நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 ஆகஸ்ட், 2024

ஒளிப்படக் கலைஞர் கோ. இரமேஷ்குமார்…

 

கோ. இரமேஷ்குமார் 

 புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்(IFP) குறிப்பிடத்தக்க ஆய்வு நிறுவனமாக வளர்ந்து வந்துள்ளது. உலக அளவில் ஆய்வு அறிஞர்கள் பலர் இந்த நிறுவனத்திற்கு வருகைபுரிந்து, தங்கள் அறிவாராய்ச்சிக்கு வேண்டிய ஆய்வு வளங்களைப் பெற்றுச் செல்கின்றனர். நூலகம், ஓலைச்சுவடிக் காப்பகம், புகைப்படக் காப்பகம் என்று விரிந்து பரந்திருக்கும் இந்த நிறுவனத்தின் ஆவணத் தொகுப்புகளை இளம் ஆய்வாளர்கள் முதல் மூத்த ஆய்வறிஞர்கள் வரை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். 

 இந்த நிறுவனத்தில் கடந்த 27 ஆண்டுகளாக மூத்த புகைப்படக் கலைஞராக இருந்து, அரிய திட்டப்பணிகள் பலவற்றில் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றிவரும் கோ. இரமேஷ்குமார் அவர்களின் பணிகளைப் பலவாண்டுகளாக அறிவேன். 

 தமிழகத்தின் கோவில்கள், குகைகள், அரண்மனைகள், மாளிகைகள், வீடுகள், நூலகங்கள் என்று பல இடங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் மூலிகை ஓவியங்கள், அரிய புகைப்படங்கள், செப்பேடுகள், குறிப்புச் சுவடிகள், பத்திரங்கள், ஒப்பந்த அறிக்கைகள், கல்வெட்டுகள், கோவில் சிலைகள், சிற்பங்கள், கலைப்பொருட்களைப் படமாக்கிப் பாதுகாக்கும் அரிய பணியைச் செய்து வருபவர். இவர்தம் பட்டறிவுகளைப் பலமுறை நேரில் கேட்டு வியந்துள்ளேன். எம் நிறுவனத்தில் சில பயிலரங்குகளுக்கு அழைத்து, மாணவர்களுக்கு இவர்தம் பணிகளை அறிமுகம் செய்துள்ளேன். சலிப்பின்றி உழைக்கும் இத்தகு ஆவணத் தொகுப்பாளர்கள் நம் நன்றிக்கும் மதிப்புக்கும் உரியவர்கள். 

 கோ. இரமேஷ்குமார் அவர்கள் சென்னையில் 08.03.1970 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் கோதண்டபாணி, விசயலெட்சுமி ஆவர். 1987 இல் மேல்நிலைக் கல்வி முடித்தவர். பின்னர் இயற்பியல் துறையில் தம் இளம் அறிவியல் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். இரயில்வே துறையில் பணியாற்றியவர். புகைப்படத் தொழிலில் தமக்கு இருந்த ஆர்வம் காரணமாக இரயில்வே பணியை விடுத்து, சில புகைப்படக் கலை வல்லுநர்களிடம் பயிற்சி பெற்று 1997 இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனப் பணியில் இணைந்தவர். பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி, புதுவித அனுபவங்களைப் பெற்றவர். ஐரோப்பிய அறிஞர்களுடனும், இந்திய அறிஞர்களுடனும் இணைந்து, பல்வேறு ஆவணத்தொகுப்புப் பணிகளைச் செய்தவர். 

 இவரை நேர்காணல் செய்து, இவர்தம் வாய்மொழியாகப்  பலவாண்டு உழைப்பு வரலாற்றை அறிந்துகொண்ட நான், உலகத் தமிழர்கள் கேட்டு மகிழ இணையத்தில் பதிகின்றேன். வழக்கம்போல் எம் பணிகளுக்கு ஊக்கம் நல்கும் தமிழுலகம் இந்த முயற்சியையும் போற்றும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

கோ.இரமேஷ்குமார், மு.இளங்கோவன்

நேர்காணலைப் பார்த்து மகிழ்வதற்குரிய இணைப்பு

கருத்துகள் இல்லை: