நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 13 மார்ச், 2012

உயர்கல்வியில் உயர…

 அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபொழுது புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஆர்வர்டு, ஏல், எம்.ஐ.டி, பென்சில்வேனியா, மேரிலாந்து, தெற்குக் கரோலினாவின் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களைப் பார்வையிட்டேன். அங்குள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, நூலகம், உணவகம், எழுதுபொருள் அங்காடி, மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கித் தந்துள்ள நீச்சல் குளம், வேலைவாய்ப்பு வசதிகள், முன்னாள் மாணவர்கள் பேரவை, போக்குவரவு வசதிகள், விடுதி வசதிகள் யாவும் என்னை வியப்படைய வைத்தன.

 ஒரு கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்தபடி பல்கலைக்கழகத்தின் ஆயிரக்கணக்கான அறைகளில் நடக்கும் பாடங்களைப் பதிந்து உடனுக்குடன் இணையத்தில் ஏற்றிப் பல்கலைக்கழகத்திற்கு வர இயலாத மாணவர்களுக்கும் பாடங்களைத் தடையில்லாமல் படிப்பதற்கு வழங்கும் வசதிகளைக் கண்டு மலைத்துப்போனேன். மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் ஆர்வர்டு பல்கலைக் கழக்கழகம் பல நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் பணிசெய்த - செய்யும் பெருமைக்குரியது.

 உலகின் 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் ஆர்வர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.(ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் படித்தவர்கள்). இந்த இருநூறு பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை( மும்பை ஐ.ஐ.டி 163 இடம் என்பது நமக்கு ஆறுதல்(2009 ஆம் ஆண்டில்))

 அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ஓர் இளங்கலைப் பட்டம் பெற நம் நாட்டு மதிப்பில் ஐம்பது இலட்சத்துக்கு மேல் செலவாகும் என்று எங்களின் வழிகாட்டி மாணவி எடுத்துரைத்தார். அனைத்து மாணவர்களும் முதலாண்டில் கட்டாயம் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் என்றனர். ஆண், பெண் இணைந்து படிக்கும் வகையில் விடுதிகள் உள்ளன. நம் நாட்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண் பெண் இணைகள் அமர்ந்துபேசுவது போன்ற காட்சிகளை எங்கும் காணமுடியவில்லை.

 பலவற்றை ஆர்வமுடன் பார்த்தும் கேட்டும் வந்த நான் இங்கு வன்பகடி(ரேகிங்) நடக்குமா? என்றேன். அப்படி என்றால் என்ன? என்று ஒரு கல்லூரி மாணவி என்னைக் கேட்டாள். அவர்களின் பண்பட்ட வாழ்க்கையும் கல்வி முறைகளும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பண்பாட்டையும் அறநெறியையும் போற்றும் கல்வியாக அது எனக்குத் தெரிந்தது. கடும் உழைப்புக்கு அங்கு மதிப்பு இருக்கின்றது. மாணவர்கள் அனைவரும் அவரவர் கணக்கில் வங்கிகளில் கடன்பெற்று படிக்கின்றனர். பகுதி நேர வேலைகளில் இணைந்தும் அதன் வழியாகச் சம்பாதித்துக் கல்வி கற்கின்றனர். எனவே அவர்களுக்கு உழைப்பின் மதிப்பு புரிகின்றது. அதுபோல் நாட்டுப்பற்றும் மக்கள் பற்றும் அவர்களிடம் இயல்பாக உள்ளன.

 தேர்வுக்காலங்களில் பல்கலைக்கழகங்களின் உணவகங்கள் விடியற்காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்குமாம். இரவு, பகல் பாராமல் படிப்பதிலும் குறிப்புகள் எடுப்பதிலும் மாணவர்கள் முழுமையாகக் கரைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு படிப்பதிலும் அறிவுத்தேடலிலும் இருப்பதால் அவர்களின் ஆராய்ச்சியும் உலகத்தரத்தில் இருந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கின்றது.

 எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் தொடர்வண்டி நிறுத்தத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் படங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடர் வண்டி நிறுத்தம் அறிவின் அடையாளமாகத் தெரிந்தது. அமெரிக்கர்கள் கல்விக்கு அளிக்கும் முதன்மைக்கும் மரியாதைக்கும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தம் சான்றாக உள்ளது.

 நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பேருந்துகள் நின்று போவதைக் கண்ணியக் குறைவாகப் பேருந்து ஓட்டுநர்கள் நினைக்கின்றனர். இந்தப் பேருந்து ஓட்டுநர்களும், மக்களும் திரையரங்குதோறும் நிறுத்தம் எனவும், சாராயக் கடைகள்தோறும் நிறுத்தமாகவும் குறிப்பிட்டு ஏறி இறங்குவது தலைகுனியும் நிலைக்கு நம்மைத் தள்ளுகின்றது.

 மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த ஊர்கள், ஆறுகள் குறித்த பல்லாயிரம் வரைபடங்களைக் கண்டு வியந்து போனேன். அங்கிருந்தபடியே இந்தியாவின் அனைத்துச் செய்திகளையும் வரைபடம் உள்ளிட்டவற்றின் துணையுடன் பெற்றுவிடமுடியும், நூல்கள், நுண்படச்சுருள்கள் (மைக்ரோ பிலிம்), குறுவட்டுகள், காணொளிப் பேழைகள், கணினிகள், இணைய இணைப்புகள் என்று நூலகங்களில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. குறிப்பாக அமைதி நிலவுகின்றது. உதவுவதற்கு ஆட்கள் தீயவிப்புத் துறையினர் போல் ஆயத்த நிலையில் உள்ளனர். மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்குரிய அனைத்து வசதிகளும் நூலகத்தில் உள்ளன. இலக்கியக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு நூலகத்தின் குளிரூட்டப்பட்ட அரங்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. கற்பதும் அதன்வழி நிற்பதும் அவரவர் கடமையாக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பணியமர்த்தம் பற்றி வினவினேன். மேல்நிலையிலிருந்து கீழ்நிலைவரை தகுதி ஒன்று மட்டும் அமெரிக்காவில் முதலிடம் பிடிக்கின்றது. இங்கு போல் துணைவேந்தர் பதவி அங்கு இல்லை. தலைவர், துணைத்தலைவர், புலமுதல்வர், பேராசிரியர் என்ற வகையில் பொறுப்புகள் உள்ளன. தலைவராக இருப்பவர் கல்வியிலும், அறிவாராய்ச்சியிலும் முதலிடத்தில் இருந்தால் மட்டும் இத்தகைய பதவிகளை வகிக்கமுடியும். நம் ஊர் போல் சாதிச்சான்றும், கட்சி உறுப்பினர் அட்டையும் அரசியல் பின்புலமும், பண அறுவடையுமாக உள்ளவர்களால் உயர்பதவிக்கு வர இயலாது. ஆட்சி மாற்றங்கள் அமையும்பொழுது தலைமறைவாகும் துணைவேந்தர்களோ கல்வியாளர்களோ அமெரிக்காவில் இல்லை எனலாம். அதுபோல் பேராசிரியர்கள் பதவிக்குரிய பணியிடங்களில் அமர்பவர்கள் கல்வித்துறையில் நல்ல பட்டறிவு உடையவர்களும், அறிவாராய்ச்சியில் முன்னிற்பவர்களும் மட்டும் அமரமுடியும். எந்தத் துறையில் ஒருவர் ஆய்வு செய்கின்றாரோ அந்தத் துறையில் அவர் பணி நியமனத்துக்கு எந்தத் தடையும் இருக்காது.

 மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் தங்கள் திறமையை உறுதிப்படுத்தும் வகையில் பாடம் நடத்துதலிலும் ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாணவர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் உள்ளம் நிறைவடையும்படி பேராசிரியர்களின் முன்னேற்றச் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பேராசிரியர்கள் பல்கலைக்கழகப் பணியில் தொடரலாமா வேண்டாமா? என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் மாணவர்கள்தான் இருப்பார்கள். கல்வி நிறுவனம் சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர்களின் முன்னேற்றத்தைப் பலவகையில் உறுதிப்படுத்திப் பணி நீட்டிப்பை வழங்குவார்கள்.

 பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்கள் கேட்பதுடன் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து அமர்ந்து பாடம் கேட்டு, அது பற்றிய செய்தியை மறுநாள் இதழ்களில் எழுதுவதும் உண்டு. ஊடகத்துறை சார்ந்தவர்கள் மட்டுமன்றிச் சமூக அக்கறையுடையவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் இந்தப் பாடங்களைக் கேட்கமுடியும். அந்த அளவு பல்கலைக்கழகப் பாடம் என்பது திறந்தநிலையில் இருப்பதால் ஆசிரியர்கள் மிக விழிப்பாக இருப்பார்கள். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியில் இணைந்துவிட்டால் இனி நம்மை அசைக்க ஆள் இல்லை என்றும் இருக்கவே இருக்கின்றனர் கூட்டமைப்பினர் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றோம். போக்குவரவுப்படிகளிலும், வெளியூர்ப் பண்டமாற்றுப் பயணங்களிலும் செலுத்தும் கவனத்தை பாடத்திலும், ஆய்விலும் செலுத்துவதில் நாம் குறைவாகவே உள்ளோம்.


 பணி நியமனங்களில் தகுதியானவர்களுக்கே பணி வழங்கப்படுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, உருசியா நாடுகளில் உயர்கல்வித் துறையின் தரம் மென்மேலும் கூடிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பணம், அரசியல் பின்புலம், வயது, தோற்றம் பார்க்கப்படுகின்றதே அல்லாமல் அறிவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. அதனால் மிகப்பெரும் கல்விமான்கள் அமர்ந்த இடத்தில் இன்று எத்தகு தகுதி இல்லாதோரும் நுழைந்து அமர்ந்துவிடுகின்றனர். இன்றைய நிலையில் கல்வித்தகுதி கண்டுகொள்ளப்படாமல் அரசியல்வாதிகள், பணமுதலாளிகள், மணற் கொள்ளையர்கள், மனைக் கொள்ளையர்கள், திரைத்துறையினர், கட்டைப்பஞ்சாயம் செய்பவர்களின் வாரிசுகள் உலவும் இடங்களாக இந்திய, தமிழகப் பல்கலைக்கழகங்கள் படிப்படியாக மாறிவருகின்றன.

 இத்தகு சூழலை எண்ணும்பொழுது இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் மிகத்தாழும். தனியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியில் இருப்பவர்கள் பலர் முதலாளிகளுக்கு ஆள்பிடிக்கும் தரகர்களாக மாறியுள்ளனர். வகுப்பிலிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட துறையில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை சில பல்கலைக் கழகங்களில் அதிகம் இருப்பதை அறியமுடிகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை எல்லாம் மிகச் சாதூர்யமாக மீறும் பணமுதலைகள் இந்தியாவெங்கும் கல்வித்தந்தைகளாக உலா வருகின்றனர்.

 அண்மைக் காலங்களில் பல்கலைக்கழகங்களின் பணி நியமனங்கள் குதிரைபேரங்களாக மாறிப்போனது. இது உயர்கல்விக்கு நல்ல முன்மாதிரியாக அமையாது. ககரமும் இலகரமும் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்துவிட்டால் பணியிடங்கள் ஏலச்சந்தையாகிவிடும். இன்று முதல்போட்ட கல்வி முதலாளிகள் ஒன்றுக்குப் பத்தாக அறுவடை செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு என இடைத்தரகர்கள் இன்று தோற்றம் பெற்றுவிட்டனர். தமிழ் இலக்கியங்களில் வேந்தர்கள் வள்ளல்களாக இருந்தனர் என்று படித்தோம். இன்று வள்ளல்களாக இருப்பவர்களே வேந்தர்களாக முடியும் என்று அறிஞர் ஒருவர் சொன்ன செய்தி உண்மையாகவே உயர்கல்வித்துறையில் தெரிகின்றது.

 பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நேர்காணல் தேர்வுக்குத் துறைசார் வல்லுநர்களாக வரும் கல்வியாளர்கள் பணிப்போட்டிக்கு வருபவர்களைக் கோமாளிகளைப் பார்ப்பதுபோல் பார்ப்பதும் வேடிகையாகச் சில வினாக்களைக் கேட்பதுமாக உள்ளனர். முந்திரிப்பருப்புகளைக் கொறித்தும் தேநீரும், பழச்சாறும் பருகி நிறைவில் துணைவேந்தர்களின் உள்ளக்குறிப்பறிந்து நடந்துகொள்கின்றனர். வழிசெலவு, மதிப்பூதியம் குறையாமல் குளிர்வண்டிப் பிடிப்பதில் மட்டும் இவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். தகுதியானவர்களைத்தான் பணி அமர்த்துவோம் என்று அறிவுபோற்றும் அறிஞர்கள் தமிழகத்தில் இல்லாமல் போனதால்தான் உயர்கல்வி தமிழகத்தில் சரிவு நிலைக்கு வந்தது.

 உயர்கல்வியில் இன்று பல முனைகளில் களைகள் மண்டிக்கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தமுடியாமல் சங்கங்களும், சட்டப்பாதுகாப்பு வளையங்களும் உள்ளன. எனவே வெளிப்படையான பணியமர்த்தங்கள் நடைபெற வேண்டும். துறைசார் வல்லுநர்களை அரசியல் வாதிகள் அடக்கி ஒடுக்காத நிலை இருந்தால்தான் உண்மையான உயர்கல்வியின் தரம் உயர்வதற்கு வழி கிடைக்கும். அதனைவிடுத்து ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள் என எதுவும் உயர்கல்வியை உயர்த்திவிடமுடியாது. உயர்கல்வி என்பது நாட்டை வளப்படுத்தவும் மக்களை நலப்படுத்தவும் உதவுவது. அறிவுசார்ந்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க உதவுவது. எனவே இன்றைய அடிப்படையில் மாற்றங்கள் நடைபெறாத வரையில் உயர்கல்வி வளர வாய்ப்பு இல்லை.

 உயர்கல்வி ஒருநாட்டில் வளமாக இல்லை என்றால் அந்த நாட்டில் வளர்ச்சி இல்லை என்று பொருள். உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்கும் தொழிற்பேட்டைகள் அல்ல. அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் உலைக்களங்கள் ஆகும்.

8 கருத்துகள்:

கி.நாச்சிமுத்து சொன்னது…

அருமையான கட்டுரை.சிந்தனையைத்தூண்டும் கருத்துக்கள்.கல்விச் சாலைகள் தொழிற்பேட்டைகள் அல்ல என்ற உங்கள் முத்தாய்ப்பான கருத்து முற்றிலும் ஏற்புடையது.இக்கருத்துக்களைப்பரவலாக தெரியும்படி வெளியிடுக.
கி.நாச்சிமுத்து

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் ஐயா அவர்களின் ஊக்குவிப்பிற்கு நன்றி

புன்னியாமீன்... சொன்னது…

முனைவர் மு.இளங்கோவன் நல்வாழ்த்துகள்

Senthilarasu சொன்னது…

சிறந்த கட்டுரை. நானும் பல நேரங்களில் இந்த வசதிகள் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன்.

அன்புடன்
செந்திலரசு
sunarasu.blogspot.com

விச்சு சொன்னது…

இன்று உயர்கல்வி துயர்கல்வியாக மாறிவிட்டது. தொலைதூரக்கல்வியில் இரண்டாண்டு முதுகலைப் படிப்பினை தேர்வு அன்று மட்டும் மனனம் செய்து முதுகலைப் பட்டம் வாங்கிவிடுகின்ற அவலமும் உள்ளது.

கல்விக்கோயில் சொன்னது…

ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட கட்டுரை வாழ்த்துக்கள்

Venkadesan சொன்னது…

உண்மையை எடுத்துக்கூறும் பயனுள்ள கட்டுரை... பணம் சம்பாதிக்க கல்லூரியைத் தொடங்கிக் கொண்டிருக்கும் கல்வித்தந்தைகள் இருக்கும்வரை இந்த நிலைதான் தொடரும்.. இதில் அரசு மிகுந்த கவனத்துடன் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயலாற்ற வேண்டும்.. கல்வித்துறை முழுவதையும் அரசே ஏற்று நடத்தினாலும் பரவாயில்லை(நல்ல கனவு).. அது மட்டுமில்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர் துறைக்கு வருபவர்கள் வேண்டும்.

மேலும் பெரும்பாலான மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் கல்வி இன்று ஒரு மூலதனமாகவே பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இந்நிலையும் மாற வேண்டும்..

kanmani சொன்னது…

மதிபிற்குரிய பேராசிரியர் மு.இளங்கோ அவர்களுக்கு, நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல கருதாழமிக்க கட்டுரை படித உணர்வு ஏற்பட்டுள்ளது.
கல்வி இன்று வணிகரீதியாக செயல்படுகிற்து.
புதுமைகளும் புரட்சிகளும் இன்று காகிததில் ஊர்ந்து காற்றில் காய்வதோடு சரி. அமெரிக்க பல்கலைக் கழகங்கள் போல் மிகச் சீரியமுறையில் செயல்படும் நிலை உருவாவது கனவுதான்.
பணம் சாதி பரிந்துரைகள் நம் கல்வித்தரம் உயர தடைக்கற்களாக உள்ளன. இவை அகற்றப்படும் நாள் வருமா?
முனைவர் இரா.விஜயராணி


இரா.விஜயராணி