நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 19 ஜூன், 2011

இணையமாநாட்டின் இரண்டாம்நாள் நினைவுகள்…


"வெண்பாநிரல்" தந்த பொறியாளர் மு.சித்தநாத பூபதி அவர்கள்

18.06.2011 காலை எட்டு முப்பது மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டோம். மாநாட்டு அரங்கிற்கு ஒன்பதுமணி அளவில் சிற்றுந்து சென்றது. முதல் அமர்வு காலையில் தனித்தனி அமர்வுகளாக நடந்தன. இரண்டு இடங்களில் நடந்த அமர்வுகளில் நாங்கள் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் தலைமையில் மூவர் கட்டுரை வழங்கினோம். இன்னொரு அரங்கில் நடந்த நிகழ்வுபற்றி அறியமுடியவில்லை. நண்பர் இல.சுந்தரம் அவர்கள் அந்த அரங்கில் கட்டுரை வழங்கியதைப் பின்பு அறிந்தேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாலா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கட்டுரைகளை வழங்கினார், தமிழ்க்கதை ஒன்றைக் கொடுத்தால் தானே அதற்குரிய படங்களை வரைந்துகொடுக்கும் மென்பொருள் உருவாக்கம் பற்றி அவையில் சொன்னதும் அனைவரும் மகிழ்ந்தோம். ஆய்வாளர் பியூலா அவர்கள் செய்திகளுக்குரிய உணர்வுசார்ந்த படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.

நான் இணையவழித் தமிழ்ப்பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். முன்னாள் துணைவேந்தர்கள் மு.ஆனந்தகிருட்டினன், மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களும், பன்னாட்டுக் கணினி, இணைய ஆர்வலகளும் பார்வையாளர்களாக இருந்தனர். என் கட்டுரையைப் படிக்கத்தொடங்கியபொழுது நண்பர் சங்கரபாண்டியும், மருத்துவர் சித்தானந்தம், குணா அவர்களும் தனித்தனியாக வந்து அரங்கில் அமர்ந்தனர்.மருத்துவர் சோ.இளங்கோவன், பேரா. வாசு உள்ளிட்டவர்களும் அரங்கில் இருந்தனர்.


என் கட்டுரை வழங்கப்பட்டபோது கலந்துகொண்ட அறிஞர்கள்

தேநீர் இடைவேளைக்குப் பிரிந்தோம்.

பிறகு பொது அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சிப்மன் அவர்கள் தலைமையில் நடந்த பொது அமர்வில் பேராசிரியர்கள் இ.அண்ணாமலை, வாசு, முருகையன், இராதாசெல்லப்பன் கட்டுரை வழங்கினர். அண்ணாமலை, வாசு கட்டுரை பேச்சுத் தமிழ் குறித்து அமைந்ததால் உரையாடல் விறுவிறுப்பாகச் சென்றது.

அதன்பிறகு உணவுக்குப் பிரிந்தோம்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனி அமர்வுகள் நடந்தன. தமிழகத்தின் இனிய நேரு கட்டுரை படித்தார். வேறொரு அரங்கில் இருந்ததால் நான் செல்லமுடியவில்லை. இதன் இடையே திருக்குறள் போட்டி குழந்தைகளுக்கு நடந்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் அரங்கில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தமிழ்க்குழந்தைகள் திருக்குறளைச் சொல்ல முயன்ற பாங்கு அறிந்து மகிழ்ந்தேன். திருவாளர் துரைக்கண்ணன் அவர்கள் தம் குழந்தையுடனும் தந்தையாருடனும் வந்திருந்தார். மீண்டும் சந்திக்க நினைத்தோம். இயலவில்லை. மலேசிய அன்பர்களின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. இளந்தமிழ் கட்டுரையும் பாராட்டுக்கு உள்ளானது.

சார்சாவிலிருந்து திரு.மு.சித்தநாதபூபதி வந்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனோம். அவர் கட்டுரை “வெண்பா நிரல்: வெண்பாவிற்கான பொது இலக்கணங்களைச் சரிபார்க்கும் நிரல்” என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார். மிகச்சிறந்த கட்டுரை. தமிழுக்கு ஆக்கமான கட்டுரை.

கட்டடக்கலைப் பொறியாளரான பூபதி அவர்கள் தமிழ் இலக்கணங்களை உள்வாங்கிக்கொண்டு, ஓரளவு தமக்குத் தெரிந்த(அவரே சொன்னது) தொழில்நுட்பத்தைக் கொண்டு இவர் உருவாக்கிய இந்த நிரல் தமிழுக்கு ஆக்கமான நிரல். மைக்ரோசாப்டு எக்செல் தொழில்நுட்பம்கொண்டு இதனை உருவாக்கியுள்ளார். இதனை இன்னும் மேம்படுத்தி வழங்கினால் உலகத் தமிழர்கள் மகிழ்வர். (கோபி, முகுந்து போன்ற கணினித்துறை ஆர்வலர்கள் இவரைத் தொடர்புகொண்டு தமிழுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.)

இதுபோல் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கட்டளைக் கலித்துறைக்கும் நிரல் உருவாக்கினால் அருகிவரும் தமிழ் யாப்பறிபுலவர்களின் எண்ணிக்கையை இவரின் நிரல் சரிசெய்யும்.
காசுகொடுத்தால்தான் நிரல்களை வழங்குவோம் என்று அடம்பிடிக்கும் கணினி ஆர்வலர்களிடமிருந்து வேறுபட்டுத் திருவாளர் பூபதி அவர்கள் இந்த நிரலை அனைவருக்கும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவரைத் தனியே கண்டுரையாடிப் பின்னும் எழுதுவேன். இவரிடமிருந்து தமிழுக்கு இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

மற்ற அமர்வுகளில் நடந்த கலந்துரையாடல்கள், கட்டுரை வழங்கலில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்தினேன். மாலையில் உத்தமம் உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. கலந்துகொண்டேன். அனைவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நானும் மருத்துவர் சோம.இளங்கோவன் இணையர், மருத்துவர் சித்தானந்தம் இணையர் ஓர் இந்திய உணவகம் தேடி, இரவு உணவு உண்டு, உரையாடி மகிழ்ந்தோம்.


மரு.சித்தானந்தம், மு.இ, மரு.சோம.இளங்கோவன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம்

மரு. சோம. இளங்கோவன் ஐயாவையும் அவர்களின் துணைவியாரையும் தொடர்வண்டி நிலையத்தில் விட்டுவிட்டு என்னைக் கொண்டுவந்து அறையில் விட்டு மரு.சித்தானந்தம் அவர்கள் வேறொரு விடுதிக்கு இரவு பதினொரு மணியளவில் சென்றார்.

இன்று(19.06.2011) நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு மருத்துவர் சித்தானந்தம் அவர்களுடன் பென்சில்வேனியா, பிளடல்பியா பகுதிகளைச் சுற்றிப் பார்க்க உள்ளேன். இரவு வாசிங்டன் சென்று திரு. சித்தானந்தம் ஐயா அவர்களின் விருந்தோம்பலில் இருப்பேன்.

2 கருத்துகள்:

Osai Chella சொன்னது…

அருமையான பதிவுகள் ! உடன் பயணித்த உணர்வு ! கலக்குங்க நண்பரே ! வலைப்பதிவர்கள் யாரையேனும் சந்தித்தால் எம் வாழ்த்துக்களை சொல்லுங்கள் - கோவையிலிருந்து ஓசை செல்லா

PRINCENRSAMA சொன்னது…

சிறப்பு... தொடரட்டும் பணி!