நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 8 ஆகஸ்ட், 2020

ச. பவானந்தம் பிள்ளை

 ச. பவானந்தம் பிள்ளை
(1876-1932)

 தஞ்சை, கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை, சந்திரமதி ஆகியோரின் மகனாக 1876 - இல் பிறந்தவர். சரவண பவானந்தம் பிள்ளை என்பது இவரின் இயற்பெயராகும். இளமைக் கல்விக்குப் பிறகு சட்டம் படிக்க இங்கிலாந்து செல்ல விரும்பிய இவரைத் தாய் தடுத்தமையால் காவல்துறைப் பணியில் இணைந்தவர் (1899). 1908 இல் உதவி ஆணையராகவும் (A. C), 1918 இல் காவல்துறையின் சென்னைத் துணை ஆணையராகவும் (D. C.) பணியாற்றியவர். இவர்தம் கடமையுணர்வையும், ஒழுங்கினையும் போற்றி, ஆங்கிலவரசு இவருக்குத் "திவான் பகதூர்" என்ற பட்டத்தை வழங்கியது. தமிழறிவுடன் ஆங்கில அறிவும் பெற்றவர். வேப்பேரியில் தௌடன் பேருந்து நிலையம் அருகில் பவானந்தர் கழகம் (Bavanantham Academy) உருவாக்கியவர். இந்நூலகத்தில் நாற்பதாண்டுகளாக இவர் சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன. சட்டத் தேர்வுக்குப் பயன்படும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். 

 பவானந்தர் கழகம் சார்பில் பேரகத்திய விருத்தி, தொல்காப்பியம் – பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை, யாப்ருங்கல விருத்தியுரை, பழைய உரைகளைத் தழுவி நன்னூலுக்கு  உரை, வீரசோழியம், நம்பியகப்பொருள், இறையனார் களவியல் உரை ஆகிய நூல்கள் தரமான அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் பவானந்தருக்கு உற்றுழி உதவும் அறிஞர் குழு துணைசெய்துள்ளமையை இங்கு நினைத்தல் தகும். கா.ரா.கோவிந்தராச முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை உள்ளிட்டோர் இம்முயற்சியில் துணைநின்றுள்ளனர். நாடகவியல் விளக்கம், பரதசாத்திர விளக்கம், வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம், நீதிக் கவித்திரட்டு முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அரிச்சந்திரன், காணாமற் போன கணையாழி, பாதுகாப் பட்டாபிசேகம், சகுந்தலை உள்ளிட்ட நூல்களும் இவர்தம் படைப்புகள் என்று அறியமுடிகின்றது (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி:12, பக்கம் 191). தமிழ் ஆங்கில அகராதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவர் 20.05.1932 இல் இயற்கை எய்தினார்.

 தமிழுக்குத் தம் பொருளை வழங்கிச் சென்ற வள்ளலைப் போற்றுவோம்!

 

கருத்துகள் இல்லை: