நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழச்சி தங்கபாண்டியன் உரை


குத்துவிளக்கு ஏற்றும் கவிஞர் தமிழச்சி

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா இன்று 31.08.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.கல்லூரியின் முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

பாரதிதாசன் கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவிகள் மிகுதியான எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கல்லூரி மாணவியர் உள்ளம் உவகை அடையும் வகையில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.அவர் உரையிலிருந்து....

நான் அரசியல் பின்புலம்,எழுத்தாளராக, கவிதைப்பின்புலம் கொண்டவளாக அறிமுகமாவதைவிடத் தென் தமிழகத்தின் கடைக்கோடிக் கிராமத்துப் பெண்ணாக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கவிதை என்றால் இன்று காதல் கவிதைகள்தான் என்ற நிலை உள்ளது.
மூவாயிரம் ஆண்டுகால மரபுகொண்ட தமிழ் இலக்கியத்தில் ஆழமான கவிதை மரபு உண்டு. பிறமொழியில் புலமை இருந்தால் சமூகத்தில் மதிப்பு உடையவர்களாக மக்கள் மதிக்கின்றனர்.ஆனால் நம் சிறப்பு மிக்க மொழியில் புலமை இருந்தால் அவற்றை மக்கள் மதிப்புக்குரியதாகக் கருதுவதில்லை.இது வேதனை தரும் செய்தியாகும்.
உங்கள் வாழ்க்கையிலிருந்து படைப்புகள் உருவாக வேண்டும்.

பாவேந்தரின் குடும்ப விளக்கில் முதியோர் காதல் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.
"நீ இருக்கின்றாய் என்பது ஒன்றே போதும்" என்று பாடுவது சிறப்பு.
கவிஞர்கள், புலவர்கள் பெண்களுக்கு இலக்கணம் வகுத்தவர்வகள் ஆண்களுக்கு ஏன் வகுக்கவில்லை? என்று கேட்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு குரல்கள் கொண்டுள்ளன.

மரபின் அச்சில்தான் புதுமைச் சக்கரங்கள் சுற்றுகின்றன.

பழைமையை உள்வாங்கிக்கொண்டு புதுமைகளைப் படைக்க வேண்டும்.
பாப்லோ நெருடா பேரபத்து விளைவிக்கக்கூடியது கவிதை என்றார்.
வாழ்க்கையை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுதான் எழுத்தாளின் கடமையாக இருக்க வேண்டும்.

யாரை முன்னுதாரணமாக வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மரங்களும்,விலங்குகளும் எங்கள் உடன் பிறந்தவை என்று கருதும் பழங்குடி மக்கள் இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கின்றனர்.அவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

மாணவிகள் கலந்துகொண்டு தமிழச்சியின் கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
எஞ்சோட்டுப்பெண்,வனப்பேச்சி,பேச்சரவம் கேட்டிலையோ நூல் பற்றி மாணவிகள் வினாக்கள் எழுப்பினர்.

மேலும் கவிஞரின் படைப்பு அனுபவங்கள் பற்றியும் வினாக்கள் எழுப்பினர்.மாணவிகள் பலரும் தமிழச்சியின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்புவித்தனர்.இலங்கைப் புலம் பெயர் மக்கள் பற்றி தமிழச்சி எழுதிய கவிதைகள் மாணவிகளுக்குப் பெருவிருப்பமாக இருந்ததை அறியமுடிந்தது.


எதனைப் பற்றியும் எழுதலாம்.அவ்வாறு எழுதும் படைப்பு சிறந்ததாக இருக்கும் என்று நிறைவுசெய்தார் கவிஞர்.


உங்களுக்குப் பிடித்த மிகச்சிறந்த கவிஞர்கள் யார்?

சங்கப்பெண் கவிஞர்கள்,கிரேக்கக்கவிஞர்கள்,தமிழில்
இரா.மீனாட்சி,பிரமிள்,ஆத்மாநாம்,தேவதச்சன் உள்ளிட்ட கவிஞர்கள் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர்.

வனப்பேச்சி,மஞ்சனத்தி என்று பெயர் வைக்க காரணம் என்ன?

நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையைப் பதிவு செய்ய இந்த தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன்.




செம்மொழி விருது பெற்ற மு.இளங்கோவனைப் பாராட்டும் கவிஞர் தமிழச்சி



நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவர்கள்

1 கருத்து:

seeprabagaran சொன்னது…

யார் இந்த தமிழச்சி தங்கபாண்டியன்?