நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம், வரலாறு, மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களைக் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.

அவ்வாறு கற்ற நூல்களுள் "தண்ணிழல்" என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அதனை இயற்றியவர் பேராசிரியர் அடிகளாசிரியர். அவர்களின் திருமகனார் அ. சிவபெருமான் அவர்கள் வழியாக அந்நூலும், அந்நூலாசிரியரான அடிகளாசிரியர் அவர்களும் அறிமுகமானார்கள். அந்நூல் மரபு இலக்கணத்தில் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை ஆற்றொழுக்காக நவிலும் நூல். அதனைக் கற்று மகிழத் தமிழில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இயலும்.

அந்நாளில் மரபுப்பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த யான் அந்நூல் பற்றிப் பின்வரும் மதிப்புரையைக் கட்டளைக் கலித்துறையில் யாத்து திரு. அடிகளாசிரியர் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அப்பாடல்கள் வருமாறு :

அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்!

வருந்திய நெஞ்சுடன் வண்டமிழ் காக்கச் சிலவினைகள்
மருந்தெனச் செய்து மயங்கி உழன்று மடிகையிலே
அருந்தமிழ் வல்ல அடிகளின் தண்ணிழல் நூலமுதம்
பொருந்தியென் நெஞ்சைப் புலவிருந்(து) ஊட்டிப் புதுக்கியதே!

கழக இலக்கியம் கற்ற அடிகள் புலமைநலம்
அழகிய நூலினுள் ஆர்ந்து விளங்கி அழகுவிடப்
பழகு குழந்தை படிப்பதாய்ப் பன்முறை வாய்விடுத்தே
ஒழுகிய ஓசையில் ஓங்கி ஒலித்தேன்! உவகையுற்றே!

கலிப்பா வகையைக் கண்டு நடுங்கும் புலவரிடைச்
சலிப்பே எழாஅது செந்தமிழ் வண்ணம் சிறந்திலங்கப்
புலிப்பால் நிகர்த்த பெருந்தமிழ்ச் சீரைப் புகன்றதுபோல்
வலிப்பாய் எழுதியும் வண்டமிழ் போற்றியும் வாழுகவே!

வாழும் புலவர் வளமனை வாங்கி,வதிகையிலே
கூழை உணவினில் கூட்டி மிகவுண்டு,கூர்வறுமை
ஆழும் அறிஞரே! ஆக்கப் பணிகள் அணிபெறுமேல்
வீழும் புரட்டுகள்! வெண்ணிலா என்று விளங்குவையே!

எழுதிக் குவித்த எனதின் புலவ! அடிகளரே!
புழுதியும் குப்பையும் பொத்தகப் பேரில் புறம்வருதல்
கழுதைகள் சில்ல கடித்தே குதப்பிக் கருத்துரைத்தல்
இழுவைச் செயலாய் இருக்க,இதனில் விலகினரே!

விருத்த வகையில் விரிதமிழ் யாப்பை விதந்துரைத்துத்
திருத்திநற் செய்தியைத் தீட்டினீர் தேன்போல் செழுந்தமிழின்
பருத்த பலநூல் பயின்றீர்! பெரும்புலம் நூல்வடிவில்
துருத்தி வெளிவரும் தூய்மை தொழுது மகிழ்ந்திடவே!

புறநூல் பயிலப் புகுவோர் நுமதரும் தண்ணிழலைத்
திறமாய்ப் பயின்று திகழ்தமிழ்க் கோட்டை அடைவரெனில்
மறக்களம் கண்ட மகிழ்வை அடைவரே! மாற்றறியா
அறப்பா அமைத்த அறிஞ! அடைக பெரும்புகழே!

காதல் இயம்பக் கனித்தமிழ் வாழும் எனமுழங்கி
நோதல் உறும்புல மன்றில் நுமைப்போல் புறமதனை
ஈதலைச் செய்தவர் யார்நவில்? எம்போல் இளையவரோ
மூதர் அவையின் முனைமுகம் தங்க அருளுகவே!

பொருளும் உவமையும் பூட்டிப் புலவயல் சீருறவே
அருளால் உழுத அடிகளே! அன்னைத் தமிழினத்தார்
தெருளா(து) உமதடி தெய்வப் பொருளதாய்த் திகழ்தலையின்
சுருள்முடி தாங்கிச் சுமக்க இனியும் துலங்குவரே!

மீன்கள் உலவும் மிளிர்வயல் தன்னில் மருட்டிசில
தோன்றி இருப்பின் துணைவிழி காண்குறும்! ஆங்கதுபோல்
ஈன்றநற் பாட்டில் எதுகையின் மோனையின் ஈட்டமெண்ணி
ஊன்று வடசொல் உலவுதல் உள்ளம் உணருவதே!

மட்டுரை என்று மனந்தான் மகிழ்ந்தே உவப்புறநீர்
கட்டுரைப் பாங்கில் கதையை விளக்கினீர்! கண்டுவந்தேன்!
வெட்டுரை போன்று விரிதமிழ்க் கல்லில் பொறித்திடுநும்
அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்! அடிபணிந்தே!

(அடிகளாசிரியரின் தண்ணிழல் நூலுக்கு 04.06.1993 இல் யான் எழுதிய மதிப்புரைப்பாடல்)


தண்ணிழல்(1990)

இப்பாடல்கள் என் அரங்கேறும் சிலம்புகள்(2002) நூலில் இடம்பெற்றதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமான செய்தியும் இல்லாது அடிகளாசிரியர் பற்றி நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தேன்.

திருச்சிராப்பள்ளியில் வதியும் திரு. அடிகளாசிரியர் அவர்களின் மாணவர் புலவர் தமிழகன் ஐயா அவர்கள் சிலநாள் அடிகளாசிரியர் மாண்பைச் சொல்லக் கேட்டுள்ளேன். பல நிறுவனங்களில் படிப்பு, ஆய்வு, பணி எனச் சுழன்றுகொண்டிருந்த என் வாழ்வில் அண்மைக் காலமாக அடிகளாசிரியரைக் கண்டு வணங்கும் வேட்கை மேம்பட்டு நின்றது.

சின்னசேலம் அருகில் உள்ள ஊரில் பிறந்து திருவண்ணாமலையில் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் நண்பர் அ. சிவராமன் அவர்களின் தொடர்பு அமைந்த பொழுது, அவரின் ஊருக்கு அருகில்தான் அடிகளாசிரியரின் ஊர் அமைந்திருப்பதாகவும், அவரைக் காணத் தம் நண்பர் வழியாக உதவுமுடியும் எனவும் உறுதியுரைத்தார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி அடிகளாசிரியரைக் கண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். முதல்நாள் இரவு திட்டமிட்டு 09.08.2008 வைகறையில் துயிலெழுந்து, புதுச்சேரி-விழுப்புரம்-கல்லக்குறிச்சி- வழியாகச் சின்னசேலம் சென்றேன்.

முன்பே திடமிட்டபடி மின்துறைப் பொறியாளர் வேலுமணி அவர்கள் எனக்காக உந்து வண்டியுடன் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். காலை பத்து மணிக்குதான் என்னால் அங்குச் செல்லமுடிந்தது. பேருந்து மெதுவாகச் சென்றதால் காலத் தாழ்ச்சி.

சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் கூகையூர் செல்லும் கரிச்சாலையில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தோம். திருச்சிராப்பள்ளி செல்லும் சாலை என்பதால் சாலை வசதி நன்கு உள்ளது என்றார் வேலுமணி. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அப்பாதையின் இருமருங்கும் இருப்பதால் நல்ல விலைக்கு நிலம் விற்பதாகவும் சொன்னார். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலங்களில் இருந்தன. சுற்றுச்சுவர் இல்லை. படல் இல்லை. காப்பாளர் இல்லை. இயற்கை வாழ்க்கை நிகழ்த்தும் அம்மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். கிணற்றுப் பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மட்டும் இருக்கும் அப்பகுதியில் புதியஅரிசி ஆலைகள் மிகுதி. நெல் அறைக்க ஏற்ற பதமான சூழல் அங்கு உள்ளது.

சோளம், கரும்பு, மஞ்சள், கருணைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சின்ன சேலம் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் மஞ்சளுக்கு ஈரோட்டுச் சந்தையில் நல்ல விலை கிடைக்குமாம். மஞ்சள் அறுவடை, சோளம் அறுவடை பற்றிய செய்திகளை நண்பர் வேலுமணி அவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார். போகும் பொழுது வழியில் ஒரு கொல்லையில் சோளத்தட்டைகள் உள்ள வயலில் இறங்கி ஒரு உந்து ஏரோட்டத் தொங்கியது. அங்கிருந்த தட்டைகள் கண்ணுக்குத் தெரியாதபடி மண்ணுடன் மண்ணாக மக்கச்செய்யும்படி, நொய்மணலாக அந்த வண்டி மாற்றியது. இதனை மீண்டும் திரும்பி வரும்பொழுது கண்டேன்.

இதமான காற்றை உள்வாங்கிக்கொண்டே 12 கல் தொலைவில் இருந்த கூகையூர் என்னும் ஊரை அடைந்தோம். அவ்வூர் குகையூர் எனவும் அழைக்கப்படும். வெள்ளாற்றங்கரையின் வடகரையில் அமைதியான பண்புடைய மக்கள் காணப்படும் அவ்வூரில் இறங்கி, அடிகளாசிரியர் வீடு எது? என வினவினேன்.


அடிகளாசிரியர் வாழும் இல்லம்

சாலையை ஒட்டியிருந்த இரண்டாவது வீட்டை அடையாளம் கண்டேன். அமைதியாக ஒரு கோயில் உள்ளே நுழைவதுபோல் மெதுவாகச் சென்றேன். கூரை வீடு என்றாலும் நெருக்கடி இல்லாமல் அகன்று இருந்தது. வீட்டின் உள்ளே திண்ணை போன்ற பகுதியில் அகவை முதிர்ந்த தோற்றத்துடன் துறவி போலும் மழிக்கப்படாத முகத்துடன் அறிவில் முதிர்ந்த அறிஞர் உட்கார்ந்திருந்தார். வணக்கம் தெரிவித்து அவர்களின் தமிழ்த் திருவடிகளைப் பணிவுடன் தொட்டு வணங்கினேன்.  ஆம்.

பதினைந்து ஆண்டுகளாக நான் காண நினைத்த வடிவம் அஃது. பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்கள்தான் நான் கண்டு வணங்கிய வடிவம். 99 அகவையாகும் நிலையிலும் நல்ல பார்வை நலத்துடனும் நினைவாற்றலுடன் காணப்பட்டார். அவருக்குக் காது கேட்காதோ என நான் நினைத்துக் கத்திப்பேச முயன்ற பொழுதெல்லாம் அதற்குத் தேவை இல்லாமல் போனது.

அடிகளாசிரியர்

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். புதுச்சேரியிலிருந்து வந்துள்ளமையைச் சொன்னதும் அவர் மகன் புதுச்சேரியில் இருப்பதைச் சொன்னார்கள். நான் வாழும் வீட்டின் அருகில்தான் அவர் குடியிருப்பதை உணர்ந்துகொண்டேன். அவரைப்  பற்றி எடுத்துரைத்து அவருடன் தொடர்புகொள்ளும்படி சொன்னார்கள்.

வழக்கமாகக் கால் மணி நேரம் மட்டும் அமர்ந்து உரையாடிவிட்டு ஓய்வெடுக்கும்படியான தளர்ந்த உடல்நிலை கொண்ட பேராசிரியர் அடிகளாசிரியர் ஒரு மணிநேரம் என்னுடன் பேசியவண்ணம் இருந்தார். அவர் பேச்சைக் கால் மணி நேரம் அளவு என் நாடாப்பெட்டியில் பதிந்துகொண்டேன். பேச்சு குழறாமல் இருந்தது. ஆனால் முதுமை கனிந்திருந்ததை உணர முடிந்தது.


அடிகளாசிரியர்

அவர் இளமைக்காலம் தொடங்கி தமிழ்ப் பேராசிரியராக, ஆய்வறிஞராக விளங்கிய அவர் தம் வாழ்க்கை வரலாற்றைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே யான் அவர்தம் இளையமகன் முனைவர். அ. சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்) அவர்கள் வழியாக ஓரளவு அறிந்தவன் எனினும் ஐயா வழியாக, அவர் பற்றிய சில வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்டுப்பதிவு செய்துகொண்டேன். அவரைப்பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டேன். அனைத்திற்கும் பேராசிரியர் அவர்கள் எனக்கு அனுமதி தந்து ஒத்துழைப்பு நல்கினார்கள்.

இடையிடையே அன்பர்கள் சிலர் வந்து அடிகளாரிடம் திருநீறு பெற்று வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள். அடிகளாசிரியர் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரிடத்து நிறைந்த ஈடுபாடு கொண்டவர். அவர் கொள்கையில் ஈர்ப்புண்டு தம் பெயரை அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டாராம். மறைமலைஅடிகளார் மயிலம் கல்லூரிக்கு வந்தபொழுது அடிகளாரை வரவேற்று,

எத்தனையோ புலவர்கள்முன்பு இருந்தார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம்
அத்தனையும் தமிழ்த்தாயை ஆரியத்தின் அடிச்சிஎன ஆக்கி வைத்தார்!
உத்தியினில் மிகச்சிறந்த உரவோனே! நீயுதிக்க ஒருதா னாகி
முத்தனைய தமிழ்சிறக்கும் வகைகண்டாய் நீவாழி! முன்பி னோடே!

என்று பாடியதை அடிகளாசிரியர் நினைவிலிருந்து சொன்னமை கண்டு வியப்படைந்தேன். இப்பாடல் கேட்ட அடிகளார் தமக்கு இத்தகுதிகள் உண்டு என ஏற்றுக்கொண்டாராம்.

யார் இந்த அடிகளாசிரியர்?

பேராசிரியர் அடிகளாசிரியர் என்றால் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு புரியும். தொல்காப்பியப் பதிப்பில் இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியதபடி ஆழமான, விளக்கமான பதிப்பை வழங்கியவர். தம் ஆராய்ச்சியால் உழைத்து உருவாக்கிய இலக்கண நூல்களைப் பிறர் பதிப்பிக்க முன்வராதபொழுது தாமே அச்சிட்டு வெளியிட்டவர். விற்போரும் வாங்குவோரும் இன்மையால் ஊர் ஊராக விற்கச் சென்று விற்பனை ஆகாமல் பல்வேறு பொருள் தட்டுப்பாடுகளால் தளர்வுற்றவர்.

கடைசிவரை கூரை வீட்டில் வாழும்படி இவர் வறுமையில் வாட நேர்ந்தது. முத்தமிழ்க் காவலர்கள் கூட இவர் தொல்காப்பியத்தை விலைக்கு வாங்காமல் அலைய வைத்தமை இவர் வாழ்வில் காணக் கிடைக்கும் செய்திகளாகும். கும்பகோணத்தில் இருந்த வணிகர் ஒருவர் வெள்ளிக்கிழமை எனத் தம் பணப்பெட்டியைத் திறக்காதபொழுது அவருக்கு இலவயமாக ஒரு தொல்காப்பியப் பதிப்பை அன்பளிப்பாக வழங்கிய கொடையுள்ளம் கொண்டவர் நம் அடிகளாசிரியர்.


தொல்காப்பியம்(1969)

தமிழ்க் கல்வெட்டுகள், சோதிடம் பற்றிய பேரறிவு பெற்றவர் இவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்), சொல்லதிகாரம் (சேனாவரையம்), பொருளதிகாரம் (செய்யுளியல்-பேராசிரியம்), தொல்காப்பியம் பொருளதிகாரம் (ஏனைய இயல்கள்) எனத் தொல்காப்பியப் பதிப்புகளில் ஈடுபட்டு இவர் வெளிப்படுத்தியுள்ள பதிப்பு நூல்கள் உலகத் தரத்தின. பல பாடவேறுபாடுகளை நுட்பமாகக் கண்டவர்கள், புதுப்புதுப் பொருள்களைக் கண்டு சொன்னவர். யோகக்கலையில் வல்லவர். பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். தஞ்சாவூர் சரசுவதி மகாலுக்காகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இன்னும் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளன. ஏறத்தாழ அறுபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் தொல்காப்பியப் பதிப்புகளும் சமயநூல் பதிப்புகளும் குறிப்பிடத்தகுந்தன.

அடிகளாசிரியரின் தமிழ் வாழ்க்கை

அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் பிறந்தவர் (1910 சாதாரண ஆண்டு, சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள், ஞாயிற்றுக்கிழமை). இவர் தம் பெற்றோர் பெரியசாமி ஐயர் (பார்ப்பனர்களைக் குறிக்கும் ஐயர் இல்லை), குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார்.

அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார். எனவே அடிகளாசிரியர் தம் தாய்மாமனான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணிய தேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம், சோதிடம் வல்லவர்கள். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.

பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தவர். முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ. குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் காண்டிகையுரையைப் பாடம் கேட்டவர். 1937 இல் இவர் தனித்தேர்வராகத் தேர்வெழுதி 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர்.

14.07.1938 இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில்  முதல் ஆசிரியராக  இவர் அமர்த்தம் பெற்றார். அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். அதுபொழுது மறைமலையடிகளார், நா.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.

அடிகளாசிரியர் அவர்களின் துணைவியார் பெயர் சம்பத்து (அகவை 80). கூகையூரில் அடிகளாசிரியருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு எட்டு மழலைச்செல்வங்கள் வாய்த்தன. அவர்களுள் ஆண்மக்கள் நால்வர். 1.அ.பேராசிரியர்(மறைவு), 2.அ.இளங்கோவன், 3.அ.நச்சினார்க்கினியன், 4. அ.சிவபெருமான். பெண்மக்கள் நால்வர்.1.திருநாவுக்கரசி, 2. குமுதவல்லி, 3.செந்தாமரை, 4.சிவா(மறைவு). அடிகளாசிரியர் வீரசைவ மரபினர் என்பதால் இறையீடுபாடு கொண்டு விளங்குகிறார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நட்பிற்கு உரியவர்கள். தந்தை பெரியாரை உயர்வாக மதிப்பவர். பிறர் மனம் புண்படாதபடி பழகும் பாங்கினர். எளிய வாழ்க்கை, தூய வாழ்க்கை இவருடையது. இவருக்குப்பணிவிடை செய்யும் அன்பர் அடிகளாசிரியரை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறார். கிழமைதோறும் மருத்துவர் ஒருவர் வந்து அடிகளாசிரியர் உடல்நிலையை ஆய்வு செய்து அறிவுரை சொல்கின்றார். இம்மருத்துவர் அடிகளாசிரியர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர் என்பதால் தம் மருத்துவ ஆய்வைத் தொழிலாகச் செய்யாமல் தன் குருவிற்குச்செய்யும் பணிவிடையாகச் செய்வதை அறியமுடிந்தது.


03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார். இவர் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்கள் விரும்பிப் பாடம்கேட்பது உண்டாம். கடுஞ்சொல் சொல்லாதவர். இவருக்குச் சினம் வருவதே இல்லையாம். இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு இவரிடம் படித்த மாணவர்கள் கூட இப்பொழுதும் இவரை வீடு தேடி வந்து பார்த்துச் செல்கின்றனர் என்றால் இவரின் பெருமை விளங்கும்.

கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகளை இலவயமாக நடத்தியுள்ளார். இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர். இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.

1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப் (1977) பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

20.01.1982 முதல் 01.10.1985 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார். மூப்பின் காரணமாகத் தாமே அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார். அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல், பிற இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டது. இவர்தம் அருமை உணர்ந்த மாணவர்கள் பலர் இவரை வந்து காண்பதும் உரையாடி மகிழ்வதுமாக உள்ளனர். அதிசயப் பிறவியாக எந்த நோய் நொடியும் இன்றி, கூரைவீட்டில் வாழ்ந்துவரும் தமிழறிஞரை வணங்கி மகிழ்ந்த நினைவுகளுடன் வெள்ளாற்றங்கரையில் இருந்த, கோயில்களையும் இயற்கை அழகையும் கண்டு மகிழ்ந்த மன நிறைவுடன் புதுச்சேரிக்குப் பேருந்தேறினேன்.

அடிகளாசிரியர் தமிழுலகிற்கு வழங்கிய தமிழ்க்கொடை:

1.அருணகிரி அந்தாதி(1967) சரசுவதி மகால் வெளியீடு.
2.மருதூரந்தாதி உரை(1968)
3.காலச்சக்கரம் 1969,79(சோதிடம்)
4.வராகர் ஓரா சாத்திரம் 1970,78,90
5.சிவஞானதீபம் உரை 1970
6.சிவப்பிரகாச விகாசம் 1977
7.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
8.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
9.தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
10.திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
11.திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
12.சிவபுராணச் சிற்றுரை 1986,99
13.சதமணிமாலை மூலமும் உரையும் 1990
14.சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
15.சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
16.குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
17இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
18.சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
19.பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003

பதிப்பு நூல்கள்

20.வீரசைவப் பிரமாணம் 1936
21.சதமணிமாலை 1938
22.சிவப்பிரகாச விகாசம் 1939
23.காமநாதர் கோவை 1957
24.மேன்மைப் பதிகம் 1957
25.சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958

ஆராய்ச்சி நூல்கள்

26.தொல்காப்பியம்- எழுத்து-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
27.ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
28.தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
29.தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம், த.ப. 1990
30தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல், த.ப.1985
31.தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)

படைப்பிலக்கிய நூல்கள்

32.பிள்ளைப்பாட்டு 1945
33.திரு அரசிலிக்காதை 1948
34.குழந்தை இலக்கியம் 1963
35.சான்றாண்மை 1964-1975

சான்றாண்மை(1964)

36.சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
37.அரசியல் இயக்கம் 1981
38.பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
39.அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
40.உளத்தூய்மை,1984,1994
41.தண்ணிழல் 1990
42.மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1993
43.தொழிலியல் 1993
44.மெய்பொருட்காதை
45.தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
46.ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
47. சிறுவர் இலக்கியம்

சிறுவர் இலக்கியம்

உரைநடை

48.எங்களூர்
49.தொடக்கப்பள்ளி - நாடகம்
50.வீரசைவ சிவபூசாவிதி 1949
51.விலையேற்றமும் வாழும் வழியும் 1984
52.திருமூலரும் பேருரையும் 1998
53.காயத்துள் நின்ற கடவுள்,1999
54.திருவாசக அநுபூதி 2000
55.கீதையின் அறிவுப்பொருள் 2000
56.திருமந்திர உணர்வு 2001
57.தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
58,திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,2005

திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம்


வெளிவர வேண்டிய நூல்கள்

1.கலித்தொகை உரை (குறிஞ்சிக்கலி)
2.பிரபுலிங்கலீலை
3.அடிகளாசிரியர் சமுதாயப்பாடல்கள்
4.அடிகளாசிரியரின் இலக்கணக் கட்டுரைகள்
5.அடிகளாசிரியரின் இலக்கியக் கட்டுரைகள்
6.திருக்குறள் உரை
7.முப்பால் உரைநடை
8.சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் மூலமும் உரையும்

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் முகவரி:

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர்
குகையூர்-அஞ்சல்
நயினார் பாளையம்-வழி
கல்லக்குறிச்சி-வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
6006 306

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்களின் திருமகனார்:

முனைவர் அ.சிவபெருமான்
தமிழ்ப்பேராசிரியர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்,சிதம்பரம்.
செல்பேசி: 9443099936

* கட்டுரை,படங்களை எடுத்தாள விரும்புபவர்கள் இத்தள முகவரி குறிப்பிடுவதுடன்,இணைப்பும் வழங்க வேண்டுகிறேன்.

* இக்கட்டுரை அடிகளாசிரியர் மறைவுக்கு முன்பு எழுத்தப்பட்டது. 08.01.2012 இல் அடிகளாசிரியர் இயற்கை எய்தினார்.

32 கருத்துகள்:

Unknown சொன்னது…

என் முந்தைய பின்னூட்டத்தை
மறுத்துவிட்டது இந்த அஞ்சல் அமைப்பு.
எனவே சுருக்கமாக்க்கூறுகிறேன்.
இவர் போலும் பேரறிஞர்களைப்
போற்றுவதே நம் கடமை.
வாலறிவன் நற்றாள் தொழுவோம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

இவ்வளவு அரிய படைப்புகள் தந்தவர் கூரை வீட்டில் வாழ்கிறாரே :( வறுமையா இல்லை விரும்பி வாழ்கிறாரா?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பின்னூட்டங்களால் ஊக்கம் பெறுகிறேன்.
மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.இரவி சங்கர் அவர்களுக்கு,
புலவர்பெருமான் வறுமையில்தான் அவ்வாறு வாழ்கிறார்.ஆனால் நம்போல் அன்புடையவர்கள் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொள்கின்றனர்.
மு.இளங்கோவன்

Yuvaraj சொன்னது…

தமிழிற்கினிய அடிகளாரின் வாழ்வை படித்துவருகையில் மெய் மறந்து பகலுணவு கூட உண்ணாமல் மெய் சிலிர்ந்தேன்....
நல்ல தமிழறிஞர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறப்பதில்லை.மறைந்து வாழும் அவர்களை பதிவு செய்து அருந்தொண்டாற்றும் தங்களை போன்றோர்களால்.....
முனைவருக்கு என் அன்பின் வணக்கத்தை என்று உர்தாக்குகிறேன்
அன்பன்..
வெ.யுவராசன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இ

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

சிங்கப்பூர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் மடல்:

வணக்கம்,

அடிகளாசிரியர், சோ கந்தசாமி ஆகியோரது கட்டுரைகள் படித்தேன். தமிழ்ப் பற்றார்கள், பேராசிரியர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அப்பழுக்கற்ற பற்றும் தமிழ் உணர்வும் நன்கு வெளிப்படுகின்றன. பிரதிபலன் பாராமல் உழைக்கும் நீங்கள் இன்னும் தமிழ்த்தாய்க்குத் தொண்டாற்ற இறைவன் அருள்புரிய வேண்டும்.

நன்றி வணக்கம்

அன்புடன்
ஆ ரா சிவகுமாரன்

பார்வைகள் சொன்னது…

அன்பு நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் அடிகளாசிரியர் சந்திப்பு என்பது வெறும் சந்திப்பாக அமையாது அவரின் படைப்புகளைப் பட்டியலிட்டது, தமிழ் சார்ந்த உணர்வுகளைப் பகிர்தல் என்ற வகையில் அமைந்திருந்தமை பாராட்டுக்குரியவை. ஐயா கண்ணன் எடுத்துக்காட்டியதுபோல் தமிழ் தரிசனம் என்பது பொருத்தமான தலைப்பு.
தொடரட்டும் இளங்கோவனின் தமிழ்த் தொண்டு
வாழ்த்துகள்.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெ.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தி.நெ.அவர்களுக்கு வணக்கம்.
நன்றி ஐயா.
மு.இ

duriarasanblogpsot.com சொன்னது…

நல்ல அறிஞர் பற்றிய அறிய தகவல்கள். தொடர்ந்து இத்தகைய அறிஞர்கள் பற்றி எழுதுங்கள்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் துரையரசன் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.
மு.இ

duriarasanblogpsot.com சொன்னது…

நல்ல தமிழறிஞர் பற்றிய நல்ல தமிழ்க் கட்டுரை. இவர்களைப் போன்றோர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள்.

ஏ.சுகுமாரன் சொன்னது…

உண்மையிலேயே மலைக்க வைக்கிறது தங்கள் பணி,
தங்கள் உழைப்பும் , ஈடுபாடும் மிக உயர்வு ,
தமிழ் வாழ ,தமிழ் அறிந்த மக்களை நாம் போற்றவேண்டும் ,
அடையாளம் கண்டு பாராட்ட வேண்டும் .
மீண்டும் நன்றி , வாழ்த்துக்கள் !
அன்புடன்
ஏ.சுகுமாரன்
amirthamintl@gmail.com
puduvaisugumaran.blogspot.com

ஏ.சுகுமாரன் சொன்னது…

உண்மையிலேயே மலைக்க வைக்கிறது தங்கள் பணி,
தங்கள் உழைப்பும் , ஈடுபாடும் மிக உயர்வு ,
தமிழ் வாழ ,தமிழ் அறிந்த மக்களை நாம் போற்றவேண்டும் ,
அடையாளம் கண்டு பாராட்ட வேண்டும் .
மீண்டும் நன்றி , வாழ்த்துக்கள் !
அன்புடன்
ஏ.சுகுமாரன்
puduvaisugumaran.blogspot.com
amirthamintl@gmail.com

S.Lankeswaran சொன்னது…

முனவர் அவர்களின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கின்றது. தங்களின் தமிழ்ப்பபணி சிறக்க வாழ்துக்கள். தங்ககளின் வலைப்பதிவை என் வலைப்பதிவில் இணைப்பதில் பெறுமையடைகின்றேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.சுகுமாரன் ஐயா அவர்களுக்கு,
தங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டிற்கும் நன்றி.
மு.இ

-/சுடலை மாடன்/- சொன்னது…

பல அரிய தகவல்களின் மூலம் இணையத்தில் பேராசிரியர் அடிகளாசிரி்யரை அறிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
அடிகளாசிரியர் போன்ற எத்தனையோ அரிய தமிழறிஞர்கள் தங்களது சொந்த நலன்களை அர்ப்பணித்து மொழிப்பணி செய்து வருவதனால்தான் பெருவாரியான தமிழர்கள் சுயமரியாதையிழந்து மொழியை அவமதித்தாலும் தமிழ்மொழி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
திரு.இலங்கேசுவரன் அவர்களுக்கு,
தங்கள் ஊக்க உரைக்கு நன்றி.
மு.இ

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.சங்கரபாண்டியனார் அவர்களுக்கு
வணக்கம்.
தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கிப் பதிவிட்டமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.சங்கரபாண்டியனார் அவர்களுக்கு
வணக்கம்.
தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கிப் பதிவிட்டமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்

Venkatesh சொன்னது…

பேரறிஞர்களைப் போற்றுவதே நம் கடமை. இவர் தம் பெருமை வருங்காலம் அரிய பதிவிட்டமைக்கு நன்றி!!

நன்றிகளுடன்
வெங்கடேஷ்
திரட்டி.காம்

தமிழ் இயலன் சொன்னது…

Anbulla aiya
Thamizharignargalai
thedi arindhu paaraattum panbu paaraatta thakkadhu;pinpatra thakkadhum kooda.....
sivaraman, velumani peyargalai panbiyaludan padhivu seidhulleergal

vaazhthukal

Thamizhiyalan

Unknown சொன்னது…

அய்யா,
அடிகளாசிரியர் அவர்கள் வாழும் வரலாறாகத் திகழ்கிறார்.
அவருள் புதைந்து கிடக்கும் செல்வங்களை தமிழுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகையோரை தாங்கள் இனம் கண்டு தமிழ் பயனுற வேண்டும்.

Unknown சொன்னது…

அய்யா,
அடிகளாசிரியர் அவர்கள் வாழும் வரலாறாகத் திகழ்கிறார்.
அவருள் புதைந்து கிடக்கும் செல்வங்களை தமிழுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகையோரை தாங்கள் இனம் கண்டு தமிழ் பயனுற வேண்டும்.

Sathis Kumar சொன்னது…

வணக்கம், ஒரு நல்ல தமிழ் அறிஞரை, அனைவரும் மறந்துவிட்ட நிலையில், நீங்கள் அவரை உலகறியச் செய்துள்ளீர்கள். உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. அந்த 99 வயது இளைஞரை நான் சந்திக்க வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது. பல கற்றுப் பண்டிதனாயினும், எளிமையாய் இருப்பதே ஓர் அறிஞனுக்கு அழகு என்பதை அவர் நிரூபித்துக் காட்டி விட்டார். தமிழக அரசு அவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும். ஐயா, தாங்கள் அவருடனான உரையாடலை ஒலிப்பேழையில் பதிவு செய்துக் கொண்டதாகக் கூறுகிறீர்கள். நாங்களும் அவருடைய குரலைக் கேட்பதற்கு ஆவண செய்ய முடியுமா? இணையத்தில் ஒலிக்கோப்பை பதிவேற்ற முடியுமா?

நன்றி.

Unknown சொன்னது…

அடிகளாசிரியர் போன்ற இத்தகைய பெருமைக்கு உரிய ஒரு சிறந்த எழுத்தாளரை, அவரது வாழ்வை சிறப்பாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. - அன்புசிவம்.

மயிலாடுதுறை சிவா சொன்னது…

தரமான மிக அருமையான ஆவண பதிவு!

இப்படிப் பட்ட நல்ல தமிழ் உள்ளங்களை அறிமுகப் படுத்திய அய்யா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Unknown சொன்னது…

Nandri iyya. Thangalin pani sirakka vazthukiren


SIVARAMAN HARIPRIYA

Ravi Devaraj சொன்னது…

varumaiyilum semmai.

geethasmbsvm6 சொன்னது…

அருமையான தமிழறிஞர் குடத்திலிட்ட விளக்குப் போல் ஒளிர்ந்து மறைந்திருக்கிறார். எந்த முத்தமிழ்க்காவலரும் இவருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட்டிருக்க மாட்டார்கள். பல அரிய படைப்புகளைத் தந்திருக்கிறார் கூரை வீட்டில் வசித்த வண்ணம். உண்மையான பிரதிபலன் பாராத் தொண்டு.

geethasmbsvm6 சொன்னது…

தொடர

elikunju சொன்னது…

nanri munaivar mu.eLangOvan avarkaLE