நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 மே, 2007

பூத்துக் குலுங்கும் பாப்பா!

பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப்
பொழிலின் நடுவில் கிடப்பதுபோல்
பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற
பவள மல்லி! ஏனழுதாய்?

கோத்த முத்துச் சரம்நழுவிக்
குலைந்து தரையில் உருள்வதுபோல்
தாத்தா தாத்தா என்றழுதே
தாவித் தாவிச் செல்வதெங்கே?

அம்மா என்றே அழைக்கின்றாய்!
அப்பா என்றே விளிக்கின்றாய்!
அத்தை அத்தை எனக்கூட
அழைக்க எங்குக் கற்றாயோ?

எழுதச் சுவடி கொண்டுவந்தே
இருக்கை மிசையில் வைத்திடுவேன்!
அழுத படியே நீஅழைப்பாய்
ஆட்டம் காட்டச் சொல்வாயே!

உண்ணும் பொழுது நகர்ந்தபடி
ஓ..ஆ.. என்று விரைந்தாடி
கண்ணை இமைக்கும் பொழுதினிலே
கவிழ்ப்பாய் குழம்பைச் சோறதனை!

இத்தனை நாளாய் வாழ்க்கையிலே
இப்படி ஒன்றும் கண்டதில்லை!
பத்தரை மாற்றுத் தங்கம்உனைப்
பதுக்கி எங்கே வைப்பதடி?

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி

செவ்வாய், 1 மே, 2007

முன்விலைத்திட்டத்தில் அரிய தமிழ் நூல்கள்


1.சங்க இலக்கியக்களஞ்சியம்

தமிழ்மொழியின் வளத்தைக்காட்டும் சான்றாகச் சங்க நூல்கள் விளங்குகின்றன. இவற்றை அறிஞர் பெருமக்கள் தத்தம் வாய்ப்புவசதிகளுக்கு ஏற்பப் பதிப்பித்து வெளியிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தாமரைச் செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் தம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகத் தக்க அறிஞர்களைக் கொண்டு உரை வரையச் செய்து அனைவருக்கும் கிடைக்கும் படியாகச் செய்தார். அந்நூல்கள் மறுபதிப்புக் காணாமல் இருந்தன. அவற்றைக் கழகம் மீண்டும் பதிப்பிக்க உள்ள செய்தி தமிழர்களுக்கு இன்பம் தரும்செய்தியாகும்.

எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என 36 நூல்களையும் ஏறத்தாழ 10,000 பக்கங்களில் 625 படிவங்களில் 21.8 தெம்மி அளவில் வண்ண மேலட்டையுடன் உறுதியான கட்டுமானத்துடன் வெளியிடத்திட்டமிட்டுள்ளனர். உரூபா 5000 விலை உள்ள நூலைமுன் வெளியீட்டுத்திட்டம் வழியாக உரூபா 3000 விலையில் பெறலாம்.

31.08.2007 நாளுக்குள் பணம் அனுப்பிப்பதிவு செய்பவர்களுக்குக் கழகத்தமிழ் அகராதி (விலை 225)அன்பளிப்பாக அளிக்கப்பெறுமாம். ஒரே தவணையில் பணம் கட்ட இயலாதவர்கள் ஆறு தவணையாகவும் கட்டலாம்.

காசோலை / வரைவோலை வழியாகத் தொகையை The S.I.S.S.W.P. SOCIETY .LTD, Chennai என்ற பெயருக்குஅனுப்பலாம்.

முகவரி :

திருநெல்வேலி தென்னிந்தியசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
522,டி.டி.கே.சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை -600018

2. சொல்லாய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்கள் வெளியீடு

தமிழ்மொழியில் ஏறத்தாழ 27 மொழிகளின் சொற்கள் கலந்துகிடக்கின்றன.இச்சொற்களை இனங்கண்டு அவற்றிற்குரிய தூயதமிழ்ச் சொற்களைப் பேராசிரியர் அருளி அவர்கள் இவை தமிழல்ல... எனவும் அயற்சொல் அகராதி எனவும் முன்பே இரு நூல்களாக வெளியிட்டார். அந்நூற் சொற்களும் அவற்றில் இடம்பெறாத பல்லாயிரம் அயற்சொற்களும் அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களும் பெரிய அளவில் தொகுக்கப்பெற்று அயற்சொல் அகராதி என்னும் பெயரில் நான்கு தொகுதிகளாக வெளிவர உள்ளன.

அறிஞர் அருளி அவர்கள் பல்வேறு நூல்களுக்கு வரைந்த முன்னுரைகள் இரு தொகுதிகளாக வெளிவரஉள்ளன.

தமிழின் வேர்ச்சொற்கள் உலக மொழிகளில் பரவியுள்ளமையை விளக்கும் வேரும் விரிவும் என்னும்நூலின் இரு தொகுதிகளும் வெளிவர உள்ளன.

மேலும் மரம், செடி, கொடி இவற்றின் இலை, தண்டு, பட்டை, வேர், காய், கனி, மலர் என இவற்றிற்குப் பெயர்சூட்டிய காரணங்களை விளக்கும் மரம்-செடி-கொடி வேர் என்னும் நூலின் இரு தொகுதிகளும்வெளிவர உள்ளன.

மேற்கண்ட பத்துத்தொகை நூல்களும் ஒட்டுமொத்தமாக உரூபா 2000 விலை.
ஆனால் முன்பதிவு செய்வோர் உரூபா 1000 விலைக்குப் பெறலாம்.

நூல் வெளியீட்டுநாள் 23.06.2007 காரி(சனி)

முன்தொகையைப் பணவிடையாகவோ / வரைவோலையாகவோ அனுப்பலாம்.

முகவரி :

வேரியம் பதிப்பகம்
தனித்தமிழ்மனை,6.காளிக்கோயில் தெரு,
திலாசுப்பேட்டை,புதுச்சேரி-605009
பேசி : 0413- 2274212
கைப்பேசி : 99436 46240

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி-605003