நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு மறைவு



திருக்குறள் தொண்டர் 
புதுக்கோட்டை வே. இராமதாசு அவர்கள்

புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களிடம் பழகித் தமிழ் உணர்வுபெற்றவரும், புதுக்கோட்டைத் திருக்குறள் பேரவைத் தலைவரும், மிகச் சிறந்த கொள்கைச் சான்றோருமாகிய ஐயா வே.இராமதாசு அவர்கள் நேற்று (11.10.2014) சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாகப் புதுக்கோட்டையில் தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். இன்று (12.10.2014) பகல் 12 மணியளவில் புதுக்கோட்டையில் அன்னாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

திரு. வே. இராமதாசு அவர்களை 1993 ஆம் ஆண்டு முதல் நான் நன்கு அறிவேன்.  கவியரசு முடியரசனார் அவர்களை என் ஆய்வின் பொருட்டு, காரைக்குடியில் சந்தித்தபொழுது திரு. பாரி முடியரசன் அவர்கள் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து திரு. வே. இராமதாசு அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் இந்த நொடிவரை இருவரும் பண்பு பாராட்டிப் பழகினோம். 

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வேண்டிப் பொன்னி இதழ்களைப் பெற மூன்றாண்டுகள் அலைந்தபொழுது அந்த இதழ்கள் எனக்குக் கிடைக்க உதவியவர் திரு. வே. இராமதாசு அவர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் வாழ்ந்தபொழுது ஒவ்வொரு கிழமையும் புதுக்கோட்டை சென்று திரு. வே.இராமதாசு அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். பணியின் பொருட்டு நான் பல ஊர்களில் வாழ நேர்ந்தாலும் புதுக்கோட்டைக்கு நாள் ஒதுக்கிச் சென்று ஐயா இராமதாசு அவர்களைக் கண்டு பழகுவேன். அவருடன் பழகிய அனைத்து நிகழ்வுகளும் ஒரு நூல் எழுதும் அளவுக்கு விரிந்து பரந்தன. 

சென்ற ஆண்டு திருச்சிராப்பள்ளியில் ஒரு புத்தொளிப்பயிற்சியில் இருந்தபொழுது மாலை நேரத்தில் புதுக்கோட்டை சென்றேன். நெடுநாழிகை உரையாடிக்கொண்டிருந்த நானும் புலவர் முத்துநிலவனும், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி முனைவர் நா. அருள்முருகனும், புலவர் கருப்பையாவும் புதுக்கோட்டையில் ஐயாவின் இல்லத்துக்குச்  சென்று நலம் வினவி மீண்டமை இப்பொழுதும் பசுமையாக நினைவில் உள்ளது. அவர்களின் குடும்பத்தார் என்னையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக எண்ணிப் பழகிய அந்த நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

 அண்ணல் சுப்பிரமணியனாரின் நாட்குறிப்பேடுகளைப் பெறுவதிலிருந்து, அண்ணலாரின் பதிப்புப்பணிகளை அறிவது, புதுக்கோட்டையில் இருந்த பதிப்பகங்கள், நடைபெற்ற தமிழ் நிகழ்வுகள் யாவற்றையும் நான் அறிவதற்கு நம் வே. இராமதாசு அவர்கள் துணைநின்றவர்.  அறிஞர் பொற்கோ அவர்களுடன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பழகி அவர்களின் பதிப்புப்பணிகளுக்கு உடன் துணைநின்ற பெருமைக்குரியவர். அண்ணலாருடன் இணைந்து 1954 இல் புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் கண்டவர். ஒவ்வொரு மாதமும் தமிழறிஞர்களைப் புதுக்கோட்டைக்கு அழைத்து உரையாற்றச் செய்தவர். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவக் காரணமானவர்களுள் ஒருவர். தமிழக அரசின் மூத்த தமிழறிஞர் நிதி உதவியைப் பெற்று வாழ்ந்தவர்.

புதுக்கோட்டை ஒரு தமிழ்த்தொண்டரை இழந்து நிற்கின்றது. அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தமும் ஆறுதலும் உரியவாகும்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”

புலவர் முத்துநிலவன், வே.இராமதாசு, மு.இளங்கோவன், 
முனைவர் நா. அருள்முருகன், முனைவர் மகா.சுந்தர்

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு அவர்களுடன் மு.இளங்கோவன்

வியாழன், 2 அக்டோபர், 2014

அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா மறைவு



 அருட்செல்வர் நா. மகாலிங்கம்


  அருட்செல்வராகவும் பொருட்செல்வராகவும் விளங்கி, நம் அருந்தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அனைத்து வகையிலும் தொண்டாற்றிய முனைவர் நா. மகாலிங்கம் ஐயா அவர்கள் தம் 91 ஆம் அகவையில் இன்று (02.10.2014) சென்னையில் இராமலிங்கர் பணிமன்றத் தொடக்க விழாவில் உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மயங்கியவாறு உயிர் பிரிந்தது என்ற துயரச்செய்தியை அறிந்து, அறிவிப்பதில் ஆழ்ந்த துயருறுகின்றேன். உடல்நலக் குறைவுற்று, கோவையில் மருத்துவமனையில் இருந்தாலும் தம் கண்ணொத்த அமைப்பான இராமலிங்கர் பணிமன்றத்தின் சென்னை விழாவில் அவர்கள் கலந்துகொண்டு உயிர்விட்டுள்ளமை கண்ணீர்மல்கச் செய்கின்றது.

  நான் திருப்பனந்தாள் கல்லூரி  மாணவனாக இருந்ததுமுதல் அருட்செல்வர் அவர்களை நன்கு அறிவேன். எங்கள் திருமடத்தின் அதிபர் அவர்களின் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியதும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் வெளியிட்டு உரையாற்றியதும், திருச்சிராப்பள்ளி இராமலிங்கர் பணிமன்ற விழாவில் உரையாற்றியதும், கோவை செம்மொழி மாநாட்டில் அவர் அருகில் அமர்ந்து யான் உரையாடியதும் என் வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். 

  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைக் குறித்த ஆவணப்படம் எடுக்க, அருட்செல்வரைச் சந்திக்க நாள் கேட்டபொழுது, அவர்களின் உதவியாளர் தொடர்புகொண்டு ஐயா சந்திக்க விரும்புவதாகவும், இப்பொழுது மருத்துவமனையில் இருப்பதால் நலம்பெற்ற பிறகு சந்திப்பதாகவும் இரு திங்களுக்கு முன்னர்த் தெரிவித்தார்கள். இந்த நிலையில் வரும் 08.10.2014 சென்னையில் நடைபெறும் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் உரையாற்ற அருட்செல்வர் அவர்கள் என்னை அழைத்திருந்ததையும் அவர்களைச் சந்திக்க இயலாதவாறு ஆருயிர் பிரிந்தமையும் நினைக்கும்பொழுது வருத்தம் மேலிடுகின்றது.

  அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா அவர்கள் ஆயிரம் திருப்பணிகள் செய்திருந்தாலும் மறைந்த இசைத்தமிழ் நூலான பஞ்சமரபு நூலினை மீட்டுத்தந்த ஒரு செயலுக்கே இத்தமிழுலகில் அன்னாரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை ஆதரித்தமையாலும் ஐயா அவர்கள் தமிழிசை உலகால் நினைவுகூரப்படுவார். அருட்செல்வர் அவர்கள் செய்த அத்தனைத் தமிழ்ப்பணிகளையும் எம்மனோரால் பட்டியலிட்டுவிடமுடியாதபடி  அப்பணிகள் நீளும்.

  இசைமேதை வீ.ப. கா. சுந்தரம் அவர்கள் வழியாக பஞ்சமரபினை மீண்டும் செம்பதிப்பாக அருட்செல்வர் கொண்டுவந்துள்ளமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. 

  தொல்காப்பியச் செல்வர் கு.சுந்தரமூர்த்தி அவர்களை ஆதரித்தமையும் அருட்செல்வரின் தமிழ்ப்பற்றினுக்குச் சான்றாகும். குறைந்த விலையில் தமிழ் நூல்கள் கிடைப்பதற்கு வாரித் தந்த செல்வம் வகைதொகையின்றிப் பெருகும். பெரும்புலவர் பல்லோரை ஆதரித்தவர். அன்னவருக்கு நிகரான ஒரு கொடை வள்ளல் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உலகில் இல்லை எனலாம்.

  அருட்செல்வர் அவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தியவர். பல்வேறு தொழிலகங்களை நடத்தியவர். அறப்பணிகள் செய்வதில் முன்னின்றவர். சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.

தமிழுக்கு வழங்கிய கொடை வள்ளலை இழந்து, தமிழ்த்தொண்டர்கள் கையற்று நிற்பது கண்ணில் நிழலாடுகின்றது. வாழ்க அருட்செல்வர்! வளர்க அவர்தம் திருப்புகழ்!

 கோவை மாநாட்டில் அருட்செல்வர், ஆல்பர்ட்டு ஐயா, மு.இ
 கோவை மாநாட்டில் அருட்செல்வர், நா.கணேசன், மு.இளங்கோவன்