நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

இருவர் முயன்று வெளியிட்டிருக்கும் இணைய ஆற்றுப்படை - பேராசிரியர் த. பழமலை

 



அடுத்தது காட்டும் பளிங்கு. கடுத்தது காட்டும் முகம். அடுத்ததையும் கடுத்ததையும் அறிந்துகொள்ள உதவும் கருவியைப் பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார்

செய்தித்தொடர்பு என்பதுதான் அறிவு. மாந்தர் இதற்காகவே ஒலிவடிவிலான சொற்களையும், வரிவடிவிலான எழுத்துகளையும் கண்டுபிடித் திருக்கிறார்கள். 

தமிழர்கள், சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே செய்திப் பரிமாற்றத்திற்காக ஓவியங்களையும் எழுத்துகளையும் பயன்படுத்தியவர்கள். 

செய்தித்தொடர்பு என்பதுதான் முன்னேற்றம். கருத்துப் பரிமாற்றமே நாகரிக வளர்ச்சி. 

தமிழ்மொழியில் பழங்காலப் பாடல்களான பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை வகையிலானவை. ஆறு .- வழி; ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல். அதாவது ஒன்றைப் பற்றி ஒருவருக்குத் தெரியப்படுத்தல். 

தூது என்பதும் செய்திப் பரிமாற்றமே. அதியமானுக்காக ஔவையார் தகடூரிலிருந்து காஞ்சிக்குத் தூது போயிருக்கிறார். கால்வலிக்க நடந்திருப்பார்!. 

ஆள் உதவி இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? சத்திமுற்றப்புலவர் செங்கால் நாரையிடம் செய்தி சொல்லி அனுப்புகிறார். 

இன்னும் தனிப்பட்ட செய்திகளைப் பரிமாறிக்கொள்ளப் பாங்கன், பாங்கி – என அல்லாமல், பறவை, விலங்கு எனத் தேடியிருக்கிறார்கள். 

தமிழில் “தமிழ்விடு தூது” குறிப்பிடத்தக்கது. வடமொழியில் “சந்தேசம்” என்னும் தூது இலக்கியத்தில் காளிதாசரின் “மேக சந்தேசம்” பெயர் பெற்றது. 

தமிழர்கள் விருந்து - என்று சொல்லிப் புதுமையை வரவேற்பவர்கள். “புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்” என்றார் மகாகவி கம்பர். 

தூது, அஞ்சல், தொலைபேசி என இருந்த காலம் போய்க் கணினி, அலைபேசி என வந்துவிட்டன. இன்று இவற்றை வரவேற்பதும் அறிமுகப்படுத்திக்கொள்வதும் நவீன வாழ்க்கைக்கு இன்றியமையாதன ஆகிவிட்டன. 

இந்தத் துறையின் தேவை குறித்தும், இத்துறையின் வளர்ச்சி குறித்தும், இத்துறையில் நேற்றும் இன்றும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் குறித்தும் ஒரு சமூக அக்கறையுடன் இயற்றப்பட்டிருக்கும் அரிய நூல்தான் இணைய ஆற்றுப்படை. இதனை யாத்தளித்திருப்பவர் புதுவைப் பேராசிரியர், உலகத் தொல்காப்பிய மன்றம் கண்டவர் முனைவர் மு.இளங்கோவன் ஆவார். 

இளங்கோவனார் பழமைக்குப் பழமையானவர். புதுமைக்குப் புதுமையானவர். 

நாசா விண்வெளி அறிவியலறிஞர் முனைவர் நாக. கணேசன் அவர்கள் உ.வே.சாவின் மாணவரான பேராசிரியர் கு.அருணாசலக் கவுண்டரின் உறவினர். பொள்ளாச்சி. 

இந்தக் கல்விப் பின்புலம் உள்ள இவர்கள் இந்த நூலை வெளியிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகின் நன்றி பாராட்டலுக்கு உரியவர்கள் ஆகியிருக்கிறார்கள். நன்றி அறிவோம். 

ஆற்றுப்படை நூல்களுள் அதிகமான அடிகளை உடையது கூத்தராற்றுப்படை. 583 அடிகள் கொண்டது. இந்த இணைய ஆற்றுப்படை 563 அடிகள். 

பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கூகுள் நிறுவனத்தில் வெற்றிக்கொடி நாட்டிய மதுரை சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களையும் ஈழத்தமிழர்களையும் கவனப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் செயமோகன், சுசாதா ஆகியோரையும் மறக்கவில்லை. சுரதா.காம்(ஊடகத் தொகுதி) குறித்த குறிப்பு உள்ளது.

மெய்தான். முனைவர்கள் மு.ஆனந்தகிருட்டினன், வா.செ. குழந்தைசாமி, அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரின் அன்புத் தழுவலுக்கும் அரிய வாழ்த்துகளுக்கும் உரியவர் இந்நூலை இயற்றிய மு.இளங்கோவன் மட்டுமல்லர். இந்நூலை வற்புறுத்தி எழுதவைத்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ள முனைவர் நாக. கணேசனும் ஆவார்.

 

விழுப்புரம்,

07.08.2024


கருத்துகள் இல்லை: