் தொடர்பைப் பெற்றார்.முதலில் சோமசுந்தரனாரின் படைப்பு நூல்களான செங்கோல் (நாடகம்), பண்டிதமணி, பெருங்கதை மகளிர், மானனீகை (நாடகம்) முதலியன வெளிவந்தன. சு.அ.இராமசாமி அவர்களுடன் இணைந்து சூளாமணிக்கு உரை வரையத் தொடங்கினர். அதன் பிறகு சங்க நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் சோமசுந்தரனார் உரைவரையவும், விளக்கவுரை வரையவும் வாய்ப்பினைப் பெற்றார்.

 அவ்வகையில் 1. சிலப்பதிகாரம், 2. மணிமேகலை,  3. அகநானூறு, 4. பெருங்கதை, 5.உதயண குமாரகாவியம், 6. வளையாபதி, 7. குண்டலகேசி, 8. நீலகேசி, 9. ஐங்குறுநூறு, 10. புறப்பொருள் வெண்பா மாலை, 11. கல்லாடம், 12. பட்டினத்தார் பாடல், 13. பரிபாடல், 14. குறுந்தொகை, 15. நற்றிணை (பின்னத்தூர் நாராயணசாமி உரைக்கு விளக்கம்), 16. பத்துப்பாட்டு,  17.சீவக சிந்தாமணி, 18.கலித்தொகை (நச்சினார்க்கினியர் உரைக்கு விளக்கம்), 19. திருக்கோவையார் (பேராசிரியர் உரைக்கு விளக்கம்) முதலிய நூல்களுக்கு இவர்தம் உரையும், விளக்கமும் அமைந்துள்ளன.

 சோமசுந்தரனார்க்கு உரைவரையும் ஆற்றல் அமைந்ததுடன் உரைநடை எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். பெருங்கதையை உரைநடையாக வரைந்துள்ளமை இதற்குச் சான்றாகும்.

 சோமசுந்தரனார் பாடல் இயற்றுவதிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாக 1952 இல் புயல்பற்றி இவர் பாடிய பாடல்களும்,1966 இல் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டபொழுது மழைவேண்டி இவர் பாடிய பாடல்களும் சான்றாக விளங்குகின்றன.

 சோமசுந்தரனாரின் படைப்பு நூல்கள், உரைநூல்கள்,உரைநடை நூல்கள், கட்டுரைகள் முதலானவற்றைக் கற்கும்பொழுது அவர்தம் தனித்திறமைகளை ஒருவாற்றான் உணரமுடியும். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் பழுத்த தமிழறிவு இரண்டு அறிஞர்கள் வழியாக இத் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும். மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஒருவர்.மற்றவர் நம்புலவர் பெருமான் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்.இவ்விரு அறிஞர்களின் எழுத்துகளையும் ஆராய்ச்சிகளையும் ஊன்றிக்கற்றால் மிகச்சிறந்த தமிழாளுமை தெரியவரும்.

 நம் சோமசுந்தரனாரோ இலக்கண நூல்கள், சங்க நூல்கள், காப்பியங்கள், பக்திநூல்கள், உரையாசிரிர்களின் பேருரைகள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் யாவற்றையும் கரைகண்டுள்ளமை அவர்தம் தமிழ்க் கொடைகளின் வழிபுலப்படுகின்றது. அடியார்க்குநல்லலார், சேனாவர்யர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பின்னத்தூர் நாராயணசாமியார் முதலான உரையாசிரியப் பெருமக்கள் விளக்கம் கூறாத பல இடங்களை விளக்கிச் செல்வதும், பொருத்தம் இல்லாத இடங்களை எடுத்துரைப்பதும், கூடுதல் விளக்கம் தருவதும், சரியான விளக்கம்தர முயன்றுள்ளதும் எண்ணி எண்ணி வியப்புறும் தகுதிப்பாடுகளாம்.

 தமக்குத் தெரியாத,தொடர்பில்லாத சில மதம், சமயம், இசை, கூத்து சார்ந்த பகுதிகளுக்கு விளக்கம் எழுதுவதற்கு அத்துறை வல்லாரை அணுகி உரை வரைந்துள்ளமை அவர் தமிழ் இலக்கியங்கள்மேல் கொண்டிருந்த பற்றிற்குச் சான்றாகும். அவ்வகையில் நம் புலவர்பெருமான் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரைவரையும்பொழுது இசைப்பேரறிஞர் இராமநாதனாரிடம் இசை நுணுக்கங்களை அறிந்ததை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும் (திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்களுடன் நேர்காணலில், நாள்: 01.09.2007).

 உரைநடை வரைந்தபொழுதும், உரை வரைந்தபொழுதும் பன்னூறு நூல்களை மேற்கோள்காட்டிச் செல்லும் திறம் அவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பிற்குச் சான்றாகும். இடையிடையே இலக்கணக் குறிப்புகளை அமைப்பது சொற்பொருள் வரைவது, இலக்கியத்தின் இனிய பகுதிகளைப் படிப்பவர்க்கு எடுத்துக்காட்டிக் கதை நிகழும் இடத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துவது இவரின் தனி இயல்பாக உள்ளது.

 சோமசுந்தரனாரின் படைப்புகள், உரைச்சிறப்புகள், உரையாளுமை, உரைவரைதலில் மேற்கொண்ட நுட்பங்கள், இவர்தம் உரைப் பணிக்குத் தமிழுலகில் உள்ள இடம் ஆகியன முறையே ஆராய்ச்சி செய்யப்பெறல் வேண்டும்.

 தம் பிறந்த ஊரான மேலைப்பெருமழையில் இருந்தவாறே பழந்தமிழ் நூல்களுக்குப் பல்லாண்டாக உரைவரைந்து சென்னைக்கு அனுப்பி வந்தார். இத்தகு தமிழ்ப்பணியில் சோமசுந்தரனாரை ஈடுபடுத்திய கழக ஆட்சியர் வ.சுப்பையாபிள்ளை அவர்கள் என்றும் தமிழ் உலகத்தினரால் போற்றத்தக்கவர்.

 சோமசுந்தரனார் பல ஆண்டுகளாக உரைவரைந்ததால் உடல்நலம் போற்றவில்லை.உடல் பாதித்தது. ஏறத்தாழ நான்காண்டுகள் வலக்கையில் கடுப்பு ஏற்பட்ட அந்த நேரத்திலும் தாம் உரைசொல்ல பிறரை எழுதச்செய்து அனுப்பி வந்தார். மூச்சுத் திணறல் முதலான நோய்கள் புலவரை வாட்டின. பல்வேறு மருந்துகளை உட்கொண்டு வந்தார். இதன் காரணமாகவோ என்னவோ பக்கவாதம் என்னும் நோய் கடுமையாகத் தாக்கியது.

 புதுவை சிப்மர் மருத்துவமனையில் 21.12.1971 இல் சேர்க்கப்பட்டு உணர்விழந்த நிலையில் பலநாள் இருந்த நம் புலவர் பெருமான் சோமசுந்தரனார் 03.01.1972 இல் இயற்கை எய்தினார்.

 சங்கப் புலவருக்கு நிகரான ஆற்றலைப் பெற்றிருந்தும் ஆசிரியர் பணியிலோ பிற மேடைப் பேச்சுப் போன்ற ஆரவாரப் பணிகளிலோ ஈடுபடாமல் தமிழ் நூல்களைத் தமிழர்கள் அனைவரும் கற்கவேண்டும் அதன் வழியாகப் பழந்தமிழகம் பற்றி மக்கள் அறியவேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்ந்த சோமசுந்தரனாரின் புலமையை மதிக்கும் வண்ணம் அவர் பெயர் என்றும் நின்று நிலவத் தக்க வகையில் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அவர்தம் பெயரைச்சூட்டி மகிழ்வது அப்புலவர் பெருமானுக்கு நாம் செய்யும் கைம்மாறாக அமையும்.

நன்றி: திண்ணை இணைய இதழ் 06.09.2007