நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 24 ஆகஸ்ட், 2022

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு (21.08.2022)

 

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு

  தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கில் சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள சந்திர மகால் அரங்கில் 21.08.2022(ஞாயிறு) முற்பகல் 11 மணியளவில் தொடங்கியது

 பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.  தொல்காப்பியத்தின் முதன்மையையும் தொல்காப்பியத்தைத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதன் தேவையையும் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் எடுத்துரைத்தார். தொல்காப்பியத்தின் உள்ளடக்கச் செய்திகளைப் பேராசிரியர் சுப.தி. அவர்கள் விளக்கியமை அனைவருக்கும் தொல்காப்பியத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கியது. 

 நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்களைப் பொறியாளர் வி.காமராசு அவர்கள்  வரவேற்று உரையாற்றினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைபுரிந்த முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினையும் அமைப்பினையும் உள்ளடக்கத்தையும் எடுத்துரைத்து உரையாற்றினார். மேலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இதுவரை செய்துள்ள பணிகளை நினைவுகூர்ந்தார். தொல்காப்பிய அறிஞர்களின் பேச்சுகள் ஒளிவடிவில் பாதுகாக்கும் முயற்சி குறித்தும், தொல்காப்பியத்துக்குத் தனி இணையதளம் உருவாக்கியுள்ளமை குறித்தும், தொல்காப்பிய முத்துகளை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் எடுத்துரைத்து, அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்குத் துணைநிற்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 

  தொல்காபியம் – கைக்கிளை குறித்து நூலெழுதிய புலவர் முத்துக்கிருட்டினன் அவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார். 

 கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, செம்மொழி ஆசிரியர் இலியாஸ், பொறியாளர் மூர்த்தி, புரவலர் மாமன்னன், தங்க. வேல்முருகன், மோகன்ராசு உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தனர். 

 நிகழ்வில் பங்கேற்றத் தொல்காப்பிய அன்பர்கள் அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்கு உரிய பல்வேறு நெறிகாட்டல்களை வழங்கினர். இந்த நிகழ்வில் 19 அன்பர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

 பொறியாளர் அ. இளங்கோவன் அவர்கள் நன்றியுரை கூறினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்புக்கான அனைத்து முயற்சிகளையும் வி. காமராசு அவர்களும் அவர்களின் வாழ்விணையர் நித்யா மணி அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 


 

பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்


திரு. மாமன்னன் சிறப்பிக்கப்படுதல்


திரு. பிச்சினிக்காடு இளங்கோ உரை

கருத்துகள் இல்லை: