நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
இராம. விசுவநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராம. விசுவநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 அக்டோபர், 2016

“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்!” – மதுரை இராம. விசுவநாதனின் பொருள்பொதிந்த வாழ்க்கை நூலுக்குரிய அணிந்துரை




தமிழ்த் தொண்டர் துரை இராம. விசுவநாதன் ஐயா அவர்களை என் மாணவப் பருவத்திலிருந்து அறிவேன். இவர் காரைக்குடியில் வ.சுப. மாணிக்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர். இயல்பிலேயே தமிழ்ப்பற்றும், நெறிநூல் பயிற்சியும் கொண்டவர். கடும் உழைப்பால் உயர்ந்து முன்னேறியவர். தம் தொழிலிலும், வாழ்விலும் தமிழைச் செழுமையாகப் பயன்படுத்தும் செவ்விய ஒழங்குடையவர். நாளும் பழகும் நண்பர்களாக இருந்தாலும் தமிழுடன் பிறமொழியைக் கலந்துபேசினால் பெருஞ்சீற்றம் கொள்வார். ஆண்டுதோறும் வ.சுப. மாணிக்கனார் நினைவாக ஏழிளந்தமிழ் உள்ளிட்ட நெறிநூல்களில் போட்டிவைத்து, நன் மாணாக்கரை உருவாக்குவதைத் தொண்டாக நினைந்து வாழ்ந்துவருபவர்.

மதுரை இராம. விசுவநாதனார் அவர்கள் கங்கை காவேரி வாணிகத் தொடர்பு என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதை அறிந்தபொழுது, இப்பெயரைக் கொண்டு இவரின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வியந்தேன். நெல்லையில் நடைபெற்ற தனித்தமிழ் இலக்கியக் கழக ஆண்டு விழாவில் நம் ஐயா விசுவநாதனார் ஒருமுறை எனக்கு தங்கப்பதக்கம் சூட்டியமை(1994) என் வாழ்வில் நினைக்கத் தகுந்த பொழுதாகும். அன்று முதல் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றேன். ஐயாவின் அழைப்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

தமிழ்ப்பற்றும், நெறியார்ந்த வாழ்க்கையும் கொண்ட இப்பெருமகனார் தம் பட்டறிவுப் பயனாகப்பொருள் பொதிந்த வாழ்க்கைஎன்னும் பெயரில் இதுவரை 34 தொகுதகளை வழங்கியுள்ளார். இத்தொகுதிகள் மணிவாசகர் பதிப்பகம் வழியாக வந்து, மக்களைச் சென்றடைந்துள்ளது.

அண்மையில் முப்பத்தைந்தாம் தொகுதியை அவர்களின் அரிய கையெழுத்தில் எனக்கு அனுப்பியிருந்தார்கள். வழக்கம்போல் எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கு இடையில் அவற்றைப் படிப்பதில் காலம் தாழ்ந்தது. ஒரு மழைப்பொழுதில் எடுத்து அந்தக் கையெழுத்துப் படியைப் படித்தபொழுது, அரிய வாழ்வியல் உண்மைகள் தெறித்துக் கிடப்பதை இனங்காண முடிந்தது.  

அகவலோசையில் அசைந்தோடும் இக்கவிதையாறு இயற்கை, தமிழ், இனிய வாழ்க்கை, உழைப்பின் உயர்வு, ஊக்கத்தின் சிறப்பு,  கடவுள் அன்பு, காதல், மழைநீர், காற்று, தோழமை, கவின்மிகு நட்பு எனப் பல பொருண்மைகளில் அமைந்துள்ளது.

அறிவின் நேயம், மனித நேயம்
நேயம் உடையார் நியாயம் தவறார்
வெளி உடம்பின் அழகு தேயும்
உள் உடம்பின் அழகு வளரும்
உள்ளத்தில் கள்ளம் இல்லையென்றால்
எல்லோரும் இன்புற்று வாழ்வர்

என்று இந்நூலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் கற்றபொழுது திருவள்ளுவமும், திரு.வி..வின் முருகு குறித்த கட்டுரையும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. ‘மனத்தின்கண் மாசற்ற வாழ்க்கையையே அறவாழ்க்கைஎன்று ஆசான் திருவள்ளுவன் சொன்னதை நம் இராம. விசுவநாதனார் இந்த நூலின் பல இடங்களில் நயம்பட உரைத்துள்ளார். திருக்குறள், புறநானூறு, தாயுமானவர், வள்ளலார் நூல்களின் வரிகள் இந்தப்பொருள்பொதிந்த வாழ்க்கைநூலில் தெளிசாறாக உள்ளன.

இளவயது உடம்பு உயர் கோபுரமாகும்
கிழவயதில் குருவிக் கூடாகி உருக்குலையும்

என்று முதுமை நிலையைக் கண்முன் கொண்டுவருவது இவரின் பட்டறிவாகும்.

மாந்தர்களைப் போல் உலகில் வாழும் பிற உயிர்களும் நெறியுடன் வாழ்கின்றன என்ற இயற்கை உண்மையை உணர்ந்த இராம. விசுவநாதனார் காக்கை, குருவிகளின் கவினார்ந்த வாழ்க்கையை வியக்கின்றார். ஆரவார உலகில் அல்லலுற்று அலையும் மாந்தர்களுக்குப் பின்வருமாறு இயற்கை வாழ்க்கையைக் காட்டுகின்றார்.

காக்கை குருவி
பறப்பதைப் பாரீர்!
பதற்ற மின்றிப் பார்ப்பீர்!
பக்குவம் பெறுவீர்!
பறப்பதைத் தொழிலாகக் கொண்ட பறவைகள்
எங்கெங்கோ பறக்கின்றன.
எவ்விடத்திலும் இளைப்பாறும்.
கிளைகளில் கூடுகள்;
முட்டையிடப் பொந்துகள்;
பொரிக்கும் குஞ்சுகளைக்
கொஞ்சுவது சில நாட்களே!
பறவைகள் குஞ்சுகளுக்கு
இரையூட்டும் காட்சி,
பெற்ற தாய் மகவுக்குப் பாலூட்டும் காட்சியே!
தாய்மைப் பண்பினை,
உயிர்களுக்கு வேர் என்போம்

என்று முடிக்கும் இவரின்  உயிர் நேயம் இந்த வரிகளால் புலப்படுகின்றது.

இயற்கையையும் வாழ்க்கையையும் மட்டும் இராம. விசுவநாதனார் பாடவில்லை. காவிரி நீரின் உரிமை, பாலாற்றின் உரிமை, திருப்பதியின் உரிமை, தேவிகுளம், பீர்மேட்டு உரிமை என்று தமிழர்களின் இழந்த உரிமைகளையும் இந்தப் பாட்டுப் பனுவலில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வாழ்க்கை வாழ்ந்து, நிறைபுலமை பெற்ற திரு. இராம. விசுவநாதனாரின் தமிழ் உணர்வு இளைஞர்கள் பெற வேண்டிய உணர்வாகும். அவர்தம் வாழ்க்கைப் பாடம் நாம் படிப்பதற்கு மட்டுமன்று. பின்பற்றுவதற்கும் உரியது. இராம. விசுவநாதனார் பல்லாண்டு வாழ்ந்து பைந்தமிழுக்கு இன்னும் நிறைந்த நூல்களை வழங்க வேண்டுகின்றேன்.

பணிவுடன் / மு.இளங்கோவன் / 22.11.2015

நூல்: பொருள் பொதிந்த வாழ்க்கை
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை: 40 - 00 உருவா

புதன், 12 ஆகஸ்ட், 2015

மதுரை இராம. விசுவநாதன் அவர்கள்…



 இராம. விசுவநாதன் 

இருபதாண்டுகளுக்கு முன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நேரத்தில் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை அறிவித்தது. பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதி முதல்பரிசு பெற்றேன். அந்தப் பரிசுக்குரிய தங்கப் பதக்கத்தைக் கொடையாக வழங்கியவர் மதுரை இராம. விசுவநாதன் ஐயா. பாளையங்கோட்டையில் எங்களின் முதல் சந்திப்பு அமைந்தது. அன்று முதல் இன்று வரை என்னுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருபவர்.

இராம. விசுவநாதன் ஐயா ஏற்பாட்டில் முன்பொருநாள் மதுரையில் நடைபெற்ற ஏழிளந்தமிழ் விழாவில் பேச என்னை அழைத்திருந்தார். வ.சுப. மாணிக்கனார் பற்றிப் பேசியதாக நினைவு. மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் என் பேச்சு அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் தமிழண்ணல் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களைச் சந்தித்ததாகவும், அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய முனைவர் வீர. முத்துக்கருப்பன் ஐயா அவர்களின் முன்னிலையில் பேசியதாகவும் என் நினைவில் பதிவாகியுள்ளது.

இராம. விசுவநாதன் ஐயா ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, நல்வழி உள்ளிட்ட ஏழு நீதி நூல்களும் இளமையில் படித்தால் வாழ்க்கை செம்மையடையும் என்ற கருத்துடையவர். பண்டைய நாளில் நகரத்தார் பெருமக்கள் பெரும்பாலும் தம் மழலைச் செல்வங்கள் இந்த நெறி நூல்களைக் கற்க வழி செய்துவிடுவார்கள் என்றும் நான் அறிந்துள்ளேன். இராம. விசுவநாதன் அவர்கள் நன்மக்களை உருவாக்கும் நோக்கில் தம் ஆசிரியர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் நினைவுநாளில் ஆண்டுதோறும்  ஏழிளந்தமிழ் நூல்களிலிருந்து போட்டிகளை வைத்து, மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த நிகழ்வு தமிழ் வளர்த்த மதுரையில் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது.


    இராம. விசுவநாதன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பிறந்தவர் (27. 01. 1932). பெற்றோர் இராமநாதன் செட்டியார், ஏகம்மை ஆச்சி. இவர் தம் பிறந்த ஊரான நெற்குப்பையில் இளமைக்கல்வி பயின்றவர் (பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் பிறந்த ஊரும் இதே நெற்குப்பைதான்). ஆறாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

உயர்நிலைக் கல்விக்குப் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை வகுப்பும், இளம் அறிவியல் (வேதியியல்) வகுப்பும் பயின்றவர். இங்குப் பயின்றபொழுது மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பேராசிரியர் இரா. சாரங்கபாணி, பேராசிரியர் முத்துசிவன், பேராசிரியர் தேசிகன் உள்ளிட்ட சான்றோர் பெருமக்களிடம் தமிழ் பயின்றவர்.

பர்மாவில் புகழ்பெற்ற ஆங்சாங் என்னும் தலைவருக்கு இயற்பியல் பயிற்றுவித்த பேராசிரியர் கிருட்டிணன் அவர்களிடம் இயற்பியல் கற்ற பெருமை நம் இராம. விசுவநாதன் அவர்களுக்கு உண்டு.

பட்டப் படிப்புக்குப் பிறகு கலைத்தந்தை கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் மீனாட்சி ஆலையில் பணி கிடைத்து, இருபத்திரண்டு ஆண்டுகள் அந்த ஆலையில் பணியில் இருந்தார். பணியின் பொருட்டு ஆமதாபாத், கோவை, மும்பை போன்ற இடங்களில் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு 1972 முதல் தனியாக நூல்வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டினார். மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட நம் இராம . விசுவநாதனார் அவர்கள் தம் வணிக நிறுவனத்திற்குக் கங்கை காவேரி வாணிகத்தொடர்பு என்று பெயரிட்டார். எழுத்திலும் பேச்சிலும் மொழிச் செப்பம் விரும்பும் இராம. விசுவநாதனார் அவர்கள் பிறமொழி கலந்து பேசுவோர் தம் நண்பர்களாக இருப்பினும் கடுமையாக இடித்துக் கூறும் வழக்கம் உடையவர்.

அகவை முதிர்ந்த நிலையில் மதுரையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் இராம. விசுவநாதன் அவர்கள் பொருள்பொதிந்த வாழ்க்கை என்னும் தலைப்பில் இதுவரை இருபத்தைந்து தொகுதிகள் நூல்களை எழுதி மணிவாசகர் பதிப்பகம் வழியாக வெளியிட்டுள்ளார். உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை நினைவு ஓவியமாக்கி இந்த நூலை மக்களுக்கு வழங்கி வருகின்றார். இந்த நூல்களில் தம் வாழ்க்கைப் பட்டறிவுகளை உணர்வுத் தெறிப்புகளாக வழங்கியுள்ளர். வாழ்வு, கல்வி, மொழி குறித்த பல சிந்தனைகள் இவர் நூலில் குமிழ்விட்டு நிற்கும். பேராசிரியர் கதி. சுந்தரம், பேராசிரியர் இரா. சாரங்கபாணி, பேராசிரியர் பாலுசாமி உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் அணிந்துரைகளால் இந்த நூல்வரிசை சிறப்புடன் விளங்குகின்றது.

தமிழ்ச் சிந்தனையாளர் இராம. விசுவநாதன் அவர்கள் தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நூல்களாக வடித்துத்தர வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றேன். அவரின்  தமிழுள்ளம் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.






புதன், 4 மார்ச், 2015

வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா



மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா நடைபெற உள்ளது. தமிழார்வலர்களை விழாக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.

நாள்: 08.03. 2015 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 6- 00 மணி

இடம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை- 1

மதுரையில் அமைந்துள்ள கங்கை காவேரி வணிக நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செம்மல் திரு. இராம. விசுவநாதனார் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நெறிநூல்களை மாணவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க அவர்தம் ஆசான் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிகனார் பெயரில் போட்டியொன்று நடத்திப் பெருந்தொகையைப் பரிசிலாக மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வேளாண் சுப. சொக்கலிங்கம் ஐயா தலைமையில் நடைபெறும் விழாவில் சாத்திரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரா. சீனிவாசன் அவர்கள் மதுரையும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். புலவர் சுப.இராமச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்க உள்ளார்.

செல்வி இ. செல்வமீனா மூதுரை பற்றியும், செல்வி ம. லவந்திகா வெற்றி வேற்கை பற்றியும், செல்வி ச. மோகனப்பிரியா நல்வழி பற்றியும் செல்வி சு. கு. யோகேசுவரி நன்னெறி பற்றியும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசில்களை நடராசபுரம் திரு. இராம. சுப்பிரமணியன் அவர்கள் வழங்க உள்ளார்.

குறள்வேந்தர் மீ. கந்தசாமிப் புலவர் நினைவு 21 ஆம் ஆண்டு ஏழிளந்தமிழ், திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


முன்மாதிரியாக இருந்து தமிழகத்தில் தமிழ் வளர்க்கும் இராம. விசுவநாதன் ஐயாவைப் போன்ற புரவலர்கள்தான் இற்றைத் தமிழகத்திற்குத் தேவை. வாழ்க மதுரை இராம. விசுவநாதனார்!