நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 நவம்பர், 2015

தமிழுக்குத் தொண்டாற்றும் சீனத்துக் கவிஞர் யூசிக்கு முது முனைவர் பட்டம்!


சீனத்துக் கவிஞர் யூசி


தைவான் நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த கவிஞர் யூசி ஆவார். இவர் சீன மொழியான மாண்டரின் மொழியில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்த்துத், தமிழ் மொழியின் புகழை உலகமெல்லாம் பரவச் செய்தவர். ஔவையாரின் ஆத்திசூடியை முழுமையாகப் படித்து, அதன் விழுமிய கருத்துகளை நன்கு உணர்ந்து, 2 மணி நேரத்தில் நுட்பமாகவும், திட்பமாகவும் மொழிபெயர்த்தவர். இதுவரை இப் படைப்புகளைச் சீன மொழியில் யாரும் மொழியாக்கம் செய்யவில்லை.

கவிஞர் யூசியின் பணி சிறப்பு வாய்ந்தது ஆகும். கவிஞர் யூசி தற்போது, தைவான் நாட்டின் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்கிறார். அந்நாட்டின் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்பிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரின் சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு 2014-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, உரூ.1 இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மொழியாக்கப் பணிக்காக இவருக்குத் தமிழக அரசு உரூ.18 இலட்சம் மதிப்பூதியம் வழங்கியது. அந்தத் தொகையைத் தாமே வைத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு முறையே உரூ.6 இலட்சம் என்ற அளவில் வழங்கியுள்ளார்.

மேலும், தைவான் நாட்டில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டின்போது தன் சொந்த செலவில் உரூ.20 இலட்சம் மதிப்பிலான திருவள்ளுவர் சிலையை அங்குள்ள மலையின் உச்சியில் நிறுவியுள்ளார். இவரது செயல் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும், பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த தமிழ்ப் பல்கலைக்கழத்தின் ஆளவைக் கூட்டத்தில், தமிழ் மொழிக்காக அளப்பரிய பணிகளைச் செய்து வரும் கவிஞர் யூசிக்கு, ‘முது முனைவர்' பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்கத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

நன்றி: ஒன் இந்தியா (தமிழ்)


கருத்துகள் இல்லை: