நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூலை, 2018

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு!


முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

 மதுரை இலக்கிய நிகழ்வு நிறைவுற்றதும், தானி ஒன்றில் ஏறி அமர்ந்து தொடர்வண்டி நிலையம் நோக்கி விரைந்தேன். இரவு 11 மணிக்குத் தொடர்வண்டி. 10.45 மணிக்கு நிலையத்தை நெருங்கினேன். நான் பயணம் செய்யும் தொடர் வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்ற குறிப்பறிந்து மெதுவாக நடைமேடை நோக்கி முன்னேறினேன். ஆயிடை, அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். பழைய நினைவுகள் வரப்பெற்றவராக அன்புடன் நலம் வினவினார். இருபதாண்டுகளாக அவருடன் தொடர்பு உண்டு எனினும் இன்றுதான் மனந்திறந்து உரையாடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. அவர் பயணம் செய்யும் அதே தொடர்வண்டியில்தான் நானும் பயணம் செய்யவேண்டும். கூடுதல் சிறப்பு என்னவெனில் இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்ய உள்ளதை அறிந்ததும் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

 வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வர உள்ளதை அவரிடம் சொல்லி, நடைமேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தோம். நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தபொழுது, தாமும் இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றி, மீளும் செய்தியைத் தெரிவித்தார். எங்களின் உரையாடல் எழுத்தாளர்கள் - சமகால இலக்கியம் நோக்கி மெதுவாக நகர்ந்தது. என் உள்ளங்கவர்ந்த எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் பற்றியும், அவர்தம் இலக்கிய ஆளுமை குறித்தும் சில வினாக்களைத் தொடுத்தேன். மகிழ்ச்சியுடன் தம் எண்ணங்களைத் திருப்பூரார் பகிர்ந்துகொண்டார். "சாயங்கால மேகங்கள்" என்ற நா.பா.வின் படைப்பினைப் பற்றி எடுத்துரைத்து, சில வரிகளை நினைவூட்டினேன். ஊக்கமடைந்த திருப்பூரார் தமக்கும் நா.பா. வுக்குமான இலக்கிய உறவு பற்றி மனந்திறந்து பேசினார். நா.பா. வின் பிற புகழ்பெற்ற படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்தார். தாம் சுவைத்த நா.பா.வின் பாத்திரங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர் குடும்பத்துள் ஒருவராக, உற்ற நண்பராக விளங்கிய கடந்த கால வாழ்க்கையை என்னுடன் உரிமையுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் பேச்சு ஜெயகாந்தன் படைப்புகள் குறித்தும் அவரின் இலக்கிய வாழ்க்கை குறித்தும் நகர்ந்தது. நான் அறியாத, ஜெயகாந்தனின் படைப்பு நுட்பங்கள் பலவற்றைத் திருப்பூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.

 அறிவிப்பு ஒன்று ஒலித்தது. நாங்கள் பயணம் செய்யும் அனந்தபுரி விரைவு வண்டி மேலும் ஒரு மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அருகில் இருந்த மக்கள் பலரும் சோர்வடைந்து, நின்ற கோலத்தைக் கிடந்த கோலமாக்கினர். தொடர்வண்டியின்  காலத்தாழ்ச்சி அறிந்து நானும் திருப்பூராரும் மகிழ்ச்சியுற்றோம். உரையாடல் தொடர்ந்தது. தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்தும் அவரின் படைப்பு நுட்பங்கள் குறித்தும் திருப்பூரார் எனக்கு ஒரு வகுப்பு எடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. தி.ஜானகிராமனைப் படித்து முடிக்க வேண்டும் என்று உந்துதலை அவரின் உரையாடல் எனக்கு ஏற்படுத்தியது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி படைப்புகள் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். ஜெயமோகன் படைப்புகள் குறித்தும் உரையாடினோம்.

 திருப்பூரார் தம் தந்தையார் குறித்தும், அவரின் பணிநிலையால் பல ஊர்களில் படிக்க நேர்ந்தமை குறித்தும், குடும்பம் குறித்தும் பல செய்திகளை மனந்திறந்து பகிர்ந்துகொண்டார். சென்னையில் தாம் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் குறித்தும், அவர்களிடம் கற்றுக்கொண்ட உயர்பண்புகள் குறித்தும் ஓர் ஆசிரியர் மாணவனுக்கு எடுத்துரைப்பதுபோல் பொறுப்புடன் எனக்கு எடுத்துரைத்தார். திருப்பூராரை அடையாளம் கண்டுகொண்ட அவர் வாசகர்கள் சிலர் இடையில் புகுந்து வணக்கம் சொல்வதும், அவர்களை வாழ்த்தி வழினுப்புவதையும் திருப்பூரார் மேற்கொண்டார்.

 மு.வ. வின் இலக்கியப் படைப்புகள் பெருந்திரள் மக்களைச் சென்றடைந்தமையையும், பலர் அவர் நூல்களைப் படித்து மனம் மாற்றம் பெற்றனர் என்பதையும் எடுத்துரைத்த திருப்பூர் கிருஷ்ணன் மூத்த எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, கி. ரா. உள்ளிட்டவர்களின் இலக்கியச் சுவையூட்டும் படைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி உள்ளிட்டவர்களின் படைப்பாளுமை மற்றும் பழகும் குணம் குறித்து அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அகிலன் தன் விருப்பம் ஒன்றை, நா.பா.விடம் எடுத்துரைக்க, அது அந்நாள் முதல்வர் எம்.ஜி. ஆர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நூலாசிரியர் பலருக்கு உதவியாக இருந்தமையையும் நினைவூட்டினார். நா.பா.வின் துணிவும், இலக்கியச் செம்மாப்பும் எனக்குப் புலப்பட்டன.

 இரசிகமணி டி.கே.சி. யின் கம்பராமாயண ஆர்வம் குறித்து, யான் அறியாத பல சுவையூட்டும் நிகழ்வுகளை எடுத்துரைத்தார். கல்கி, இராஜாஜி உள்ளிட்டோரின் படைப்புகள், அவர்களின் இலக்கியப் பணிகளும் எங்களின் உரையாடலில் இடம்பெற்றன.

 சமகால எழுத்துகளை ஆர்வமுடன் கற்றுள்ள திருப்பூர் கிருஷ்ணன், சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய பேரனுபவம் வாய்த்தவராக விளங்குவதை அறிந்து வியப்புற்றேன். ஒரு தகவல் சுரங்கமாகவும், சமகால இலக்கியப் போக்குகளை அறிந்தவராகவும் விளங்கும் திருப்பூர் கிருஷ்ணன் ஓர் இலக்கியப் பல்கலைக்கழகமாக விளங்குவதை அறிந்து மனதார அவரை வணங்கினேன். இவர்போலும் எழுத்தாளர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புரைகள் நிகழ்த்தினால் கடந்த நூறாண்டுகளாகச் சிறந்த விளங்கிய படைப்பாளர்கள், படைப்புகள் குறித்த நல்ல அறிமுகம் மாணவர்களுக்குச் சென்று சேரும் என்பது என் நம்பிக்கை.
மு.இளங்கோவன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

ஞாயிறு, 10 ஜூன், 2012

மதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்புற நடைபெற உள்ளது.


நாள் : 17.06.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-3

தஞ்சை வல்லம்- பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் - ஊரக வளர்ச்சி உயராய்வு மையமும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பகுத்தறிவாளர் கழகமும், இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்துகின்றன.

தமிழ் இணையப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற, குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுத்தறிவாளர் கழகம்சார்ந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

வா. நேரு, 9443571371
வே.செல்வம், 9843346346,
மீ.அழகர்சாமி, 9245289949

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…


பாத்திமா கல்லூரி முதல்வர் உரை

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 13.12.2011 காலை 9 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி முதல்வர்,செயலாளர்,தமிழ்த்துறைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனைவர் மு.இளங்கோவன் மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்தார்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…
பயிலரங்கத்தின் காட்சிகள் சில…


கல்லூரிச் செயலர் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

சனி, 10 டிசம்பர், 2011

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பாத்திமா கல்லூரி(தன்னாட்சி),மதுரை


அழைப்பிதழ்

மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை
இடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை

வெள்ளி, 9 ஜூலை, 2010

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் ...

வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம் 

     மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க 2006, மே 19,20 ஆகிய நாள்களில் சென்றிருந்தேன். மதுரையை அடுத்த சக்குடி என்னும் ஊரில் பிறந்த என் நண்பர் ச.கு.சீனிவாசன் அவர்கள் என் வருகைக்கு மதுரைத் தொடர் வண்டிநிலையத்தில் காத்திருந்தார். அவர் விருந்தினனாகவும் அன்று இருந்தேன். அவர்களின் ஊர் வைகையாற்றில் இருந்தது. சமணர்களைக் கழுவேற்றியப் பகுதி அருகில்தான் உள்ளது என்றார். இரவுப்பொழுதில் அவரும் நானும் அவர் இல்லத்துக்குச் சென்று நெடு நாழிகை உரையாடி வைகறையில் கண்ணயர்ந்தோம். 

    காலையில் எழுந்து நான் மாநாட்டுக் கருத்தரங்கிற்குப் புறப்பட்டதாக நினைவு.அவர் ஊருக்கு அருகில்தான் திருப்பாச்சி என்ற ஊர் இருப்பதாகவும் சொன்னார். அங்கு உருவாகும் கத்தி, அருவா புகழ்பெற்றது (திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா-வைரமுத்து). இந்தமுறை ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இல்லம் செல்வது என்றும், அவர் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டு ஐயாவின் இறப்பு, மற்ற விவரங்களைக் கேட்பது என்றும் நினைத்திருந்தோம். நான் திட்டமிட்டபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கட்டுரை படித்து 20 ஆம் நாள் பிற்பகல் மதுரை-பசுமலைக்கு வருவது என்றும் அங்கு என்னை நண்பர் சீனிவாசன் எதிர்கொண்டு மீண்டும் அழைத்துக் கொள்வது என்றும் திட்டம். அதன்படி மே, 20 பிற்பகல் நான் மதுரை நகருக்கு வந்தேன். 

     நண்பர் சீனிவாசன் அவர்கள் எனக்காக ஒரு உந்துவண்டியில் காத்திருந்தார். இருவரும் நேரே பசுமலை சென்றோம். (ஐயாவின் இல்லத்துக்கு நான் முன்பே ஒருமுறை சென்றுள்ளேன் (19.05.2000). நான் திருநெல்வேலியில் ஒரு கருத்தரங்கிற்குச் சென்றபொழுது வழியில் உள்ள மதுரை-பசுமலையில் ஐயா அவர்கள் இருப்பது அறிந்து பசுமலை சென்றிருந்தேன். நன்கு விருந்தோம்பினார். இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து பிரிந்த(1998) பிறகு மீண்டும் சந்திப்பது இப்பொழுதுதான் முதல் முறை. எனவே இருவரும் மனம் திறந்து பேசினோம். 

    எனக்கு நிலைத்த வேலை இல்லாமல் இருப்பதும், திருமணம் ஆகாமல் இருப்பதும் ஐயாவுக்குப் பெருங்கவலையாக இருந்தது. அவர் பங்குக்கு அவரும் பல இடங்களில் எனக்கு மணப்பெண் வேண்டியதையும் மறைமுகமாக அறிவேன். நம் தகுதிக்கும் மேம்பட்ட பல இடங்களில் ஐயா பெண்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அத்தகு பேச்செல்லாம் நேரில் பார்த்தபொழுது மகிழ்ச்சியாகப் பெருக்கெடுத்தது. மாலைவரை ஐயாவுடன் இருந்துவிட்டுப் புறப்பட்டேன். 

    அப்பொழுது மதுரையில் நடந்த ஒரு இசை குறித்த நிகழ்வில் பங்கேற்க அரிமளம் அவர்கள் வந்தார். அவருக்கு இடையூறு இல்லாமல் நான் ஐயாவிடம் விடைபெற்றேன் என்பதும் நினைவுக்கு வருகின்றது) பசுமலையில் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் குடியிருந்து மறைந்த வீட்டுக்கு நானும் நண்பரும் சென்றோம். ஐயா அவர்கள் நடமாடிய அந்த வீதி இப்பொழுது ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. மெதுவாக அருகில் வேலைசெய்துகொண்டிருந்த அகவை முதிர்ந்த ஆயா ஒருவரிடம் நான் ஐயாவின் மாணவர் என்றும், அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்தவன் என்றும் அவர் மறைவு பற்றி எனக்குக் காலம் கடந்தே தெரியும் என்றும் கூறி அவர் நினைவாக அவர் வாழ்ந்த வீட்டையாவது பார்த்துச் செல்வோமே என நான் புதுச்சேரியிலிருந்து வருவதாக உரைத்தேன். 

     உடனே அந்த ஆயா ஐயாவின் மறைவு பற்றியும் அதன் பிறகு அவர்களின் வீடு விற்பனை செய்யப்பட்டது பற்றியும் எடுத்துரைத்தார்கள். அவர்களின் உறவினர்கள் இந்தப் பகுதியில் இருப்பதாகவும் சொன்னார்கள். ஞானசம்பந்தர் மனை எனப் பெயரிட்டு அழைக்கப்பெற்ற அந்த இல்லத்தை வெளிப்பகுதியிலிருந்து ஏக்கத்துடன் பன்முறையும் பார்த்தேன். ஐயா இருந்தபொழுது நான் வந்த அந்த வீட்டில் எனக்கு இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. ஐயா இல்லாத தனிமைத்துயரமே எனக்கு இருந்தது. இந்த வீடு வாங்கியவர் மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற அன்பர் என்பது அறிந்தேன். எவ்வளவோ தமிழார்வலர்கள் இருந்தும் ஐயாவின் வீட்டை வாங்கி நினைவில்லமாக மாற்ற இயலாமல் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்துள்ளோமே என்று வருந்தினேன். 

    தக்க கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருந்தால் பத்து இலட்சம் உருவா செலவு செய்து ஐயாவின் நினைவுக்கு அந்த இல்லத்தை வாங்கி அவர் பெயரில் காலத்துக்கும் பாதுகாத்திருக்கலாம். அந்த வீட்டை வாங்கியவர்கள் அதன் சிறப்பு உணராமல் இடித்து அவ்விடத்தில் புதிய வீடு கட்டினால் என்ன செய்வது என்று நினைத்து நினைவுக்குப் பல படங்களை எடுத்துக் கொண்டேன். ஐயா உயிருடன் இருக்கும்பொழுது தாள முழக்கமும்,இசையாய்வுச் செய்திகளும் காற்றில் பரவிய அந்த இல்லத்தின் முகப்பில் ஒரு மாட்டைக்கட்டி வைத்திருந்தனர். அதனை மெல்ல அவிழ்த்து ஓரமாகக் கட்டிவிட்டுப் பல கோணங்களில் அந்த வீட்டைப் படம் பிடித்தேன். அதன் பிறகு அந்த ஆயாவிடம் விடைபெற்று இசைமேதையின் உறவினர்களைத் தேடும் பணியில் நானும் நண்பரும் ஈடுபட்டோம். 

    பல தெருக்களைக் கடந்தும் எங்களால் உரியவர்களை உடனடியாகக் காணமுடியவில்லை. ஒருவழியாக அவரின் மருமகள் என்று நினைக்கிறேன். ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஒரு அம்மாவைக் கண்டு உரையாடிக் குடும்ப நிலை அறிந்தேன். வீடு விற்கப்பட்டதன் பின்னணியும் அறிந்தேன். எப்படியோ மீட்க முடியாதபடி வீடு கை நழுவிப் போனதாக உணர்ந்தேன். அதன் பிறகு ஐயாவை அடக்கம் செய்த கல்லறை எங்கு உள்ளது என்று கேட்டு அங்குச் சென்றோம். அந்தப் பகுதியில் இருந்த பல கல்லறைகளை நோட்டமிட்டுக் கடைசியில் ஐயா மீளாத்துயில்கொண்டுள்ள கல்லறைக்கு வந்தோம். ஐயா கல்லறை மிகத் தூய்மையாக இருந்தது. அதன் அருகில் வேறொரு கல்லறைமேல் ஒரு குடிமகன் மீளும் துயிலில் இருந்தான். அவனுக்கு இடையூறு இல்லாமல் ஐயாவின் கல்லறையைப் பலமுறை சுற்றி வந்து அவர் நினைவாகச் சில மணிப்பொழுது அங்கு இருந்தோம். அதன் பிறகு சில படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன். 

  ஐயாவைப் பிரிந்த மனத்துயருடன் கல்லறையை நாங்கள் கடக்கும்பொழுது அருகில் கடந்து சென்ற தொடர்வண்டியின் ஓசையால் அப்பகுதி அதிர்ந்தபடி இருந்தது. அதுபோல் ஐயாவின் நினைவும் என் உள்ளத்தில் அதிர்ந்தபடியே உள்ளது.

வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம்

ஐயாவின் வீட்டு வாசலில் நான்

 
ஐயாவின் இல்லத்தின் முகப்பில் மாடு கட்டப்பட்டிருந்த காட்சி

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை

 
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை

புதன், 27 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் படக்காட்சிகள்...


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


அரங்கில் உள்ள பேராளர்கள்


அரங்கில் உள்ள பேராளர்கள்


ஆய்வுக்கோவை வெளியீடு


துணைவேந்தர் இரா.கற்பகக்குமாரவேல்


கவிஞர் சிற்பி அவர்கள்


துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள்


பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்கள்


துணைவேந்தர் திருவாசகம் அவர்கள்


திருக்குறள் ந.மணிமொழியன்


பேராசிரியர் சுபாசு அவர்கள்


இசையறிஞர் மம்முது அவர்கள்


மு.இளங்கோவன் தமிழும் இணையமும் தலைப்பில் உரை


மு.இளங்கோவனுக்கு அறிஞர்கள் சிறப்பு செய்தல்

சனி, 23 மே, 2009

ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம்! பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞர் சிற்பி பேச்சு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 40 ஆம் ஆண்டுக் கருத்தரங்கைச் சிறப்புடன் நடத்துகிறது.

23.05.2009 காலையில் நடந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றிய சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும் இரண்டுமுறை சாகித்திய அகாதெமியின் விருதை வென்றவருமான பேராசிரியர் கவிஞர் சிற்பி தொடக்க உரையாற்ற எழுந்தபொது ஈழத்தில் களப்பலியானவர்களுக்கு வீர வணக்கம் எனவும் இறந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலி எனவும் அரங்கில் பேசத் தொடங்கியதும் உலகம் முழுவதும் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அவர் பேச்சை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கருத்தரங்கினை நடத்துகிறது. இதுவரை 39 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வருகிறது. 40 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் மே 23,24 நாள்களில் நடக்கிறது.

23.05.2009 காலை 11 மணிக்குத் தொடங்கிய விழாவில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மலேசியா,சிங்கப்பூரிலிருந்தும் 500 மேற்பட்ட ஆய்வு அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் மணிவேல் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.முனைவர் இரா.மோகன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கற்பக குமாரவேல் அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வி தமிழ்வழியில் அமையாமைக்கு உரிய காரணம் பற்றி எடுத்துரைத்த துணைவேந்தர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழில் அடிப்படை அறிவு இருக்கவேண்டும் என்றார். கன்னட மொழியின் வளர்ச்சிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்குக் கருநாடக அரசு ஒரு கோடி உரூவா கொடுத்துள்ளதையும் எடுத்துரைத்தார். அறிவுப்பெருக்கமும், அறிவுப்பரவலாக்கமும் என்ற இரண்டு கொள்கைக்களைக் குறிக்கோளாக் கொண்டு பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும் என்றார்.

கருத்தரங்க ஆய்வுக்கோவையை (நான்கு தொகுதிகள்) பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் வெளியிட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் தமிழண்ணல் வாழ்த்துரை வழங்கினார்.ஆறு அழகப்பன் தமிழர்கள் தமிழ் எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடக்கவுரையாற்றிய சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஈழத்தமிழர்களை இழந்து கையறு நிலையில் இருக்கும் என்னை தொடக்கநிலையில் உரையாற்ற அழைத்துள்ளனர். தென்திசை நினைவிலிருந்து விடுபடாதவராய்ச் சிற்பி பேசினார். அண்மையில் தாம் படித்த நான்கு நூல்கள் மிகச்சிறந்தன என்றுரைத்தார்.அவை திராவிடச்சான்று, காதல்கோட்டை (நாவல்), தமிழகத்தில் வைதீகம்,ஒரு நகரமும் ஒரு கிராமமும் என்று நூல்கள் அவை.இதன் சிறப்புகளைப் பலபட எடுத்துரைத்தார்.

துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள் அடுத்த ஆண்டு நெல்லையில் இந்தக் கருத்தரங்கம் நடக்க உள்ளதைக் கூறியதும் அரங்கம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. தமிழ் இன உணர்வுடன் பேசி அரங்கிற்குத் தமிழ் உணர்வேற்றி சபாபதிமோகன் தன் உரையை நிறைவு செய்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தம் இளமைக்காலம் தொடங்கித் தன்முன்னேற்றம் வரை எடுத்துரைத்து அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டினார். எதிர்காலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட உள்ளதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

பிற்பகல் ஆய்வரங்கு நடந்தது.

மாலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு என்ற என் கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். பேராசிரியர்கள் சிற்பி,தமிழண்ணல், இரா.மோகன், ஆறு.அழகப்பன், காவ்யா சண்முகசுந்தரம்,பேராசிரியர் சுபாசு சந்திரபோசு, மணிவேல், சேதுபாண்டியன், பேராசிரியர் சபாபதி(மலேசியா) உள்ளிட்ட அறிஞர்களுக்கு நடுவே என் கட்டுரை வழங்கப்பெற்றது.பேராசிரியர் சிறீகுமார் தலைமை தாங்கினார்.

மாலையில் இசையறிஞர் மம்முது அவர்களின் தொல்காப்பியர் இசையியல் என்ற தலைப்பிலான உரை அமைந்தது.

வெள்ளி, 8 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பதாம் கருத்தரங்கம் 2009 மேத் திங்கள் 23,24 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலிருந்தும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் வருவதுடன் மலேசியா,சிங்கப்பூர் சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

490 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பெற உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.கற்பக குமாரவேல்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன்,பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.நடராசனார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.முன்பே திட்டமிடப்பட்டு,பதிவு செய்யப்பெற்றக் கருத்தரங்கு ஆதலின் இது குறித்த விளக்கம் பெற விரும்புவோர் பேராசிரியர் மு.மணிவேல் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
அவர்தம் செல்பேசி எண் : + 98655 34622

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா...


பேராசிரியர் தமிழண்ணல்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.

மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இரா.கற்பககுமாரவேல் அவர்கள் தலைமை தாங்கி நூலினை வெளியிடுகிறார்கள்.திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் சிறப்புரையாற்றவும், தவத்திரு நாச்சியப்ப ஞானதேசிக அடிகளார் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் முனைவர் இரா.மோகன் அவர்களும் நூல்கள் குறித்த திறனாய்வு வழங்க உள்ளனர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.மதுரையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
வெளியிடப்பட உள்ள நூல்கள்

1.தமிழ் அறிவோம்! தமிழராய் வாழ்வோம்!
2.ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு
3.தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள்
4.எழுச்சி தரும் எண்ணச்சிறகுகள்
5.தொல்காப்பிய இலக்கிய இயல்
6.தேடவைக்கும் திருவள்ளுவர்
7.தமிழ் ஒரு "கட்டமைப்புள்ள" மொழி
8.செம்மொழிப் படைப்பியல்
9.செவ்விலக்கியச் சிந்தனைகள்
10.ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள்
11.வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?
12.இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழில் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம்...


அரங்க மேடை


 22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது. மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர். கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன். அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது. அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டேன்.

 கையில் கைப்பையும், மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன. இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும்பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள். பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன். கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம். காலையில் சிற்றுண்டி உண்டதும், தொடர்ந்து செலவுக் களைப்பு, பேச்சு, பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன். உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.

அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி, எழுதியும், பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி, இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.

நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள். ஆடுகளங்கள் உள்ளன. போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச்சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.

காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில் (விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள், கணிப்பொறி வசதிகள், இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தன. கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன். என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது.500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.  திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை. கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன். என் பேச்சின் விவரம் வருமாறு:

(நேற்றே திருச்சியில், மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)

உலகில் கணிப்பொறி தோன்றிய விதம், தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துகள், பல்வேறு தமிழ் மென்பொருள்கள், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள், சீனர்களின் மொழிப்பற்று, தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை, தமிழ் இணைய மாநாடுகள், இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு, முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்த கிருட்டிணன், முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.

தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன். சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை, காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும், பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).

அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட்,தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள், தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.

பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், படிப்புகள், ஓலைச்சுவடிகள், பண்பாட்டுக்கலைகள், திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.

அதுபோல் மதுரைத்திட்டம், சென்னை நூலகம், காந்தளகம், விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன். ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம். இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது. தட்சு தமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.

பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன். தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள சிறப்புகள், அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது. தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன். மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது. அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி. கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன், கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடினேன். அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும்படியாக வழங்கினார். அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார். முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது. மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்...


முனைவர் மகாத்மன்ராவ்(முதல்வர்)


திரு.மணிமாறன்,பொருளாளர்


கவிதாதேவி(ஒருங்கிணைப்பாளர்)


திரு.முத்துராமன்(ஒருங்கிணைப்பாளர்)


பார்வையாளர்கள்