நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 அக்டோபர், 2012

தமிழ் தெரியுமா? அந்திமழைத் தொடர் 2






இந்தப் பகுதியில் பழந்தமிழில் உள்ள இசை, கலை சார்ந்த சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு ஐந்துச் சொற்களுக்குச் சரியான பொருள் தெரிந்தால் தேர்ச்சிபெற்றவர் என்று கருதுங்கள். பத்துச் சொற்களுக்குப் பொருள்தெரிந்தால் முதல்தர மாணவர் நீங்கள்தான்!. எந்தச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லையா? இன்றே ஒரு அகரமுதலிக்கு முன்பதிவு செய்யுங்கள். அப்படியே கீழே உள்ள விடைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுங்கள்.

1.  கன்னம்: துளையிடுதல், காப்புக்கயிறு, மாம்பழப் பகுதி, உடல் உறுப்பு
2. காமரம்: மலையில் வளரும் மரம், மருதநிலப் பண், வண்டு, சோலை
3காவுதல்: சாவச்செய்தல், பலியிடல், காவடி சுமத்தல், கொலை
4. குணில்: மலை விலங்கு, குறுந்தடி, ஊர்வன, கடல்வாழ் உயிரி
5குரவை: மீன், மனிதர், சத்தம், கூத்தில் ஒருவகை
6கூளி: சம்பளம், பேய், வளைவு, மூதாட்டி
7.   கெடவரல்: கெட்டுப்போனது, விளையாட்டு, கருவாடு, ஆடு
8.   கொம்மை: மாரியாத்தா, கும்மி, ஆத்தா, மாமி
9.   கோட்டன்: பறவை, விலங்கு, யாழ்வாசிப்பவன், நடக்க இயாலதவன்
10. சாறு: உணவு, திருவிழா, கொண்டாட்டம், ஆசிரியர்
11. சிதார்: அணிகலன், கடை, கோபுரம், ஆடை
12. செவ்வழி: மலைப்பாதை, மாலை நேரப்பண், பூங்கா, நேர்மையானவழி
13. தூம்பு: கயிறு, கன்று, துளையிசைக்கருவி, துணி
14. பண்ணத்தி: கர்னாடாக இசை, நாட்டுப்புறப்பாடல், தேவாரம், பூச்சிவகை
15. பணிலம்: சங்கு, நத்தை, தண்ணீர், குடை
16. பழிச்சுதல்: இகழ்தல், வாழ்த்துதல், வைதல், திட்டுதல்
17. பாட்டி: வயதானவள், பாடும் மகளிர், மூத்தவள், அறிவாளி
18. வட்டரங்கு: வட்டவடிவமானது, சதுரமான அரங்கு, நீர்நிலை, மேடை,
19. வயிர்: உடல் உறுப்பு, ஒருவகை குழலிசைக்கருவி, உறுதி, பெரிய,
20. விறலி: வெற்றி, போர், ஆர்ப்பாட்டம், ஆடல் மகள்.

விடை: 
1. காப்புக்கயிறு, 2. மருதநிலப் பண், 3. காவடிசுமத்தல் 4. குறுந்தடி 5. கூத்தில் ஒருவகை, 6பேய், 7. விளையாட்டு, 8. கும்மி, 9. யாழ்வாசிப்பவன், 10. திருவிழா, 11. ஆடை 12. மாலைநேரப் பண், 13. துளையிசைக்கருவி 14. நாட்டுப்புறப்பாடல், 15. சங்கு, 16. வாழ்த்துதல், 17.பாடும் மகளிர், 18.சதுரமான அரங்கு 19. ஒருவகை குழலிசைக்கருவி, 20. ஆடல் மகள்.

நன்றி:
அந்திமழை செப்-அக்-2012 இதழ்.

முகவரி: 24 ஏ, கண்பத்ராஜ் நகர்,காளியம்மன்கோயில் தெரு,
விருகம்பாக்கம், சென்னை-92
பேசி: 044- 43514540

வியாழன், 4 அக்டோபர், 2012

உள்கோட்டை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா




அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கங்கை கொண்டசோழபுரத்தை அடுத்துள்ள உள்கோட்டை அரசுத் தொடக்கப் பள்ளி (நூற்றாண்டு விழா), உயர்நிலைப்பள்ளி (பொன்விழா)யில் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து பள்ளியின் நூற்றாண்டு விழாவையும், பொன்விழாவையும் கொண்டாட உள்ளனர்.

நாள்: 06.10.2012(காரிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ப.செந்தில்குமார் இ.ஆ.ப., திரைப்பா ஆசிரியர் பா.விஜய், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். 

இப்பள்ளியில் நாற்பதாண்டுகளுக்கு முன் பணி செய்த திரு. ஐ.நீதியப்பன் ஆசிரியர்(இராஜாவூர், கன்னியாகுமரி) அவர்கள் அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளார். 

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.