நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 மே, 2012

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் ஓய்ந்தது…


நன்றி: ஆனந்தவிகடன்


ஒவ்வொரு வாரமும் எப்பொழுது வியாழன் இரவு விடியும் என்று உலகம் காத்துக்கிடந்தது உண்மைதான். நாற்பது வாரங்களாக இலக்கிய ஆர்வலர்களைத் தூங்கவிடாமல் செய்தது ஆனந்தவிகடனில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்னும் தொடர் என்றால் அது மிகையில்லை.

ஆனந்தவிகடனில் இடம்பெற்ற மூன்றாம் உலகப்போர் தொடரைப் படித்துவிட்டு மாணவர்கள், நண்பர்களுடன் உரையாடுவதை அண்மைக் காலமாக வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் வழியாகத் தேனி மாவட்டத்துப் பேச்சுத் தமிழ் உயிர்பெற்று உலக மக்களுக்கு அறிமுகமாகியுள்ளதை நினைத்துப் பூரித்துப் போனேன். பேச்சுத் தமிழை மட்டுமா கவிஞர் பெருமையுறப் பதிவு செய்துள்ளார்?. உழைத்து உழைத்துக் காலங்காலமாகக் களைத்துப்போன சிற்றூர்ப்புற மக்களின் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை, உள்மன உணர்வுகளையெல்லாம் கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் திரைப்பா வடிவில் தெற்கத்தி வாழ்க்கையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலும் இந்த மூன்றாம் உலகப்போரில் அவர் வாழ்ந்த வாழ்க்கையினை ஈரம் காயாமல் இறக்கிவைத்துள்ளார். கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி, சின்னபாண்டி பாத்திரங்கள் தமிழகத்து உழைக்கும் மக்களின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் என்று குறிப்பிடலாம். இவர்கள் வழியாகத் தமிழகத்து மக்களின் மன உணர்வுகளைக் கவிப்பேரரசர் அவர்கள் பக்குவமாகச் சித்திரமாக வரைந்துகாட்டியுள்ளார்.

தேனி மாவட்டத்துத் தேசிய இலக்கியமாக இந்த “மூன்றாம் உலகப்போரை” அறிவிக்கலாம். இன்றைய நாகரிக வாழ்க்கையும் பன்னாட்டு நிறுவனங்களும் சிற்றூர்வரை புகுந்து உறவுகளை வேரறுப்பதைக் கவிப்பேரரசர் நுண்மையாக எடுத்துரைத்துள்ளார். பன்றிக்குக் காயடிப்பதிலிருந்து, பனங்கிழங்கு அவித்து உரித்துத் தின்னுவது வரை நம் இலக்கியப்புலிகளால் பதிவுசெய்யப்படாத பல நிகழ்வுகளைக் கவிப்பேரரசர் தம் தமிழ்வளத்தால் பதிவுசெய்துள்ளார்.

தொடரில் இடம்பெறும் ஊர்ப் பஞ்சாயத்தாரின் உரையாடல்கள் இன்னும் தமிழும் தமிழ்ப்பண்பாடும் வாழ்ந்துகொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன.

“தாமரை எலையில பச்சைக்கறிய வாங்கி வந்தவன் பாதியிலே பிரிச்சான். கறிக்கு வீங்கிக்கெடந்த பயலுக்கு உள்நாக்கு ஊறுது. ஈரலாப் பொறுக்கி எடுத்தான்; ஒவ்வொரு கொழுப்பா எடுத்து ஒண்ணு சேத்தான். சும்மா ஆவாரங்குழையை ஆடு திங்கற மாதிரி பச்சைக்கறிய நறுச் நறுச்சுனு மென்னு தின்னு முழுங்கிட்டான்” என்று முத்துமணி பின்னாளில் குடும்பச்சொத்தைத் தானே தின்னு உயிர்வளர்க்க உள்ளதைக் குறிப்பாகக் காட்டியுள்ளார் கவிப்பேரரசர்.

இந்தத்தொடரில் வந்துபோகும் எமிலி, இஷிமுரா என்னும் அயலகத்துப் பாத்திரங்கள் வழியாக அட்டணம்பட்டிக்கு வேறாக ஓர் நவீன உலகம் இருப்பதையும் அவர்களின் வாழ்க்கைமுறை வேறாக இருப்பதையும் கவிப்பேரரசர் படைத்துக்காட்டியுள்ளார்.

“இந்த மனிதர்கள் பூமியின் முகத்தில் அறைவதையும், முதுகில் குத்துவதையும், வயிறு கீறுவதையும், கருவறையில் கம்பி நுழைப்பதையும், ஓசோன் கூரை ஓட்டை வழி எட்டி எட்டிப் பார்த்துவிட்டு ஓர் அழுக்கு மேகத்தை இழுத்து முகம் பொத்திக்கொண்டது சூரியன்” என்று கவிப்பேரரசர் இலக்கிய நயம்பட முதல் தொடரில் அறிவியல் அரிச்சுவடி சொல்லியுள்ளார்.

முத்துமணிக்குக் குழந்தை பிறந்தால் முப்பாட்டன் நினைவால் சீனித்துரையின் பெயரை வைக்க நினைத்த கருத்தமாயிக்குத் தன் மகன் முத்துமணி உரைக்கும் “அஜய்தேவ்” என்னும் பெயர் வேம்பாக இருந்ததைக் கவிப்பேரரசர் அவருக்கே உரியமுறையில் கரும்பாகச் சுவைபட எழுதியுள்ளார்.

நிறைவுப்பகுதியில் முத்துமணி, கம்பெனிக்காரர்களுக்கு ஆதரவாக வாங்கிய நிலத்தைச் சமப்படுத்தும் ஜே.சி.பி. மெஷினால் தன் தந்தையை ஏற்றிக் கொன்றுவிடுவான் எனவும், அரிவாளல் வெட்டிச்சாய்க்கப்போகின்றான் எனவும் படிப்பவர்களுக்கு ஆர்வம்கூட்டிப் அச்சம்கொள்ளச்செய்யும் கவிப்பேரரசர் நாம் எதிர்பாராத விதமாகக் கருத்தமாயி, உயிராகப் போற்றிய நிலத்தையும் சாமி மரத்தையும் காக்க, “முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் கவட்டைக்காலனை வெட்டிவிட்டு பூமிக்கடியில் புதைச்சு வைத்திருந்த வீச்சருவாவ எடுத்து, தன்னை வெட்ட வந்த மகனை வெட்டினார் என்று எழுதியுள்ளது கதையின் திருப்புமுனையாக உள்ளது.

இந்த இடத்தில், “தோலக் கிழிச்சு, சதையில எறங்கி, ரத்தநாளம் கடந்து, சவ்வப்பொளந்து, கழுத்தெலும்ப ஒடச்சு, உள்ள புகுந்து, முதுகுத் தண்டு நரம்ப அறுத்து, உசுர வாங்கித் தலையைத் தொங்கவிட்டு சங்குக்குழியில் நின்னுப்போச்சு அருவா. முப்பத்தேழு வருசத் துருவை முத்துமணி ரத்தத்துல கழுவணுமுன்னு கெட்ட வரம் கேட்டு வந்திருக்கு அந்த அருவா” என்று எழுதியுள்ளமை கருத்தமாயியின் கோபத்தை ஒரு தேர்ந்த கலைஞனுக்குரிய முறையில் இந்தத்தொடரில் கவிப்பேரரசர் பதிவுசெய்துள்ளார்.

தேனி மாவட்டத்து மக்கள் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்யும் போக்கில் அமைந்துள்ள இந்தத் தொடர் தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கங்களையும் தாங்கி நிற்கின்றது. கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் இந்தத் தொடரில் மக்களின் வழக்காறுகள், பழமொழிகள், நம்பிக்கைகள், பண்பாட்டு விழுமியங்கள், அறம் என யாவும் பூத்துச் செழித்து நிற்கின்றன.

2 கருத்துகள்:

suresh சொன்னது…

ஆனந்தவிகடனின் தீவிர வாசகன் என்கிற உரிமையில் நான் சில பரிந்துரைகளை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன்.


பரிந்துரை: 1
ஜுனியர் விகடன், சக்தி விகடன், நாணய விகடன்…… சமீபத்தில் டாக்டர் விகடன் என்று எத்தனையோ தலைப்புகளில் விகடனை வெளியிடுகிறீர்கள். இலக்கிய விகடன் என்றொரு இதழும் வெளியிடலாமே! இது என்னுடைய பரிந்துரையும் பணிவான வேண்டுகோளும்.


பரிந்துரை: 2
ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு இன்னொன்றையும் பரிந்துரைக்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து வைரமுத்து எழுதும் “மூன்றாம் உலகப்போர்” என்னும் நாலாந்தர நாவல் தொடரை உடனே நிறுத்தி விடுங்கள். அவருக்கு நாவல் எல்லாம் எழுத வர வில்லை. அவரிடம் வண்டல் வண்டலாய் வார்த்தைகள் குவிந்து கிடக்கின்றன். ஆனால் துளி கூட வாழ்வியல் தரிசனம் இல்லை.


வெற்று வார்த்தைகளால் உள்ளீடற்ற அலங்கார கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது நாவலுக்குப் போதாது. இதை யாராவது சினிமாவாக எடுப்பார்கள் என்கிற எதிர் பார்ப்புகளுடன் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத நாடகத் தனமான சம்பவங்களால் நாவலை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்.


அவரை அவரின் முதல் தொடர்கதையான வானம் தொட்டுவிடும் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் என்பதின் நகம் தொடக் கூட, அவருக்கு கதை மொழி கைவரவில்லை என்பதை ரொம்பவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


கல்லூரியில் படிக்கும் காலத்தில் நான் வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு தீவிர வாசகனாக - இல்லை இல்லை வெறியனாகவே இருந்திருக்கிறேன். அவர் பாடல் எழுதியிருக்கிறார் என்பதற்காகவே பாடாவதியான படங்களுக்கும் போய், திரையில் அவரின் பெயர் பார்த்து புல்லரித்து புளகாங்கிதம் அடைதிருக்கிறேன்.


அவரின் வைகறை மேகங்களிலிருந்து தண்ணீர் தேசம் வரைக்கும் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறேன். மீண்டும் என் தொட்டிலுக்கு என்று அவர் எழுதிய மிகச் சாதரணமான் ஒரு மாத நாவலைக் கூட விட்டு வைக்க வில்லை. அவரின் சினிமாப் பாடல்களில் உள்ள கவிதைகளை வாசித்து மகிழ்வதற்காக பிளாட்பாரங்களில் குவித்து விற்கும் பாட்டுப் புத்தகங்கள் எல்லாம் வாங்கி பத்திரப் படுத்தி இருக்கிறேன். அப்படிப் பட்ட என்னாலேயே அவரின் சமீபத்திய எழுத்துக்களை கொஞ்சமும் ரசிக்க முடியவில்லை.


வைரமுத்துவின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நான் அவரின் போட்டியாளனோ சினிமாசம்பந்தப் பட்டவனோ இல்லை. அதி நுட்பமான சிறுகதைகளும், ஆழமான கவிதை கட்டுரைகளும் வெளியாகும் ஆனந்த விகடனில் வைரமுத்துவின் அசட்டுத் தனமான தொடர் எதற்கென்று தான் அதை நிறுத்தி விடப் பரிந்துரைக்கிறேன். இதை தயவு செய்து நீங்கள் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள்.


ஆனந்த விகடன் என்னும் ஆயிரங்கால விருட்சத்திற்கு வைரமுத்துவின் பிராபல்யம் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்க முடியாது என்றும் நிச்சயமாய் நம்புகிறேன்.


அதனால் ஆனந்த விகடனின் தரத்தைக் காப்பாற்றுவதற்கான கரிசனத்திலும் உரிமையிலும் சொல்கிறேன். வைரமுத்துவின் தொடரை நிறுத்தி விடுங்கள். அவருக்கு சினிமாப் பாடல்கள் தவிர – கவிதைகள் உட்பட – எதுவும் எழுத வர வில்லை. இன்னும் அவரால் கல்லூரி காலத்து இளைஞனின் ரொமான்டிச மன நிலையைத் தாண்டியே வெளிய வர முடிய வில்லை என்பதை வலியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.


பரிந்துரை: 3
வட்டியும் முதலுமாய் வாழ்வின் தரிசனங்களைப் போட்டு வாங்கும் ராஜு முருகனை நாவல் எழுதச் சொல்லுங்கள். கண்டிப்பாக அது காலத்திற்கும் பேசப்படும். நன்றி!


அன்புடன்,


சோ.சுப்புராஜ்

suresh சொன்னது…

subburaj told in his blog
http://www.silviamary.blogspot.com/2012_02_01_archive.html

ஆனந்தவிகடனின் தீவிர வாசகன் என்கிற உரிமையில் நான் சில பரிந்துரைகளை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன்.



பரிந்துரை: 2
ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு இன்னொன்றையும் பரிந்துரைக்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து வைரமுத்து எழுதும் “மூன்றாம் உலகப்போர்” என்னும் நாலாந்தர நாவல் தொடரை உடனே நிறுத்தி விடுங்கள். அவருக்கு நாவல் எல்லாம் எழுத வர வில்லை. அவரிடம் வண்டல் வண்டலாய் வார்த்தைகள் குவிந்து கிடக்கின்றன். ஆனால் துளி கூட வாழ்வியல் தரிசனம் இல்லை.


வெற்று வார்த்தைகளால் உள்ளீடற்ற அலங்கார கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது நாவலுக்குப் போதாது. இதை யாராவது சினிமாவாக எடுப்பார்கள் என்கிற எதிர் பார்ப்புகளுடன் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத நாடகத் தனமான சம்பவங்களால் நாவலை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்.


அவரை அவரின் முதல் தொடர்கதையான வானம் தொட்டுவிடும் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் என்பதின் நகம் தொடக் கூட, அவருக்கு கதை மொழி கைவரவில்லை என்பதை ரொம்பவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


கல்லூரியில் படிக்கும் காலத்தில் நான் வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு தீவிர வாசகனாக - இல்லை இல்லை வெறியனாகவே இருந்திருக்கிறேன். அவர் பாடல் எழுதியிருக்கிறார் என்பதற்காகவே பாடாவதியான படங்களுக்கும் போய், திரையில் அவரின் பெயர் பார்த்து புல்லரித்து புளகாங்கிதம் அடைதிருக்கிறேன்.


அவரின் வைகறை மேகங்களிலிருந்து தண்ணீர் தேசம் வரைக்கும் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறேன். மீண்டும் என் தொட்டிலுக்கு என்று அவர் எழுதிய மிகச் சாதரணமான் ஒரு மாத நாவலைக் கூட விட்டு வைக்க வில்லை. அவரின் சினிமாப் பாடல்களில் உள்ள கவிதைகளை வாசித்து மகிழ்வதற்காக பிளாட்பாரங்களில் குவித்து விற்கும் பாட்டுப் புத்தகங்கள் எல்லாம் வாங்கி பத்திரப் படுத்தி இருக்கிறேன். அப்படிப் பட்ட என்னாலேயே அவரின் சமீபத்திய எழுத்துக்களை கொஞ்சமும் ரசிக்க முடியவில்லை.


வைரமுத்துவின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நான் அவரின் போட்டியாளனோ சினிமாசம்பந்தப் பட்டவனோ இல்லை. அதி நுட்பமான சிறுகதைகளும், ஆழமான கவிதை கட்டுரைகளும் வெளியாகும் ஆனந்த விகடனில் வைரமுத்துவின் அசட்டுத் தனமான தொடர் எதற்கென்று தான் அதை நிறுத்தி விடப் பரிந்துரைக்கிறேன். இதை தயவு செய்து நீங்கள் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள்.


ஆனந்த விகடன் என்னும் ஆயிரங்கால விருட்சத்திற்கு வைரமுத்துவின் பிராபல்யம் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்க முடியாது என்றும் நிச்சயமாய் நம்புகிறேன்.


அதனால் ஆனந்த விகடனின் தரத்தைக் காப்பாற்றுவதற்கான கரிசனத்திலும் உரிமையிலும் சொல்கிறேன். வைரமுத்துவின் தொடரை நிறுத்தி விடுங்கள். அவருக்கு சினிமாப் பாடல்கள் தவிர – கவிதைகள் உட்பட – எதுவும் எழுத வர வில்லை. இன்னும் அவரால் கல்லூரி காலத்து இளைஞனின் ரொமான்டிச மன நிலையைத் தாண்டியே வெளிய வர முடிய வில்லை என்பதை வலியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.


பரிந்துரை: 3
வட்டியும் முதலுமாய் வாழ்வின் தரிசனங்களைப் போட்டு வாங்கும் ராஜு முருகனை நாவல் எழுதச் சொல்லுங்கள். கண்டிப்பாக அது காலத்திற்கும் பேசப்படும். நன்றி!


அன்புடன்,


சோ.சுப்புராஜ்