நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 மே, 2018

தொல்காப்பியம் நூலுக்கு உரைவரைவோர் கவனத்திற்கு!




தொல்காப்பியம் நூலுக்கு அரும்பெறல் உரைகள் கிடைத்துள்ளன. இளம்பூரணர் தொடங்கி, அண்மைக்கால உரையாசிரியர்கள் வரை தமிழின் மரபு உணர்ந்து சிறப்பான உரைகளைப் பலரும் எழுதியுள்ளனர். தக்க உரைகளை வரவேற்றுப் போற்றிய தமிழர்கள், தகுதியற்ற உரைகளைக் கண்டித்துள்ளமையையும் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

அண்மையில் தமிழார்வலர் ஒருவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டுக்கும் உரைவரைந்து, நூலாக அச்சிட்டு, தமிழகம் முழுவதும் இலவயமாக அனுப்பி வருகின்றார். பொருளதிகாரத்திற்கும் உரைவரைந்து, விரைந்து வெளியிடும் நோக்கில் செயல்படுகின்றார். தமிழகத்துப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் இந்த நூல் வெளிவருவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன.

தொல்காப்பிய நூற்பாக்களில் இடம்பெறும் சொற்களை மனம்போன போக்கில் உடைத்துப் பொருள்கொண்டும் (எ.கா. ஆக்கம் = ஆக்+அம்= ஆக்கம்; திணை= த்+இணை= திணை; ), தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தாத வகையிலும் வெளிவந்துள்ள இந்த உரைநூல் கண்டிக்கத்தக்கது. இதற்குத் துணைபோகும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். அன்புகூர்ந்து தொல்காப்பியத்துக்கு உரைவரைய முற்படுவோர் மூல நூல்களையும் பழைய உரைகளையும் கற்ற பிறகு இந்த முயற்சியில் ஈடுபடுவது நலம் பயக்கும்.

சான்றுக்காகத் தொல்காப்பியம்-  பொருளதிகாரத்திற்குப் புதிய உரையாசிரியர் எழுதியுள்ள,  உரைக் குறிப்பின் இரண்டு பக்கத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: