நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 டிசம்பர், 2025

புலவர் சு. நஞ்சப்பன்

  

புலவர் சு. நஞ்சப்பன்

[புலவர் சு. நஞ்சப்பன் கோவையில் வாழ்ந்துவருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழாசிரியர்களின் பல்வேறு உரிமைகளைப் போராட்டங்கள் வாயிலாகவும், கோரிக்கைகள் வாயிலாகவும் நிறைவேற்றித் தந்தவர். தமிழுணர்வு நிறைந்த இவர் பேச்சாளராகவும் புகழ்பெற்றவர்] 

தமிழ் கற்ற அறிஞர் பெருமக்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபொழுது அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக நடத்தப்படாத ஒரு நிலைமை தமிழகத்துக் கல்வித்துறையில் முன்பு நிலவியது. 

பள்ளியில் ஆசிரியர்  வருகைப் பதிவேட்டில் தலைமை ஆசிரியர் பெயர் முதலில் இருக்கும்; அடுத்ததாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்கள் இருக்கும்; இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் இருக்கும்; இவர்களுக்குப் பின் சிறப்பாசிரியர் பிரிவில் தமிழாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர்கள் பெயர்கள் என எழுதப்பட்டிருக்கும். இதனை தமிழகத் தமிழாசிரியர் கழகம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று போராடியது. தமிழாசிரியர்களின் பெயர்கள் ஊதிய விகிதம், கல்வித்தகுதி, கற்பிக்கும் வகுப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு, பணிக்கால முன்னுரிமையைக் கணக்கில் கொண்டு  ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று கேட்டது. இவ்வாறு பெற்ற உரிமையால்தான்  இன்றைய பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில்  தமிழ் பயின்றவர்களின் பெயர்கள் முன்னுக்கு நகர்ந்துள்ளன. 

மேலும் வித்துவான், புலவர் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் படித்தவர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டுசென்ற பிறகு, இரண்டு தாள்களைக்  கூடுதலாகத் தேர்வு எழுதிப் பிலிட் பட்டம் பெற்று, மற்ற ஆசிரியர்கள் பெற்ற உரிமைகளைத் தமிழாசிரியர்கள் பெற்றார்கள்.. சிறப்பாசிரியர்கள் என்று இருந்தவர்கள் பதவி உயர்வுபெற முடியாத நிலைமையை அறிந்து தமிழாசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என்று பதவிப் பெயர் மாற்றுவதற்கு  ஒரு பெரும் அணி அக்காலத்தில் போராட வேண்டியிருந்தது.

தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம்; சான்றிதழ்களில் தமிழாசிரியர்கள்  சான்றொப்பம் இடலாம்;   பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஆகலாம்; மாவட்டக் கல்வி அலுவலர் ஆகலாம்; முதன்மைக் கல்வி அலுவலர் ஆகலாம்; இணை இயக்குநர் ஆகலாம்; இயக்குநர் ஆகலாம்  என்று பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்குத் துணிவும், பணிவும் கொண்டு இயங்கிப் பல்லாயிரம் தமிழாசிரியர் பெருமக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்  நாவுக்கரசர் புலவர் சு. நஞ்சப்பன் ஆவார்.  அவர்களின் தன் வரலாற்று நூலான  ஓடை நதியானது என்ற வாழ்வியல் சிந்தனை நூலினை அண்மையில் படித்து மகிழும் வாய்ப்பினைக் கருவூர்ப் புலவர் அருணா பொன்னுசாமி அவர்களும் புலவர் துரை. தில்லான் அவர்களும் எனக்கு உருவாக்கித் தந்தார்கள். 

பள்ளிக்குச் சென்று கடமையை ஆற்றிவிட்டு அன்றாடம் திரும்பும் எளியநிலைத் தமிழாசிரியராகப் புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் இல்லை. இவர் தமிழாசிரியர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டங்களும் இழப்புகளும் துன்பங்களும் அறியும்பொழுது மிகப்பெரும் மாமலையாக விளங்கி, ஆசிரியப் பெருமக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்துள்ள உயரிய வாழ்வினை அறிந்து வியப்புறுகின்றேன். இவரின் வாழ்க்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வாகத் தெரிகின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனார் தமிழாசிரியர்களின் உரிமைக்கு மட்டும் போராடியிருந்தால் உயர்வுபெற்ற புலவர்கள் – பயன்பெற்ற புலவர்கள் மட்டும் கொண்டாடியிருப்பார்கள். புலவர் சு நஞ்சப்பனாரோ தமிழாசிரியர் நலம் காத்தமைபோல் தமிழ் நலம் காக்கும் பணியிலும் ஈடுபட்டவர். தமிழ் வளர்ச்சிக்கு நடத்திய கருத்தரங்குகள், மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகள், தமிழ் எழுச்சி மாநாடுகள், தமிழ்ப் பயிற்சி அரங்கம், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைப் போற்றியமை முதலியவற்றின் வழியாகத் தமிழகத்தில் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். அரசு செய்த தமிழ்நலச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர். எனவே, இவர்தம் வரலாறு தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி; தமிழர் வரலாற்றின் ஒரு பகுதி எனலாம். 

1942 இல் தொடங்கப்பட்ட தமிழ் வித்துவான் சங்கம், 1946 இல் மாகாணத் தமிழாசிரியர் கழகமாக மலர்ந்து, 1956 இல் மாநிலத் தமிழாசிரியர் கழகமாகப் பொலிந்து, 1969 இல் தமிழகத் தமிழாசிரியர் கழகமாகப் பூத்து மணம்பரப்பியது.  புலவர் சு. நஞ்சப்பனார் தம் முன்னோர்கள் உருவாக்கிய தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் 1970 அளவில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் வட்டத்தின் தலைவரானார்; பின்னர் கோவை மாவட்டத் தலைவரானார்; இயக்க ஈடுபாடும் தொடர்ந்த தொண்டுகளும் புலவர் சு. நஞ்சப்பனாரைத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக்கின.  21. 02. 1988 முதல் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்துக்காகச் சென்னை எழும்பூரில் ஓர் கட்டடம் வாங்கப்பெற்று, இயக்கத்தின் சொத்தாக்கப்பட்டது. இதில் முழுமூச்சாக ஈடுப்பட்டு உழைத்தவர் நம் புலவர் சு. நஞ்சப்பனார் ஆவார். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் பெருமைதேடித் தந்த புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

புலவர் சு. நஞ்சப்பன் கோவை மாவட்டம் மருதூரில் 14. 06. 1943 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மூ. சுப்பைய கவுண்டர் – பெரியக்காள் என்பனவாகும். இவர்கள் உழவர் குடியைச் சேர்ந்தவர்கள். 

புலவர் சு. நஞ்சப்பன் தம் ஊருக்கு அருகில் உள்ள புங்கம்பாளையம் பள்ளியில் இளமைக் கல்வியைக் கற்றார். ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் படிப்பு நடைபெற்றது.  ஆறாம் வகுப்பு முதல் ஆறுகல் தொலைவில் உள்ள காரமடையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஏழாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போடிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகள் பெறத் தொடங்கினார். இதனால் பேச்சுத்துறையில் இவருக்கு ஆர்வம் உண்டானது. பள்ளிப்பருவத்தில் இவர்தம் தமிழுணர்வுக்குக் காரணமாக இருந்தவர் புலவர் கி. நஞ்சுண்டனார் ஆவார். அதுபோல் பள்ளியில் இவருக்கு ஓர் ஆண்டு கணக்குப் பாடம் நடத்தியவர் செ.அரங்கநாயகம். (பின்னாளில் தமிழ்நாட்டு அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர்). பதினொன்றாம் வகுப்பு வரை இப்பள்ளியில் இவர்தம் படிப்பு இருந்தது. பள்ளியிறுதி வகுப்பில் தேறி, அவிநாசி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று, ஆசிரியர் தகுதிபெற்றார். 1963 ஆம் ஆண்டு புலவர் சு. நஞ்சப்பனாரின் இருபதாம் வயதில் புயங்கனூர்  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்களில் வச்சினம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் அமைந்தது. பின்னர்த் தாம் பயின்ற புங்கம்பாளையம் ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளியில் பணிமாறுதலில் இணைந்தார். 

தமிழை முழுமையாக அறிந்துகொள்ள காரமடையில் தமிழாசிரியராக இருந்த புளியம்பட்டி பெரும்புலவர் கணேசனார் அவர்களிடம் மாலைநேரத்தில் இலக்கண,  இலக்கியம் கற்று, வித்துவான் தேர்வெழுதி வென்றார். 12.08.1969 இல் தமிழாசிரியர் பணி பெரியபுத்தூரில் கிடைத்தது. 1971 இல் புயங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பணியில் இருந்தபடியே பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பயின்று பெற்றார். 32 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய சு. நஞ்சப்பனார் 2001 ஆம் ஆண்டு பணியோய்வு பெற்றவர். பணியோய்வுக்குப் பிறகும் தமிழாசிரியர்களின் உயர்வுக்கும் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநில மதிப்பியல் தலைவராக இவர்தம் பணி தொடர்கின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ்க் குடும்பம் 

புலவர் சு. நஞ்சப்பனார் 02.09.1973 இல் அமராவதி அவர்களை மாண்புமிகு அமைச்சர் மு. கண்ணப்பன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். கோவைத் தென்றல் மு. இராமநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மே.சி. தூயமணி போன்ற சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் ந. எழில் (1974), ந. மதிவாணன் (1977) என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். ந. எழில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார். ந. மதிவாணன் உயர்கல்வி கற்று, கத்தார் நாட்டில் பணியாற்றி வருகின்றார். 

ந.அமராவதி, சு. நஞ்சப்பனார்

புலவர் சு. நஞ்சப்பனார் மிகச் சிறந்த தமிழறிஞர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு அரும்பணிகளை ஆற்றியவர். புலவர் துரை. தில்லான் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நமது தமிழாசிரியர் என்னும் இதழை நடத்தியவர். அதுபோல் புலவர் அருணா பொன்னுசாமி, முனைவர் க. வீ. வேதநாயகம், சின்ன மணல்மேடு த. இராமலிங்கம், புலவர் பெ. கறுப்பண்ணன், புலவர் கோ, தமிழரசன் முதலான சான்றோர் பெருமக்களுடன் நல்லுறவு கொண்டு ஒரே குடும்பமாக இயங்கும் திறன் போற்றத்தக்கது.

புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் பெற்ற விருதும் பாராட்டுகளும் 

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் ஆசிரியப் பணியைப் பாராட்டித், தமிழக அரசு "நல்லாசிரியர் விருதினை" மேனாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் அவர்களின் கையால் 05.09.1998 இல் வழங்கியது. 1991 இல் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் “நாவுக்கரச்சர்” என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். கரூர் திரு. வி. க. மன்றம் “நகைச்சுவை நற்றமிழ் அரசு” விருது அளித்துப் பாராட்டியது. கோவை வேலுமணி அம்மையார் இலக்கியக் குழுவினர் “நாவரசு” என்று விருது வழங்கிப் பெருமை சேர்த்தனர். திண்டுக்கல் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “செந்தமிழ்ச் செல்வர்” என்னும் விருதும். மாநிலத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “திருக்குறள் மாமணி” என்னும் என்னும் விருதும் வழங்கிப் போற்றியுள்ளனர்.

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் அமெரிக்கா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர். 

புலவர் சு. நஞ்சப்பன் தமிழ்ப்பற்றுடன் அறிவார்ந்த உரையாற்றுவதில் வல்லவர். இவர்தம் உணர்வு நிறைந்த பேச்சாற்றல் இவரைத் தமிழகத்துத் தமிழாசிரியர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்தும் வாய்ப்பினை நல்கியுள்ளது எனலாம். 

புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இதழும் இயக்கமும் (2015)

2.   ஓடை நதியானது (2024)








 


புதன், 3 டிசம்பர், 2025

பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம்

  

 சின்ன மணல்மேடு  . இராமலிங்கம்


[சின்ன மணல்மேடு  .  இராமலிங்கம் அவர்கள் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  புதுவெள்ளம் இதழின் ஆசிரியர்; பன்னூலாசிரியர். மரபுப் பாடல் எழுதுவதில் வல்லவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுக்களில் பணியாற்றியவர். வீராணம் ஏரிக்கரையில் உள்ள சின்ன மணல்மேடு என்னும் ஊரில் பிறந்தவர்.]


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை நீண்டு கிடப்பது  வீராணம் ஏரியாகும். முதலாம் பராந்தகசோழனின் இயற்பெயரான வீரநாராயணன் பெயரில் இவ்வேரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பெற்று, மக்கள் வழக்கில் இன்று வீராணம் ஏரி என்று குறைவுற்று வழங்குகின்றது. இப்பேரேரியின் நீர்வளத்தால் வாழைக்கொல்லை, கூளாப்பாடி, கந்தகுமரன், உத்தமசோழன் முதலான ஊர்களும் அதனைச் சுற்றியுள்ள பல நூறு ஊர்களும் வளம்பெற்றுத் திகழ்கின்றன. 

வீராணம் ஏரியின் நீர் வேளாண்மைக்கு இன்று உதவுவதுடன் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பணியையும் செய்கின்றது. அதுபோல் இந்த வீராணம் பகுதியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் இப்பகுதி மக்களுக்குக் கல்விபுகட்டும் பணியைச் செய்வதுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிற்பவர்களாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர். 

அவ்வகையில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் புதுவெள்ளம் என்னும் இலக்கிய இதழ் நடத்தியும், திருக்குறளுக்கு உரைவரைந்தும் அறிவுப்பணியாற்றிவரும் பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம் அவர்களின் பணிகளைக் கருவூர்ப் பாவலர் அருணா பொன்னுசாமி அவர்கள் வழியாக அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன்.  அறிஞர்கள் போற்றும் கவிதையாற்றலைக் கைவரப்பெற்ற த. இராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை இலக்கிய ஏடுகளில் பதிவுசெய்யப்பெற வேண்டிய பான்மையை உடையது. அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

த. இராமலிங்கம் அவர்கள் வீராணம் ஏரியால் வளம்பெற்றுத் திகழும் சின்ன மணல்மேடு என்னும் ஊரில் வாழ்ந்த கோ. தம்புசாமி – அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாக 20.10.1949 இல் பிறந்தவர். உழவர்குடியில் தோன்றிய த. இராமலிங்கம் தம் நான்காம் அகவையில் தந்தையாரை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

த. இராமலிங்கம் அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சின்ன மணல்மேடு என்னும் தம் ஊரில் கல்வி பயின்றவர். தெ. நெடுஞ்சேரியில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயின்றவர். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.

  வடலூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று(1966-1968), இடைநிலை ஆசிரியராகக் கொள்ளுமேட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியொன்றில் 02.11.1968 ஆம் ஆண்டு முதல்  பன்னிரண்டரை ஆண்டுகள்  பணியாற்றியவர். 

1978 இல் தமிழக அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து “பெரியார் என்னும் பேரொளி” என்னும் தலைப்பில் பாப் போட்டி நடத்தியது. அப் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் முதன்மை இடம் இவருக்குக் கிடைத்தது. இப்போட்டி'யின் முடிவு இவருக்கு, அடுத்த பணி உயர்வுக்கு ஆதரவாக இருந்தது. 

அரசுப் பணி கிடைத்து, சங்கராபுரத்தை அடுத்துள்ள பிரம்மகுண்டம் என்ற ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதனை அடுத்து, பண்ணுருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பண்ணுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம் காரைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  முப்பத்தொன்பது ஆண்டுகள் மிகச் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிய த. இராமலிங்கம் வானொலிகளில் பேசியும், பல்வேறு இதழ்களில் எழுதியும் தம் படைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தவர். தினமணி, தென்மொழி, தீக்கதிர் முதலான ஏடுகள் இவர்தம் படைப்புகளைத் தாங்கிவருவன. இவர்தம் மரபுப் பாடல்கள் மிகச் சிறந்த உணர்ச்சிப்பாக்களாக விளங்குவனவாகும். சிறுவர் பாடல் புனைவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர்.

. இராமலிங்கம் அவர்கள் 27.08.1972 இல் தம் இருபத்து நான்காம் அகவையில் புலவர் கு. சாவித்திரி அவர்களை இல்லறத் துணையாய் மணந்துகொண்டார். கு. சாவித்திரி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர். முதல் மகன் மருத்துவர் இரா. இலெனின் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டாவது மகன் இரா. கபிலன் பொறியியல் பயின்று, முதுநிலை மேலாளராகப் மணியாற்றி வருகின்றார். 

. இராமலிங்கம் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும் கடலூர் மாவட்டத்துப் பொருளாளர், செயலர், தலைவர் பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டவர். 

புலவர் புங்கனேரியான் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் 1972 முதல் இயங்கிய பாவேந்தர் பைந்தமிழ் மன்றத்தின் தலைவர், செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர். தமிழகத்து அறிஞர்களை அழைத்து, திங்கள்தோறும் விழாக்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்தி அப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். 

. இராமலிங்கம் அவர்கள் புதுவெள்ளம் என்ற திங்களிதழின் ஆசிரியராக இருந்து, 2016 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்விப் பாடநூல் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவர். 

த. இராமலிங்கம் அவர்கள் அறிவாற்றலில் நிறைந்து நிற்பவர் என்பதுபோல் தம் வளர்ச்சியில் துணைநின்ற புலவர் சு. நஞ்சப்பன், புலவர் பூ. தில்லைவளவன், புலவர் ந. செல்வராசன், புலவர் துரை தில்லான் முதலான சான்றோர்களிடத்து மிகுந்த நன்றியுணர்வுகொண்டவராக விளங்குகின்றார்.

  த.இராமலிங்கம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை அறிந்த பல்வேறு தமிழமைப்புகள் இவருக்குப் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் போற்றியுள்ளன. 

1.   மறைமலையடிகள் விருது

2.   பாவேந்தர் மரபுப் பாவலர் விருது

3.   யாப்புநூல் புரவலர்

4.   எழுச்சிப் பாவலர்

5.   நடைமுறைப் பாவலர்

6.   கவிதைக் கனல்

7.   கவியருவி

8.   தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்,

9.   மரபு மாமணி 

முதலான விருதுகள் குறிப்பிடத்தக்கன. 

. இராமலிங்கம் அவர்கள் தற்பொழுது நெய்வேலி முதன்மை வாயிலுக்கு எதிரில் உள்ள அண்ணா கிராமத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   சூரியனைச் சுடும் நெருப்பு (பாடல்)

2.   வள்ளுவத்தில் காதல் (பாடல்)

3.   கிணற்றில் வீழ்ந்த கடல் (பாடல்)

4.   பாவம் குருவிகள் (உரைநடை)

5.   திருக்குறள் தெளிவுரை 








 

நன்றி: புலவர் அருணா பொன்னுசாமி, கரூர்