நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 25 ஏப்ரல், 2011

கயிலைமாமுனிவர் சதாபிசேக விழா மலர்


கயிலைமாமுனிவர் சதாபிசேக விழாமலர்

  திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபர் தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில்(06.04.2011) திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  தவத்திரு கயிலைமாமுனிவர் அடிகளார் அவர்களின் பன்னருஞ் சிறப்பினை எடுத்துரைக்கும் சதாபிசேக மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சற்றொப்ப நானூறு பக்கம் அளவுள்ள மலரில் தமிழகத் திருமடங்களைச் சார்ந்த சான்றோர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தவத்திரு அடிகளாருடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களின் பட்டறிவுகளை மிகச்சிறப்பாக எழுதியுள்ளனர். தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் துறவு வாழ்க்கையின் அரிய படங்கள் பல இடம்பெற்றுள்ளன.

 திருப்பனந்தாள் திருமடம் தவத்திரு குமரகுரபரர் அடிகளால் காசியில் நிறுவப்பட்ட மடத்தின் கிளைமடமாகும். இம்மடத்தின் இருபத்தொன்றாம் அதிபராக இருந்து பல்வேறு சமய நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டும், கல்விநிறுவனங்கள் பலவற்றை நிலைநிறுத்தியும், பல அறக்கொடைகள் நிறுவியும் தமிழ்த்தொண்டு புரிந்துவரும் தவத்திரு அடிகளார் அவர்களின் வாழ்க்கை வரலாறும் திருமடத்துப்பணிகளும் மிகச்சிறப்பாக இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

 கவிதைகள், கட்டுரைகள் யாவும் தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் அருள் வாழ்க்கையை எடுத்துரைக்கும் ஆவணங்களாக உள்ளன. தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் அயல் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் தமிழ், ஆங்கிலமொழியில் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கண்ணைக் கவரும் வண்ணத்தில் அச்சான இந்த மலர் பாதுகாக்கும் தரமுடையது. மலரை அழகிய வடிவில் உருவாக்கிய இணைஅதிபர் தலைமையிலான மலர்க்குழு பாராட்டுக்கு உரியது.

கருத்துகள் இல்லை: