புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் 18.03.2026 – 19.03.2026 ஆகிய இரண்டு நாள்களும் பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கம் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் பேராசிரியர் சசிகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, தமிழிசைப் பயிலரங்கத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிலப்பதிகாரப் பதிகப் பகுதிக்கு அடியார்க்குநல்லார் வரைந்துள்ள உரைப்பகுதியில் பண்டைத் தமிழிசையின் இலக்கணப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளதைத் தம் நோக்கவுரையில் நினைவுகூர்ந்தார். இப்பதிகவுரையைக் கற்றுத் தேர்ந்து, அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் தம் இசையாய்வை மேற்கொண்டதை அரகில் நினைவுகூர்ந்தார்.
இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழிசை வரலாற்றினையும், சிறப்பினையும் எடுத்துரைத்து
அரியதொரு இசைப் பேருரை வழங்கினார். இவர் உரையில் தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்,
காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள்,
சிற்றிலக்கியங்கள், பல்சமயப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படும் இசைப்பகுதிகளைச் சான்றுகளுடன்
விளக்கினார். தமிழிசை மூவர் அளித்துள்ள தமிழிசைப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்துப்
பேசினார். தொடக்க விழாவின் நிறைவில் முனைவர் மா. சுஜாதா நன்றியுரை வழங்கினார்.
பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கின்
முதல் சிறப்பு அமர்வில் கலைமாமணி கா. இராசமாணிக்கம் குழுவினர் பாரதியார், பாரதிதாசன், புதுவைச் சிவம், வாணிதாசன்,
பெருஞ்சித்திரனார், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்களையும் பல்சமயப் பாடல்களையும் பாடி மாணவர்களுக்கு
இசைத்தமிழின் சிறப்பினைப் புரியவைத்தனர். வயலின் கலைஞர் சீனிவாசன் அவர்களும், நாமுழவுக்
கலைஞர் அழகு. இராமசாமி அவர்களும், தண்ணுமைக் கலைஞர் பரத் அவர்களும் மிகச் சிறந்த இணையிசையை
வழங்கினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத்
தேவாரப் பேராசிரியர் குமாரவயலூர் தி. பாலச்சந்தர் ஓதுவார் திருமுறைகளில் காணப்படும்
இசைச்சிறப்புகளைப் பண்முறையில் பாடி விளக்கினார். திருமுறைகளின் சிறப்புகளையும், அடியார்களின்
இசைப்பணிகளையும் சமயப் பணிகளையும் மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்துவைத்தார்.
பிற்பகல் அமர்வில் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
முக்கியத்துவம் வாய்ந்த இசைப்பகுதிகளைப் பாடி, விளக்கி உரையாற்றினார். மங்கல வாழ்த்து,
கானல்வரி, கந்துக வரிப் பாடல்களைப் பாடி விளக்கியமை அரங்கினருக்கு இசைத்தமிழில் ஈடுபாட்டினை
வரச் செய்ததது.
இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் முனைவர்
சிவகௌரி கிரிஷ்குமார் அவர்கள் முதல் அமர்வில் சங்கப் பாடல்கள், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருப்புகழ்ப்
பாடல்களைப் பாடியும் விளக்கியும் தம் இசைப் பேருரையைச் சிறப்பாக அமைத்தார்கள்.
சென்னையச் சேர்ந்த திரு. ப. தி. சேஷாத்ரி
அவர்கள் ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் அதில் பொதிந்திருக்கும் இசைப்
பெருமைகளைப் பண்மரபில் பாடிக் காட்டியும் மாணவர்கள் உள்ளத்தில் பாசுரத் தமிழைப் பதியவைத்தார்.
பறையிசைக் கலைஞர் பிரசாந்த் அவர்கள் தம் குழுவினருடன் பறையிசையை முழக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
முனைவர் சித்தன் செயமூர்த்தி அவர்கள் மண்ணிசை
மாண்பினை எடுத்துரைத்து மக்கள் வாழ்வில் உணர்வு ததும்பும் பாடல்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைப்
பாடிக்காட்டி விளக்கினார். செயமூர்த்தி அவர்கள் பனை மரம் குறித்த செயபாஸ்கரன் எழுதிய
பாடலையும் பெருஞ்சித்திரனார் பாடல்களையும், அப்பா, அம்மா குறித்துத் தற்காலக் கவிஞர்கள்
எழுதியுள்ள பாடல்களையும் அரங்கில் பாட, அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். சில திரைப்படப்
பாடல்களையும் பாடி, மாணவர்கள் உள்ளத்தில் செயமூர்த்தி இடம்பிடித்தார்.
பிரான்சிலிருந்து வருகைபுரிந்த செவாலியே,
முனைவர் இரகுநாத் மனே இசை, பரதக் கலை மாண்புகள் குறித்த சிறப்புரையை வழங்கினார். நிறைவு
விழாவில் நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ், அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்னை
முதல்வர் முனைவர் சோ. சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்குச்
சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த
பேராசிரியர்கள், மாணவர்கள், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், புதுவைத்
தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக