நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

விபுலாநந்த அடிகளார் தடம் தேடியபொழுது...




     விபுலாநந்த அடிகளார் தமிழகத்தில் பல ஊர்களுக்குச் சென்று, பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். பல ஊர்களில் அவரின் சிறப்புரைகள் நடைபெற்றுள்ளன. பல நிறுவனங்களில் நற்பணிகளைத் தொடங்கிவைத்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் முழுமையாக இவை யாவும் தொகுக்கப்படாமல் போனமை நம் போகூழ் என்றே குறிப்பிட வேண்டும்.

     கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனுக்குப் பலமுறை விபுலாநந்த அடிகளார் வந்து சென்றுள்ளமையை அவர் எழுதிய கடிதக் குறிப்புகளில் அறிந்து, கோவைக்குச் சென்று மிஷன் சுவாமிகளுடன் உரையாடி விவரம் வேண்டினேன். மிஷனில் பழைய படங்கள் இருக்கும் என்று பலமுனைகளில் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விபுலாநந்த சுவாமிகள் கோவை மிஷனுக்குப் பலமுறை வந்துள்ளதை நான் தொடர்ந்து மிஷன் சுவாமிகளிடம் நினைவூட்டிய பிறகு விருந்தினர் விடுதியில் ஒரு கல்வெட்டில் விபுலாநந்த அடிகளார் பெயர் இருப்பதை சுவாமிகள் நினைவுகூர்ந்தார். அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபொழுது விபுலாநந்த அடிகளார் 1942 இல் விருந்தினர் விடுதியைத் திறந்துவைத்த ஒரு கல்வெட்டைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றேன்.

     கோவை மிஷன் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களும், விபுலாநந்த அடிகளாரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். (பின்னாளில் திருக்கொள்ளம்பூதூரில் யாழ்நூல் அரங்கேறியபொழுது அந்த வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்துகொண்டமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும்.) திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று 19.05.1942 இல் கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற விழாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை விபுலாநந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். கோவை மிஷனில் உள்ள விருந்தினர் விடுதிக் கல்வெட்டில், திருப்பூர் சு. சுப்பிரமணிய செட்டியார் பழனியம்மாள் விருந்தினர் விடுதி திரு. தி. சு. தண்டபாணி செட்டியார் அவர்களால் கட்டித் தரப்பட்டது. திரு. விபுலானந்த சுவாமிகளால் திறந்துவைக்கப்பட்டது. 19.5.42" என்று பதிக்கப்பட்டுள்ளது. விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய இதுபோன்ற சான்றுகள் பெரிதும் உதவும்.

கருத்துகள் இல்லை: