நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஜூன், 2016

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்க விழா...

  கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில்  04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது.  முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

  கனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

  திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.

  பிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

  திரு. சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் ’உந்தி முதலா முந்து வளி’ என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் - உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார். அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருத்துவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும் எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.


  திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

  கனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெள்ளி, 3 ஜூன், 2016

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்





  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.

  முதல் நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.

  மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.

  சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.

  மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில்  புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


  உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தொடர்புக்கு: சிவ.பாலு அவர்கள்: 416 546 1394