மலேசியாவில் கடாரம்(கெடா) என்ற பகுதியில் மு.இளங்கோவன்
மலேசியாவில் உள்ள "கெடா"(கடாரம்) மாநிலத்தில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சென்றிருந்தேன். காலை 10.30 மணியளவில் சுங்கைப் பட்டாணி என்ற இடத்திலிருந்து புறப்பட்டு ஐயா புண்ணியவான் அவர்களின் மகிழுந்தில் பூசாங் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றேன். அரை மணி நேர ஓட்டத்தில் பூசாங் பள்ளத்தாக்குப் பகுதியை அடைந்தோம்.
சுங்கைப் பட்டாணியிலிருந்து பூசாங் பள்ளத்தாக்கு 20 கல் தொலைவில் இருந்தது. அழகிய சாலைகளும், மலைச்சரிவுகளும் கொண்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதி இது. அருவிகள் வழியும் இந்தப் பகுதி கெடா மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள தொல்பொருள் ஆய்வகத்தை முதற்கண் பார்வையிட்டோம்.
கோயில்கள், சிலைகள் இருந்ததற்கான பல சான்றுகளை அகழாய்வுத் துறையினர் திரட்டி வைத்துள்ளனர். கல்லால் அமைந்த நீர்த்தொட்டிகள், தூண்கள், செம்பறாங்கல்லால் அமைந்த கோயில் அமைப்புகள், செங்கல் அமைப்புகளில் கோயில்கள் இருந்துள்ளன. இராசேந்திர சோழன் பற்றிய குறிப்புகள் பறவைப் பார்வையில் பார்த்த எனக்குக் கிடைக்கவில்லை. இந்த இடம், அமைப்பு, வரலாறு பற்றித் தமிழகம் திரும்பியதும் விரிவாக எழுதுவேன்.
அழகிய இயற்கை சூழ்ந்த இந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. என் பிறந்த ஊரான இடைக்கட்டிலிருந்து (கங்கைகொண்ட சோழபுரம் அருகில்) கடாரங்கொண்டான் என்ற ஊர் ஒரு கல் தொலைவில் உள்ளது. இராசேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு, பத்தாம் நூற்றாண்டில் நிகழந்திருப்பினும் இதுவரை நம் பகுதி சார்ந்தவர்கள் வந்து இந்த இடத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்திருந்தாலும் இணையத்தில் உலகத் தமிழர்களுக்கு அறிவித்திருக்க வாய்ப்பில்லை. எனவே நினைவுக்குச் சில படங்களை இணைக்கின்றேன்.
அழைத்துச் சென்று வரலாறு உணர்த்திய எழுத்தாளர் புண்ணியவான் அவர்களுக்கு நன்றி.
மலேசிய எழுத்தாளர் புண்ணியவான்
கோயில் கருவறை
கோயில் கருவறை
ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் பெயர்ப்பலகை
கடாரம் பெயர்ப்பலகை
காட்சியகத்தில் உள்ள பொருட்கள்
2 கருத்துகள்:
"க(கி)டாரங்கொண்டான்" என்று நிறைய ஊர்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்.
திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில், அரசு கல்லூரி அமைந்துள்ள சிற்றூருக்கு பெயர் கிடாரங்கொண்டான்.
மயிலாடுதுறை பூம்புகார் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து, 15 கி.மீ தொலைவிலும் கிடாரங்கொண்டான் என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறது.
இவையெல்லாம், இதனுடன் தொடர்பு கொண்டவைகளா?
தங்களின் முழு கட்டுரைக்காக காத்திருக்கிறேன்!
வணக்கம். எங்கள் கடார மண்ணின் புகழை இணையத்தின் வழி உலகறியச் செய்ததற்கு பணிவான நன்றி.'பூஜாங் பள்ளத்தாக்கு'என்றழைக்கப்படும் இவ்விடத்தைத் தமிழக அகழ்வாராய்ச்சி நிறுவனம் கருத்தில் கொண்டு புதைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தால் உலக தமிழர்கள் நிலையுயரும் என நம்புகின்றேன். தொடர் முயற்சியை எதிர்பார்க்கின்றேன். நன்றி
கருத்துரையிடுக