நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 4 மார்ச், 2015

வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா



மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா நடைபெற உள்ளது. தமிழார்வலர்களை விழாக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.

நாள்: 08.03. 2015 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 6- 00 மணி

இடம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை- 1

மதுரையில் அமைந்துள்ள கங்கை காவேரி வணிக நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செம்மல் திரு. இராம. விசுவநாதனார் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நெறிநூல்களை மாணவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க அவர்தம் ஆசான் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிகனார் பெயரில் போட்டியொன்று நடத்திப் பெருந்தொகையைப் பரிசிலாக மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வேளாண் சுப. சொக்கலிங்கம் ஐயா தலைமையில் நடைபெறும் விழாவில் சாத்திரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரா. சீனிவாசன் அவர்கள் மதுரையும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். புலவர் சுப.இராமச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்க உள்ளார்.

செல்வி இ. செல்வமீனா மூதுரை பற்றியும், செல்வி ம. லவந்திகா வெற்றி வேற்கை பற்றியும், செல்வி ச. மோகனப்பிரியா நல்வழி பற்றியும் செல்வி சு. கு. யோகேசுவரி நன்னெறி பற்றியும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசில்களை நடராசபுரம் திரு. இராம. சுப்பிரமணியன் அவர்கள் வழங்க உள்ளார்.

குறள்வேந்தர் மீ. கந்தசாமிப் புலவர் நினைவு 21 ஆம் ஆண்டு ஏழிளந்தமிழ், திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


முன்மாதிரியாக இருந்து தமிழகத்தில் தமிழ் வளர்க்கும் இராம. விசுவநாதன் ஐயாவைப் போன்ற புரவலர்கள்தான் இற்றைத் தமிழகத்திற்குத் தேவை. வாழ்க மதுரை இராம. விசுவநாதனார்!

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்.