நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 மார்ச், 2016

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…

பேராசிரியர் வீ..கா. சுந்தரம்  அவர்கள்

    2003, மார்ச்சு 9 இல் நம் இசைமேதை வீ..கா. சுந்தரம் அவர்கள் நம்மையெல்லாம் பிரிந்து, இயற்கை எய்தினார். இன்று அவரின் நினைவுநாள். ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும். அவரின் உழைப்பையும், ஆராய்ச்சி வன்மையையும் நினைக்கும்பொழுதெல்லாம் நான் வியப்படைவேன். தமிழிசையை மீட்பதில் அவர் மேற்கொண்டிருந்த பணிகள் என் நினைவில் தோன்றி, கண்ணில் நீர் உகுக்கின்றன. மிகப்பெரும் இசைப் பெருமையைக் கொண்டிருந்த இத்தமிழினத்தார் தன் சிறப்பை உணராமல் இன்றும் இருந்துவருகின்றனர். இச் சூழலில் ஆபிரகாம் பண்டிதர். சுவாமி விபுலானந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார், வீ..கா. சுந்தரம் போன்ற அறிஞர்களின் உழைப்பைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடாமல் வீணர்களின் ஆர்ப்பாட்ட இரைச்சல்களுக்கு மயங்கிக் கிடப்பது வருத்தம் தருகின்றது.

  இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமிழிசை ஆய்வினைத் தொடர்வதற்கு அறிஞர்கள் யாரும் இன்று நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாரேனும் ஆய்வில் ஈடுபட முன்வந்தாலும் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க அண்ணாமலை அரசர், அருட்செல்வர் நா. மகாலிங்கம் போன்ற வள்ளல்களும் இன்று இல்லை.

  திரைக்கூத்தர்கள், அரசியல்காரர்கள், பணத்தில் புரளும் கல்வியாளர்கள் நடுவே வீ.ப.கா.சுந்தரம் போன்ற இசை மேதைகளின் ஆராய்ச்சியை விளங்கிக்கொள்ள நூற்றாண்டுகள் தேவைப்படும். அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் வழியில் ஆய்வை முன்னெடுக்க இயலும். அவர்தம் பிற நூல்களைப் புரிந்துகொண்டால் பரந்துபட்ட ஆராய்ச்சிக் களங்களை அடையாளம் காணலாம். உலக அளவில் எந்த மொழியிலும் இசைக்கெனக் கலைக்களஞ்சியம் இல்லை என அறிகின்றேன். குறிப்பாக இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் கலைக்களஞ்சியம் இல்லை என்று வீ.ப.கா.சுந்தரம் கூறி, தமிழில் மட்டும் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பெருமிதம் பொங்க எடுத்துரைப்பார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் பணிகளை மதிப்பிடும்பொழுது, மறைந்து கிடந்த பழந்தமிழிசை உண்மைகளைத் துலக்கிக் காட்டியமையை முதன்மைப் பணியாகக் குறிக்கலாம். அதுபோல் அறிஞர்கள் இசைகுறித்துத் தவறான விளக்கம் சொன்ன இடங்களை நமக்கு அடையாளம்காட்டி, அதற்குரிய உண்மையை நிறுவியுள்ளமையை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.


  மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினை(1981)ஒட்டி வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆக்கிய, “இன்று இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொல்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ்ச்சொல்கள்” என்னும் நூலில் நமக்குத் தொகுத்து வழங்கியுள்ள இசைத்துறையில் புழக்கத்தில் உள்ள வடசொற்களும், அவற்றிற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் அவர்தம் தமிழிசைப் பற்றைக் காட்டும் சான்றாக உள்ளன.

  தமிழக அரசு பலதுறை அகராதிகளை வெளியிட்டது. ஆனால் இசைத்துறை அகராதியை வெளியிடவில்லை என்று கவலைகொண்டு இந்த அகராதியை வீ.ப.கா.சு. வெளியிட்டுள்ளார். 1.கோவை(சுரம்) 2. ,பண்ணுப் பகுப்பு இயல், 3. பண்ணுப்பெயர்த்தல் இயல், 4. பொருந்து இசைக் கோவை இயல், 5. பண்ணில் சில இயல்கள், 6. ஆளத்தி இயல், 7. தாள உறுப்பு இயல், 8. முழக்குக் கோல இயல், 9. முழக்குப் பரப்பு இயல் என்ற தலைப்புகளில் இசையுலகில் செல்வாக்குடன் உள்ள வடசொற்களை அடையாளம் காட்டி, அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து தென்னக இசையை மீட்கும் ஒரு கருவி நூலாக இதனை ஐயா அவர்கள் தந்துள்ளார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைப் பணியையும் வாழ்வையும் இத் தமிழுலகுக்கு ஆவணப்படுத்தி வழங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று அவரின் நினைவுநாளில் உறுதியேற்போம்!


சனி, 5 மார்ச், 2016

தேவார இசையாளர் ப. சம்பந்தம் குருக்கள்..



ப. சம்பந்தம் குருக்கள்


ஓராண்டுக்கு முன்பு இலண்டனிலிருந்து திரு. தம்பு அண்ணன் தொலைபேசியில் அழைத்து, உங்களிடம் சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண் இருகின்றதா? என்று கேட்டார்கள். சம்பந்தம் குருக்கள் யார்? என்றேன். தேவாரம் பாடக்கூடியவர்; புதுச்சேரியில் உள்ளார் என்று மறுமொழி சொன்னார். புதுவையில் உள்ள சிவனிய நெறியில் சேர்ந்தொழுகும் பேராசிரியர் சிவ. மாதவன் அவர்களிடம் விவரம் சொல்லியதும் திரு. சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண்ணை எனக்குத் தந்தார்கள். சம்பந்தம் குருக்களின் செல்பேசி எண் உடன் இலண்டனுக்குச் சென்றது. ஓரிரு மாதங்களில் இலண்டன் அன்பர்களின் அழைப்பில் நம் குருக்கள் அவர்கள் இலண்டன் பறந்து, திருமுறை ஓதித் திரும்பினார் என்பது பழைய செய்தி.

திரு. சம்பந்தம் குருக்கள் அவர்களின் செல்பேசி எண் தெரிந்தவுடன் அவருடன் தொலைபேசியில் பேசி அவர்களின் இசையீடுபாடு அறிந்தேன். தமக்கு ஏற்பட்ட இசை ஈடுபாட்டையும், தாம் திருமுறைகளையும், திருப்புகழையும் பாடக் கற்றுக்கொண்ட முறைகளையும் இயல்பாக எனக்குச் சொன்னார்கள். ஓய்வாக இருக்கும்பொழுது சந்திக்க  நினைக்கும் என் விருப்பத்தைச் சொன்னதும் என் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஓராண்டாகியும் ஒரே ஊரில் இருந்தும் அவரைச் சந்திக்கும் செவ்வி அமையாமல் இருந்தது. இடைப்பொழுதுகளில் அவரின் பாடல்களைக் கேட்கும்பொழுதெல்லாம், செல்பேசியில் உரையாடி அவரைப் பாராட்டுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன்.

திருவாளர் ப. சம்பந்தம் குருக்கள் அவர்களின் திருமுறை இசையமிழ்தை இணையதளங்களின் வழியாகக் கேட்டு மகிழ்ந்தேன். படியெடுத்துப் பிள்ளைகளையும் கேட்கச் செய்தேன். எங்கள் மழலைச் செல்வங்கள் திருவாசகத்தில் இடம்பெறும்,

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்” (திருவாசகம்),

எனவும்,

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய் (திருவாசகம்),

எனவும் வரும் அம்மானைப் பாடல்களைக் கேள்வியறிவால் மனப்பாடம் செய்து, திருவாளர் ப. சம்பந்தம் குருக்கள் அவர்களின் வழியில்பாடி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். அதுபோல் திருவாசகத்தின் சிவபுராணத்தையும் அதே அமைப்பில் பாடி எங்களைத் திக்குமுக்காடச் செய்தார்கள். இப்பாடல்களை நாங்கள் பயிற்றுவிக்காமல் கேள்வியறிவால் மட்டும் அவர்கள் பாடினார்கள் என்று கூறுவதன் வழியாகப் . சம்பந்தம் குருக்கள் அவர்களின் தேனொத்த குரலின் சிறப்பை அறியும்படி அன்புடன் வேண்டுவன்.  ஆயிரம்முறை கேட்டாலும் ப. சம்பந்தம் குருக்களின் இன்னிசை நமக்குத் திகட்டாது. திருவாசகத்தை அவர் பாடும்பொழுது கரைந்துருகிப் பாடுவதைக் கேட்டார்க்கு அல்லால் அதன் இனிமை புலப்படாது.
ப.சம்பந்தம் குருக்கள்

ப. சம்பந்தம் குருக்கள் அவர்கள் சிதம்பரத்தை அடுத்துள்ள ஆடூரில் 02.06.1948 இல் பட்டீசுவர சிவாச்சாரியார் அவர்களுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர். காட்டுமன்னார்கோயில் அடுத்த இலால்பேட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். அதன் பிறகு 1966 இல் புதுச்சேரி வந்து, 1969 இல் வங்கியில் உதவியாளராகப் பணியில் இணைந்து, படிப்படியே மேலாளர் வரை உயர்ந்து 2007 இல் ஓய்வு பெற்றவர். தருமபுரம் சுவாமிநாதன் உள்ளிட்ட ஓதுவார்களிடம் முறைப்படி திருமுறை இசை பயின்ற இவர், இனிய குரலில் பாடிப், பலமணி நேரம் கேட்கக்கூடிய வகையில் பல ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். மூவர் தேவாரம்  8 மணி நேரம் கேட்கும் வகையிலும், திருவாசகம்(முழுவதும்) 9.30 மணி நேரம் கேட்கும் வகையிலும், திருப்புகழ் 3 மணி நேரம் கேட்கும் வகையிலும் சுந்தரர் தேவாரம்  4 மணி நேரம் கேட்கும் வகையிலும் பாடியுள்ளார். மேலும்  வண்ணச்சரபம் தண்டபாணி சாமிகள் கதிர்காமம் முருகன் தோத்திரப் பாடல்களையும் பாடியுள்ளார்.

. சம்பந்தம் குருக்கள் பாடிய திருமுறைப்பாடல்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி - ஒளிபரப்பப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், மொரீசியசு, இலங்கை, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று தம் இசைப்பணியைச் செய்துள்ளார். திருமுறை இசைநம்பி, தேன் தமிழிசையால் உருக்கும் தெய்வக் குரலோன், தெய்வத் தமிழிசைச் செல்வர், ஆதி சைவ அருளிசை மணி, திருமுறை இசைக் கலைநிதி, முதலான விருதுகள், பதக்கங்கள், பொற்கிழியினைப் பெற்றுள்ளார். சென்னை அண்ணாமலை மன்றத்தில் மூவர் தேவாரம் பண்முறையில் ஓதி ஆயிரம் உருபா பரிசு பெற்றவர். மதுராந்தகம் திருக்குறள் பீடம் சார்பில் இசைத்தென்றல் விருது பெற்றவர். திருமுறை இசைமாமணி, திருத்தொண்டர் மாமணி, தமிழ் வேத இசைமாமணி, பண்ணிசைக் கலாநிதி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர்.

ப. சம்பந்தம் குருக்கள் அவர்கள் தம் இசைப்பணிக்காக இலண்டன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மியான்மர், மொரீசியசு, தாய்லாந்து, பக்ரைன், கனடா நாடுகளுக்குச் சென்று, தமிழிசை பரப்பிய செம்மலாக விளங்குகின்றார். பெங்களூரில் உள்ள வாழும் கலை அமைப்புக்காகப் பத்தாண்டுகளாகப் பகுதி நேர இசையாசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

சென்ற கிழமை நான் ஏதோ ஓரு முதன்மைப் பணியில் மூழ்கிக் கிடந்தேன். ஒரு குறுஞ்செய்தி வந்தது. “புதுச்சேரியில் ஈசுவரன்கோயிலில் திருமுறைப் பாடல்களை இசைக்க உள்ளேன். வருக. . சம்பந்தம் குருக்கள்என்று இருந்தது. ஆர்வமுடன் சென்று, முதல் ஆளாக அமர்ந்து திருமுறைப் பாடல்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டேன். “தோடுடையை செவியன்தொடங்கி, “தந்தது என்தன்னை”, “நமச்சிவாய வாழ்கஎன்று அடுத்தடுத்துப் பாடி இசைவிருந்து வைத்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் தமிழ் பயின்றபொழுது, அருகில் இருந்த செஞ்சடையப்பர் கோவிலில் நாளும் மாலைப்பொழுதில் ஓதுவார் மூர்த்திகள் பாடிய பாடல்களைக் கேட்ட பொழுதுகளும், திருமடத்து அதிபர்களின் சமய உரைகளைக் கேட்ட நினைவுகளும் வந்துபோயின.


தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்கு மட்டும் உரியன அல்ல. சுவைப்பதற்கு உரியன என்று தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்கள் சொன்ன சொற்கள், இலக்கியங்களைப் . சம்பந்தம் குருக்கள் போன்ற இசையறிஞர்கள் இசையோடு பாடக் கேட்கும்பொழுது உண்மை என்று உணரலாம்.