நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள்

முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள்

தமிழில் காப்பியக்கொள்கைகள் என்ற நூலின் வழியாகத் தமிழ் உலகிற்கு நன்கு அறிமுகமானவர் பேராசிரியர் துரை. சீனிச்சாமி அவர்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள நம் பேராசிரியர் அவர்கள் ஓய்வுக்குப் பிறகும் தமிழ் நூல்களைப் படைப்பதிலும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்குவதிலும் ஈடுபாட்டுடன் உள்ளார். பழகுதற்கு இனிய பண்பாளரான இவரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள் நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்துள்ள சிந்தாமணி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பேராசிரியர் அவர்கள் திருவாளர் சேம்சு துரைராசு, அன்னம்மாள் ஆகியோரின் மகனாக 1944 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் நாள் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் சிந்தாமணியிலும், உயர்நிலைக் கல்வியைப் புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புகுமுக வகுப்பைப் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியிலும் படித்தவர். இளங்கலைப் பட்ட வகுப்பை விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் பயின்றும், முதுகலைப் படிப்பைக் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றும் பட்டங்களைப் பெற்றவர்(1975). முனைவர் பட்டத்திற்கு இவர் ஆய்ந்த பொருள் கம்பராமாயணத்தில் இயற்கை என்பதாகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்விப் பிரிவில் 1976 முதல் 1982 வரை பணியாற்றியவர். அதன் பிறகு பேரறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்களால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர். அங்குப் பணியில் இணைந்த பிறகு தமிழில் காப்பியக் கொள்கைகள் என்ற நூலின் இருதொகுதிகளைத் தமிழிற்கு வழங்கிப் பெருமை பெற்றவர். 2004 ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள் சிறந்த ஆய்வாளராக விளங்குவதுடன் சிறந்த திறனாய்வாளராகவும், படைப்பாளியாகவும் விளங்குபவர்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்களின் தமிழ்க்கொடை:

1.   தமிழில் காப்பியக் கொள்கைகள் (தொகுதி 1, தொகுதி 2)
2.   தமிழ் நாவல்களில் உளச் சித்தரிப்பு
3.   கவிதைக் கோட்பாடு
4.   திறனாய்வு எதிர்காலம்
5.   இலக்கியத்தில் இயற்கை
6.   நாவல்: நவீன விமர்சனங்கள்
7.   இருபதாம் நூற்றாண்டுக் கவிதை: புதிய போக்கும் தோற்றமும் வளர்ச்சியும்
8.   செவ்வியல் இலக்கியம்
9.   சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்
10. தொல்காப்பியமும் இலக்கிய வகையும்(அச்சு)
11. தமிழ் ஆராய்ச்சி வரலாறும் வளர்ச்சியும்(அச்சு)

படைப்பு நூல்கள்:
அந்தி
உரித்த யானை


1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பதிவு முனைவரே. ஐயா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.