நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 ஜூலை, 2018

பொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு!


கோனேரி பா. இராமசாமி

 புதுவையின் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞரும், புதுவை அரசின் பொறியாளரும், பன்னூலாசிரியருமாகிய கலைமாமணி கோனேரி பா. இராமசாமி அவர்கள் உடல்நலம் குன்றி, இன்று(10.07.2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பெருந்துயருற்றேன்.

  கோனேரியார் அவர்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு அறிவேன். தெருக்கூத்துக் கலையில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு அவர்தம் பணிகளைக் கல்வியுலகிற்கு நான் முன்பே அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். அவர்தம் குரலையும், கலையார்வத்தையும் பதிவு செய்து காணொளியாக இணையத்தில் ஏற்றியுள்ளேன். திருமுதுகுன்றத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்று, நாட்டுப்புற ஆய்வாளர்கள் முன்பாகப் பாடச்செய்து அவரை அறிமுகம் செய்தேன். அவரின் கலைப்பணிகளை நம் மாணவர் ஒருவர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்து வருகின்றார். கிழமைக்கு ஒருமுறை என்னுடன் பேசி, புதுச்சேரியின் தெருக்கூத்து வரலாற்றை எழுதுவதற்குப் பெருந்துணை செய்தவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

  புதுச்சேரி மாநிலம் கோனேரிக்குப்பத்தில் 15.11.1966 இல் பிறந்த கோனேரியார் புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து, மக்கள் கலைக்கழகம் என்ற அமைப்பு நிறுவி, கலைப்பணி செய்தவர். அவர்தம் வாழ்க்கைக் குறிப்பு அறிய விரும்புவோரும், அவர்தம் கலையீடுபாட்டைக் காண விரும்புவோரும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்.

வாழ்க்கைக் குறிப்பு அறிய




  கோனேரி பா. இராமசாமியாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை: