நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 21 ஜனவரி, 2021

புலவர் இ. திருநாவலன் மறைவு!

 


புலவர் இ. திருநாவலன்

   புதுச்சேரியின் புகழ்பெற்ற தமிழாசிரியர் புலவர் . திருநாவலன் அவர்கள் தம் எண்பதாம் அகவையில் நேற்று (20.01.2021) மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். 1992 இல் நான் புதுச்சேரிக்குக் கல்வி பயில்வதற்கு வந்த நாள் முதல் புலவர் ஐயா அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளேன். ஒரு நூல்வெளியீட்டு விழாவில் தொடங்கிய எங்களின் தொடர்பு வளர்பிறைபோல் வளர்ந்து முழுமதிபோல் முழுமைபெற்றது. 2005 இல் புதுவை அரசுப் பணி எனக்குக் கிடைத்ததும் முதல் செய்தியாக ஐயாவுக்குதான் தெரிவித்தேன். அவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் புதுவையில் நான் வேர்பிடித்து நிற்பதற்குச் செய்த உதவிகளை எழுமை எழுபிறப்பும் நினைவேன். தம் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைந்து, எம் மீது அன்பு பாராட்டி, எம்மின் இன்ப, துன்பங்களில் துணைநின்ற பெருமகனாரின் நினைவு என்னை என்றும் வழிநடத்தும். என் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் நெறிகாட்டி வளர்த்த, புலவர் ஐயாவின் மறைவு அவர்தம் குடும்பத்தார்க்கும், பொதுவாழ்வில் ஆர்வம்கொண்ட எம் போல்வார்க்கும் பேரிழப்பாகும்.

  புதுச்சேரியின் கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் புலவர் இ. திருநாவலன் 28.06.1940 அன்று பிறந்தவர். பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிந்தவர். புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப் பணிகள் செய்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர். தமிழ் இலக்கியங்களில் பெரும்புலமை பெற்ற புலவர் அவர்கள் நினைவாற்றலில் பெருந்திறன் பெற்றவர். பள்ளியின் வகுப்பறைகளுக்கு வெளியிலும் இவர் பணி நீண்டிருந்தது.

   தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார். ஆனந்து அச்சகம் நிறுவியர். ஆனந்து மருந்தகம் கண்டவர்.

   புலவர் இ. திருநாவலன் அவர்களின் பெருமைமிகு வாழ்வினை என்றும் நினைவுகூர்வோம்!

 

கருத்துகள் இல்லை: