நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வில்லுப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வில்லுப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...

கலைமாமணி  ந. மா. முத்துக்கூத்தனார்  (25.05.1925 - 01.05.2005) 

     பலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாடி தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,

"நீலமா மலைத்தொடரில்
கோலமே மிகுந்த குளிர்
சோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..
ஞாலமே வியந்து நிற்குது

காணவரும் மாந்தருக்குக்
கண்ணிறைந்த காட்சிபல
வேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்
வேட்கையையும் தான்தணிக்குது

வானைமுட்டும் மாமரங்கள்
தானுயர்ந்து நிற்குமதில்
தேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே
தின்றதுபோல் நாவினிக்குது

மானிடர்கள் கைப்படாத
ஓவியங்க ளாக இங்கே
வண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்
பெண்சிரித்தால் போலிருக்குது!   ----  (நீலமா)

நாணி நிற்கும் பெண்ணொருத்தி
போலிருக்கும் பூவிதழின்
மேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது
கோணிக்கொண்டு தானிருக்குது

தேனிலவுக் காக இங்கே
தேடி வரும் காதலர்கள்
வானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த
வையத்தைத் தான் மறக்கிறார்.

தொட்டுப் பழகாத புது
காதலர்கள் இங்கே வந்தால்
ஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்
கட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ..."

என்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

     ந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.

     1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.

     1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,

"செந்தமிழே வணக்கம் ...
ஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்"

என்னும் பாடலும்,

திரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,

"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா?" பாடலும்,

அரசகட்டளை படத்தில்,

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே
ஆடிவா" என்ற பாடலும்

"எத்தனை காலம் கனவு கண்டேன்
காண்பதற்கு - உன்னைக் -
காண்பதற்கு" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.

தமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.

     கலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்.  ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.

ந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.

     கலைவாணரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, "பெரியாருள் பெரியார்" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில்  மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

     ந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, "என்ன செய்யப் போறீங்க?" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு "ஊமை சாட்சிகள்" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு "எமன் ஏமாந்து போனான்" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, "நூறாண்டு வாழலாம் வாங்க" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

     பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் "புரட்சிக்கவி" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் "கொடை வள்ளல் குமணன்" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் "கலைமாமணி" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).

     1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம்  "பாரதிதாசன் விருதினையும்", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் "நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்" (1998), இலக்கிய வீதி அமைப்பு "தாராபாரதி விருதினையும்" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் "தமிழ்ச்செம்மல் விருதினையும்" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.

     தமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன்  நம் முத்துக்கூத்தரைச், "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.

ந.மா. முத்துக்கூத்தனின் தமிழ்க்கொடை:

1.   பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)
2.   தமிழிசைப் பாடல்கள்(தொகுப்பு)
3.   பகை வென்ற சோழன்(நாடகம்)
4.   இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)
5.   மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)
6.   துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)
7.   எல்லாரும் நல்லா இருக்கணும்
8.   நெல்லம்மா (கதை-விதை-கவிதை)

குறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.





வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்




வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்

புதுவைப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வந்த காலம்(1992)  முதலாக ஓர் இனிய குரலுக்கு மயங்கிக் கிடந்த செவிக்கு, மீண்டும் ஓர்  இசைவிருந்து அண்மையில்  பரிமாறப்பட்டது. ஆம். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிகழ்ச்சிக்குத் தவத்திரு ஊரன் அடிகளார் வந்ததை அறிந்து, புதுவைத் தமிழன்பர்கள் திரளாக அரங்கிற்கு வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுள் வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் அவர்களின் வருகையைத் தனித்துச் சுட்டியாதல் வேண்டும்.

தொல்காப்பிய மன்றத்து நிகழ்ச்சி தொடங்குவதன் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாட வேண்டிய நேரத்தில், வில்லிசை வேந்தர் முன்னிலையில் இருப்பதை அறிந்தோம். இப்பொழுது யார்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடுவது என்று தயங்கியபடி இருந்தோம். வில்லிசை வேந்தரிடம்,ஐயா, தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தாங்கள் பாட வேண்டும்’ என்று ஓர் அன்பு வேண்டுகோள் வைத்தோம். ஐயா அவர்களும் பெரிய உள்ளத்துடன் முன்வந்து பாடி, அவையைத் தமிழிசை மழையில் நனைத்தார்கள். ஓரிரு நாள் உருண்டோடின.

வில்லிசை வேந்தரின் இசைப்பயணத்தைத் தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் அவர்கள் வழியாக முன்பே அறிவேன் எனினும் முழுமையாக அறிந்து, பதிந்துவைக்க வேண்டும் என்று அவருக்குத் தொலைபேசியில் என் விருப்பம் தெரிவித்தேன். அவர்களும் சந்திக்க ஆர்வம் காட்டினாலும், ’இப்பொழுது பண்ணும் பாடலும் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்குப் புறப்படுகின்றேன். தாங்கள் வந்தால் அரைமணி நேரம் மட்டும் உரையாடலாம்’ என்றார். அடுத்த பத்து நிமையத்தில் அவர் இல்லத்தில் நின்றேன்.

குறுவாள் போன்ற வெண்மீசை தாங்கிய முகம்; பேச்சுக்குப் பேச்சு நகைச்சுவை தோன்ற உரையாடும் இனித்த பாங்கு கொண்ட வில்லிசை வேந்தர் என்னை அன்புடன் வரவேற்று, அமர்த்திவிட்டுத் தம் வாழ்க்கைப் புத்தகத்தைத் திறந்துகாட்டினார்.

வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் புதுச்சேரி மாநிலத்தின் பெருமைக்குரிய ஊர்களுள் ஒன்றான பாகூரில் 31. 05. 1932 இல் பிறந்தவர். பெற்றோர் மன்னாரம்மாள், இரிசப்பன். புதுச்சேரியின் குயவர்பாளையத்தில் இப்பொழுது வாழ்ந்துவருகின்றார். இவர் பாகூர் தொடக்கப் பள்ளியிலும், புதுச்சேரி . . சி பள்ளியிலும் பயின்றவர். ஒன்றாம் வகுப்பில் இவருக்கு ஆசிரியராகப் பாவேந்தர் பாரதிதாசன் விளங்கியுள்ளார்(1938). பகுத்தறிவுப் பாவலர் புதுவைச்சிவம் அவர்களுடன் இளமையில் பழகிய பெருமைக்குரியவர்.

பிரெஞ்சியர் ஆட்சியில் கல்வி கற்றதால் தமிழும், பிரெஞ்சும் நன்கு அறிந்தவர். தம் பள்ளிக் கல்வி முடிந்த உடன் 19.12.1952 இல் பள்ளி ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். வில்லியனூர், கோர்க்காடு, பாகூர், தொண்டமாநத்தம், சுத்துக்கேணி, பாக்கமுடையான்பட்டு, மடுகரை, தேனூர்(காரைக்கால்) உள்ளிட்ட ஊர்களில் இடைநிலை ஆசிரியராகவும் (Instituteur de Langue Indienne (Tamoul)), முதனிலைத் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி 31.05.1992 இல் ஓய்வுபெற்றவர்.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு  தொடர்ந்து கல்வி பயின்று வித்துவான்(புலவர்), பி.லிட், முதுகலை என்று பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

பாவலர் புதுவைச் சிவம் அவர்களின் தலைமையில் 1953 இல் திருமணம் செய்துகொண்டவர்.

வகுப்பறையில் பாடங்களை இசையுடன் பாடி நடத்தியதால் இவர் வகுப்பில் இருந்த மாணவர்கள் ஆர்வமாகத் தமிழைப் படித்துள்ளனர். புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் இசையரங்கப் பகுதியில் இவரின் இசைநிகழ்வு கட்டாயம் இருக்கும். அரைநூற்றாண்டுக் காலம் புதுவையில் தமிழிசை பரப்பிய பெருமைக்குரியவர் இவர்.

புலவர் . பட்டாபிராமன் அவர்கள் தம் வாழ்க்கை நிகழ்வுகளை ஆர்வமாக என்னிடம் சொல்லி வந்த நேரத்தில் இடைமறித்து, தங்களுக்கு வில்லிசையில் ஈடுபாடு எவ்வாறு வந்தது? என்று நீண்டநாள் நான் தேக்கி வைத்திருந்த என் விருப்பத்தை வினாவாக்கினேன்.

’கலைவாணர் என். எஸ். கே. அவர்களின் பேச்சையும் வில்லிசையையும் கேட்டுள்ளேன். குலதெய்வம் இராஜகோபால் அவர்களின் வில்லிசை நிகழ்ச்சியைப் பார்த்துள்ளேன். என்.எஸ்.கே. கோலப்பனின் வில்லுப்பாட்டையும் சுவைத்துள்ளேன். கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் வில்லிசை நிகழ்ச்சியையும் கேட்டுள்ளேன். இவை அனைத்தும் சிறப்பாக இருக்கும். என்றாலும் இவை என் உள்ளத்தை ஈர்க்கவில்லை.

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையைக் கடலூர் நகரமன்றத்தில் வில்லுப்பாட்டாக நடத்தினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் கலந்துகொண்டு, அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையை வில்லுப்பாட்டில் பாடினார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் பாடல்களை எழுதி, இயக்க இரண்டு மணிநேரம் அமைந்த அந்த நிகழ்ச்சிதான், நாமும் வில்லுப்பாட்டினைப் பாடலாம் என்ற ஆர்வத்தை எனக்கு உண்டாக்கியது’ என்றார்.

இதுவரை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் மிகச் சிறந்த குரல்வளம் கொண்ட நடிகர் என்று மட்டும் அறிந்துவைத்திருந்த எனக்கு அவர் ஒரு பாடகர் என்ற செய்தி புதியதாக இருந்தது. வில்லிசை வேந்தர் உருவாக அவரின் குரல் இருந்துள்ளது என்று அறிந்து மேலும் வியப்பட்டைந்தேன்.

    1966 இல் வில்லியனூரில் திருவள்ளுவர் விழாவில் திருவள்ளுவரின் பெருமை என்ற தலைப்பில் இவரின் வில்லிசை அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லை மூங்கில் பிளாச்சிகளைக் கொண்டு இவரே செய்துள்ளார். இவரிடம் பயின்ற சிவானந்தம் என்ற மாணவரைப் பின்பாட்டு பாடுவதற்கு ஆயத்தம் செய்தார். பக்க இசைக்கருவியாளர்களாக முனைவர் இரா. திருமுருகன் இவருக்குக் குழல் இசைத்தார். இராச. வேங்கடேசன் ஆர்மோனியம் இசைத்தார். ஆரோக்கியசாமி என்பவர் வயலின் இசைத்தார். சிவலிங்கம் என்பவர் தபேலா இசைத்தார். கோ. சின்னையன் என்ற இவரின் மாணவர் உடுக்கை இசைத்தார். வள்ளுவர் வில்லிசைக் குழு உருவான வரலாறு இதுதான். அன்று முதல் புதுவை மாநிலத்தின் பல ஊர்களில் இவரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்று, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக முனைவர் ஆறு. அழகப்பன் தமிழ்ப் பணியாற்றியபொழுது முதுகலை மாணவர்களுக்கு வில்லிசையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் இவருக்கு அந்நாளில் அமைந்தது.

        புதுச்சேரி அரசின் கல்வித்துறை, நலவழித்துறை, செய்தி விளம்பரத்துறை, கூட்டுறவுத்துறை, வேளைண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை, முறைசாராக் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை, தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் என்று அனைத்துத் துறைகளின் சார்பிலும் நடைபெற்ற நிகழ்வுகளிலும், பாரதியார் விழா, பாரதிதாசன் விழா, கவிஞரேறு வாணிதாசனார் விழா, கவிஞர் புதுவைச் சிவம் விழா, கவிஞர் தமிழ்ஒளி விழா, இந்தியச் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, குழந்தைகள் தினவிழா, ஆசிரியர் நாள் விழா என இவரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்துள்ளதால் இவரை அறியாதவர்கள் புதுவையில் இல்லை என்று கூறும் அளவு புதுச்சேரியில் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞராக  இ. பட்டாபிராமன் விளங்குகின்றார்.

கவியரங்குகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் பாங்குடையவர்.
  • காதல்பறவை,
  • பாடித்தான் பாருங்களேன்(வில்லிசை மலர்கள்)
  • வறுமையை ஒழிப்போம்,
  • வாருங்கள் மலேசியாவுக்கு
  • பிள்ளைகளே உங்களுக்காக
  • சாதிகள் இல்லையடா
  • இசை தந்த இசை
  • இயற்கையைக் காப்போம் இனி 

உள்ளிட்ட நூல்களைத் தம் தமிழ்க்கொடையாக வழங்கியவராகவும் வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் விளங்குகின்றார். வில்லிசைவேந்தரின் இசையார்வம் அறிந்த மலேசியத் தமிழன்பர்களான இர. . வீரப்பனார், மணி. மு. வெள்ளையனார், மாரியப்பன் ஆறுமுகம், பத்துமலை உள்ளிட்டவர்கள் இவரின் வில்லிசை மலேசியாவில் அறிமுகம் ஆவதற்குப் பெருந்துணைபுரிந்துள்ளனர். பாவேந்தர் நூற்றாண்டு விழா மலேசியாவில் கொண்டாடப்பட்டபொழுது வில்லிசைவேந்தர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு(1991), தம் இசைப்பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். சிங்கப்பூரிலும் இவரின் வில்லிசை முழங்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ள இவர் புது தில்லித் தமிழ்ச்சங்கத்திலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

புது தில்லி வானொலி நிலையத்தின் வழியாகவும் வில்லிசை வேந்தரின் வில்லிசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையங்களும் இவரின் திறமையை ஏற்று, பல வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் இரா. வெங்கட்ராமன் அவர்களின் கையால் நல்லாசிரியர் விருது பெற்றவர்(1987). காரைக்கால் நிர்வாக அதிகாரியான மாத்யூ சாமுவேல் அவர்கள் இவருக்கு ..சி. விருது அளித்துச் சிறப்பித்துள்ளார்.

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னைத் தலைவர் சிவ. கண்ணப்பா அவர்கள் கலைமணி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் அவர்கள் வில்லிசைச் செல்வர்  என்ற பட்டத்தை வழங்கிப் பெருமைசெய்துள்ளார்.

புதுச்சேரி மகாலட்சுமி அறக்கட்டளை வில்லிசைவேந்தர் என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் ஆர்.வி. சானகிராமன் அவர்களின் கையால் வழங்கச் செய்து பெருமை செய்துள்ளது.

பாவேந்தரின் குயில் இதழிலும், பாவேந்தருக்குப் பிறகு அவர் மகனார் மன்னர் மன்னன் நடத்திய குயில் இதழிலும் இவர் எழுதியுள்ளார்.

நிலைக்குமா என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் நடிக்கத்தக்க நாடகம் எழுதி அதற்குரிய பாடல்களையும் எழுதி, இயக்கியுள்ளார்.

இவர் எழுதியுள்ள நாட்டிய நாடகங்களுள்,
  • காரைக்கால் அம்மையார்
  • இராமாயணம்
  • நந்தனார் சரித்திரம்
  • மீனாட்சிக் கல்யாணம்
  • ஆண்டாள் திருக்கல்யாணம்
  • நள தமயந்தி சரிதம் 
உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் மேடையேற்றம் கண்ட நாட்டிய நாடகங்கள் ஆகும்.

வில்லிசை வேந்தரின் தமிழிசைப்பணியை ஊக்குவிக்கும் வகையில் புதுவை அரசு கலைமாமணி என்னும் விருதை வழங்கிச் (26.02.2001) சிறப்பித்துள்ளமையை இங்குக் குறிப்பிட்டாதல் வேண்டும். தமிழிசையை நாளும் நினைவுகூரும் வில்லிசைவேந்தர். . பட்டாபிராமன் அவர்கள் நீடு வாழி!


வில்லிசை வேந்தரின் படைப்புகளுள் சில...