புலவர்
சு. நஞ்சப்பன்
[புலவர் சு. நஞ்சப்பன் கோவையில் வாழ்ந்துவருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழாசிரியர்களின் பல்வேறு உரிமைகளைப் போராட்டங்கள் வாயிலாகவும், கோரிக்கைகள் வாயிலாகவும் நிறைவேற்றித் தந்தவர். தமிழுணர்வு நிறைந்த இவர் பேச்சாளராகவும் புகழ்பெற்றவர்]
தமிழ் கற்ற அறிஞர் பெருமக்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபொழுது அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக நடத்தப்படாத ஒரு நிலைமை தமிழகத்துக் கல்வித்துறையில் முன்பு நிலவியது.
பள்ளியில் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் தலைமை ஆசிரியர் பெயர் முதலில் இருக்கும்; அடுத்ததாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்கள் இருக்கும்; இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் இருக்கும்; இவர்களுக்குப் பின் சிறப்பாசிரியர் பிரிவில் தமிழாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர்கள் பெயர்கள் என எழுதப்பட்டிருக்கும். இதனை தமிழகத் தமிழாசிரியர் கழகம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று போராடியது. தமிழாசிரியர்களின் பெயர்கள் ஊதிய விகிதம், கல்வித்தகுதி, கற்பிக்கும் வகுப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு, பணிக்கால முன்னுரிமையைக் கணக்கில் கொண்டு ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று கேட்டது. இவ்வாறு பெற்ற உரிமையால்தான் இன்றைய பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் தமிழ் பயின்றவர்களின் பெயர்கள் முன்னுக்கு நகர்ந்துள்ளன.
மேலும் வித்துவான், புலவர் உள்ளிட்ட பட்டயப்
படிப்புகள் படித்தவர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். அரசின்
கவனத்துக்கு இதனைக் கொண்டுசென்ற பிறகு, இரண்டு தாள்களைக் கூடுதலாகத் தேர்வு எழுதிப் பிலிட் பட்டம் பெற்று,
மற்ற ஆசிரியர்கள் பெற்ற உரிமைகளைத் தமிழாசிரியர்கள் பெற்றார்கள்.. சிறப்பாசிரியர்கள்
என்று இருந்தவர்கள் பதவி உயர்வுபெற முடியாத நிலைமையை அறிந்து தமிழாசிரியர்களை உதவி
ஆசிரியர்கள் என்று பதவிப் பெயர் மாற்றுவதற்கு ஒரு பெரும் அணி அக்காலத்தில் போராட வேண்டியிருந்தது.
தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம்; சான்றிதழ்களில் தமிழாசிரியர்கள் சான்றொப்பம் இடலாம்; பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஆகலாம்; மாவட்டக் கல்வி அலுவலர் ஆகலாம்; முதன்மைக் கல்வி அலுவலர் ஆகலாம்; இணை இயக்குநர் ஆகலாம்; இயக்குநர் ஆகலாம் என்று பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்குத் துணிவும், பணிவும் கொண்டு இயங்கிப் பல்லாயிரம் தமிழாசிரியர் பெருமக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர் நாவுக்கரசர் புலவர் சு. நஞ்சப்பன் ஆவார். அவர்களின் தன் வரலாற்று நூலான ஓடை நதியானது என்ற வாழ்வியல் சிந்தனை நூலினை அண்மையில் படித்து மகிழும் வாய்ப்பினைக் கருவூர்ப் புலவர் அருணா பொன்னுசாமி அவர்களும் புலவர் துரை. தில்லான் அவர்களும் எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.
பள்ளிக்குச் சென்று கடமையை ஆற்றிவிட்டு அன்றாடம் திரும்பும் எளியநிலைத் தமிழாசிரியராகப் புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் இல்லை. இவர் தமிழாசிரியர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டங்களும் இழப்புகளும் துன்பங்களும் அறியும்பொழுது மிகப்பெரும் மாமலையாக விளங்கி, ஆசிரியப் பெருமக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்துள்ள உயரிய வாழ்வினை அறிந்து வியப்புறுகின்றேன். இவரின் வாழ்க்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வாகத் தெரிகின்றது.
புலவர் சு. நஞ்சப்பனார் தமிழாசிரியர்களின் உரிமைக்கு மட்டும் போராடியிருந்தால் உயர்வுபெற்ற புலவர்கள் – பயன்பெற்ற புலவர்கள் மட்டும் கொண்டாடியிருப்பார்கள். புலவர் சு நஞ்சப்பனாரோ தமிழாசிரியர் நலம் காத்தமைபோல் தமிழ் நலம் காக்கும் பணியிலும் ஈடுபட்டவர். தமிழ் வளர்ச்சிக்கு நடத்திய கருத்தரங்குகள், மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகள், தமிழ் எழுச்சி மாநாடுகள், தமிழ்ப் பயிற்சி அரங்கம், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைப் போற்றியமை முதலியவற்றின் வழியாகத் தமிழகத்தில் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். அரசு செய்த தமிழ்நலச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர். எனவே, இவர்தம் வரலாறு தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி; தமிழர் வரலாற்றின் ஒரு பகுதி எனலாம்.
1942 இல் தொடங்கப்பட்ட தமிழ் வித்துவான் சங்கம், 1946 இல் மாகாணத் தமிழாசிரியர் கழகமாக மலர்ந்து, 1956 இல் மாநிலத் தமிழாசிரியர் கழகமாகப் பொலிந்து, 1969 இல் தமிழகத் தமிழாசிரியர் கழகமாகப் பூத்து மணம்பரப்பியது. புலவர் சு. நஞ்சப்பனார் தம் முன்னோர்கள் உருவாக்கிய தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் 1970 அளவில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் வட்டத்தின் தலைவரானார்; பின்னர் கோவை மாவட்டத் தலைவரானார்; இயக்க ஈடுபாடும் தொடர்ந்த தொண்டுகளும் புலவர் சு. நஞ்சப்பனாரைத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக்கின. 21. 02. 1988 முதல் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்துக்காகச் சென்னை எழும்பூரில் ஓர் கட்டடம் வாங்கப்பெற்று, இயக்கத்தின் சொத்தாக்கப்பட்டது. இதில் முழுமூச்சாக ஈடுப்பட்டு உழைத்தவர் நம் புலவர் சு. நஞ்சப்பனார் ஆவார். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் பெருமைதேடித் தந்த புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன்.
புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கை
புலவர் சு. நஞ்சப்பன் கோவை மாவட்டம் மருதூரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மூ. சுப்பைய கவுண்டர் – பெரியக்காள் என்பனவாகும். இவர்கள் உழவர் குடியைச் சேர்ந்தவர்கள்.
புலவர் சு. நஞ்சப்பன் தம் ஊருக்கு அருகில் உள்ள புங்கம்பாளையம் பள்ளியில் இளமைக் கல்வியைக் கற்றார். ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் படிப்பு நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் ஆறுகல் தொலைவில் உள்ள காரமடையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஏழாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போடிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகள் பெறத் தொடங்கினார். இதனால் பேச்சுத்துறையில் இவருக்கு ஆர்வம் உண்டானது. பள்ளிப்பருவத்தில் இவர்தம் தமிழுணர்வுக்குக் காரணமாக இருந்தவர் புலவர் கி. நஞ்சுண்டனார் ஆவார். அதுபோல் பள்ளியில் இவருக்கு ஓர் ஆண்டு கணக்குப் பாடம் நடத்தியவர் செ.அரங்கநாயகம். (பின்னாளில் தமிழ்நாட்டு அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர்). பதினொன்றாம் வகுப்பு வரை இப்பள்ளியில் இவர்தம் படிப்பு இருந்தது. பள்ளியிறுதி வகுப்பில் தேறி, அவிநாசி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று, ஆசிரியர் தகுதிபெற்றார். 1963 ஆம் ஆண்டு புலவர் சு. நஞ்சப்பனாரின் இருபதாம் வயதில் புயங்கனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்களில் வச்சினம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் அமைந்தது. பின்னர்த் தாம் பயின்ற புங்கம்பாளையம் ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளியில் பணிமாறுதலில் இணைந்தார்.
தமிழை முழுமையாக அறிந்துகொள்ள காரமடையில் தமிழாசிரியராக இருந்த புளியம்பட்டி பெரும்புலவர் கணேசனார் அவர்களிடம் மாலைநேரத்தில் இலக்கண, இலக்கியம் கற்று, வித்துவான் தேர்வெழுதி வென்றார். 12.08.1969 இல் தமிழாசிரியர் பணி பெரியபுத்தூரில் கிடைத்தது. 1971 இல் புயங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பணியில் இருந்தபடியே பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பயின்று பெற்றார். 32 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய சு. நஞ்சப்பனார் 2001 ஆம் ஆண்டு பணியோய்வு பெற்றவர். பணியோய்வுக்குப் பிறகும் தமிழாசிரியர்களின் உயர்வுக்கும் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநில மதிப்பியல் தலைவராக இவர்தம் பணி தொடர்கின்றது.
புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ்க் குடும்பம்
புலவர் சு. நஞ்சப்பனார் 02.09.1973 இல் அமராவதி அவர்களை மாண்புமிகு அமைச்சர் மு. கண்ணப்பன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். கோவைத் தென்றல் மு. இராமநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மே.சி. தூயமணி போன்ற சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் ந. எழில் (1974), ந. மதிவாணன் (1977) என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். ந. எழில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார். ந. மதிவாணன் உயர்கல்வி கற்று, கத்தார் நாட்டில் பணியாற்றி வருகின்றார்.
புலவர் சு. நஞ்சப்பனார் மிகச் சிறந்த தமிழறிஞர்களைத்
தம் சுற்றமாகக் கொண்டு அரும்பணிகளை ஆற்றியவர். புலவர் துரை. தில்லான் அவர்களைப் பொறுப்பாசிரியராகக்
கொண்டு நமது தமிழாசிரியர் என்னும் இதழை நடத்தியவர். அதுபோல் புலவர் அருணா பொன்னுசாமி,
முனைவர் க. வீ. வேதநாயகம், சின்ன மணல்மேடு த. இராமலிங்கம், புலவர் பெ. கறுப்பண்ணன்,
புலவர் கோ, தமிழரசன் முதலான சான்றோர் பெருமக்களுடன் நல்லுறவு கொண்டு ஒரே குடும்பமாக
இயங்கும் திறன் போற்றத்தக்கது.
புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் அமெரிக்கா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர்.
புலவர் சு. நஞ்சப்பன் தமிழ்ப்பற்றுடன் அறிவார்ந்த உரையாற்றுவதில் வல்லவர். இவர்தம் உணர்வு நிறைந்த பேச்சாற்றல் இவரைத் தமிழகத்துத் தமிழாசிரியர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்தும் வாய்ப்பினை நல்கியுள்ளது எனலாம்.
புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் தமிழ்க்கொடை:
1. இதழும் இயக்கமும் (2015)
2. ஓடை நதியானது (2024)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக