நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 அக்டோபர், 2025

பேராசிரியர் பழநி. அரங்கசாமி

 

முனைவர் பழநி.  அரங்கசாமி 

[பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம் என இருமொழிப் புலமையாளர். தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தமிழ் வித்துவான் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைழக்கழத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும். மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிப் புகழ்பெற்றவர். சங்க இலக்கியங்களையும் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளையும் ஆங்கில நூல்களின் வழியாக அறிமுகம் செய்வதை ஆர்வமாகச் செய்துவருபவர். தஞ்சையில் வாழ்ந்துவருகின்றார்.] 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி தஞ்சாவூரை அடுத்துள்ள விண்ணமங்கலம் என்னும் ஊரில் 05.06.1936 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பழநிவேலு, ரெங்கம் அம்மாள் என்பனவாகும். தாம் பிறந்த ஊரான விண்ணமங்கலத்தில் தொடக்கக் கல்வியையும் தம் ஊருக்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் அமைந்த சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் முதல் படிவம் முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையும் பயின்றவர்(1952). 1953 முதல் 1957 வரை நான்கு ஆண்டுகள் தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்றவர் இவர் பயின்ற முதல் மூன்று ஆண்டுகளும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர். காரைக்குடி அழகப்பா செட்டியாரும். டாக்டர் கசபதி அவர்களும் கல்லூரி ஆண்டு விழாவில் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டினர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் பி.ஓ.எல் என்னும் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1957 முதல் 1959 வரை பயின்று, பெற்றவர். 1959 முதல் 1961 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது சி. பி. இராமசாமி ஐயர் கட்டுரைப் பரிசு, சிலப்பதிகார இசைத்தமிழ்க் கட்டுரைப் பரிசு, அண்ணாமலை செட்டியார் தமிழ்ப் பரிசு, இராணி சீதை ஆச்சி தமிழ்ப் பரிசு ஆகியவற்றைப் பெற்ற பெருமைக்குரியவர். பழநி. அரங்கசாமியார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்(1985). 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் 25. 06. 1961 இல் இந்திரா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் கோவையில் புகழுடன் விளங்கும் பூ. சா. கோ, கலை அறிவியல் கல்லூரியிலும், பழநி கலைக்கல்லூரியிலும் ஆங்கில விரிவுரையாளராக 1961 முதல் 1968 வரை பணியாற்றியவர். 1968 முதல் 1972 வரை உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1972 முதல் 1988 வரை பதினாறு ஆண்டுகள் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதுபொழுது தொலைநிலைக் கல்வியின் இயக்குநராகவும் பணியாற்றியவர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவாறே சேக்சுபியர் நாடகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெயர்களைப் பற்றிய திறனாய்வு செய்து, Critical Study of the Tamil rendition of Shakespeare என்னும் தலைப்பில் ஆய்வேட்டினை வழங்கி, முனைவர் பட்டம் பெற்றவர்.

 


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புப் பேராசிரியராக 1989 முதல் 1996 வரை – ஏழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தம் பணி ஓய்வுக்குப் பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை இயக்குநராகவும் (2009-2010), பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 2010 முதல் 2016 வரை பேராசிரியராகவும் பணியாற்றியவர். பெரியார் உயராய்வு மையத்தில் 2011 முதல் 2013 வரை இயக்குநராகப் பணியாற்றியவர். 

செர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக அயல்பணி அடிப்படையில் ஆறு மாதங்கள் பணியாற்றியவர். 

பேராசிரியர் பழநி அரங்கசாமி அவர்கள் தினமணி நாளிதழ், தினமணி ஆண்டு விழா மலர், விடுதலை, புதிய தென்றல், செந்தமிழ், Modern Rtionalist முதலிய இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார். 

முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள் கேட்டார் மயங்கும் வகையில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைத் தமிழ்ச்சங்கம் முதலான கல்வி நிறுவனங்களில் பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை வழங்கியுள்ளார். பல்வேறு பணிப்பட்டறைகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், மதுரைத் தமிழச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிஞர் அவை உறுப்பினராகவும் கல்விப் பணியாற்றியுள்ளார். 

குடிமைப் பணித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும் பொது அறிவு, நடப்பு அரசியல், ஆங்கிலக் கட்டுரைத்திறன் முதலிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றி, பயிற்சியளித்துள்ளார். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் செர்மனி,  மலேசியா, மொரீசியசு, இலங்கை, நேபாளம், பிரான்சு, இத்தாலி, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்த பட்டறிவுடையவர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 1984 முதல் 1988 வரை ஆங்கிலப் பாடங்களைக் குறித்துச் சொற்பொழிவுகளை வானொலியில் நிகழ்த்தியவர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் பெற்ற பரிசுகளும் விருதுகளும் 

1.   சங்கப் புலவர் விருது, கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1996

2.   பெரியார் விருது, பகுத்தறிவாளர் கழகம், 1998

3.   மொழிபெயர்ப்பு விருது, தமிழ்நாடு அரசு, 2019

4.   இலக்கியப் பேரறிஞர் விருது, செண்பகத் தமிழ்அரங்கு, 2020

5.   ஜி.யு.போப். மொழிபெயர்ப்பு விருது (SRM பல்கலைக்கழகம்),2021

6.   இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழக நூலகத்துறை வாசகர் வட்டம் 2023 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தம் பேராசிரியர் பணிக்காலத்தில் எட்டு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார். ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள் இருந்நூற்றுவருக்கும் மேல் இவர்தம் நெறிகாட்டலில் ஆய்வு செய்துள்ளனர். 

பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். 

தமிழ் நூல்கள் 

1.   செய்தி உலகம், 1971

2.   அன்னை தெரசா, 1976

3.   குருநானக், சாகித்ய அகாதெமி,1978

4.   கேரள வர்மா, சாகித்ய அகாதெமி,1980

5.   வேற்றுமையில் ஒற்றுமை, 1981

6.   ஆத்திசூடி(பாரதிதாசன்)- பெயர்ப்பும் விளக்கமும், 1982

7.   இந்து மதம் பற்றி காந்தியார், 1983

8.   மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன், 1984

9.   இலக்கிய மலர்கள்,1985

10. தமிழ் நாடக வளர்ச்சி, 1988

11. தமிழ்ப் பேரகராதி தொகுதி 3, 1996

12. அறிவியல் நூல்கள் ஐந்து(மொழிபெயர்ப்பு) ஆக்சுபோர்டு,1997

13. மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன் கவிதைப் பெயர்ப்பு,1998

14. தமிழுக்கு வந்த ஷேக்ஸ்பியர் – இலக்கியத் திறனாய்வு, 2002

15. கீத கோவிந்தம் (தமிழ்க் கவிதை), 2009

16. கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள், 2009

17. கலைஞர் தந்த செம்மொழி (கட்டுரை), 2010

18. இலக்கியமும் அரசியலும் – கட்டுரை 2013

19. வண்ணக் கலவை – கட்டுரை,2013

20. அதிகாலை அய்ந்துமணிப் புரட்சி, 2023

21. தமிழில் தனிப்பாடல்கள்

22. பள்ளுப் பாடல்கள்- திறனாய்வு

23. கீதையின் மறுபக்கம்(சுருக்கம்), 2003

24. ஜெனரல் கரியப்பா, 2025 

ஆங்கில நூல்கள்

25.  Selected Poems of Wordsworth, 1973

26. Utopia(Ed), 1974

27. Bharatidasan – A critical perspective (Ed), 1991

28. Life and works of Bharatidasan, 1995

29. Shakespeare in Tamil version -  Literary criticism, 1998

30. Cankat – Tamil (Translation), 1999

31. Bhagavat Gita – Critical Study (Translation), 2000

32. English for Seniors, 2003

33. Professional Ethics, 2004

34. Improve your English, 2005

35. Tamil Civilization, Special Supplement, 2010

36. Women’ Role in Indian Press – Ed, 2012

37. Ainguru nooru – In English, 2013

38. History of Sararsvathi Mahal, 2014

39. Ethical Treatise from Ancient Tamil, 2022

40. Naladiyar,  (English Translation),2023

41. Ahananooru in English Prose

42. Tolkappiam – Eluttu Atikaram

43. Is there a God – Periyar(Translation), 1998

44. Periyarism, 2023

45. Viyarivaiyoor – Poems (English trans)

46. Vellicha Devadai – Poems (English trans)

47. Bharatidasan His Mind and Art, 2025

48. அகநானூறு – ஆங்கில உரைநடை

49. இறையனார் களவியல் 

 

கருத்துகள் இல்லை: