நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 ஆகஸ்ட், 2008

நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம் தொடங்கியது...


மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரி நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி.இக்கல்லூரியில் இன்று 23.08.2008 காலை 1030 மணியளவில் தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் இனிதே தொடங்கியது.நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நூலகத்துறையைச்சேர்ந்த கவிதாதேவி அவர்கள் வரவேற்றார்கள்.கல்லூரிப் பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப்பேசினார்கள்.நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் அவர்கள் முகவுரை நிகழ்த்தினார்.

தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் பொருளில் புதுச்சேரி,பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி பகல் ஒருமணி வரை சிறப்புரையாற்றினார்.இவர் உரையில் இணையத்தளம் வரையறை,இணையத்தள வகைகள்,தமிழ் இணையத்தள வளர்ச்சி,மின்னிதழ்கள்,தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு குறிப்பாக கண்ணன்,சுபா ஆற்றி வரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.அதுபோல் சுவிசில் வாழும் கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பற்றியும் விளக்கினார்.தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் பணிகள் செயல்பாடுகளை விளக்கினார். தமிழ் விக்கிபீடியாவின் பணிகள் தெரிவிக்கப்பட்டன.

விருபா இணையதளம் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது.
தமிழ்மணம்,திரட்டி,தேன்கூடு,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகளின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் வாழ்ந்தபொழுது காசி ஆறுமுகம் உருவாக்கிய தமிழ்மணம் இணையத்தளம் இன்று அமெரிக்காவில் வாழும் நா.கணேசன்,சங்கரபாண்டி,தமிழ் சசி உள்ளிட்டநண்பர்களால் நிருவகிக்கப்படுகிறது என்ற செய்தியும் காட்சி விளக்கங்களுடன் அவைக்கு வழங்கப்பட்டது.
தமிழா.காம் முகுந்தராசு அவர்களின் பணிகள் சிறப்பாக அவைக்கு அறிமுகம் செய்யப்பெற்றது.பேராசிரியர்கள்,மாணவர்கள்,செய்தியாளர்கள்,தொலைக்காட்சி நிறுவனத்தினர் பலர் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்துள்ளோம்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தமிழ்த் தட்டச்சு,தமிழ் வலைப்பூ உருவாக்கம் செய்முறை விளக்கம் நடைபெற உள்ளது.
விழா மேடையிலிருந்து...
மு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: