நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஜூலை, 2014

9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2015 சனவரி 29 முதல் - பிப்ரவரி 1 வரை, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது தில்லி மாநகரில் நடைபெற்ற 26-வது அனைத்துலகத் தென்கிழக்காசிய நாடுகளின் அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் மிகுந்த பற்றுமிக் கல்வியாளர்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும்.

இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது. பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம் (இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்தியா)–1981; கோலாலம்பூர் (மலேசியா)–1987; மொரிசியசு–1989, தஞ்சாவூர் (தமிழ் நாடு, இந்தியா)-1995.

அடுத்த ஆண்டு 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015,னவரி 29 முதல் பிப்ரவரி 1  வரையிலும் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பகுதிகளிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, சமயம், மானுடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல்  எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளகள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களை அறிய உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை: