நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 டிசம்பர், 2023

தருமை ஆதீனப் புலவர் வித்துவான் மு. வைத்தியநாதன்…

வித்துவான் மு. வைத்தியநாதன் 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், உருமு தனலெட்சுமி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றிவரும்  வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் எண்பத்தைந்தாம் அகவையில் தற்பொழுது திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வருகின்றார். தமிழிலும் சைவத்திலும் பெரும்புலமை மிக்க அறிஞரான இவர்தம் திருவெம்பாவை உரையைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் இவரின் இல்லத்துக்கு வந்து பதிவுசெய்து, மார்கழி மாத வைகறைப்பொழுதில் ஒலிபரப்பி வருகின்றமை இவர்தம் அறிவுப் பெருமைக்குச் சான்றாகும். 

 அரியலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியை வரையறுத்து ஓடும் வடவாற்றங்கரையில் உள்ள ஊர் பிள்ளைப்பாளையம் ஆகும். பொல்லாப்பாளையம் என்று மக்கள் வழங்குவர். இவ்வூரில் வாழ்ந்த “மணியம்” பி. . முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி அம்மை ஆகியோரின் மகனாக 1940 ஆம் ஆண்டில் வித்துவான் மு. வைத்தியநாதன் பிறந்தவர். இவர்தம் குடும்பத்தினர் யாவரும் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்கள். 

தம் பிறந்த ஊரில் இடைநிலைக் கல்வி வரை பயின்று, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான்காண்டுகள் (1956 முதல் 1960 வரை) பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி, மாநில அளவில் முதல் மாணவராக வெற்றிபெற்றவர். இவரின் ஒருசாலை மாணவராக விளங்கியவர் முனைவர் பொற்கோ ஆவார். மு. வைத்தியநாதன் அவர்களுக்குச் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர்களாக வாய்த்தவர்கள் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர்களான  கே. எம். வேங்கடராமையா, இருமொழிப் புலவர் மு. சுந்தரேசம் பிள்ளை, மு. கோவிந்தராசனார், தி.வே.கோபாலையர்,  தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி, நகராமலை இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆவர். 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெரும்புலவர் சி. புன்னைவனநாத முதலியார் அவர்களைக் கொண்டு நடத்திய புலவர் பட்டத் தேர்வெழுதி, மு. வைத்தியநாதன் முதல் மாணவராகத் தேறியவர். கல்வியியல், மொழியியல், நூலகவியல் தேர்வுகளை எழுதிச் சான்றிதழ்களைப் பெற்றவர். பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் தமையனார் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி, திருச்சிராப்பள்ளியில் புகழுடன் விளங்கிய தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்பு கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றி, 39 ஆண்டுகள் தமிழ்த்தொண்டாற்றி 2000 ஆம் ஆண்டில் பணிநிறைவு பெற்றவர். பணியின் நிமித்தம் தம் இருபதாம் அகவையில் திருச்சிக்கு வருகைபுரிந்த மு. வைத்தியநாதன் அவர்கள் கடந்த அறுபதாண்டுகளாகத் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், சமய இலக்கிய நிகழ்வுகளையும் அறிந்த பெருமைக்குரியவராக உள்ளார்.

 


தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டக் குழு, தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தும் பாட நூல் ஆசிரியராக இருந்தும் தாம் ஏற்றுக்கொண்ட பணிகளைத்  திறம்படச் செய்துள்ளவர். பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைத்த புத்தொளிப் பயிற்சிகளில்  ஆசிரியராக இருந்து கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் பயிற்றுவித்துள்ளார். 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்கு 1967 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சந்திரா என்ற சந்திரகுமாரி ஆவார். இவர்களுக்கு வள்ளி என்ற ஒரே மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார். திருமதி வள்ளி அவர்கள் ஆத்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்களின் சமயப்பணி 

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபையின் செயலராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். இந்தச் சபை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் திறந்துவைத்த பெருமைக்குரியது. இச்சபையின் சார்பில் வாரந்தோறும் முப்புராணங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திர நூல்கள், பிரபந்தங்கள், திருப்புகழ், தாயுமனவர் பாடல்கள் குறித்த விரிவுரைகள் நடைபெறுவதற்குப் பெருந்துணைபுரிந்தவர். 1985 ஆம் ஆண்டில் அந்தச் சபையின் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

திருச்சிராப்பள்ளியில் திருமுறை மன்றம் அமைத்து அம்மன்றத்தின் வழியாக அன்பர்களின் இல்லங்களில் திருமுறை முற்றோதல், உரை விளக்கங்கள் நடைபெற உதவியவர். காலை 9 மணிக்குத் தொடங்கும் சிறப்புரை மாலை 5 மணி வரை நடைபெறும். அவ்வகையில் பன்னிரண்டரை ஆண்டுகள் சிறப்புரைகள் நடைபெற்று 18286 பாடல்களுக்கும் விளக்கம் சொன்ன பெருமை இவரைச் சாரும். 

மலைக்கோட்டையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய  மௌனமடம் உள்ளது. அதில் இயங்கிய சைவசித்தாந்த மாலை நேரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பலர் சைவ சித்தாந்த கலாநிதிகளாக மலர்வதற்கும் பலர் சைவசித்தாந்த புலவர்களாக வளர்வதற்கும் துணைநின்றவர். இவரின் வகுப்புகளில் கற்றுச், சமயப் பெருமை உணர்ந்த மாணவர்கள் சிலர் பின்னாளில் துறவிகளாகத் திருமடங்களில் இணைந்துள்ளனர். 

திரிசிரபுரச் சைவசித்தாந்த சபையில் மாதந்தோறும் நான்காம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் விரிவுரை, ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் அவ்வாறு விரிவுரை நிகழ்த்தியுள்ளார். அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட  தருமை ஆதீனம் இருபத்தாறாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்குத் திருக்குறள் செல்வர் என்னும் விருதளித்தும், ஒரு பவுன் தங்கக் காசு அளித்தும், பொன்னாடை அணிவித்தும் பெருமை செய்தார்கள். 

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள வாகீச பக்த ஜனசபை எண்பது ஆண்டுகள் பழமையுடைய அமைப்பாகும் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தொடர் விரிவுரைகளில் கலந்துகொண்டு திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், முப்புராணங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள், திருப்புகழ் பற்றிய தொடர் விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். 

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, மதுரை பன்னிரு திருமுறை மன்றம், கோவை பன்னிரு திருமுறை ஆய்வு மன்றம், மயிலை திருமுறை மன்றம், மயிலாடுதுறை கோபல் அறக்கட்டளை, சென்னை அரனருள், சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம், இலால்குடி அறநெறிக் கழகம், சென்னை இராமலிங்கர் பணிமன்றம் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கற்றோர் வியக்குமாறு கருத்துரை வழங்கிய பெருமைக்குரியவர். 

தருமபுர ஆதீனம் நடத்திய அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாடு மற்றும்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இணைப்புரை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு. 

தருமையாதீனம் இருபத்தாறாவது குருமகா சந்நிதானம் அவர்கள் தருமையாதீனப் புலவர் என்னும் விருதினை வழங்கியுள்ளார்கள். மேலும், பொற்கிழியும் பொன்னாடையும் அணிவித்துப் பாராட்டியுள்ளார்கள். திருப்பனந்தாள் காசித் திருமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சைவத் தமிழ்மணி  என்னும் விருதும் பொற்பதக்கமும் அளித்துப் போற்றியுள்ளார்கள் காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பிலும் இவருக்குச் சித்தாந்த வித்தகர் என்ற விருதும் பணமுடிப்பும் வழங்கப்பெற்றுள்ளது. திருவரங்கத்தில் உள்ள இராசவேலு- செண்பகத் தமிழரங்கின் சார்பில் தமிழ் மாமணி விருதளித்துப் பாராட்டப்பெற்றவர். 

பதிப்புப் பணி 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். திருவையாற்றுப் புராணம், திருகற்குடிமாமலை மாலை, சிராமலையந்தாதி, சிராமலைக் கோவை உள்ளிட்ட பல நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பித்து அச்சு நூலாகக் கொண்டுவந்தவர். 

மலர்ப் பதிப்பாசிரியர் 

திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபை நூற்றாண்டு விழா மலர், துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி இராவ்சாகிப் எல். என். பரமசிவம் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா மலர், உறையூர் வாகீச பக்த ஜனசபை வைரவிழா மலர் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் திருக்கற்குடித் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் உள்ளிட்ட சிறப்பு மலர்களை வெளியிட்டு, நிகழ்வுகளை ஆவணங்களாகப் பதிவுசெய்த பெருமைக்குரியவர். 

திருமுறை விளக்க வகுப்பு 

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி மையங்களில் திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி கைலாசபுரம் கிளைப் பயிற்சி வகுப்பில் பேராசிரியராக இருந்து கடந்த ஏழாண்டுகளாகத் திருமுறை விளக்கம் செய்து வருகின்றார்கள். 


வானொலி உரைகள் 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி வானொலி வழியாகத் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சைவ சமயச் சிறப்பு குறித்தும் மிகுதியான சிறப்புரைகள் வழங்கியுள்ளார். காலையில் சிந்தனை உரைகளாக அமையும் இவர் உரை, இரவுப் பொழுதில் நால்வர் பதிக அற்புதங்களாகவும், பன்னிரு திருமுறைகளில் தமிழ்க் கலைகளாகவும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பக்திப் பொழிவுகளாகவும் மக்களின் நெஞ்சங்களை மகிழ்வித்துள்ளன.35 நிகழ்ச்சிகள் சமய இலக்கியம் குறித்தும் 18 உரைகள் சங்க இலக்கியம் குறித்தும் 10 உரைகள் திருமுருகாற்றுப்படை குறித்தும் அமைந்து, சற்றொப்ப 50 க்கும் மேற்பட்ட அரைமணி நேரச் சிறப்புரைகளைத் திருச்சிராப்பள்ளி வானொலி ஒலிபரப்பியுள்ளது. 

ஊரன் அடிகளார் திருவருட்பாவினை ஆறு திருமுறைகளாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிட்டார்கள். மேலும் தருமை ஆதீனம் பன்னிரு திருமுறைகளை 20,000 பக்கங்களில் வெளியிட்டனர். இவற்றையெல்லாம் மெய்ப்புப் பார்த்து, நூல் செப்பமாக வெளிவருவதற்குத் துணைநின்ற பெருமைக்குரியவர் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள். 

தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படக் கற்ற பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் வாழ்நாளெல்லாம் அதன் சுவைகளையும் சிறப்புகளையும் பல வடிவங்களில் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசேர்த்த மாமனிதர் என்றும் மேன்மைகொள் சைவநெறியைப் பரப்புவதில் ஆர்வமுடன் செயல்பட்டவர் என்றும் இவரைப் போற்றலாம்.

 

திங்கள், 20 நவம்பர், 2023

மலேசியா, “இசைத்தென்றல்” நா. மாரியப்பன்

 

                     “இசைத்தென்றல்” நா. மாரியப்பன் 

இணையவெளியில் உலவிக்கொண்டிருந்தபொழுது 2023 சூன் திங்கள் 10, 11 நாள்களில் (காரி, ஞாயிறு) மலேசியாவின் ஈப்போ மாநகரில்  மரபு கவிதை மாநாடு நடைபெற உள்ளது என்ற குறிப்பைப் படித்து, மாநாட்டுக் குழுவினரைத் தொடர்புகொண்டேன்மாநாட்டு ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான முனைவர் குமரன் வேலு அவர்களைத் தொடர்புகொண்டு, தங்குமிடம், உணவு, போக்குவரவு குறித்த உதவிகள் சிலவற்றைக் கேட்டேன். அவர்களும் மகிழ்ச்சியாக உதவ முன்வந்தார்கள். கோடை விடுமுறைக் காலம் என்பதால் அயல்நாடு செல்வதில் இடர்ப்பாடு இருக்காது என்று செலவுத்திட்டம் வகுத்துக்கொண்டேன். மலையகச் செலவும் உறுதிப்பட்டது. மரபு கவிதை வளர்ச்சிக்குத் தனித்தமிழ் இயக்கத்தாரின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வரைந்து மாநாட்டுக் குழுவுக்கு விடுத்தேன். கட்டுரையும் ஏற்கப்பட்டது. 

மாநாட்டில் கட்டுரை படிப்பது ஒரு காரணமாக இருந்தாலும் அங்கு வாழ்ந்துவரும் என் மூத்த நண்பர்கள் சிலரைக் கண்டு உரையாடுவதும், அவர்களிடமிருந்து தமிழிசை சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் சிலவற்றைப் பெற்று வருவதும், மலையகத்தின் மாண்புறு அழகுக் காட்சிகளைக் கண்டு வருவதும் என் செலவின் உள்நோக்கமாக இருந்தன. 

மலேசியாவில் வாழ்ந்துவரும் மூத்த இசையறிஞர் இசைத்தென்றல் நா. மாரியப்பனார்க்கு என் வருகையை முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவரைக் காண்பதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்பாக அவர் இல்லத்துக்கு அருகில் தங்கும் அறை இருக்குமாறு விடுதியில் முன்பதிவு செய்திருந்தோம். என் இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் உருவாக்கத்தின்பொழுது உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் இசைக்கலைஞர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் இசை வாழ்க்கையையும் பணிகளையும் அறிந்து, அவர்களை நேரில் காணும் வாய்ப்புக்கு ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த வகையில் மலேசியாவில் வாழ்ந்துவரும் இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தொடர்பு கிடைத்தவுடன்  ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவருடன் உரையாடுவதும் அவர்தம் முக்கால் நூற்றாண்டு(எழுபத்தைந்து ஆண்டு) இசைப்பயணத்தை அறிவதும் என் வழக்கமாக இருந்தது. 

ஈப்போவில் முன்பே  நடைபெற்ற ஒரு  மாநாட்டில் நா. மாரியப்பனாரைக் காணும் வாய்ப்பு அமைந்தாலும் அவருடன் நெருங்கி உரையாடவோ, அவர்தம் கடலளவு இசையறிவை அறிந்துகொள்ளவோ அன்றைய நாளில் பொழுது வாய்க்கவில்லை. அந்த மாநாட்டில் பகலுணவு நேரத்தில் அவரின் இசைப்பொழிவு இருந்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் உணவுக்கூடம் நோக்கி ஓடினோமே தவிர, தேனொத்த அவர்தம் இசைநிகழ்வைக் கேட்டோமில்லை. இசைத்தென்றலின் இசைமழை பாலைநிலைத்தில் பெய்த பெருமழையாகப் பயனற்றுப் போனது. எனவே, அடுத்த முறை மலேசியா வரும்பொழுது இசைத்தென்றல் நா. மாரியப்பனாரைச் சந்திக்க வேண்டும் என்ற வேட்கையை முதன்மை நோக்கமாக அடைகாத்து வைத்திருந்தேன். 

09.06.2023 மாலை நேரத்தில் மலேசியாவின் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கினேன். அங்கு வந்து என் உயிர்த்தோழர் ம. முனியாண்டி ஐயாவும் மாணிக்கம் சொக்கலிங்கம் ஐயாவும் இரவிச்சந்திரன் ஐயாவும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்கள் கொண்டுவந்திருந்த மகிழுந்தில் ஏறிக்கொண்டேன். கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்சு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, அன்பர்கள் குழு என்னிடம் விடைபெற்றது. 

மலேசியாவின் பிரீக்பீல்ட்சு நகருக்கு வந்துள்ளதையும் விடுதியில் தங்கியிருக்கும் விவரத்தையும், விடுதியின் பெயரையும் சொல்லி, இசைமேதை நா. மாரியப்பனாரைச் சந்திக்க விரும்பும் ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டேன். விவரங்களைக் கேட்டறிந்த ஐயா அவர்களே நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, கீழ்த்தளத்தில் வினவிப் பார்த்துள்ளார்கள். கீழே இருந்த தமிழக அன்பர்கள் சிலர் என் வருகை குறித்த விவரத்தை ஐயாவிடம் சரியாகத் தெரிவிக்காத காரணத்தால் என்னைச் சந்திக்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். நான் குளித்து முடித்து, மீண்டும் ஐயாவுடன் தொடர்புகொண்டேன். மீண்டும் அவருடன் உரையாடி, விவரங்களைப் பெற்று அருகில் இருந்த இல்லத்துக்கு நானே தேடிச் சென்றேன். ஐயாவும் என் வருகைக்காக அங்கிருந்த கோவில் முகப்பில் அமர்ந்து  காத்திருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு, தம் குடியிருப்பு நோக்கி ஆர்வமாகச் சென்றார்கள்.

 

நா. மாரியப்பனார், மு. இளங்கோவன்

நா. மாரியப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

நா. மாரியப்பன் அவர்கள் மலேசியாவின் பினாங்கில் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் பெயர் நாகப்பன், பொன்னம்மாள். பினாங்கு, ஆயர் ஈத்தாம் ஊரில் இருந்த மாரியம்மன் கோவில் நினைவாக இவருக்கு மாரியப்பன் என்ற பெயர் அமைந்தது. ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். இவரின் தமிழ் ஆசிரியராக வாய்த்த கா.கு. மாணிக்க முதலியார் அவர்களின் ஊக்குவிப்பில் இசை ஈடுபாடு இவருக்கு அமைந்தது. இளம் அகவையில் நடிப்பாற்றலும் மாரியப்பனார்க்கு இருந்தது. மாரியப்பனாரின் தந்தை நாகப்பன் அவர்கள் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம்,  நன்னிலம் வட்டம் பாப்னஞ்சேரியில் பிறந்தவர். அம்மா காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர். 

மாரியப்பனார் ஏழாம் வகுப்பு கல்விக்குப் பிறகு, தம் தந்தையார் ஊரான பாப்னஞ்சேரிக்கு வந்து, நாடகக் குழுவில் இணைந்து பயிற்சிபெற விரும்பினார். இராமநாதபுரத்தில் இருந்த ஸ்ரீதேவி நாடக சபாவில் சேர்ந்தார்.  மூன்று ஆண்டுகள் இந்தக் குழுவில் இணைந்து இராமநாதபுரம், குளித்தலை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி முதலிய ஊர்களில் தங்கி, நாடகத்தில் நடித்தார். பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பாடல்களைக் கேட்டு, பயிற்சிபெற்றார். 1954 இல் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பினார். பினாங்கு மாணவர் மணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். இவரிடமிருந்த இசைப்புலமையை அறிந்து, இவருக்கு மலேசிய வானொலியில் இசையமைக்கவும், பாடவும் வாய்ப்புகள் அமைந்தன. நாடகமேதை டி.கே. சண்முகம் அவர்கள் மலேசியாவின் பினாங்குக்குச் சென்றபொழுது நம் மாரியப்பனார்  “தாமரை பூத்த தடாகமடி” என்ற பாடலை இனிய இசையுடன் பாடினார். பாடலில் ஈர்ப்புற்ற டி.கே. சண்முகம், தாம் கடிதம் தருவதாகவும் தமிழகம் சென்று எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்குமாறும் சொன்னார். அவரிடம் கடிதம் பெற்றுக்கொண்டு மாரியப்பன் அவர்கள்  தமிழகம் வந்தார். 

1957 முதல் 1970 வரை சென்னையில் தங்கிப், பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பழகவும் பாடவும் வாய்ப்புகளைப் பெற்றார். எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சிதம்பரம் ஜெயராமன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது. இசையறிஞர் எம்.கே. ஆத்மநாதன் அவர்களைத் தம் குருநாதராகக் குறிப்பிடும் மாரியப்பனார் அந்நாளில் ஒரு பாடல் பாடினால் ஏழரை ரூபாய் ஊதியம் கிடைக்கும் என்கின்றார். சென்னை வானொலியிலும், சென்னையில் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பாடியுள்ளார். 

மாரியப்பன் அவர்கள் 1960 ஆம் ஆண்டில் சாந்தா அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். 1. தமிழ்ச்செல்வி, 2. துருவன், 3. தாமரைச்செல்வி. சென்னையில் பிறந்த இவர்கள் மூவரும் முறைப்படி சென்னையில் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்கள். 

1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவுக்குச் சென்று, ரெ. சண்முகம் அவர்களின் அறிமுகத்துடன் திரு. பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, மாதம் 32 பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் எனவும் அதற்குரிய சம்பளம் 300 வெள்ளி எனவும் உறுதிப்படுத்தப்பட்ட அதன் அடிப்படையில் மலேசிய வானொலிக்கு இசையமைக்கத் தொடங்கினார். அதற்காகச் சிவரஞ்சனி இசைக்குழு உருவாக்கிச் செயல்பட்டார். இக்குழுவில் 12 இசைக்கலைஞர்கள் இணைந்து பணிபுரிந்தனர். 

இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தமிழிசைப் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விருதுகளும் பட்டங்களும் வழங்கியுள்ளனர். அவை: 

1.       இசைத் தென்றல் பட்டம் - பினாங்குத் தமிழிளைஞர் மணிமன்றம் (1956)

2.       சிறந்த இசையமைப்பாளர் விருது - ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி (2010)

3.       திருக்குறள் இசைமணி - திருக்குறள் ஆராய்ச்சி மையம்

4.   வாழ்நாள் சாதனை - கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம் 

மேற்கண்ட செய்திகளை அவரின் வாய்மொழியாக அறிந்துகொள்ள முடிந்தது.  ஒவியர் எஸ். சந்திரன் அவர்களின் நூலிலும் இச்செய்திகள் பதிவாகியுள்ளன. 

இசைத்தென்றல் மாரியப்பனார் அகவை முதிர்ந்த நிலையிலும் இசைப்பாடல்களை நாள்தோறும் இசைத்து, பயிற்சி செய்துகொண்டுள்ளார்கள். இசை ஈடுபாட்டுடன் அவரைக் காணச் சென்ற என்னைக் கண்டதும் அளவிலா மகிழ்ச்சியுற்றார்கள். தம் வாழ்நாள் பணிகளைச் சற்றொப்ப இரண்டு மணிநேரம் விவரித்துப் பேசினார்கள். கைபேசியில் பதிந்துகொண்டேன். சில படங்களும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்.

 

நா. மாரியப்பனார் 2004 ஆம் ஆண்டில் இசைத்தென்றல் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டதைச் சொல்லி, அந்த நூலின் படியினையும் எனக்கு வழங்கினார். டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு ஐயாவின் வாழ்த்துரை அந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றது. 

பினாங்கில் பிறந்து வளர்ந்த மாரியப்பனார் பலவாண்டுகள் தமிழகத்தில் தங்கி, இசைப்பயிற்சி, நாடகப்பயிற்சி பெற்றுள்ளார். மலேசிய வானொலியில் பணியாற்றிய காலத்தில் கவிஞர்கள் பலரை இசைப்பாடல் எழுதச்செய்து அதற்கு இசையமைத்து, வானொலியில் உலவ விட்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் பல்லாயிரம் பாடலுக்கு இசையமைத்துள்ள இப்பெருமகனாரின் இசை ஆவணங்கள் போற்றிப் பாதுகாக்காமல் போனதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. சிதறிக் கிடந்த பாடல்களுள் கையினுக்குக் கிடைத்த பாடல்களை மட்டும் தொகுத்து இசைதென்றல் என்னும் பெயரில் நூலாக்கி, 282 பக்கத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூல் 2004 இல் வெளிவருவதற்கு மலேசியத் தமிழ்த்தொண்டர் காரைக்கிழார் அவர்களின் துணை பெரிதும் உதவியுள்ளது. 

இசைத்தென்றல் நூலில் கவிச்சுடர் காரைக்கிழாரின் 34 பாடல்களும், மணிக்கவிஞர் பாதாசனின் 21 பாடல்களும் வண்ணக்கவிஞர் திருவரசு, எழுச்சிக்கவிஞர் தீப்பொறி, புதுமைக் கவிஞர் பூபாலன், கவிஞர் இளமணி, கவிஞர் காசிதாசன், கவிப்புயல் வேலுசாமி, கவிஞர் அரசன் கனி, கவிஞர் வீரமான் உள்ளிட்ட 17  பெருங்கவிஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மலேசிய நாட்டின் தமிழ் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியையும் தமிழிசை வளர்ச்சியையும் அறிவதற்கு  இந்த நூல் பெரும் ஆவணமாக உள்ளது. 



இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் இசைப்பணிகளுள் முதன்மையானதாகத் திருக்குறளை இனிய இசையில் பாடி வழங்கியுள்ளதைக் குறிப்பிட வேண்டும். 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு குறட்பா வீதம் 133  திருக்குறளை இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராகங்களில் பாடி ஒலிவட்டில் வழங்கியுள்ளமை இவர்தம் இசைப்புலமைக்கு எடுத்துக்காட்டாகும். “அகர முதல எழுத்தெல்லாம்” எனத் தொடங்கும் குறட்பாவைப் பூபாள இராகத்தில் இனிமையுடன் பாடித் தந்துள்ளார். மோகனப் பண்ணிலும் பல குறட்பாக்கள் பாடப்பட்டுள்ளன. ஏழாம் வகுப்பு மட்டும் கல்வியறிவு பெற்ற நா. மாரியப்பனாரிடம் மிகச்சிறந்த இசையறிவு இருப்பதை இவருடன் உரையாடியபொழுது அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு இசையறிஞர்கள் பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், கண்டசாலா, டி.எம்.சௌந்தரராஜன், சிதம்பரம் ஜெயராமன், கிட்டப்பா, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி, பி,பி. ஸ்ரீனிவாஸ், தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன் என்று அத்தனைக் கலைஞர்களைப் போலவும் பாடும் ஆற்றல் பெற்றவர். மேற்கண்ட ஒவ்வொருவரின் குரலையும் வயப்படுத்தி வைத்துள்ள மாரியப்பனார் அவர்கள். நம் தமிழ்நாட்டுப்  பாடுதுறை வல்லுநர்களைப் போலவே பல பாடல்களைப் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார். 

தொண்ணூறு அகவையிலும் ஒவ்வொரு நாளும் பாடுவதும், பயிற்சிபெறுவதுமாக இருக்கும் இந்தத் தமிழ் இசைமேதையை உலகத் தமிழர்கள் போற்றிப் புரப்பது நம் தலைக்கடனாகும்.