நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!


துணைவேந்தர் வே. முருகேசன்(நடுவில்), பதிவாளர் என் கிருஷ்ணமோகன், புலமுதன்மையர் க.முத்துராமன், மு.இளங்கோவன்,  நா. கிரிஷ்குமார்

ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் புலமுதன்மையர் க. முத்துராமன், அருகில் பேராசிரியர்கள் தி. பாலச்சந்திரன், நா.கிரிஷ்குமார், ஆர்.கே.குமார், தி. அருட்செல்வி

          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை சார்பில் யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழிசைப் பணியையும் விளக்கும் ஆவணப்படம், லிப்ரா அரங்கில்  12.09.2019 அன்று வெளியிடப்பட்டது.


     அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் வே. முருகேசன்     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, பதிவாளர் முனைவர் என். கிருஷ்ணமோகன் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமேயேற்ற துணைவேந்தர் வே. முருகேசன் பின்வருமாறு உரைநிகழ்த்தினார். அண்ணாமலை அரசரின் அழைப்பின்பேரில் 1931 முதல் 1933 வரை விபுலாநந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இசைத்துறைப் பேராசிரியர்களுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது விவேகானந்தரின் ஞானதீபம், கர்மயோகம், இராசயோகம், பதஞ்சலி யோகசூத்திரம் முதலான நூல்களை மொழி பெயர்த்தவர். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர். பாரதியாரின் கவிதையாற்றலை முதன்முதல் அடையாளம் கண்டு போற்றியவர் விபுலாநந்த அடிகளார். நேர்மையும், கடமையுணர்வும் நிறைந்த விபுலாநந்த அடிகளார் மாலைநேரத்தில் அருகில் உள்ள திருவேட்களம் பகுதியில் சமூகப்பணி புரிந்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது என்று விபுலாநந்தரின் அண்ணாமலை நகர் வாழ்க்கையை அறிமுகம் செய்தார்.

     நுண்கலைப்புல  முதன்மையர் முனைவர் . முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார்.

  நிகழ்வில் பேராசிரியர் நா. கிரிஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.கே. குமார் முன்னிலையுரை வழங்கினார். பேராசிரியர் தி. அருட்செல்வி அறிமுகவுரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநரும் புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியருமான முனைவர். மு.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கிய  தம்  அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பேராசிரியர் தி. பாலச்சந்தர் நன்றியுரை வழங்கினார்

நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக விபுலாநந்த அடிகளார்  ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழிசை ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்இந்த நிகழ்ச்சியை இசைத்துறைப் பேராசிரியர்கள் முனைவர். நா. கிரீஷ்குமார், தி. பாலச்சந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
விபுலாநந்த அடிகளார் படத்துக்கு மலர் வணக்கம்

இசைப்பேராசிரியர்களும் மாணவர்களும்

புலமுதன்மையர் க. முத்துராமன் வாழ்த்துரை

முனைவர் நா. கிரிஷ்குமார் வரவேற்புரை


இசைத்துறைத் தலைவர் ஆர். கே.குமார் வாழ்த்துரை

மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து

கருத்துகள் இல்லை: