நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மா.இராமலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மா.இராமலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூன், 2014

தஞ்சைச் செலவுநயப்பு…


மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்) 

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இருக்கும் பழைய தமிழ்ப்பொழில் ஏடுகளைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பலவாண்டுகளுக்கு முன்பே கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றிருந்தாலும் இப்பொழுது செல்வதில் சிறப்பு இருந்தது. நண்பர் கரந்தை செயகுமார் அவர்கள் அங்குப் பணியில் இருப்பதால் அவரைச் சந்திக்கலாம் என்பதே சிறப்பிற்குக் காரணம். அவர் வழியாக நூலகத்தில் தேவைப்படும் உதவிகளை எளிதில் பெறலாம் என்று அவருக்குப் பேசி, என் வருகையை உறுதி செய்தேன்.

அறிவன் (புதன் 11. 06. 2014) கிழமை இரவு தொடர்வண்டியில் சென்று தஞ்சையில் இறங்கிய என்னை அழைத்துச் செல்வதற்கு மேலைப்பெருமழை திரு. சிவபுண்ணியம் அவர்கள் காத்திருந்தார். அவர்களின் இல்லம் சென்று நடுஇரவு வரை உரையாடினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழுந்து, கடன் முடித்தேன்.

 முதற்பணியாகப் பழைய நண்பர் தஞ்சை திரு. கபாலீசுவரன் ஐயா அவர்களின் இல்லத்திற்கு முகவரி தேடிச் சென்று சேர்ந்தோம். முன்பே திட்டமிட்டபடி பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் தமிழ் பாலாவும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். திரு. சிவபுண்ணியம் அவர்களுக்கு அப்பொழுது விடைகொடுத்தோம், அண்ணன் சிவபுண்ணியம் அவர்கள் தம் சேலம் செலவை எனக்காகச் சற்றுத் திருத்திக்கொண்டு காலத்தாழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார். இவர் மேலைப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலைப்பெருமழையில் நட்பாகக் கிடைத்த பெரியவர்களுள் அண்ணன் சிவப்புணியம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். கடும் உழைப்பாளி. எளிய நிலையிலிருந்து இன்று உயர்நிலைக்கு வந்துள்ளவர். கட்டடம் கட்டி, அதனை நேர்மையான விலையில் மக்களுக்கு வழங்கும் அறநெறித்தொண்டைச் செய்துவருபவர்.

திரு. கபாலீசுவரன் அவர்களின் இல்லத்தில் நுழைந்தபொழுது அவர்களின் துணைவியார் வரவேற்றார். திரு. கபாலீசுவரன் அவர்களின் தாயார் வாயிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். என்னை இருபதாண்டுகளுக்கு முன்னர் வரவழைத்துப் பார்த்து, அன்பு பாராட்டிய அந்தப் பாட்டி இப்பொழுது தொண்ணூறு அகவையில் என்னை அடையாளம் தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஓய்வில் ஒயர்கூடை பின்னுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு வேலைகளைச் செய்துவருவதாகத் திரு. கபாலீசுவரன்  துணைவியார் அவர்கள் சொன்னார்கள்.

என்னை இருபதாண்டுகளுக்குப் பிறகு திரு.கபாலீசுவரன் அவர்களின் துணைவியார் பார்ப்பதால் என்னை நினைவிருக்கின்றதா என்று கேட்டேன். என்னை நினைவுக்குக் கொண்டுவரத் தயங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் படித்த வரலாற்றைச் சொன்னதும் அம்மாவுக்குப் பழைய நினைவுகள் வந்தன. ஐயா எங்கே? என்று கேட்டேன். சுவரில் கண்ணாடியிட்டு மாட்டப்பெற்றிருந்த திரு. கபாலீசுவரன் அவர்களின் படத்தைக் காட்டி, கண்ணீர் விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக      திரு. கபாலீசுவரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கை எய்திய செய்தியைச் சொல்லி அழுதார்கள். அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைப் பகர்ந்து நான் இனித் தஞ்சை வரும்பொழுது அனைவரையும் வந்து பார்ப்பதாகவும், ஆறுதல் பெறுங்கள் என்றும் சொல்லி சிறிது நேரம் உரையாடி, குடும்பநலம் வினவி விடைபெற்றுக் கொண்டோம் (திரு.கபாலீசுவரன் அவர்கள் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர். நேர்மைக்குப் பெயர்பெற்றவர். அமைதி வழியினர். அறவழியினர். பல்வேறு காவல்துறை முற்றுகைகளில் பங்கேற்று முதலமைச்சரின் பாராட்டுகள். சிறப்புகளைப் பெற்றவர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அவர் என்னைச் சந்திக்க நேர்ந்த தனிக்கதையைப் பிறகு சொல்வேன்).

திரு. கபாலீசுவரன் ஐயா இல்லத்தில் நான் உரையாடிக் கொண்டிருந்தபொழுதே தம்பி பாலா என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களிடம் உரையாடி, என் வருகையைச் சொல்லி சந்திக்க இசைவு பெற்றார். நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு என் பேராசிரியரைச் சந்திக்கச் செல்ல உள்ளதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். கையுறையாகச் சில பழங்களை வாங்கிக்கொண்டு, பேராசிரியரின் தமிழ்க்குடிலுக்குச் சென்றோம். மாடியிலிருந்து இறங்கி வந்து, பேராசிரியர் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் படிக்கச் சென்றபொழுது விரும்பிச் சென்று இவரிடம் ஆய்வுமாணவனாக இணைந்துகொண்டேன்(1993). பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய நெறிப்படுத்திய பெருமகனார் இவரே. விடுதலையாக ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு நல்கியவர். தமிழகத்தின் முன்னணிக்கவிஞர்களான உவமைக்கவிஞர் சுரதா, பாவலர் முடியரசன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர். என் அறிவுலக வாழ்க்கை இவ்வாறு செழுநீரோட்டமாகச் செல்வதற்கு வழிகோலியவர் இவர்களே!

பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் எழில்முதல்வன் என்ற பெயரில் அனைவருக்கும் அறிமுகமானவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவர். திறனாய்வு உலகில் கொடிகட்டிப் பறந்தவர்மொழிபெயர்ப்புப் பணிகளில் விருப்பமுடன் இப்பொழுதும் இயங்கி வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து எம்போலும் மாணவர்களுக்கு ஆதரவு காட்டியவர் (இவர்களின் சிறப்புகளைத் தனித்து எழுதுவேன்).

பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் ஒரு தந்தையாரைப் போல் கனிவுடன் என் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் வினவினார்கள். தம் துணைவியார் திருவாட்டி கமலா அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். அண்மைக்காலப் பணிகளை வினவினார்கள். இணையத்தில் ஈடுபாடு வந்தது எப்படி என்று ஆர்வமுடன் கேட்டார்கள். தம்மிடம் இருந்தபொழுது கணினி பற்றி உரையாடியதே இல்லையே என்று வியந்தார்கள். நானும் படிப்படியாக எனக்குக் கணினி அறிமுகம் ஆன வரலாற்றைக் கூறினேன்.

குடந்தை ப சுந்தரேசனார் ஆவணப்பட முயற்சி பற்றி சொன்னபொழுது மகிழ்ந்தார்கள் என்றாலும் ஒரு தந்தையாருக்கு உரிய கண்டிப்புடன் பணத்தால் நான் இடர்ப்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நம் குடும்ப நிலைகள், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, எதிர்கால வாழ்க்கை இவற்றை நினைவூட்டிப் பரிவுடன் கூறிய சொற்களை மறைமொழிபோல் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். ஐயாவிடம் உரையாடி, நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொள்ள இசைவு கேட்டேன். மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். அவர்களிடம் விடைபெற்றோம்.

 இரு நகரப் பேருந்துகள் பிடித்துக் கரந்தைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக நல்லாசிரியர் கரந்தை செயகுமார் காத்திருந்தார். அன்பொழுக வரவேற்றார். பள்ளியாசிரியர்களிடம் எங்களை அறிமுகம் செய்தார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திற்குச் சென்று முப்பதாண்டுகள் வெளியான தமிழ்ப்பொழில் ஏடுகளைக் கேட்டு அனைத்தையும் பார்த்துத் தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டோம். இடையில் பகலுணவுக்கு நண்பர் செயகுமார் அழைத்தார். ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து ஆட்டுக் கறியில் அமைந்த புலவுச்சோற்றினை விரும்பி உண்டோம். குடற்கறி நன்றாக இருந்தது.

மீண்டும் படிப்பு. குறிப்பு எடுத்தல். பருந்துப் பார்வையாக நூலகத்தைப் பார்வையிட்டோம். அனைத்தும் நிறைநிலைக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

 திருவையாறு அரசர் கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பணிசெய்துள்ளார் என்பதாலும் ஐயாறப்பர் கோயிலைப் .சு. அவர்கள் விரும்பி வழிபட்ட இடம் ஆதலாலும் அவ்வூருக்கு ஒரு நகர்(!) வண்டியில் புறப்பட்டோம். அங்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம். திருவையாற்றின் புகழ்பெற்ற அல்வாக் கடைக்குச் சென்று அங்கு அமர்ந்து அல்வா உண்டோம். பின்னர் அங்கிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வந்துசேர்ந்தோம்.

பேராசிரியர் சண்முக செல்வகணபதி அவர்களின் இல்லத்திற்குப் பேராசிரியர் பாலா அழைத்துச் சென்றார். பேராசிரியர் அவர்கள் ஒரு சமயச் சொற்பொழிவுக்காக வெளியில் புறப்பட அணியமாக இருந்தார். எங்களுக்காக அரைமணிநேரம் ஒதுக்கினார். பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய நூல் எழுதியவர். இவர், தமிழிசை, நாட்டியம், கலை குறித்த பேரறிவு பெற்றவர். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகக் கலைகுறித்துப் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

குடந்தை ப. சுந்தரேசனார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய நித்திலம் இதழின் ஒரு படியை இவர் இல்லத்தில் பார்த்தேன். அதனைப் படமாக்கிக்கொண்டேன். ஐயாவிடம் விடைபெற்று, பேராசிரியர் மது. . விமலானந்தம் இல்லம் நோக்கித் தானியில் புறப்பட்டோம்.

பேராசிரியர் மது.. வி. அவர்களின் இடையர்தெரு இல்லம் தேடி அலைந்து, ஒருவழியாக இல்லத்தை அடையாளம் கண்டோம். பேராசிரியர் மது. வி. அவர்கள் உறவினர் இல்லம் சென்றிருப்பதாகத் தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.


தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் என்னை விட்டுவிட்டு தம்பி பாலா பூண்டிக் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். நான் உழவன் தொடர்வண்டிக்குரிய சீட்டினைப் பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்தேன். ஒர் உழவனைச் சுமந்துகொண்டு உழவன் விரைவாகச் சென்னையை நோக்கிப் புறப்பட்டான்

சனி, 11 ஏப்ரல், 2009

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)


முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992). பின்பகுதியில் பேரா.மா.இராமலிங்கம், பேரா.அரு.மருததுரை

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன் (1992-93). அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன். நேர்காணல் வந்தது.பாரதியார் அறக்கட்டளை சார்பில் அந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பு இருந்ததாக நினைவு.

 நேர்காணலில் ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஐயாவும் என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களும் இருந்தார்கள் 50 பேருக்கு மேல் நேர்காணலுக்கு வந்திருந்தனர். என் சான்றிதழ்கள், மதிப்பெண், கல்வி ஈடுபாடு கண்டு நல்ல வினாக்கள் கேட்டனர். நானும் இயன்ற விடை தந்தேன். நேர்காணலுக்கு முன்பாக ஓர் எழுத்துத் தேர்வும் நடந்தது.

 பேராசிரியர் முனைவர் அரு.மருததுரை, முனைவர் பட்ட ஆய்வாளர் மோ.தமிழ்மாறன் (இப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) எனக்கு அப்பொழுது அறிமுகமானார்கள். (சில ஆண்டுகளுக்கு முன் பாவேந்தர் நூற்றாண்டு விழாவைப் பல்கலைக் கழகம் கொண்டாடியபொழுது பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் யான் முதல் பரிசுபெற்றவன். இந்த விவரம் கூறி, அப்பொழுது பேராசிரியர் அரு.மருததுரை உள்ளிட்டவர்களைப் பரிசுபெற வந்தபொழுது கண்டுள்ளேன் எனவும் கூறி, அறிமுகம் ஆனேன். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் திருக் கையால் 500 உரூவா முதல் பரிசைப் பல்கலைக்கழகம் வழங்கியது.)

 சில மாதத்தில் எனக்குப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு ஆணை வந்தது. உடன் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று நண்பர் நாராயணநம்பி அவர்களின் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சேர உரிய படிவங்கள் வாங்கினேன். அப்பொழுது கோடை விடுமுறை. அந்தப் பருவத்தில் (சூன்,சூலை) சேர்ந்தால் நல்லது. இல்லையேல் சில மாதம் காத்திருக்கவேண்டும் என்றனர். உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் இணைய விரும்பினேன்.

  என் பேராசிரியர் மா.இரா. அவர்கள் அப்பொழுது திருச்சிராப்பள்ளி உறையூரில் தங்கியிருந்தார். தமிழ்த்துறையிலிருந்து தொலைபேசியில் பேசி அவரைச் சந்திக்க இசைவு பெற்றேன். அவரை இல்லம் சென்று கண்டு வணங்கினேன். உரிய படிவங்களில் கையொப்பம் இட்டு, நான் அவர் மேற்பார்வையில் ஆய்வு செய்வதற்கு இசைவு வழங்கினார். எனக்கு அளவுக்கு அதிமான மகிழ்ச்சி. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரின் மாணவனாக முறைப்படி இணைந்துள்ளமையே என் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். ஆய்வுக்கு என்ன தலைப்பு எடுக்கலாம் எனப் பேராசிரியர் கேட்டார்கள். எனக்குக் கவிதைத் துறையில் ஈடுபாடு. எனவே கவிதை குறித்துத் தலைப்பு அமையலாம் என்றேன். அவர்களும் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு மதிப்பீடு"என்று தலைப்பை உறுதி செய்தார்கள்.


ஆய்வு மாணவனாக நான்(1995)

  ஒரு நல்ல நாளில் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுமாணவனாக அறிமுகம் ஆனேன். ஆய்வுத் துறைகளை முன்பே புதுவைப் பல்கலைக்கழகத்தில் கற்றவன் ஆதலின் என் பேராசிரியர் ஆய்வுத் தொடர்பாகச் சொல்லும் செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு செய்யும் அளவிற்கு யான் அணியமாக இருந்ததால் எனக்கு முழு விடுதலை தந்தார்கள்.உரிய அறிஞர்களைச் சந்தித்துவர அனுமதி தந்தார்கள்.அவர்கள் வழியாக உவமைப் பாவலர் சுரதா உள்பட தமிழகத்தின் பல கவிஞர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.எழில்முதல்வன் அனுப்பினார் என்றால் எனக்கு ஒரு சிறப்பு இருப்பதைப் போகும் இடங்களில் எல்லாம் உணர்ந்தேன்.ஆய்வுத் தொடர்பாகப் பேராசிரியர் எனக்கு முழு விடுதலை வழங்கி என் போக்கில் ஆய்வு செய்ய வழிவிட்டமைக்கு அவர்களுக்கு யான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாவேன்.

  மூன்றாண்டுகள் அவரிடம் ஆய்வு செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது.நல்ல பட்டறிவுகள் எனக்குக் கிடைத்தன.மிகப்பெரிய செய்தி என்பதையெல்லாம் தம் அறிவுத்திறமையால் மிக எளிதாக விளக்குவார்.அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டமையை இப்பொழுது நினைத்தும் நான் வருந்துவதுண்டு.எழில்முதல்வன் அவர்களுக்கு ஈடுபாடான துறை திறனாய்வு,புதின இலக்கியம்,சிறுகதை,கவிதை என அறிஞர் உலகம் அறியும்.ஆனால் அவருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த ஈடுபாடு பலருக்குத் தெரியாது.அவரின் சிலப்பதிகாரப் புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பேன்.அந்த அளவு சிலம்பைக் கற்றவர்கள். பொழிவாற்றியவர்கள்.நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியவர்.ஆய்வு என்னும் ஒற்றைக் கொம்பை யான் பற்றிக்கொண்டதால் அவரின் பிற துறை ஆளுமைகளை அறியாமல் இருந்துவிட்டேன்.இப்பொது எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்?.

  பேராசிரியர் ஒவ்வொரு கிழமையும் நடக்கும் துறைசார் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் படிக்கும் கட்டுரைகள் குறித்து கருத்துகளைச் சொல்லும்பொழுது அரங்கம் அமைதியாகக் கிடக்கும். தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துப் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தியவர். பல சொற்பொழிவுகளுக்கு வழி வகுத்தவர். அவ்வகையில் தொல்காப்பியக் கருத்தரங்கு பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் உதவியால் நடத்தியது, எழுத்துச் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு, சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கு இவையெல்லாம் குறிப்பிடத்தக்கன (இந்தக் கருத்தரங்கில் கோமல் சுவாமிநாதன், இளைய பாரதி, நஞ்சுண்டன் உள்ளிட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது).

  ஆய்வு மாணவனாக இருக்கும் பொழுது, என் பலவாண்டு முயற்சிக்குப் பிறகு "விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்" நூல் வெளியீட்டுக்கு அழகிய அணிந்துரை ஒன்று வழங்கியமையும் நான் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் பாவலர் முடியரசனார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதித் தங்கப்பதக்கம் பெற்றபொழுது என் படத்தைத் தமிழ்த்துறையில் வைக்கவேண்டும் அது எதிர்கால மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று வற்புறுத்தியதற்கும் என்றும் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

  மா.இராமலிங்கம் என்னும் இயற்பெயருடைய என் பேராசிரியர் திறனாய்வுலகில் எழில்முதல்வன் என்ற பெயரில் நன்கு அறிமுகமானவர்கள். பாவேந்தரின் குயில் இதழில் எழுதிய பெருமைக்கு உரியவர். சுரதா, அகிலன் உள்ளிட்ட எழுத்தாளர்களிடம் நன்கு பழகியவர். சாகித்திய அகாதெமியின் பரிசில் பெற்றவர். இவர்தம் புதிய உரைநடை நூல் இவரின் புதிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். நோக்குநிலை என்னும் நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும். வேள்வி என்ற இதழையும் இவர் நடத்தியவர். ஓங்குதமிழ் என்ற இதழைத் தமிழகப்புலவர் குழுவுக்காக நடத்தியவர். படைப்பும் ஆய்வும் இரண்டு கண்ணெனப் போற்றியவர். எதனையும் புதுமையாகச் சிந்திக்கவும் சொல்லவும் வல்லமை பெற்றவர். இவரின் மாணவர்கள் பலரும் உயர்நிலையில் பல இடங்களில் உள்ளனர்.

  பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றில் மா.இராமலிங்கம் என்ற திருப்பெயர் பெருமைக்குரிய பெயராக விளங்கும்.

  மா.இராமலிங்கம் அவர்கள் தஞ்சை மாவட்டம் தகட்டூரில் பிறந்தவர் (பெருமழைப் புலவர் பற்றி நன்கு அறிந்தவர், உறவினரும்கூட). சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர். மரபுக்கவிதைகள் வரைவதிலும், புதுக்கவிதை வரைவதிலும் வல்லவர்.

 மரபுக்கவிதை நூல்களாக இனிக்கும் நினைவுகள்(1966), எங்கெங்கு காணினும்(1982), யாதுமாகி நின்றாய்(1990), புதுக்கவிதை நூல்களாக இரண்டாவது வருகை(1985), பயணம் தொடரும் (1990) என்ற நூல்களைத் தந்தவர். மா.இராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ள கவிதை நூல்களைக் கற்கும்பொழுது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுப்பது போன்றே சங்க இலக்கியம், சமய இலக்கியம், பாரதி, பாரதிதாசன், சுரதா படைப்புகளின் செல்வாக்கினைக் காண முடிகிறது.

 மா.இராமலிங்கம் அவர்கள் 1960-71 காலத்தில் எழுதிய கவிதைகள் "எங்கெங்கு காணினும்" என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் 75 மரபுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் பாடல்களைப் போல இயற்கை, காதல், தமிழ் என்ற நிலைகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதைகள் அடங்கிய நூலைக் கற்கும்பொழுது இவரின் புதுப்பார்வைகளும் கவிதை வீச்சுகளும் புலப்படும். சமுதாயக் கொடுமைகளை நினைவூட்டி அவற்றிற்குத் தீர்வுகாணும் நோக்கில் படைப்புகள் உள்ளன. இவை பற்றி என் முனைவர் பட்ட ஆய்வேட்டில் விரிவாக வரைந்துள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தஞ்சாவூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நண்பர்கள் வழியாக அறிந்தேன். கல்லூரிப்பணி, தமிழ் இணையம் பரப்பும் பணி, பிற ஆய்வுகள் என ஓய்வின்றி இயங்கும் நான், என் பேராசிரியர் அவர்களைக் கண்டு மகிழும் வேட்கையுடன் பத்தாண்டுகளாகக் காத்துக்கிடக்கிறேன்...

மீண்டும் அவர் நினைவுகளுடனும், படத்துடனும் வருவேன்...