நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தொலைக்காட்சிகளில் கணினி, இணையம் சார்ந்த உரை...

அண்மைக்காலமாகக் கணினி, செல்பேசி சார்ந்த உரையாடல், பேச்சுகள் தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் நாள் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சி பற்றிய குறிப்பைப் புதுக்கோட்டைப் புலவர் முத்துநிலவனார் என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டார். அந்தச்செய்தி விவரம் கீழே:

//கடந்த 27 சனிக்கிழமை அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்ற ஒளிப்பதிவு. 'கைபேசியோடும் கணினியோடும் செல்லும் இன்றைய பயணம்...

சிகரத்தை நோக்கியே... சிரமத்தை நோக்கியே..."

என்பதில் நான் சிகரத்தை நோக்கிப் பேசினேன்... அதில் பேச்சின் இடையே உங்கள் 'இணையம் கற்போம்' நூலைப் பார்வையாளர்களுக்கு உயர்த்திக்காட்டி 'இதுமாதிரி நூல்களையெல்லாம் படிங்க' அப்படின்னு சொன்னேன்... பின்னர் பேசிய திரு லியோனி 'அய்யா வீரமணிக்குப் பிறகு மேடையில் பேசும்போது புத்தகங்களைக் காட்டிப் பேசியது அனேகமாக நிலவனாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்' அப்படின்னார்... அதைத் தான் உங்களுக்குக் குறுஞ்செய்தியில் தெரிவித்தேன் ... செப்.ஒன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது... பார்க்கலாம்... எப்படி வருகிறது என்று...

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் இளங்கோவன் - ஆகா ஆகா - செப்டம்பர் முதல் தேதியா - காலை 9 மணியா - பார்த்துடுவோம். சிகரத்தை நோக்கித்தான் பயணம் செல்கிறது - ஐயமில்லை. நட்புடன் சீனா

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அன்பினிய அய்யா முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு,வணக்கம்.
பொருளற்ற நூல்கள் பல்லாயிரம் புழங்கும் இன்றைய தமிழ்ச்சூழலில் தங்கள் ‘இணையம் கற்போம்’ நூல் எனக்குப் பெரிதும் கற்பித்தது.
அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி
தொலைக்காட்சி நிகழ்வில் பதிவுசெய்தேன்..
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’…

இதேபோல-
‘அக்கப்போர்’ பலநடக்கும் அலைபேசியில், ‘குறுஞ்செய்தி’ வழியாகக் கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளும் இதழாளர்களின் படைப்புகளை ஆய்வு செய்து ‘குறுஞ்செய்தி இதழ்க்கவிதைகள்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கும் திருச்சி
திரு அருள்முருகனின் நூலையும் காட்டிப் பேசியிருக்கிறேன்…

உழைத்து, பிறர்க்குப் பயன்படும்படியான நூலை எழுதியவர்களுக்கு நான் செய்த நன்றிக் கடனே அன்றி வேறில்லை..

தொலைக்காட்சியில் விளம்பரம் கூடுதலாகக் கிடைக்கக் கிடைக்க, வெட்டுப்படுவது
நல்ல செய்திகளே. தப்பித்து வருவது ‘இடையில் தூவும்’ மசாலாக்களே என்பது பார்வையாளர் பலருக்குத் தெரியாது

ஆனாலும்,
முந்திய எனது உரைகளில் சொன்ன செய்யாறு ராஜீவ் காந்தி, ஆங்கரை பைரவி,
புதுகை தங்கம் மூர்த்தி, வந்தவாசி மு.முருகேஷ் ஆகியோரின் கவிதைகள் (கவிஞர்களின் பெயர்களுடனே ‘தப்பித்து’ வந்திருந்தன..

எங்கள் ஊர்க் குறும்படம் ‘நெய்ப்பந்தம்’ பற்றிக்கூடப் பேசினேன்… அது வந்தபிறகு அந்த இயக்குநருக்குத் தொலைபேசியில் தகவல்கள் பற்பல வந்ததாகச் சொன்னார்…

பார்க்கலாம் இது எப்படி வருகிறது என்று…

என்றும் அன்புடன்.
நா.முத்துநிலவன்
புதுக்கோட்டை-4
அலைபேசி: 94431 93293
எனது வலைப்பக்கம்:
www.valarumkavithai.blogspot.com