நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

‘சனதா’ சி. மாணிக்கம் மறைவு!



சிங்கார. மாணிக்கம்

எங்கள் குடும்ப நண்பரும், உள்கோட்டையில் சனதா மளிகை, சனதா அழகுப் பொருள் அங்காடி போன்ற நிறுவனங்களை நடத்தியவரும், தந்தை பெரியார் அவர்களுக்கு உள்கோட்டையில் சொந்தப் பொறுப்பில் சிலை நிறுவியவரும், குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களை அழைத்துவந்து, தனித்தமிழ் வகுப்புகள் நடைபெறுவதற்கு வழிகோலியவருமான அண்ணன் சிங்கார. மாணிக்கம் அவர்கள் 02.01.2016 இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உள்கோட்டைப் பகுதியில் எளியநிலை மாணவர்கள் பலர் படித்து மருத்துவர்கள், பொறியாளர்கள் என முன்னேறுவதற்கு நிதியுதவி செய்தவர் என்பதும், ஊர் முன்னேற்றத்திற்குத் தாமே சென்று பல்வேறு நற்பணிகள் செய்தவர் என்பதும் இவரின் சிறப்புகளாக அமையும்.

'சனதா' கட்சி தோற்றம் பெற்ற நாளில் இவர் மளிகைக் கடை திறந்ததால் அன்று முதல் சனதா மளிகை என்று இவர் கடைக்கும், இவருக்குச் 'சனதா' என்றும் பெயர் அமைந்தது. மற்றபடி இவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இறுதிவரை தந்தை பெரியார் கொள்கையுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்தவர்.

'சனதா' சி. மாணிக்கம் அவர்கள் யான் பதிப்பித்த விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூல் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தியவர். நான் முனைவர் பட்டம் பெறுவதைக் காண்பதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருகை தந்தவர். 


என் திருமணத்தைத் தந்தையார் நிலையில் நின்று நடத்தியவர். என் திருமணத்திற்கு வருகை தந்த பேராசிரியர்கள் தமிழண்ணல், இரா. இளவரசு, க. ப. அறவாணன், கதிர். தமிழ்வாணன் உள்ளிட்டவர்களை வரவேற்று விருந்தோம்பியவர். எங்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் இணைந்து நின்றவர். எங்களின் குடும்ப மூத்த உறுப்பினராக விளங்கிய அண்ணன் ‘சனதா’ சிங்கார. மாணிக்கம் அவர்களை இழந்து, கையற்று நிற்கின்றோம்!


சிங்கார. மாணிக்கம் அவர்களின் புகழ் இப்புவியில் நின்று நிலவ அவர் வழியில் நடப்போம்!

கருத்துகள் இல்லை: