நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 டிசம்பர், 2011

மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு

பன்னாட்டுப் பகுத்தறிவு ஆய்வகத்தின் சார்பில் மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு (International Rationalism Conference) மலாயா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. 2012 சனவரி 27,28,29 ஆகிய நாள்களில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. “பகுத்தறிவின் தோற்றம், மனுக்குலத்தின் ஏற்றம்” என்னும் கருப்பொருளில் அமையும் இந்த மாநாட்டை மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் தொடங்கி வைப்பார்கள். மலேசியாவின் அமைச்சர் பெருமக்கள், தமிழறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பகுத்தறிவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த ஆய்வரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, மாநாட்டு மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

பினாங்கு நகரில் 30.01.2012 இல் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் சிலை திறப்பும் நடைபெற உள்ளது. பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தங்களைப் பேராளர்களாகப் பதிவுசெய்துகொள்ளவேண்டும். தமிழகத்திலிருந்து பங்கேற்பவர்களுக்குப் பேராளர் கட்டணம் எதுவும் கிடையாது.

மாநாட்டை ஒட்டிக் கோலாலம்பூர், பினாங்கு, இலங்காவி, முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்துத் தமிழகம் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பெரு.அ. தமிழ்மணி, ரெ.சு.முத்தையா, தெ.வாசு, த.சி.முருகன், ஆகியோர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் 27, 28, 29 ஆகிய மூன்று நாளும் தங்குமிட வசதிகள், உணவு, 30 ஆம் நாளையப் பினாங்கு பயணம் ஆகியவற்றை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, சுற்றுலா செல்லாமல் சென்னைக்குத் திரும்ப விரும்புவோர் விமானக் கட்டணம், நுழைவுச்சீட்டு (விசா)க் கட்டணமாக உருவா 15,000 (பதினைந்து ஆயிரம்) செலுத்த வேண்டும்.

கூடுதலாகத் தங்கிச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் உருவா 25,000 (இருபத்தைந்தாயிரம்) கட்ட வேண்டும்.

கட்டணத் தொகையைச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் காசோலை, வரைவோலையாக அனுப்பலாம். அல்லது திரு.இரா.மதிவாணன் வங்கிக் கணக்கு எண் 130801000012748 - இந்தியன் ஓவர்சீசு வங்கி, சூளைமேடு, சென்னைக் கிளையில் பெறத்தக்க வகையில் செலுத்தலாம்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

“உழைப்புச்செம்மல்” இரா.மதிவாணன் ,
தமிழக ஒருங்கிணைப்பாளர்.
4,சௌராட்டிரா நகர் 7 ஆம் தெரு,
சூளைமேடு, சென்னை- 600 094
மின்னஞ்சல்: eramathi@gmail.com
பேசி: + 94441 11951

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

sarabavan சொன்னது…

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

PREMA சொன்னது…

may i send article only.because i cant come malaysia.