நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 டிசம்பர், 2025

புலவர் சு. நஞ்சப்பன்

  

புலவர் சு. நஞ்சப்பன்

[புலவர் சு. நஞ்சப்பன் கோவையில் வாழ்ந்துவருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழாசிரியர்களின் பல்வேறு உரிமைகளைப் போராட்டங்கள் வாயிலாகவும், கோரிக்கைகள் வாயிலாகவும் நிறைவேற்றித் தந்தவர். தமிழுணர்வு நிறைந்த இவர் பேச்சாளராகவும் புகழ்பெற்றவர்] 

தமிழ் கற்ற அறிஞர் பெருமக்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபொழுது அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக நடத்தப்படாத ஒரு நிலைமை தமிழகத்துக் கல்வித்துறையில் முன்பு நிலவியது. 

பள்ளியில் ஆசிரியர்  வருகைப் பதிவேட்டில் தலைமை ஆசிரியர் பெயர் முதலில் இருக்கும்; அடுத்ததாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்கள் இருக்கும்; இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் இருக்கும்; இவர்களுக்குப் பின் சிறப்பாசிரியர் பிரிவில் தமிழாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர்கள் பெயர்கள் என எழுதப்பட்டிருக்கும். இதனை தமிழகத் தமிழாசிரியர் கழகம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று போராடியது. தமிழாசிரியர்களின் பெயர்கள் ஊதிய விகிதம், கல்வித்தகுதி, கற்பிக்கும் வகுப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு, பணிக்கால முன்னுரிமையைக் கணக்கில் கொண்டு  ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று கேட்டது. இவ்வாறு பெற்ற உரிமையால்தான்  இன்றைய பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில்  தமிழ் பயின்றவர்களின் பெயர்கள் முன்னுக்கு நகர்ந்துள்ளன. 

மேலும் வித்துவான், புலவர் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் படித்தவர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டுசென்ற பிறகு, இரண்டு தாள்களைக்  கூடுதலாகத் தேர்வு எழுதிப் பிலிட் பட்டம் பெற்று, மற்ற ஆசிரியர்கள் பெற்ற உரிமைகளைத் தமிழாசிரியர்கள் பெற்றார்கள்.. சிறப்பாசிரியர்கள் என்று இருந்தவர்கள் பதவி உயர்வுபெற முடியாத நிலைமையை அறிந்து தமிழாசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என்று பதவிப் பெயர் மாற்றுவதற்கு  ஒரு பெரும் அணி அக்காலத்தில் போராட வேண்டியிருந்தது.

தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம்; சான்றிதழ்களில் தமிழாசிரியர்கள்  சான்றொப்பம் இடலாம்;   பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஆகலாம்; மாவட்டக் கல்வி அலுவலர் ஆகலாம்; முதன்மைக் கல்வி அலுவலர் ஆகலாம்; இணை இயக்குநர் ஆகலாம்; இயக்குநர் ஆகலாம்  என்று பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்குத் துணிவும், பணிவும் கொண்டு இயங்கிப் பல்லாயிரம் தமிழாசிரியர் பெருமக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்  நாவுக்கரசர் புலவர் சு. நஞ்சப்பன் ஆவார்.  அவர்களின் தன் வரலாற்று நூலான  ஓடை நதியானது என்ற வாழ்வியல் சிந்தனை நூலினை அண்மையில் படித்து மகிழும் வாய்ப்பினைக் கருவூர்ப் புலவர் அருணா பொன்னுசாமி அவர்களும் புலவர் துரை. தில்லான் அவர்களும் எனக்கு உருவாக்கித் தந்தார்கள். 

பள்ளிக்குச் சென்று கடமையை ஆற்றிவிட்டு அன்றாடம் திரும்பும் எளியநிலைத் தமிழாசிரியராகப் புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் இல்லை. இவர் தமிழாசிரியர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டங்களும் இழப்புகளும் துன்பங்களும் அறியும்பொழுது மிகப்பெரும் மாமலையாக விளங்கி, ஆசிரியப் பெருமக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்துள்ள உயரிய வாழ்வினை அறிந்து வியப்புறுகின்றேன். இவரின் வாழ்க்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வாகத் தெரிகின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனார் தமிழாசிரியர்களின் உரிமைக்கு மட்டும் போராடியிருந்தால் உயர்வுபெற்ற புலவர்கள் – பயன்பெற்ற புலவர்கள் மட்டும் கொண்டாடியிருப்பார்கள். புலவர் சு நஞ்சப்பனாரோ தமிழாசிரியர் நலம் காத்தமைபோல் தமிழ் நலம் காக்கும் பணியிலும் ஈடுபட்டவர். தமிழ் வளர்ச்சிக்கு நடத்திய கருத்தரங்குகள், மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகள், தமிழ் எழுச்சி மாநாடுகள், தமிழ்ப் பயிற்சி அரங்கம், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைப் போற்றியமை முதலியவற்றின் வழியாகத் தமிழகத்தில் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். அரசு செய்த தமிழ்நலச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர். எனவே, இவர்தம் வரலாறு தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி; தமிழர் வரலாற்றின் ஒரு பகுதி எனலாம். 

1942 இல் தொடங்கப்பட்ட தமிழ் வித்துவான் சங்கம், 1946 இல் மாகாணத் தமிழாசிரியர் கழகமாக மலர்ந்து, 1956 இல் மாநிலத் தமிழாசிரியர் கழகமாகப் பொலிந்து, 1969 இல் தமிழகத் தமிழாசிரியர் கழகமாகப் பூத்து மணம்பரப்பியது.  புலவர் சு. நஞ்சப்பனார் தம் முன்னோர்கள் உருவாக்கிய தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் 1970 அளவில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் வட்டத்தின் தலைவரானார்; பின்னர் கோவை மாவட்டத் தலைவரானார்; இயக்க ஈடுபாடும் தொடர்ந்த தொண்டுகளும் புலவர் சு. நஞ்சப்பனாரைத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக்கின.  21. 02. 1988 முதல் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்துக்காகச் சென்னை எழும்பூரில் ஓர் கட்டடம் வாங்கப்பெற்று, இயக்கத்தின் சொத்தாக்கப்பட்டது. இதில் முழுமூச்சாக ஈடுப்பட்டு உழைத்தவர் நம் புலவர் சு. நஞ்சப்பனார் ஆவார். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் பெருமைதேடித் தந்த புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

புலவர் சு. நஞ்சப்பன் கோவை மாவட்டம் மருதூரில் 14. 06. 1943 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மூ. சுப்பைய கவுண்டர் – பெரியக்காள் என்பனவாகும். இவர்கள் உழவர் குடியைச் சேர்ந்தவர்கள். 

புலவர் சு. நஞ்சப்பன் தம் ஊருக்கு அருகில் உள்ள புங்கம்பாளையம் பள்ளியில் இளமைக் கல்வியைக் கற்றார். ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் படிப்பு நடைபெற்றது.  ஆறாம் வகுப்பு முதல் ஆறுகல் தொலைவில் உள்ள காரமடையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஏழாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போடிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகள் பெறத் தொடங்கினார். இதனால் பேச்சுத்துறையில் இவருக்கு ஆர்வம் உண்டானது. பள்ளிப்பருவத்தில் இவர்தம் தமிழுணர்வுக்குக் காரணமாக இருந்தவர் புலவர் கி. நஞ்சுண்டனார் ஆவார். அதுபோல் பள்ளியில் இவருக்கு ஓர் ஆண்டு கணக்குப் பாடம் நடத்தியவர் செ.அரங்கநாயகம். (பின்னாளில் தமிழ்நாட்டு அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர்). பதினொன்றாம் வகுப்பு வரை இப்பள்ளியில் இவர்தம் படிப்பு இருந்தது. பள்ளியிறுதி வகுப்பில் தேறி, அவிநாசி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று, ஆசிரியர் தகுதிபெற்றார். 1963 ஆம் ஆண்டு புலவர் சு. நஞ்சப்பனாரின் இருபதாம் வயதில் புயங்கனூர்  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்களில் வச்சினம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் அமைந்தது. பின்னர்த் தாம் பயின்ற புங்கம்பாளையம் ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளியில் பணிமாறுதலில் இணைந்தார். 

தமிழை முழுமையாக அறிந்துகொள்ள காரமடையில் தமிழாசிரியராக இருந்த புளியம்பட்டி பெரும்புலவர் கணேசனார் அவர்களிடம் மாலைநேரத்தில் இலக்கண,  இலக்கியம் கற்று, வித்துவான் தேர்வெழுதி வென்றார். 12.08.1969 இல் தமிழாசிரியர் பணி பெரியபுத்தூரில் கிடைத்தது. 1971 இல் புயங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பணியில் இருந்தபடியே பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பயின்று பெற்றார். 32 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய சு. நஞ்சப்பனார் 2001 ஆம் ஆண்டு பணியோய்வு பெற்றவர். பணியோய்வுக்குப் பிறகும் தமிழாசிரியர்களின் உயர்வுக்கும் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநில மதிப்பியல் தலைவராக இவர்தம் பணி தொடர்கின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ்க் குடும்பம் 

புலவர் சு. நஞ்சப்பனார் 02.09.1973 இல் அமராவதி அவர்களை மாண்புமிகு அமைச்சர் மு. கண்ணப்பன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். கோவைத் தென்றல் மு. இராமநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மே.சி. தூயமணி போன்ற சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் ந. எழில் (1974), ந. மதிவாணன் (1977) என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். ந. எழில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார். ந. மதிவாணன் உயர்கல்வி கற்று, கத்தார் நாட்டில் பணியாற்றி வருகின்றார். 

ந.அமராவதி, சு. நஞ்சப்பனார்

புலவர் சு. நஞ்சப்பனார் மிகச் சிறந்த தமிழறிஞர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு அரும்பணிகளை ஆற்றியவர். புலவர் துரை. தில்லான் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நமது தமிழாசிரியர் என்னும் இதழை நடத்தியவர். அதுபோல் புலவர் அருணா பொன்னுசாமி, முனைவர் க. வீ. வேதநாயகம், சின்ன மணல்மேடு த. இராமலிங்கம், புலவர் பெ. கறுப்பண்ணன், புலவர் கோ, தமிழரசன் முதலான சான்றோர் பெருமக்களுடன் நல்லுறவு கொண்டு ஒரே குடும்பமாக இயங்கும் திறன் போற்றத்தக்கது.

புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் பெற்ற விருதும் பாராட்டுகளும் 

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் ஆசிரியப் பணியைப் பாராட்டித், தமிழக அரசு "நல்லாசிரியர் விருதினை" மேனாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் அவர்களின் கையால் 05.09.1998 இல் வழங்கியது. 1991 இல் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் “நாவுக்கரச்சர்” என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். கரூர் திரு. வி. க. மன்றம் “நகைச்சுவை நற்றமிழ் அரசு” விருது அளித்துப் பாராட்டியது. கோவை வேலுமணி அம்மையார் இலக்கியக் குழுவினர் “நாவரசு” என்று விருது வழங்கிப் பெருமை சேர்த்தனர். திண்டுக்கல் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “செந்தமிழ்ச் செல்வர்” என்னும் விருதும். மாநிலத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “திருக்குறள் மாமணி” என்னும் என்னும் விருதும் வழங்கிப் போற்றியுள்ளனர்.

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் அமெரிக்கா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர். 

புலவர் சு. நஞ்சப்பன் தமிழ்ப்பற்றுடன் அறிவார்ந்த உரையாற்றுவதில் வல்லவர். இவர்தம் உணர்வு நிறைந்த பேச்சாற்றல் இவரைத் தமிழகத்துத் தமிழாசிரியர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்தும் வாய்ப்பினை நல்கியுள்ளது எனலாம். 

புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இதழும் இயக்கமும் (2015)

2.   ஓடை நதியானது (2024)








 


புதன், 3 டிசம்பர், 2025

பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம்

  

 சின்ன மணல்மேடு  . இராமலிங்கம்


[சின்ன மணல்மேடு  .  இராமலிங்கம் அவர்கள் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  புதுவெள்ளம் இதழின் ஆசிரியர்; பன்னூலாசிரியர். மரபுப் பாடல் எழுதுவதில் வல்லவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுக்களில் பணியாற்றியவர். வீராணம் ஏரிக்கரையில் உள்ள சின்ன மணல்மேடு என்னும் ஊரில் பிறந்தவர்.]


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை நீண்டு கிடப்பது  வீராணம் ஏரியாகும். முதலாம் பராந்தகசோழனின் இயற்பெயரான வீரநாராயணன் பெயரில் இவ்வேரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பெற்று, மக்கள் வழக்கில் இன்று வீராணம் ஏரி என்று குறைவுற்று வழங்குகின்றது. இப்பேரேரியின் நீர்வளத்தால் வாழைக்கொல்லை, கூளாப்பாடி, கந்தகுமரன், உத்தமசோழன் முதலான ஊர்களும் அதனைச் சுற்றியுள்ள பல நூறு ஊர்களும் வளம்பெற்றுத் திகழ்கின்றன. 

வீராணம் ஏரியின் நீர் வேளாண்மைக்கு இன்று உதவுவதுடன் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பணியையும் செய்கின்றது. அதுபோல் இந்த வீராணம் பகுதியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் இப்பகுதி மக்களுக்குக் கல்விபுகட்டும் பணியைச் செய்வதுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிற்பவர்களாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர். 

அவ்வகையில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் புதுவெள்ளம் என்னும் இலக்கிய இதழ் நடத்தியும், திருக்குறளுக்கு உரைவரைந்தும் அறிவுப்பணியாற்றிவரும் பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம் அவர்களின் பணிகளைக் கருவூர்ப் பாவலர் அருணா பொன்னுசாமி அவர்கள் வழியாக அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன்.  அறிஞர்கள் போற்றும் கவிதையாற்றலைக் கைவரப்பெற்ற த. இராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை இலக்கிய ஏடுகளில் பதிவுசெய்யப்பெற வேண்டிய பான்மையை உடையது. அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

த. இராமலிங்கம் அவர்கள் வீராணம் ஏரியால் வளம்பெற்றுத் திகழும் சின்ன மணல்மேடு என்னும் ஊரில் வாழ்ந்த கோ. தம்புசாமி – அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாக 20.10.1949 இல் பிறந்தவர். உழவர்குடியில் தோன்றிய த. இராமலிங்கம் தம் நான்காம் அகவையில் தந்தையாரை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

த. இராமலிங்கம் அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சின்ன மணல்மேடு என்னும் தம் ஊரில் கல்வி பயின்றவர். தெ. நெடுஞ்சேரியில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயின்றவர். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.

  வடலூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று(1966-1968), இடைநிலை ஆசிரியராகக் கொள்ளுமேட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியொன்றில் 02.11.1968 ஆம் ஆண்டு முதல்  பன்னிரண்டரை ஆண்டுகள்  பணியாற்றியவர். 

1978 இல் தமிழக அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து “பெரியார் என்னும் பேரொளி” என்னும் தலைப்பில் பாப் போட்டி நடத்தியது. அப் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் முதன்மை இடம் இவருக்குக் கிடைத்தது. இப்போட்டி'யின் முடிவு இவருக்கு, அடுத்த பணி உயர்வுக்கு ஆதரவாக இருந்தது. 

அரசுப் பணி கிடைத்து, சங்கராபுரத்தை அடுத்துள்ள பிரம்மகுண்டம் என்ற ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதனை அடுத்து, பண்ணுருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பண்ணுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம் காரைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  முப்பத்தொன்பது ஆண்டுகள் மிகச் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிய த. இராமலிங்கம் வானொலிகளில் பேசியும், பல்வேறு இதழ்களில் எழுதியும் தம் படைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தவர். தினமணி, தென்மொழி, தீக்கதிர் முதலான ஏடுகள் இவர்தம் படைப்புகளைத் தாங்கிவருவன. இவர்தம் மரபுப் பாடல்கள் மிகச் சிறந்த உணர்ச்சிப்பாக்களாக விளங்குவனவாகும். சிறுவர் பாடல் புனைவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர்.

. இராமலிங்கம் அவர்கள் 27.08.1972 இல் தம் இருபத்து நான்காம் அகவையில் புலவர் கு. சாவித்திரி அவர்களை இல்லறத் துணையாய் மணந்துகொண்டார். கு. சாவித்திரி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர். முதல் மகன் மருத்துவர் இரா. இலெனின் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டாவது மகன் இரா. கபிலன் பொறியியல் பயின்று, முதுநிலை மேலாளராகப் மணியாற்றி வருகின்றார். 

. இராமலிங்கம் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும் கடலூர் மாவட்டத்துப் பொருளாளர், செயலர், தலைவர் பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டவர். 

புலவர் புங்கனேரியான் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் 1972 முதல் இயங்கிய பாவேந்தர் பைந்தமிழ் மன்றத்தின் தலைவர், செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர். தமிழகத்து அறிஞர்களை அழைத்து, திங்கள்தோறும் விழாக்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்தி அப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். 

. இராமலிங்கம் அவர்கள் புதுவெள்ளம் என்ற திங்களிதழின் ஆசிரியராக இருந்து, 2016 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்விப் பாடநூல் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவர். 

த. இராமலிங்கம் அவர்கள் அறிவாற்றலில் நிறைந்து நிற்பவர் என்பதுபோல் தம் வளர்ச்சியில் துணைநின்ற புலவர் சு. நஞ்சப்பன், புலவர் பூ. தில்லைவளவன், புலவர் ந. செல்வராசன், புலவர் துரை தில்லான் முதலான சான்றோர்களிடத்து மிகுந்த நன்றியுணர்வுகொண்டவராக விளங்குகின்றார்.

  த.இராமலிங்கம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை அறிந்த பல்வேறு தமிழமைப்புகள் இவருக்குப் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் போற்றியுள்ளன. 

1.   மறைமலையடிகள் விருது

2.   பாவேந்தர் மரபுப் பாவலர் விருது

3.   யாப்புநூல் புரவலர்

4.   எழுச்சிப் பாவலர்

5.   நடைமுறைப் பாவலர்

6.   கவிதைக் கனல்

7.   கவியருவி

8.   தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்,

9.   மரபு மாமணி 

முதலான விருதுகள் குறிப்பிடத்தக்கன. 

. இராமலிங்கம் அவர்கள் தற்பொழுது நெய்வேலி முதன்மை வாயிலுக்கு எதிரில் உள்ள அண்ணா கிராமத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   சூரியனைச் சுடும் நெருப்பு (பாடல்)

2.   வள்ளுவத்தில் காதல் (பாடல்)

3.   கிணற்றில் வீழ்ந்த கடல் (பாடல்)

4.   பாவம் குருவிகள் (உரைநடை)

5.   திருக்குறள் தெளிவுரை 








 

நன்றி: புலவர் அருணா பொன்னுசாமி, கரூர் 

 

செவ்வாய், 2 டிசம்பர், 2025

புலவர் அருணா பொன்னுசாமி

  

புலவர் அருணா பொன்னுசாமி 

[புலவர் அருணா பொன்னுசாமி மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று, பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர். திருக்குறளுக்கு உரைவளம் வரைந்தவர். கரூரில் பல்வேறு இலக்கியப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்துவருபவர்.] 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வுசெய்வதற்கு மாணவராக இணைந்தபொழுது (1993) முனைவர் கடவூர் மணிமாறனார் அவர்களை அவர்தம் கிருட்டினராயபுரம் இல்லம் சென்று சந்தித்து, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் குறித்து உரையாடினேன். அதுபொழுது பாவேந்தர் பாரதிதாசனார் வழியில் பாட்டெழுதும் பல கவிஞர்களைக் கடவூரார் எனக்கு அறிமுகம் செய்தார். அவ்வகையில் அன்றையப் பிற்பகலில் கரூர் சென்று கவிஞர் கன்னல், கவிஞர் அருணா பொன்னுசாமி, கவிஞர் நண்ணியூர் நாவரசன் முதலானவர்களைக் கண்டு உரையாடியமை பலவாண்டுகளுக்குப் பின்னரும் நெஞ்சில் நிழலாடும் நினைவுகளாக உள்ளன. அற்றைப்பொழுதில் அருணா பொன்னுசாமி அவர்களின் அன்பார்ந்த வரவேற்பும், அள்ளித் தந்த நூல்படிகளும், சொல்லி மகிழ்ந்த உவமைக்கவிஞர் சுரதாவின் நட்பும் இன்றும் என் மனத்துள் பதிந்துகிடக்கின்றன. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

புலவர் அருணா பொன்னுசாமியாரின் தமிழ் வாழ்க்கை 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் வாழ்ந்த . அருணாசலம் - அங்காயி அம்மாள் ஆகியோரின் மகனாக 04. 10. 1938 இல் பிறந்தவர். பெற்றோர் 8 முழம் சரிகை வேட்டி ஆயத்தம் செய்யும் பத்துத் தறிகளின் உரிமையாளர் ஆவர். 

தாத்தையங்கார்பேட்டை என்பது திருப்பதி – திருமலை இறைவனுக்குத் தீர்த்தகுடம் எடுத்துவந்து வழங்கும் ஐயங்கார் மரபினருக்கு  வல்வில் ஓரியால் இறையிலியாக வழங்கப்பட்ட ஊர் என்று அறியமுடிகின்றது. தாதா ஐயங்கார்பேட்டை என்பது தாத்தையங்கார்பேட்டை என மருவியதாகவும் தெரியவருகின்றது. இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் உள்ள முசிறியிலிருந்து 10 கல் தொலைவில் உள்ளது. 

புலவர் அருணா பொன்னுசாமி தம் பிறந்த ஊரான தாத்தையங்கார்பேட்டையில் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். நான்கு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்.  எட்டாம் வகுப்பு முதல் அவ்வூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியானதால் அங்குப் பயின்றவர். பின்னர் பள்ளியிறுதி வகுப்பில் 1956 இல் தேர்ச்சி பெற்றதும் 1957 முதல் 1961 வரை மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். 

துறையூரில் அமைந்துள்ள செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் 100 உருவா ஊதியத்தில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 1963 இல் குமாரபாளையத்தில் தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர். 1964 முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இணைந்து, தமிழ்ப்பணியாற்றியவர். 

1965 ஆம் ஆண்டு தாத்தையங்கார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றினார். மேலும் 1972 இல் குளித்தலை அருகில் உள்ள ஜி. உடையாப்பட்டிக்குப் பணிமாறுதலில் சென்று பணியாற்றியவர். 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் அ. முத்துலட்சுமி அவர்களை 1972 இல் திருமணம் செய்துகொண்டவர். அ. முத்துலட்சுமி அவர்கள் புனித தெரசா தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர்களின் இல்லறப் பயனாய் இரேவதி, பாலாஜி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

கரூர் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளி முதலிய இடங்களில் அருணா பொன்னுசாமி தமிழாசிரியராகப் பணியாற்றி 1987 இல் பணியோய்வு பெற்றவர். தமிழ்ப்பற்றும் சுற்றம் சூழ வாழும் நல்லுள்ளமும் வாய்க்கப்பெற்ற அருணா பொன்னுசாமியார் கரூரின் முதன்மையாள இலக்கிய ஆளுமையாக விளங்கிவருகின்றார். 

புலவர் அருணா பொன்னுசாமி தம் வீட்டிலேயே நூலகம் அமைத்து மாவட்ட ஆட்சியரால் பாராட்டப் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் பொறுப்பேற்றுத் தமிழாசிரியர் நலனுக்குப் பாடுபட்டவர். 1968 இல் இலங்கைப் பயணம் மேற்கொண்டு 14 நாள்கள் தங்கி, ஆசிரியர் நிலைகள், பள்ளிகள் குறித்து அறிந்துவந்தவர். 1972 இல் திரு.வி.க. மன்றத்தைத் தொடங்கிப் பலரும் நூல் எழுதும் வகையில் ஊக்கப்படுத்தி வருபவர். 

புலவர் அருணா பொன்னுசாமி அவர்கள் திருக்குறளில் நல்ல ஈடுபாடு உடையவர். திருக்குறளுக்கு உரைவளம் என்னும் தலைப்பில் நூல் எழுதி முப்பதாயிரம் படிகளுக்கும் மேல் அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்கித் திருக்குறள் பரப்பும் பணியில் தம்மை இணைத்துக்கொண்டவர். இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் தமிழகத் தமிழாசிரியர் மாநாட்டில் மேனாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இவருக்குத் “திருக்குறள் மாமணி விருது” அளித்துச் சிறப்பித்துள்ளார். இவர் இயற்றிய மூவேந்தர் காப்பியம் என்ற வரலாற்று நூல் புகழ்பெற்றது. பாவேந்தர் கவிதைகளில் ஈடுபாடுகொண்ட இவர் “பாட்டருவிப் பாவேந்தர்” என்னும் கவிதைப் படைப்பை இயற்றியுள்ளார்.

 புலவர் அருணா பொன்னுசாமி தம் உள்ளம் கவர்ந்த கவிஞரான உவமைக்கவிஞர் சுரதாவின் பெயரில் மரபுக்கவிதை இலவசப் பயிற்சிக்கூடம் நிறுவி, மரபுக்கவிதை எழுதும் பயிற்சியை வழங்கி, கரூரில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றார். 

தாம் பயின்ற மயிலம் கல்லூரியின் மீதும் அதன் அதிபராக விளங்கிய பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்களில் மீதும் அளவற்ற பற்றினைக் கொண்டவர். பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானங்கள் அவர்களின் நூற்றாண்டினைத் தாம் வாழ்ந்துவரும் கரூரில் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர். 

புலவர் அருணா பொன்னுசாமியின் தமிழ்க்கொடை 

1.   பெண்மை வெல்க (1962)

2.   பாட்டருவிப் பாவேந்தர் (1990)

3.   தமிழில் பூத்த தாழம்பூ (1991)

4.   முப்பால் முத்து (1992)

5.   பொருண்மொழிக் காஞ்சி (1995)

6.   திருக்குறள் உரைவளம் (2001)

7.   தமிழர் திருமணம் (2002)

8.   முத்துக்குவியல் (2004)

9.   உறவுப்பூக்கள்( 2006)

10. அண்ணா ஆயிரம் (2008)

11. மணம் பரப்பும் மலர்கள்( 2011)

12. சமச்சீர் கல்வி - ஒரு பார்வை (2012)

13. ஒரு குறள் விளக்கம் (2013)

14. கனவும் கற்பனையும் – கடித இலக்கியம் (2013)

15. வெண்பா வேள்வி ( 2017)

16. தமிழனின் அடையாளம்( 2017)

17. கொல்லிமலைச் சித்தர்கள் (2022)

18. மூவேந்தர் காப்பியம் ( 2023)

 

 



  

 

ஞாயிறு, 30 நவம்பர், 2025

புலவர் துரை. தில்லான்

  

புலவர் துரை. தில்லான் 

[புலவர் துரை. தில்லான் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இலக்கணப் புலமையுடையவர். பன்னூலாசிரியர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தவர். ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். ஆசிரியப் பணியை ஈடுபாட்டுடன் செய்ததுடன் சீர்திருத்தத் திருமணங்களை நடத்திவைத்தவர். எழுத்து, பேச்சு வழியாகத் தமிழ்ப்பணியாற்றியவர். சின்னாளபட்டியில் வாழ்ந்து வருபவர்] 

புலவர் துரை. தில்லான் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த துரைச்சாமி, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 15.06.1934 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் தொழில் வேளாண்மையாகும். தில்லான் என்பது தில்லையில் இருக்கும் இறைவன் நினைவாக அமைந்த பெயர் (சிதம்பரத்திற்குத் தில்லைவனம் என்று பெயர் உள்ளமையும் அவ்வூர் இறைவன் தில்லையான் என்று அழைக்கப்படுவதையும் நினைவிற்கொள்க. தில்லையான் என்பது மருவி தில்லான் என்று அமைந்தது. குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைக்குத் தில்லான் எனவும் பெண் பிள்ளைக்குத் தில்லையம்மாள் எனவும் பெயர் வைப்பது இன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கில் உள்ளது). புலவர் துரை. தில்லான் தம் பிறந்த ஊரான கும்மம்பட்டியில் முதல் ஐந்து வகுப்புகள் பயின்றவர். அருகில் உள்ள பஞ்சம்பட்டியில் உள்ள பள்ளியில் ஆறு முதல் எட்டு வகுப்புகளைப் பயின்றவர். 

புலவர் துரை. தில்லான் அவர்கள் 1952 முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் ஆர்வ மேலீட்டால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் படிப்பு, புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி முதலியவற்றைப் படித்தவர்.  தொடக்கப்பள்ளி ஆசிரியராக எட்டு ஆண்டுகளும் தமிழாசிரியராக 33 ஆண்டுகளும்  பணியாற்றியவர். நல்லூர் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம், வேடசந்தூர், நி. பஞ்சம்பட்டி முதலான ஊர்களில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிப் புகழ்பெற்றவர். 

புலவர் துரை. தில்லான் இல்லற வாழ்வு 

புலவர் துரை. தில்லான் அழகுத்தாய் அவர்களை 15. 09. 1958  இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்குப் பொன்னரசி, மங்கையர்க்கரசி, அன்புச்செல்வி, தாமரைக்கண்ணன், வசந்தமாலை ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

புலவர் அழகுத்தாய், புலவர் துரை. தில்லான் 

புலவர் துரை. தில்லானின் ஆசிரியப் பணியும் சமூகப் பணியும் 

புலவர் துரை. தில்லான் அவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியராக நல்லூர்ப் பள்ளியில் இணைந்ததிலிருந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுடன் அமையாமல் ஊர் மக்களுக்குப் பலவகையில் உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவரிடம் படித்து முன்னேறியவர்களின் பட்டியல் மிக நீண்டதாகும். வறுமையிலும் அறியாமையிலும் இருந்த மக்கள் கூட்டத்திலிருந்து பிள்ளைகளைப் பிரித்தெடுத்து, அவர்களுக்கு நல்லறிவும் நற்புண்பும் ஊட்டி வளர்த்துள்ள இவர்தம் தூய உள்ளத்தை வாழ்க்கைத்தடம் என்ற பெயரில் இவர் எழுதியுள்ள தன்வரலாற்று நூலில் கண்டு மகிழ முடியும். 

சின்னாளப்பட்டு, வேடசந்தூர் பகுதிகளில் பல்வேறு சீர்திருத்தத் திருமணங்களை நடத்திவைத்து, பலர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர். வறுமையில் உழன்ற மாணவர்களுக்கு இயன்ற அளவு நிதியுதவிசெய்து, அவர்களைப் படித்தவர்களாகவும் பணிபுரிபவர்களாகவும் மாற்றியமைத் துள்ளார். தம்முடன் பணியாற்றிய ஆசிரியர்கள், தமக்கு உதவிய ஊர்ப்பெரியவர்கள், தம்மிடம் படித்த மாணவர்கள் குறித்து இவர் நினைவிலிருந்து எழுதியுள்ள செய்திகள் தமிழகத்துக் கல்வி முறையை அறிந்துகொள்ள உதவும் ஆவணச் சான்றுகளாக உள்ளன. பள்ளிகளுக்கு உரிய கட்டடங்கள் கட்டியது, மின் இணைப்புப் பெற்றது, சாலை வசதிகளை மேம்படுத்தியது என்று கல்விப்புலத்துக்கு அப்பால் செய்துள்ள பணிகள் இவரைத் தொழுது வணங்கும்படிச் செய்கின்றது. 

தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம், இந்தித் திணிப்பு, காமராசரின் கல்விப்புரட்சி, குறித்த பல செய்திகளையும் புலவர் தில்லான் பதிவுசெய்துள்ளார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், அருட்கவி அரங்க. சீனிவாசன், தமிழண்ணல் முதலான அறிஞர் பெருமக்களுடன் தமக்கிருந்த தொடர்பினையும் வாழ்க்கைத் தடம் நூலில் புலவர் துரை. தில்லான் பதிவுசெய்துள்ளார். 

பாவாணர் பெயர்த்தியின் வறுமையறிந்து உதவியமை 

மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் மகன்வழிப் பெயர்த்தி பரிபூரணம் அவர்கள் வறுமையில் வாழ்வதைக் குமுதம் இதழ்(17.8.2005) வாயிலாக அறிந்து தம் ஆசிரியர் இயக்கம் சார்ந்த நண்பர்களின் துணையுடன் 27,500 உருபாவினை(09.10.2005) வழங்கியமை இவரின் ஈர உள்ளத்துக்குச் சான்றாகும்.(வாழ்க்கைத் தடம், பக்கம் 214). 

தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தொடர்பு 

புலவர் துரை. தில்லான் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு முதன்மைப் பொறுப்புகளை ஏற்றுக் கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். மாநிலத் தேர்வுச் செயலராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர்(1988-1994) கழகத்தின் சார்பில் வெளிவந்த “நமது தமிழாசிரியர்” திங்களிதழின் பொறுப்பாசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ்நாட்டு அரசின் பாடநூல் குழுவில் பத்தாம் வகுப்புக்கு உரிய பாட நூல் உருவாக்கும் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய பட்டறிவு உடையவர். 

ஆசிரியர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் 

புலவர் துரை. தில்லான் தாமே முயன்று படித்துப் பெரும்புலமை பெற்றவர். அதனால் தம்மைப் போல் பலரும் தமிழ் படிப்பதற்கு உரிய வகுப்புகளை நடத்திப் பலரைத் தமிழாசிரியராக மாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இலக்கணத்தை மிக எளிமையாக மக்கள் வழக்கில் உள்ள உதாரணங்களைக் காட்டி விளக்குபவர். எனவே இவரின் பணிகளைப் பல்வேறு அரசு அமைப்புகள் பயன்படுத்திக்கொண்டன. பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு இலக்கணப்பாடம் நடத்தியவர். தமிழ் வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் சமத்துவ முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து உழைத்து வருபவர். 92 அகவையிலும் சின்னாளப்பட்டியில் இருந்தபடி தமிழ்ப்பணிகளிலும் அறப்பணிகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு வாழ்ந்து வருபவர். 

புலவர் துரை. தில்லான் பெற்ற சிறப்புகளும் விருதுகளும் 

துரை. தில்லானின் தமிழ்ப்பணிகளையும் கல்விப்பணிகளையும் போற்றி அரசும் அமைப்புகளும் பல்வேறு சிறப்புகளைச் செய்துள்ளன. அவற்றுள் சில: 

1.   தமிழ்ச்செம்மல் விருது, தமிழ்நாடு அரசு, 21.12. 2022

2.   நல்லாசிரியர் விருது, தமிழ்நாடு அரசு, 1985

3.   இலக்கணச் செம்மல், திரு.வி.க. மன்றம், கரூர்

4.   இலக்கணக் குரிசில், திருக்குறள் மாமணி, தமிழாசிரியர் கழகம்

5.   செம்மொழிச் செம்மல், திண்டுக்கல் தமிழ்ச்சங்கம் 

புலவர் துரை. தில்லானின் தமிழ்க்கொடை 

1.   குழந்தைப் பாடல்கள்

2.   ஒரு நூல் தூது செல்கிறது

3.   இலக்கணத் தடம் – எழுத்து

4.   இலக்கணத் தடம் – சொல்லதிகாரம்,2016

5.   இலக்கணத் தடம் – பொருள்

6.   இலக்கணத் தடம் – யாப்பு, 2023

7.   வள்ளலார் இலக்கண மாண்பு

8.   வள்ளலாரின் விரிவுரைத் திறன்

9.   வாழ்க்கைத் தடம், 2021

 


 


 


  

சனி, 29 நவம்பர், 2025

புலவர் பெ. கறுப்பண்ணன்

 

புலவர் பெகறுப்பண்ணன் 

[புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர்.  நடையனூர் அரங்கசாமி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் இயற்றியுள்ள தொல்காப்பியம் - திருக்குறள் ஒப்பாய்வு நூல் அரிய ஆராய்ச்சி நூலாகும். இலக்கியப் பொழிவுகள் ஆற்றுவதில் ஈடுபாடுகொண்ட இவர் கண்ணர்குல வரலாறு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.] 

பெ. கறுப்பண்ணன் அவர்கள் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை அடுத்துள்ள மோளையாண்டிபட்டி என்னும் சிற்றூரில் உழவர்குடியில்  பிறந்து, வாழ்ந்த சி. பெரியசாமி, பொன்னம்மாள் ஆகியோரின் மகனாக 26.04.1945 இல் பிறந்தவர். 

பெ. கறுப்பண்ணன்  மோளையாண்டிபட்டியில் அமைந்துள்ள ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்.  அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றவர். ஒரத்தநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் - 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர். 

பெ. கறுப்பண்ணன் திருவையாறு அரசர் கல்லூரியில் 1963 முதல் 1967 வரை வித்துவான் வகுப்பில் பயின்றவர். அதுபொழுது அங்குப் பணியாற்றிய தமிழ்நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களின் அன்புக்கு உரிய மாணவராக விளங்கியவர். அவர் வழங்கிய ஆங்கிலச் சான்றிதழைத் தம் வாழ்வின் பெறற்கரும் செல்வமாகப் போற்றி வருபவர். சென்னை, சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி பெற்று, கரூர் மாவட்டம் காவிரியின் தென்கரையின்பால் உள்ள நடையனூர் அரங்கசாமி உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராக 1968 இல் பணியைத் தொடங்கி, 2002(மார்ச்சு) ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றவர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் 1971 ஆம் ஆண்டு மா. காளியம்மாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். மா. காளியம்மாள் அவர்களும் ஆசிரியர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இல்லறப் பயனாய் மருத்துவர் க. கண்ணன், மருத்துவர் க. கவிதா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இம்மருத்துவர்கள் இருவரும் கரூரிலும் கொடுமுடியிலும் மருத்துவப் பணியாற்றி வருகின்றனர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் பணியில் இருந்தவாறு சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வெழுதித் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று கல்வியியல் பட்டம் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் கரூர் மாவட்டத் தலைவராகப் பணியாற்றியவர். இலக்கியச் சொற்பொழிவாற்றியும் தமிழில் நூல்களைப் படைத்தும் தமிழ்த்தொண்டாற்றி வருபவர். 

இவர் எழுதியுள்ள தொல்காப்பியம் – திருக்குறள் ஒப்பாய்வு என்னும் நூல் தமிழாய்வு உலகில் குறிப்பிடத்தக்க நூலாக வெளிவர உள்ளது. தொல்காப்பியக் கருத்துகள் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதைத் தம் புலமைநலம் தோன்ற ஒப்பிட்டுக் காட்டி, புலவர் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

தமிழின் வேர்கள் என்ற இவர்தம் நூல் தமிழுக்கு ஆக்கமான நூலாகும். தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, எழுத்தின் தோற்றம், பெயர், சார்பெழுத்துகள் ஓர் ஆய்வு, எழுத்துகளின் பிறப்பு, முறை, உரு – வரிவடிவம், உயிர்மெய், புணர்ச்சி முதலான 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. இந்நூலில் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் இலக்கண ஈடுபாடு சிறப்புற்று விளங்குவதை அறியலாம். 

பெ.கறுப்பண்ணன் அவர்களுக்கு இலக்கணச் செம்மல் என்னும் விருதினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 19 ஆம் பட்டத்தின் நூற்றாண்டு விழா கருவூரில் நடைபெற்றபொழுது அறிஞர்களால் வழங்கப்பெற்றுப் பாராட்டப்பெற்றவர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் தமிழ்க்கொடைகள்: 

1.   வாழ்த்தும் வாழ்வும் நேர்நிறையில் வாழ்த்துக. சங்கம் – கண்ணதாசன் வரை ஆய்வு

2.   கற்புக் காண்டம்

3.   கண்ணர்குல வரலாறு

4.   வருகைப் பருவம் – கலிவிருத்தம், காவடிப்பாடல். ஏடு பதிப்பு

5. திருக்குறள் – ஒருவரி தொகுப்புரை : 1330 குறளுக்கும் ஒருவரியில் இசைப்பா. அதிகாரக் கட்டுரைகள்

6. கொங்கு மங்கைக்கோர் மங்கல வாழ்த்து: ஆய்வு நூல்; தங்கைக்கிணைச்சீர், தாய்க்கு எழில் திங்கள் சீர், மனைவிக்கு மணச்சீர், மகளுக்குத் திரட்டி சீர், அருமை அய்யனின் சடங்கு.

7.   தமிழின் வேர்கள் தமிழ் எழுத்துகள் குறித்த ஆய்வு நூல். (2022)

8.   கறுப்புச்சாமி – வெண்பா மாலை – முன்னோர் வழிபாடு (வெளியீடு:2024 )

9.   தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு


தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையரின் சான்று (1967)