நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 ஜனவரி, 2021

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைவர் பூ. நாகதேவன் மறைவு!

 

                                                                    பூ. நாகதேவன்

    இலண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தலைவரும், தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, திரு. பூ. நாகதேவன் அவர்கள் தம் எழுபதாம் அகவையில் 25.01.2021 திங்கள்கிழமை அன்று, இலண்டனில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருங்கவலையுற்றேன். இலண்டனுக்கு நான் செல்லும்பொழுதெல்லாம்  அன்புடன் வரவேற்று, விருந்தளித்தவர். அவர்கள் நடத்தும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா மலருக்கு உரிய வாழ்த்துகளை என்னிடம் பெற்று, அச்சிட்டு மகிழ்வதை வழக்கமாகக் கொண்டவர். எம் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவினை இலண்டனில் முன்னின்று நடத்தியவர். என் அருமை நண்பர் பொறியாளர் அரிசு அவர்களும் அண்ணன் அன்பழகனார் அவர்களும் நாகதேவனாருடன் இணைந்து செய்துவந்த தமிழ்ப்பணிகள் யாவும் என் மனக்கண்ணில் நிற்கின்றன.

   பூ. நாகதேவன் அவர்கள் தமிழகத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தவர்.  1979 இல் இலண்டன் சென்றவர். அங்குத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகவும், தலமையாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் வழியாகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்து, அரும்பெரும் பணிகளைச் செய்து வந்தவர்.

  மொழிப்பற்றும், இன உணர்வும் கொண்ட பூ. நாகதேவனார் தமிழகத்திலிருந்து இலண்டனுக்குச் செல்லும் அறிஞர்களை அன்புடன் வரவேற்று, விருந்தோம்புவதை வழக்கமாகக் கொண்டவர். முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிக்கும் வகையில் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியைக் கண்ணுங்கருத்துமாகப் போற்றி நடத்தியவர்.

  இலண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் தமிழ்த்தொண்டாற்றிய பூ. நாகதேவனாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர். திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தமிழர் முன்னேற்றக்கழகத்தின் தோழர்கள், தமிழார்வலர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை: