நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 மார்ச், 2023

முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா!

 


அன்பார்ந்த தமிழ் உறவினர்களே! இசையார்வலர்களே! வணக்கம்.

  கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழை நடுவணாகக் கொண்டு இயங்கிய இசைத்தமிழ்க் கலைஞர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தில் தேடியபொழுது சற்றொப்ப 5764 பேர் குறித்த பட்டியல் ஒன்றை உருவாக்க முடிந்தது. என்னொருவனிடம் இப்பட்டியல் இருப்பதைவிட, உலகத் தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தால் பட்டியலில் விடுபட்ட இசைத்தமிழ்க் கலைஞர்களின் பெயரும் இப்பட்டியலில் இணையும் என்பதால் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் என்னும் பெயரில் வெளியிட உள்ளோம். கடந்த ஈராண்டுகளாக இந்த நூலினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். 304 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும். ஒற்றை வரியில் இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இசைதமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிய இயலும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன.

  இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் வரும் மார்ச்சுத் திங்கள் 11 ஆம் நாள் காரி(சனி)க் கிழமை மாலை, சென்னை, கிண்டி அருகே(கத்திபாரா அருகில்) உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கில் (AUTEAA / AUAC), (No 07, PCM Colony Street, St. Thomas Mount, Chennai -600 016 ) வெளியீடு காண உள்ளது.

 முனைவர் வி. ஜி. சந்தோஷம் அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் நூலினை வெளியிட்டு, சிறப்புரையாற்ற உள்ளார்கள். அதுபொழுது மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் எழுந்தருளி ஆசியுரை வழங்க உள்ளார்கள். தமிழறிஞர்களும் இசையறிஞர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர். வாய்ப்புடையோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

 இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் தேவைப்படுவோர் muetamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது + 9442029053 என்ற புலன எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.

கருத்துகள் இல்லை: