நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 மே, 2020

புலவர் சீனு. இராமச்சந்திரன் மறைவு!


தமிழ் மாமணி புலவர் சீனுஇராமச்சந்திரன்

 புதுச்சேரியின் புகழ்மிக்க புலவர்களுள் முதன்மையானவரான புலவர்  சீனு. இராமச்சந்திரன் அவர்கள் இன்று (01.05.2020) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். புதுச்சேரிக்கு நான் படிக்க வந்ததுமுதல்(1992) புலவர் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு அமைந்தது. பணியின் பொருட்டு யான் புதுவையில் தங்க நேர்ந்த பிறகு(2005) அத்தொடர்பு வேர்விட்டு நிலைபெற்றது. நாங்கள் நடத்தும் அனைத்து விழாக்களிலும் புலவர் அவர்களின் வருகை கட்டாயம் இருக்கும். என் ஆவணப்பட முயற்சி, உலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள், அறிஞர்களுக்கு அமையும் பாராட்டு விழாக்களில் புலவர் சீனு.இராமச்சந்திரனார் கலந்துகொண்டு நெஞ்சார வாழ்த்துவார்கள். சிலபொழுது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாங்கள் உரிமையுடன் கொடுக்கும் பொறுப்புகளை மிகச் சிறப்பாக ஏற்றுத் திறம்பட நடத்தி, நிகழ்ச்சி சிறக்க உதவுவார்கள். தமிழ்ப்பற்றும், இலக்கிய ஈடுபாடும் கொண்ட புலவர் பெருமகனாரை எப்பிறப்பில் காண்போம் இனி! என்று கலங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

 தொல்காப்பியத் தொண்டர் விருதினை அமெரிக்க அறிவியலாளர் முனைவர் நா.க. நிதி அவர்களுக்கு வழங்கும் விழாவுக்குப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் வருகை தந்தபொழுது, அமைச்சர் அவர்களை எங்கள் சார்பாக அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். நம் அமைச்சர் பெருந்தகையார் அவர்களும் புலவர் சீனு. இராமச்சந்திரன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, உள்ளன்புடன் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். புலவர் அவர்களுக்கு அமைச்சர் அவர்களின் முழுமையான அன்பு பரிமாறப்படுவதை அறிந்து அவையோர் மகிழ்ந்து போற்றினர். அதுபோல் பல்வேறு நிகழ்வுகளை எம்மால் நினைவூட்ட இயலும்.


பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் 
புலவர் சீனு. இராமச்சந்திரன் அவர்களைச் சிறப்பித்தல்

எங்களின் இல்லம் வந்து வாழ்த்திச் செல்லும் இயல்புகொண்டிருந்த புலவர் சீனு. இராமச்சந்திரனார் அவர்களின் தமிழ் வாழ்க்கையை முன்பே நான் எழுதியுள்ளேன். அவரின் தமிழ்ப்பணியினை உலகோர் அறியும் வகையில் மீண்டும் அதனைப் பதிவு செய்கின்றேன்.


எம் நிகழ்வுக்கு வருகைபுரிந்த புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்களைத் தூ.சடகோபன் அவர்கள் வரவேற்கும் காட்சி

புலவர் சீனு. இராமச்சந்திரன் தமிழ் வாழ்க்கை


 புதுவையில் எண்ணற்ற தமிழ்ப்புலவர் பெருமக்கள் தோன்றித் தமிழ்மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அப்புலவர்கள் வரிசையில் போற்றத்தக்கவர் புலவர் சீனு. இராமச்சந்திரன் ஆவார். தமிழாசிரியராகப் பணியாற்றியும், பல்வேறு நூல்களைப் படைத்தும், பல்வேறு இலக்கிய அமைப்புகளைத் தலைமைதாங்கி நடத்தியும் தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்த புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக்குறிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சியில் உள்ள வீமக்கவுண்டர்பாளையம் செ.சீனுவாசன் - எல்லம்மாள் இணையர்க்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர் சீனு. இராமச்சந்திரன். 1945 இல் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு வட்டம் செட்டிப்பட்டு என்னும் சிற்றூரில் வாழ்ந்த திரு.குப்புசாமி ஆசிரியரிடம் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். 1946-47 இல் புதுச்சேரி நகரில் எக்கோல் பிரைமர் (இன்றைய .உசி. பள்ளி) பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர்.

1954-55 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் புகுமுகத் தேர்வும் 1956-60 வரை மயிலம் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டமும், அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் (புலவர்) பட்டமும் பெற்றவர்.

16.06.1961 இல் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள இராசா மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, செங்கற்பட்டு, சென்னை, திருக்கோவலூர், சித்தலம்பட்டு ஆகிய ஊர்களில் பணியாற்றி, வழுதாவூர் அரசு மேனிலைப்பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் கடமையாற்றியவர்.

1959 இல் தமிழரசுக் கழகம் சார்பில் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை அமைத்து வீமக்கவுண்டர்பாளையம், திலாசுப்பேட்டையில் வீதியுலா வரச்செய்த பெருமைக்குரியவர்.

திருநாவுக்கரசர், பாவலன் தந்த பரிசு, பொற்கொடி, கோவூர்கிழார், குறுகுடி, மெய்ப்பொருள் நாயனார், பள்ளியும் ஒருவீடு, சேக்கிழார், யார் இந்தக் கண்ணகி, செந்தமிழ்ப்பாவை, ஊருக்குப் பெரியவர், ஆசையின் விளைவு ஆகிய 13 நாடகங்களை எழுதியும் நடித்தும் அரங்கேற்றிய பெருமைக்குரியவர்.

 1961 இல் சிலம்புச் செல்வர் .பொ.சி.அவர்களின் செங்கோல் இதழில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர். எழில்நிலவன் என்ற புனைபெயரிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.

1963 செப்டம்பர் இரண்டாம் நாள் சரசுவதி என்னும் அம்மையாரை மணந்து, இல்லற வாழ்வின் பயனாய்ச் செங்குட்டுவன், கண்ணகி, இளவரசு, எழிலரசி என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்று வளர்த்த பெருமைக்குரியவர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடந்த பல்வேறு விழாக்களில் தலைமைப் பொறுப்பேற்றும், கவிதைகள் வழங்கியும் உரையாற்றியும் தமிழ்ப்பணியாற்றியவர்.  பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு ஏகிய செம்மலாகவும் விளங்கியவர்.

 புதுவை அரசின் பட்டயம், தமிழ் மாமணி விருது (2004), தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். புதுவைக் கம்பன் கழகம், புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு, கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் தகுதி வாய்ந்த பொறுப்புகளை ஏற்றவர்.

 புதுவை அரசு தில்லி பாரதிதாசன் சிலை அமைப்புக்குழு, பாரதியார் 125 விழாக்குழு, கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக்கிச் சிறப்பித்தது. புதுவையில் பாரதி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

புதுவை மேனாள் முதல்வர் மாண்புமிகு .அரங்கசாமி, மேனாள் நடுவண் அமைச்சர் சா. செகத்ரட்சகன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கிய புலவர் சீனு.இராமச்சந்திரனார் அவர்கள் புதுவையில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வெளிப்படுத்தியவர்.

பெருஞ்செல்வந்தர் குடியில் தோன்றிய புலவர் சீனு. இராமச்சந்திரனார் நினைவாக அவர் இல்லம் அமைந்த தெருவுக்குப் புலவர் தெரு என்று பெயரிட்டு மக்கள் வழங்குகின்றனர்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மலேசியக் கல்வியாளர் மன்னர் மன்னன் மருதை


மன்னர் மன்னன்

மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றும் பெரும்பான்மையர்க்கு நன்கு அறிமுகமான பெயர் மன்னர் மன்னன் என்பதாகும். மன்னர் மன்னன் அவர்களின் தந்தையார் மருதை எனப்பட்ட சி.செ. மதுரைவீரன் அவர்கள் தமிழகத்தின் மதுரையை அடுத்திருக்கும் நத்தம் பகுதியில் அமைந்த சிறுகுடி என்னும் ஊரிலிருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். நகைத்தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து சென்றாலும், மலேசியாவில் வெளிவாரி வேலைகளைச் செய்து இவர் வாழ்ந்து வந்தார். நற்பண்பும், நல்லொழுக்கமும் கொண்ட மருதை அவர்கள் திராவிட இயக்கக்  கொள்கைகளிலும் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் மீதும் பேரீடுபாடு கொண்டவர். பாவேந்தர் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மருதை, மனப்பாடமாக அவர் கவிதைகளைச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். தம் பெண் குழந்தைகளுக்குப் பாவேந்தரின் தாலாட்டுப் பாடல்களைச் சொல்லி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். தமிழ்ப் பற்று நிறைந்திருந்த மருதை தம் தலைமகனுக்குப் பெயராக மன்னர் மன்னன் என இட்டு வழங்கினார். அறிஞர் அண்ணா மீது கொண்ட ஈர்ப்பால் தம் இன்னொரு மகனுக்கு அண்ணாதுரை எனவும், இன்னொரு மகனுக்கு நெடுஞ்செழியன் எனவும் பெயரிட்டு மகிழ்ந்தார் மருதை ஐயா.

அறிஞர் அண்ணா அவர்கள் மலேசியா சென்றிருந்தபொழுது, அவரைக் காண்பதற்குக் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. அறிஞர் அண்ணாவின் மெய்க்காப்பாளரையும் தள்ளிக்கொண்டு, மக்கள் அண்ணாவைக் காண முன்னேறினர். அண்ணாவின் மெய்க்காப்பாளர் என்று ஒருவர், நம் மருதை ஐயாவை தடுத்து நிறுத்தி, நான் அண்ணாவின் மெய்க்காப்பாளர்!. முன்னேறி வராதீர்கள் என்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார். “நீங்களோ மெய்க்காப்பாளர்”. “நான் அண்ணாவின் உயிர்க்காப்பாளர்” என்று கூறியபடி அண்ணாவை நெருங்கி, நேரில் பார்த்து மகிழ்ந்தார் மருதை என்ற மதுரைவீரன். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட மருதை அவர்கள் தம் இன்னொரு மகனுக்கு இளந்தமிழ் என்று பெயரிட்டுத் தம் தமிழ்ப்பற்றை நிலைப்படுத்தியுள்ளார்.

மன்னர்மன்னன் அவர்கள் தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழுக்கு இந்த நிமையம் வரை தம்மால் இயன்ற அரும்பணிகளைச் செய்து வருகின்றார். மலேசியத் திருநாட்டில் இன்று தமிழாசிரியர்களாக இருக்கும் ஈராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம் மன்னர் அவர்களின் மாணவர்களாக இருப்பார்கள். அல்லது இவரின் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். மன்னர் மன்னன் பல்வேறு அமைப்புகளில் மதியுரைஞராகவும், பொறுப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து பல்வேறு பணிகளைச் செய்து வருபவர்.

பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, மலேசிய இளைஞர் பேரவை, பெட்டாலிங் ஜெயா,  விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர் சங்கம், பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ உத்தாமா இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மலேசியத் தமிழ் அறவாரியம்,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து இவராற்றிய பணிகள் மலேசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும்.

2013 ஆம் ஆண்டு சூன் திங்கள் மலேசியாவில் நடைபெற்ற 10 ஆம்  உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றும், 2018 சூன் திங்கள் மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றும் இவர் நடத்தியுள்ள மாநாடுகள் என்றும் நினைவுகூரத் தக்கனவாகும்.

சற்றொப்ப இருபதாண்டுகளாக மன்னர் மன்னன் அவர்களுக்கும் எனக்குமான நட்பு அமைந்துள்ளது. அவர்தம் தொடர்பையும் அவரின் தமிழ்ப்பணிகளையும் இப்பதிவில் நினைவுகூர்கின்றேன்…

சிங்கப்பூரில் 2001, செப்டம்பர் முதல் கிழமையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் முதன் முதல் நல்லாசான் மன்னர் மன்னன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமைந்த மலேசியச் செலவில் முனைவர் முரசு. நெடுமாறனார் இல்லத்தில் நான் தங்கியிருந்தபொழுது, மன்னர் அவர்களின் அழைப்பில் அவர் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்கள் நடுவண் உரையாற்றினேன். அன்று தொடங்கிய தொடர்பும், நட்பும் உறவும், வாழ்நாள் கடந்தும் நிலைபெறத் தக்கனவாய், “நிறைநீர நீரவர் கேண்மையாய்” வளர்ந்தவண்ணம் உள்ளன.

மன்னர் மன்னன் அவர்கள் தமிழகத்திலிருந்து செல்லும் தமிழார்வலர்களைத் தாங்கிப் பாதுகாக்கும்  பேருள்ளம் கொண்டவர். மொழியியல் அறிஞர் கி. கருணாகரன் அவர்கள் மலேயா பல்கலைக் கழகத்தின் மொழியியல் புலத்தில் பணியாற்றியபொழுது மன்னர் மன்னன் பேராதரவு காட்டித் துணைநின்றவர். அதுபோல் தமிழகத்துப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள் மலேசியா செல்லும்பொழுது மன்னர் அவர்களின் விருந்தோம்பலிலும், அன்பிலும் திளைத்திருப்பார்கள்.

மலேசியாவில் என் நூல்கள் வெளியிட்ட பொழுதும், ஆவணப்படங்கள் வெளியிட்டபொழுதும், தமிழ்க் கணினிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றபொழுதும் உலகத் தொல்காப்பிய மன்றத் தொடக்க விழாவின் பொழுதும் மன்னர் மன்னன் அவர்கள் செய்த உதவிகளை யானும் என் குடிவழியினரும் என்றும் நினைவுகூர்வோம். அவ்வுதவிகளின்  நன்றிப் பெருக்கின் அடையாளமாகச் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற என் நூலொன்றை மன்னர் அவர்களுக்குப் படையலிட்டு உவந்துள்ளேன். அதுபோல் தமிழகத்திற்கு மன்னர் அவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் வாய்ப்புக்கு ஏற்பக் கண்டு மகிழ்வது என் வழக்கம்.

மன்னர் மன்னன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:

மன்னர் மன்னன் அவர்கள் மலேசியாவில் வாழ்ந்த மருதை, சிட்டு அழகிரிசாமி என்னும் பெற்றோரின் தலைமகனாக 19.02.1954 பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் பதின்மர். அனைவரும் மலேசியாவில் நன்முறையில் வளர்ந்தவர்.

கல்வி:

மன்னர் மன்னன் பெட்டாலிங்கு செயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில்,  6 ஆண்டுகள் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். - 7 ஆண்டுகள் இடைநிலைக் கல்வியை MCE இல் பயின்று முதல் நிலைத் தேர்ச்சி (1967-1973) பெற்றவர். ஸ்ரீ கோத்தா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் (1976/77) பயின்று தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர். STPM தேர்வினைத் (1978/79) தாமே படித்துத் தேர்ச்சி அடைந்தவர். 1982 – 1985 ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக் கழகத்தில்,   மலாய் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் (BA Hons. )  1991-1995 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில்  முதுகலைப் பட்டமும் (MMLS) பெற்றவர்.
மன்னர் மன்னன்(கோப்புப் படம்)

ஆசிரியர் பணி

கல்வியில் ஈடுபாட்டுடன் விளங்கிய மன்னர் மன்னன் 1974 - 1975  ஆம் ஆண்டில் செந்தூல், சுங்கைபீசி, பூச்சோங் தமிழ்ப் பள்ளிகளில் தற்காலிகத் தமிழ் ஆசிரியராகப் பணியேற்றவர்.  1978 – 1982 இல் இரவாங் தமிழ்ப் பள்ளியில்  ஆசிரியராகப் பணியாற்றியவர். 1985 – 1987 இல் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் மலேசிய மொழியும், மலாய் இலக்கியமும் கற்பித்தல் பணியைச் செய்தவர். 1987 ஆம் ஆண்டு முதல் 2004 வரை பதினேழரை ஆண்டுகள் கோலாலம்பூர்,  லெம்பா  பந்தாய், ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும், சிரம்பான் இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ் விரிவுரைஞராகப் பணியாற்றியவர். இக்கால கட்டத்தில் இவரிடம் பயிற்சி பெற்ற ஏறத்தாழ 2000 தமிழ் ஆசிரியர்கள் இன்று நாடு முழுமையும் பல்வேறு நிலைகளில் கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

2005 முதல் 2018 வ்ரை மலாயாப் பல்கலைக்கழகத்தின்  மொழி-மொழியியல் புலத்தில் ஆசிரியர் பணியாற்றியவர். 2005 முதல் இந்நாள்வரை மலேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் ப்குதி   நேர விரிவுரைஞராகவும் இணையவழி நேரடிக் கற்றல் தள போதனையாளராகவும் இருந்துவருகிறார் இவரின் பணிக்காலத்தில் பல நூறு மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்.

இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா(1986), இந்தோனேசியா(1991), மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி, அலுவல்சார் பயணங்களை மேற்கொண்டவர்.

மன்னர் மன்னன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணியாற்ற உள்ளன்போடு வாழ்த்தி மகிழ்கின்றேன்!