நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 21 அக்டோபர், 2014

சங்க இலக்கியப் புதையலைத் தேடி....


ஊதுலை


செந்தீத் தொட்ட கருந்துளை


மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு 1981 இல் நடைபெற்றது. மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் பெரும் மக்கள்திரளின் முன்பாகப் பேசியபொழுது தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்கவில்லை என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். மொழிஞாயிறு பாவாணரைத் தொடர்ந்து பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் தமிழ்நாட்டின் அந்நாளைய முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் தமிழிசையின் மேன்மையை விளக்கிப் பேசினார். 

பன்னாட்டு அறிஞர்களும், தமிழகப் பெருமக்களும் கேட்டு மகிழத் தக்க வகையில் ப. சுந்தரேசனார் அவர்கள் இசையுடன் பாடித் தம் பேச்சை அமைத்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அனைவரும் அந்தப் பேச்சை ஆர்வமுடன் கேட்டதாக நண்பர்கள் வழியாகப் பின்னாளில் அறிந்துள்ளேன் (மாநாடு நடைபெற்றபொழுது நான் பத்தாம் வகுப்பு மாணவன்) ப.சு. அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய ஒலிநாடாவை அண்மையில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரும்பாணாற்றுப்படையில் இருந்து,

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,    
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை,   
உறிக் கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச் சுவல், 
மேம்பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்   
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட 
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி, 
ஒன்று அமர் உடுக்கை, கூழ்ஆர் இடையன்
கன்றுஅமர் நிரையொடு கானத்து அல்கி,  
அம்நுண் அவிர்புகை கமழ, கைம்முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச்   
செந்தீத் தொட்ட கருந் துளைக் குழலின்

என்ற பாடலடிகளைக் கேட்டபொழுது செந்தீத் தொட்ட கருந்துளைக் குழல் செய்யும் ஆயர்மகனின் திறம் மனக்கண்ணில் நிழலாடியது. புல்லாங்குழல் முறையாகச் செய்வது எவ்வாறு என்று இசையுலக நண்பர்களிடம் வினவியபொழுது ஆளுக்கொரு செய்திகளைச் சொன்னார்கள். தமிழகத்தில் குழல்செய்வது நெல்லையம்பேரூரில் என்று சிலர் குறிப்பிட்டனர். நாகை அருகில் மூங்கிலில் குழல் செய்வதாகவும் செய்திகள் கிடைத்தன.

பண்டைய சேரநாடான கேரளத்தில் புல்லாங்குழல் செய்யப்படுவதை அண்ணன் பேராசிரியர் வையம்பட்டி கோ. வீரக்குமரன் அவர்கள் தெரிவித்தார்கள். குழல்செய்யும் கலைஞருடன் பேசித் தொடர்பையும் ஏற்படுத்தினார்கள். கேரளா செல்லும் திட்டம் உறுதிப்பட்டது. நான் வெளியூர் செல்வதென்றால் ஒளிஓவியர்களுடன் இணைந்து செல்வது வழக்கம். வழக்கமாக என்னுடன் இணைந்து பணிபுரியும் ஒளி ஓவியர்கள் வேறு பணிகளில் இருந்தனர்.

புதியதாகத் தம்பி ஒருவர் நட்பானார். அவர் ஒளி ஓவியம் அறிந்த வல்லுநர். அவருடன் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் மகிழ்வுந்தில் புதுச்சேரியில் பகல் 12 மணிக்குப் புறப்பட்டேன். இடையில் ஆத்தூர், சேலம் ஆகிய ஊர்களைக் கடக்கும்பொழுது நண்பர்கள் இடைப்பட்டு உரையாடி வாழ்த்தி வழியனுப்பினர். இடைப்பட்ட ஊர்களில் மாட்டு மந்தைகள் உள்ளனவா என்று வினவியவண்ணம் சென்றோம். பார்வையில்பட்ட மாடுகள் யாவும் கலப்பாக இருந்தன. நாட்டுமாடுகள் பார்வைக்குப் படவில்லை. தமிழகம் கலப்பாக மாறிவருவது இயற்கைவழியாகவும் உறுதிப்பட்டது. புறவழிச் சாலையில் சென்றதால் எங்கள் வண்டி வேகமாகச் சென்றது. கோவையைக் கடந்ததும் பாலக்காடு வந்தது. பாலைக்காடு என்பது பாலக்காடு என்றானது என அருகிலிருந்த ஓட்டுநரிடம் கூறி, இடைப்பட்ட ஊர்களின் பெயர்கள் தமிழாக இருப்பதை எண்ணி எண்ணி வியந்தபடி சென்றேன். 

கேரளாவின் திருச்சூருக்கு (திருச்சிவப் பேரூர்) அருகில் உள்ள மண்ணுத்தி என்ற ஊருக்கு இரவு 9 மணியளவில் சென்று சேர்ந்தோம். அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்களும் அண்ணி திருவாட்டி. கண்ணகி வீரக்குமரன் அவர்களும் எங்களுக்கான சிறப்பு உணவுகளை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தனர். சில்லிட்ட தண்ணீரில் ஒரு குளியல் போட்டு இரவு உணவு உரையாடியபடி உண்டோம். உணவு வைத்தவர்களிடத்துத் தண்ணீர் வைக்கவில்லையே என்றேன். தண்ணீரை முதலில் குடித்தால் உணவைக் குறைவாக உண்பீர்கள் என்று தண்ணீர்வைப்பதைத் தவிர்த்தோம் என்று அண்ணன் கூறினார். அத்துடன் அவர்களின் பாட்டி வீட்டுக்கு வேலையாள் அமர்த்தும் கதையையும் இடையில் சொன்னார்கள். வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துவதற்கு முன்பாகப் புதியதாக வேலைக்குச் சேர்பவனுக்கு வயிரார உணவிடுவார்களாம். அதிகமாக உண்பவன் கள்ளங்கவடின்றி வேலைபார்ப்பானாம். குறைத்து உண்பவன் சரியாக வேலைபார்க்க மாட்டானாம். சரியாக உண்ணாதவன் உறவினனாக இருந்தாலும் பாட்டி வேலைதரமாட்டார்கள் என்ற கதையை அண்ணன் அவர்கள் சொல்லி முடித்தார். இரவு நெடுநாழிகைவரை  உரையாடி மகிழ்ந்தோம்.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது (1990) ஏற்பட்ட நட்பு அண்ணன் வீரக்குமரன் அவர்களின் நட்பு. வணிகவியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் இவர். எத்தியோப்பியா நாட்டில் பலவாண்டுகள் பணிசெய்துவிட்டு, அறிஞர்களை மதிக்கும் கேரளாவில் பல்கலைக்கழகப் பணியில் இணைந்தவர். கிழமைக்கு ஒருமுறையேனும் செல்பேசியில் உரையாடி இப்பொழுதும் என்னைக் கேரளப்பகுதிக்கு அண்ணன் அழைப்பது வழக்கம். கேரள நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் குறித்த நூல்களை வாங்கி அனுப்பிக்கொண்டு இருப்பார். பலமுறை வரும்படி அன்புக்கட்டளை போட்டு ஏமாற்றம் கண்டார். எனக்கிருந்த பல்வேறு பணிகளால் இருபதாண்டுகளாக நழுவிக்கொண்டிருந்த நான் இப்பொழுது அவர்களின் அன்புவலையில் சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றியெல்லாம் நள்ளிரவு வரை பேச்சு நீண்டது.

காலையில் அமையஉள்ள எங்களுடைய செலவுத்திட்டத்தை இரவே திட்டமிட்டோம். காலை ஆறுமணிக்கு எழுந்து குளித்து முடித்து ஏழுமணிக்கு அருகில் உள்ள பூங்கா, நாற்றுப்பண்ணைகள் பார்ப்பது எனவும் மீண்டும் இல்லம் திரும்பி, காலைச் சிற்றுண்டி முடித்து எட்டு மணிக்கு அதிரம்பள்ளி அருவிக்குப் புறப்படுவது என்றும் திட்டம். அவ்வாறே அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தன. காலையில் எழுந்து பார்த்தால் மழைபெய்து, சாலையில் அங்குமிங்கும் தண்ணீர் தேங்கியிருந்தது. அண்ணன் வீட்டையொட்டிய பாதையில் காலார நடந்தோம். பாம்புகள், குருவிகள், காட்டுப்பன்றி, மயில் நாடமாட்டம் குறித்து பல கதைகளை அண்ணன் சொல்லிவந்தார். அழகிய பூங்காக்களும், சோலைகளுமாக வீட்டைச் சுற்றி எழில்கொஞ்சும் பகுதிகள். அனைத்தையும் பார்வையிட்டோம்.  காலை எட்டுமணிக்கு அதிரம்பள்ளி அருவிக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் சேர நன்னாட்டுப் பகுதிகளைப் பார்த்து இயற்கை அன்னை மடியை விரித்தாள் எனக்காக என்று எண்ணியபடி சாலையின் இருமருங்கிலும் கிடந்த இயற்கையழகைப் பருகியவாறு அதிரம்பள்ளி அருவி அடைந்தோம்.

அதிரம்பள்ளி அருவியின் முகப்பில் முறையான நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டோம். அருவியையும் நீர்ப்பெருக்கையும், ஆற்றின் அழகையும் வேண்டிய அளவு படமாக்கினோம். அங்கிருந்த இயற்கைக்காட்சிகளைப் பிரிந்து எங்களால் வரமுடியவில்லை. விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாக்காரர்கள் அதிகமாக இருந்தனர். எங்கும் பச்சைப் பசேல் என்ற காவும், பொய்கையுமான காட்சிகள். சாலையின் இரு மருங்கிலும் அமைந்த மூங்கில்காடுகள் கண்ணுக்குப் பெருவிருந்தாக இருந்தன. ஞெகிழிப் பைகள் தடைசெய்யப்படிருந்தன. எங்கும் தூய்மை பேணப்பட்டிருந்தது. அருவிகளும் வழிந்தோடும் நீர்ப்பெருக்கும் கண்டார்பிணிக்கும் இயல்பின. குளித்து மகிழ நினைத்தாலும் நேரம் இல்லை என்பதால் குளித்தவர்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே திரும்பவேண்டியிருந்தது.

பகல் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் திருச்சூரை நோக்கிப் புறப்பட்டோம். திருச்சூரைக் கடந்து குன்னங்குளம் என்ற ஊரை நோக்கி எங்கள் மகிழ்வுந்து பறந்தது. நல்ல சாலை அமைப்பு என்பதால் திட்டமிட்டதை விட வேகமாக நாங்கள் திருச்சூரைக் கடந்தோம். வழியில் அண்ணன் வீரக்குமரன் அவர்களின் விரிவுரை மகிழ்வுந்தில் அமைந்தது. முனைவர் வீரக்குமரன் அவர்கள் தமிழ்,  ஆங்கிலம்,  மலையாளம் என மும்மொழிகளிலும் வல்லவர். அண்ணன் அவர்கள் தமிழ்பேசும்பொழுது மறந்தும் ஆங்கிலச்சொல் ஒன்றுகூட இவர் பேச்சில் கலக்காது. அதுபோல் ஆங்கிலம் பேசினால் கேட்பதற்கு மிக இனிதாக இருக்கும். மலையாளத்தை மலையாளிகளைவிட இனிமையாகப் பேசுவார்கள். இவர் பேசும் தமிழைக் கேட்கும்பொழுது இவரை வணிகவியல் பேராசிரியர் என்று யாரும் நம்பமாட்டார்கள். ஏதோ ஒரு தனித்தமிழ்க்கல்லூரியில் பயின்றவர் என்றே நினைப்பார்கள். பீலிபெய் சாகாடு அச்சிறும் அப்பண்டம்”, “ நெடுநீர் மறவி மடி துயில் எனத் தொடங்கும் திருக்குறளை எடுத்துக்காட்டி இங்குள்ள கேரள மாணவர்களுக்கு இவற்றை விளக்கும்பொழுது எந்த இடையூறும் இல்லாமல் புரிந்துகொள்வார்கள் என்று அண்ணன் வீரக்குமரன் அவர்கள் விளக்கினார்கள். கேரளாவில் பழந்தமிழ் உயிர்வாழ்வதை எண்ணிப் பெருமைகொண்டோம். அண்ணன் வீரக்குமரன் அவர்கள் வணிகவியில் குறித்த விரிவுரைகளை எந்த இடத்தில் வழங்கினாலும் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கம்

கேரளத்தில் உள்ள நாட்டுபுறப்பாடல்கள்,  கலைகள்,  பழமொழிகள்,  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அனைத்தையும்   எங்களுக்கு நினைவூட்டியவாறே அண்ணன் அவர்கள்  வந்தார்கள். குன்னங்குளத்திற்கு முன்பாக ஊர் எல்லையில்  இருந்த ஒரு விடுதியில் பகலுணவுக்கு இறங்கினோம்.  வளமான உணவகம். ஓரிருவர் மட்டும் இருந்தனர். பொருளேந்து உடையவர்கள் அமர்ந்து உண்ணும் உணவகமாகத் தெரிந்தது. உணவு விலைகள் குறைவாக இருந்தன. சோறும்,  மீன்குழம்பும் உண்டோம். நெத்திலி மீன் வறுத்து, சுடச்சுட வழங்கினார்கள். ஆர்வமுடன் உண்டோம். அரபிக்கடல் மீன்கள் இவை என்றார்கள். நான் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மணிக்குச் சந்திக்க எங்களுக்குப் புல்லாங்குழல் செய்யும் கலைஞர் நேரம் கொடுத்திருந்தார். சரியாக இரண்டு மணிக்கு எங்கள் வண்டி குன்னங்குளத்தில் இசைபயிற்றுவிக்கும் ஒரு கல்லூரி வாயிலில் நின்றது. கொன்னக்கோல் ஓசையும், சலங்கை ஒலிகளுமாக அந்தக் கலைக்கோயில் இருந்தது.

புல்லாங்குழல் செய்யும் அந்த இசைப்பெருமகனார் எங்களை அன்பொழுக வரவேற்றார். அந்தக் கலைவல்லார் பெயர் திரு. சிவதாசு. ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொண்டோம். அவருக்காக வாங்கிச் சென்ற இனிப்புப் பண்டத்தை எடுத்துப்பார்த்தேன். புதுச்சேரியில் வாங்கியிருந்தேன். நெய் அதிகமாக இட்டுச் செய்த கடைக்காரர் சரியாகக் கட்டித் தராததால் நெய்யொழுகி இருந்தது. இருப்பினும் இரண்டு உறைகளில் இட்டு அதனைப் பயன்படுத்தும்படி கையுறைப்பொருளாக வழங்கினோம்.

அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்கள் மலையாளத்தில் உரையாடி எங்கள் வருகையின் நோக்கம் சொன்னார். மலையாளத்திலும், தமிழிலுமாக எங்கள் உரையாடல் அமைந்தது. இப்பொழுது புல்லாங்குழல் செய்வது எவ்வாறு என்பதை நேரடியாகாக் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் உடைமாற்றிகொண்டு புல்லாங்குழல் செய்யும் உலைக்களத்தை ஆயத்தம் செய்தார். இயற்கையாக முல்லைநில மக்களாகிய தமிழர்கள் செய்த இந்தப் புல்லாங்குழல் காலத்தேவைக்கு ஏற்ப மின்துணையுடன் செய்யப்படுவதை அறிந்தோம். இரண்டு புகைப்படக்கருவிகளில் புல்லாங்குழல் செய்வதைப் பல கோணங்களில் படமாக்கிக்கொண்டோம். ஒருமணி நேரத்திற்குள் திரு. சிவதாசு ஐயா அவர்கள் புல்லாங்குழல் ஒன்றைச் செய்முறையாகச் செய்துகாட்டி மகிழ்வித்தார். அவர் உலைக்களத்தில் எங்கும் மூங்கில்கள் அடுக்கப்பட்டிருந்தன. மூங்கிலை புன்னைமர எண்ணெயிட்டு வழித்து, காய்ச்சினார். இரும்பு ஆணிகளைப் பழுக்கக் காய்ச்சி, துளையிட்டு அவர் செய்த புல்லாங்குழலும் அவரின் படமும் விரைவில் காணொளி வடிவில் வழங்குவேன். இது நிற்க.

எங்களுக்காக நேரம் ஒதுக்கி, எங்களின் விருப்பம் நிறைவேற்ற ஒத்துழைத்த திரு. சிவதாசு ஐயாவின் திருவடிகளில் கையுறையாக அன்பளிப்பு ஒன்றை அளித்து அவரின் வாழ்த்தினைப் பெற்றோம். புதுச்சேரி வரும்பொழுது வந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டோம். நினைவுக்குச் சில படங்களை அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டோம். அண்ணன் வீரக்குமரன் அவர்கள் எங்களுக்கு இடையே மொழிச்சிக்கல் இல்லாமல் உரையாடலை எளிமைப்படுத்தினார்கள். பழைய கேரள இசைவடிவங்கள் குறித்து உரையாடிப் பல செய்திகளையும் திரு. சிவதாசு ஐயா அவர்களிடம் தெரிந்துகொண்டோம்.

 பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை குறித்த ஆய்வுகளுக்குரிய சில செய்திகளும் எங்களுக்குக் கிடைத்தன. திரு. சிவதாசு ஐயா அவர்களிடம் பிரியா விடைபெற்றுக்கொண்டோம்.

அப்பொழுது அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்கள் நாகப்பாட்டு என்னும் பாடல்வடிவம் கேரளாவில் பாடப்படுவதைச் சொன்னார்கள். குன்னங்குளம், திருச்சூருக்கு இடையே உள்ள ஊரில் நாகப்பாட்டு(அல்லது) சர்ப்பப்பாட்டு பாடப்படுவதை அறிந்தோம். அங்குள்ள சில கலைஞர்களைச் சந்தித்து நாகப்பாட்டுப் பாடலையும் காணொளியில் பதிந்துகொண்டோம். இப்பொழுது மாலை 5 மணியாகியிருந்து.

நாகப்பாட்டு பாடிய குழுவினருடன்

அண்ணன் வீரக்குமரன் அவர்களின் இல்லத்தில் எங்களுக்கு இரவு உணவு தயாராக இருந்தது. 5.30 மணியளவில் அந்த இனிய உணவினை உண்டு முடித்து அண்ணன் அவர்களிடமும் அண்ணியார் அவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டோம். கேரள எல்லையை இரவு 8 மணியளவில் கடந்து, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி வழியாகப் புதுச்சேரிக்கு வைகறைப் பொழுதில் திரும்பினோம்.   செந்தீ தொட்ட கருந்துளை என்னும் சங்க இலக்கியத்தின் மூன்று சொல்லுக்கும் உரிய பொருளை நேரடியாக அறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் தொலைவு பயணம் செய்தமை இனிய பட்டறிவாக இருந்தது.


மயிலாலும் பூவார் சோலை

முனைவர் கோ. வீரக்குமரன் அவர்களுடன் தம்பி

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழ்ச் சொல்லின் பொருளறிய இவ்வளவு நீண்டு பயணமா?
தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா