நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
durga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
durga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஆகஸ்ட், 2008

செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்

எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன்.

செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.

ஆம்.
எங்கள் அம்மா நாங்கள் அளவுக்கு அதிகமாக அடம்பிடிக்கும் பொழுது, 'உங்களைச் செங்கமேட்டுக் காளி தூக்கிகிட்டு போவோ' என்று திட்டுவது வழக்கம்.அந்தச் செங்கமேட்டுக் காளியைப் பார்க்க என் மாமா திரு.பி.தியாகராசன் என்பார் பத்தாண்டுகளுக்கு முன் மிதி வண்டியில் ஒருமுறை அழைத்துச் சென்றார்.அவர் வீட்டருகே இருந்த இரெட்டித்தெரு காளியம்மனைப் போலவே செங்கமேட்டுக் காளியும் சிறப்பிற்கு உரியது என்றார்.

இரெட்டித்தெரு காளி பொல்லாதவள் என எம் பகுதி மக்கள் நம்புவார்கள்.எங்கள் உறவினர் ஒருவர் எங்கள் அத்தையின்(அப்பாவின் தங்கை)குடும்பமும் அவர் மகனும் தண்டிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் காளியின் சூளத்தில் கொலைச்சேவல் குத்தியதாக அடிக்கடி சொல்வார்கள்.அந்தக் கொலைச்சேவல் குத்தியவள் இறந்தாள்.எங்கள் அத்தைக் குடும்பம் நல்ல முறையில் வளமாக உள்ளனர் என்பது தனிக்கதை.

அத்தகு நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.இரெட்டித்தெரு காளியின் கடுந்தோற்றமே ஆகும்.இராசேந்திர சோழன் கலிங்க(இன்றைய மேற்கு ஒரிசா) நாட்டின் மேல் படையெடுத்து வெற்றி பெற்ற பொழுது அங்கிருந்த பல சிற்பங்கள்,நினைவு கலைச் சின்னங்களைக் கொண்டு வந்தான்.அவற்றுள் இறைச்சிற்பங்களும் அடங்கும்.அவ்வாறு கொண்டு வந்து எங்கள் ஊரான கங்கைகொண்ட சோழபுரத்தின் நான்கு எல்லையிலும் நான்கு காளிக்கோயில்களை எல்லைக் காவலுக்கு வைத்தான் என்பது வாய்மொழியாகச் சொல்லப்பட்டுவரும் வழக்கு.அவ்வகையில் தெற்கு எல்லையில் இருப்பவள் வீராரெட்டித்தெரு காளியம்மன்.கிழக்கு எல்லையில் இருப்பவள் செங்கமேட்டுக்காளி.

பத்தாண்டுகளுக்கு முன் நான் சென்ற பொழுது செங்கமேட்டுக் காளி எந்த பராமரிப்பும் இல்லாமல் இருந்தாள்.அவளுக்கு வெயில் மழை எல்லாம் ஒன்றுதான்.மழையில் நீராடுவாள்.வெயிலில் குளிர்காய்வாள். ஏறத்தாழப் பல ஆண்டுகளாக அவள் அவ்வாறு இருந்ததால் சிதைவுகள் தெரியத்தொடங்கின.பத்தாண்டுகளில் நான் பார்க்கும் ஓவியர்கள், புகைப்படக்காரர்கள் என அனைவரிடமும் சொல்லிப் பார்த்தேன்.காளியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த எந்த விடிவும் கிடைக்கவில்லை.ஆனால் தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாக்கப்பட்ட இடம் எனப் பலகை வைத்திருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று விடுதலைநாள் என்பதால்(15.08.2008) ஊருக்குச்செல்லும் வாய்ப்பில் காளியைப் படம் பிடிக்க முனைந்தேன்.

சென்னை- கும்பகோணம் சாலையில் அணைக்கரை மீன்சுருட்டிக்கு இடையில் உள்ள செயங்கொண்டம் குறுக்குச் சாலையில் இறங்கி, 2 கல் தொலைவு வயல்வெளிகளில் தென்கிழக்கே நடந்துசென்றால் செங்கமேட்டுக் காளியம்மனைக் காணலாம்.ஊர் மக்களிடம் சொன்னால் வழி சொல்வார்கள்.

விடுதலைநாள் விழா என்பதால் பள்ளிக்கூடத்தில் தாய்நாட்டைக் காக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஆடிக் கடைவெள்ளி என்பதால் ஊர் இளைஞர்கள் ஒலிபெருக்கியில் அம்மனை வரவழைத்துக் காது கிழிய ஓசையைப் பரவ விட்டனர்.தம்பிகளா!
கொடியேற்றம் நடக்கிறது.எனவே சிறுபொழுது ஒலிபெருக்கியை நிறுத்துங்கள் எனச் சொன்னேன்.அவர்களும் உடன் நிறுத்திவிட்டனர்.

இந்த இடைவெளியில் காளியம்மனைப் பல வகையில் படம்பிடித்துக்கொண்டேன்.

பத்தாண்டுகளுக்குள் பல மாற்றங்களைக் கண்டேன்.நான் முன்பு கண்டபொழுது ஆடையலங்காரம் இல்லாமல் காளி இயல்பாக இருந்தாள்.இப்பொழுது ஆடையலங்காரம். வழிபாடு.பல்வேறு குளிப்புகள் நடைபெறுகின்றன.கல்நார் அட்டையில் கூரைவேயப் பெற்றுப் பாதுகாப்பாக இருந்தாள்.அங்குமிங்கும் சிதறிக் கிடந்த பல சிலைகள் ஓரிடத்தில் நிறுத்தப்பெற்றுப் பாதுகாக்கப்படுகின்றனர்.

தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாக முன்பு அறிவிப்புச் செய்த பலகை இன்றும் உள்ளது.தெற்குப்பகுதியில் ஐந்து சிலைகள் நிரலாக உள்ளன.காளி சிலை மட்டும் தனியே வடக்குப் பகுதியில்உள்ளது.

கலிங்க நாட்டிலிருந்து இராசேந்திரசோழன் காலத்தில் கொண்டுவரப்பெற்ற செந்நிற மணற்கற்களால் ஆன இது கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டு என்ற விவரம்
பெற முடிகிறது.

துர்க்கை,காளி,பைரவர்,பைரவி சிலைகள் கீழே உள்ளன.(இச்சிலைகள் எது எது என அடையாளம் காண எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் தெரிவிக்க அதன் அடியில் குறிப்பிடுவேன்.அதுவரை பொதுப்படையாக அரிய சிற்பங்கள் என்ற வகையில் என் பக்கத்தில் காட்சிக்கு வைக்கிறேன்.
















(இப்படத்தை,குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பெயர்,என் பக்கம் பற்றிய குறிப்பை வெளியிட வேண்டுகிறேன்)