நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 மே, 2018

கிண்டற்பித்தன் கவிதை

( பழைய பதிவு. இன்று மீள்பதிவானது)

நேற்று நான் பேராசிரியர் தங்கப்பா அவர்களை ஒருமொழி பெயர்ப்பு தொடர்பாகச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு பேராசிரியர் அவர்களின் பாட்டுகள் குறித்துத் திரும்பியது. வெளிவராத அவர்களின் பாடல்கள் பற்றி உரையாடல் நகர்ந்தது. எத்தனையோ சமூக நடப்புப் பாடல்களை அவர்கள் வரைந்து சில இதழ்களில் வெளியிட்டிருந்தாலும் முறையாகத் தொகுத்து வெளியிடவில்லை. அப்பொழுது அவர்களின் செல்பேசி குறித்து எழுதிய பாடலை நான் நினைவுகூர்ந்தேன். மேலும் பனிப்பாறை நுனிகளில் சில பாடல்கள் எனக்குப் புரியிவில்லை என்றேன். ஓய்வுநேரத்தில் விளக்குவதாகச் சொன்னார்கள்.

அப்பொழுது கிண்டற்பித்தன் என்பவர் எழுதிய பாடலை நீங்கள் படித்தது உண்டா? என்று பேராசிரியர் தங்கப்பா அவர்கள் வினவினார்கள். இல்லை என்றேன். ஒளியச்சில் இருந்த அந்தப் பாடலைக் காட்டினார்கள். மகிழ்ந்தேன். இன்றும் மரபு மாறாமல் பாடல் எழுதுபவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

 இருபதாம் நூற்றாண்டு அவலங்களை மரபில் எழுதுவோர் குறைந்துவரும்
சூழலில் கிண்டற்பித்தனின் பாடல் எனக்கு மகிழ்ச்சி தந்தது. மரபுப்பாடல் ஆர்வலர்களுக்கு என்பக்கத்தில் அந்தப் பாடலைவைக்கின்றேன். இது போன்ற மரபுப் பாடல்கள் இருப்பின் அனுப்பி வையுங்கள். மரபுக்கவிதைக்கு நீர் ஊற்றி வளர்ப்போம். உண்மையான மரபுப் பாவலர்களுக்கு ஊக்கம் தருவோம். படித்து மகிழுங்கள்.

என்னடா பிழைப்பு?

என்னடா பிழைப்புப் பிழைக்கின்றீர்கள்?
நக்கிப் பிழைக்கும் நாய்ப்பிழைப்பு!
படித்த பட்டமும் பதவியும் எதற்கடா?
அடுத்தவன் காலை நக்கிப் பிழைக்கவா?

ஆண்டான் மார்கள்தம் அந்தப்புரங்களில்
களியாட்டங்கள் ஆடிக் களைத்தபின்
விளையாட் டாக வீசி எறியும்
எச்சிலுக்காக, இப்படி வாசலில்
காத்துக் கிடந்து அவர்கண் எதிர்ப்படுகையில்
குழைந்து பல்இளித்தும்,கூழைக்கும்பிடு
போட்டு நின்று புழுப்போல் நெளிந்தும்
பெருமிதம்விட்டுப் பிழைக்கின்றீர்களே!

வயிறு வளர்க்க வழியா இல்லை?

வண்டியில் காய்கறி வைத்துத் தள்ளலாம்.
நண்டுபிடித்துக் கொண்டுபோய் விற்கலாம்.
காட்டுச் சுள்ளி பொறுக்கி வந்து
வீட்டுக்கு வீடு விற்றுப் பிழைக்கலாம்.
கோயில்முன்னே குந்தியிருந்து
பூ,பழம் தேங்காய் போட்டு விற்கலாம்.

கிழமைக்கு ஒருநாள் கீழூர்ச் சந்தையில்
கருவாட்டுக்கடை வைத்தால்கூட
அன்றாட வாழ்க்கை அழகாய் நடக்குமே!

எவன்பின் போயும் இளித்திட வேண்டா.

தெருவோரத்தில் செருப்புத் தைக்கலாம்.
சாய்க்கடை கூட அள்ளலாம். தப்பில்லை.
சட்டையில்தானே கொஞ்சம் கறைபடும்.
உள்ளம் அழுக்குப்படாமல் இருக்குமே!

இதையெல்லாம் விட்டுநீர்
அதிகாரச்சேற்றில் அழுந்தி அழுந்தித்
தினவெடுத்துத் திரிபவனுக்கு
முதுகுசொறியப் போகின்றீர்களே!
வெட்கம் இல்லையா?

படம்பல காட்டிப் பதவிக்கு வந்தவன்
குடும்பமாய் அடிக்கும் கொள்ளை விருந்தில்
சதையை நன்றாய்ச் சப்பித் தின்றபின்
எறியும் எலும்புத் துண்டுக்கட்காக்
காலடி நாய்களாய்க் காத்துக் கிடக்கன்றீர்கள்!
இந்தப் பிழைப்பும் ஓர் பிழைப்பா?
எந்த நாட்டிலும் இதுபோல் இல்லையே!

பாடலாசிரியர்: கிண்டற்பித்தன்
நன்றி: புகழ்ச்செல்வி இதழ்

கருத்துகள் இல்லை: