நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
Mr லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mr லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூலை, 2014

குவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidambarom) புதுச்சேரி வருகை


குவாதலூப்பு,சாகுசு சிதம்பரம்(Mr, Jacques Sidambarom) 

கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு குவாதலூப்பு . இந்த நாட்டுக்குப் பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) புதுச்சேரி, காரைக்கால், கும்பகோணம் சார்ந்த பகுதிகளிலிருந்து ஒப்பந்தக்கூலிகளாக மக்களை அழைத்துச் சென்றனர். அவ்வாறு சென்ற தமிழர்கள் கப்பல் பயணத்தின்பொழுதும், நோய்வாய்ப்பட்டும், எரிமலையில் சிக்கியும் பல்லாயிரம் மக்கள் அழிந்தனர். எஞ்சிய மக்கள் குவாதலூப்பு    தீவிலும், மர்த்தினிக் தீவிலும் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களிடம் தமிழ்நாட்டைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகள் இன்றும் உள்ளன. மாரியம்மன் வழிபாடு, பொங்கல் விழா, தெருக்கூத்து, பறையிசை உள்ளிட்ட தமிழக அடையாளங்கள் உள்ள இந்த மக்களிடம் தமிழ்தான் இல்லை.

இவர்கள் இப்பொழுது தமிழகத்தின் தொடர்புக்கு ஏங்குகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரைப் பார்க்கவும். அவர்களின் மொழியைக் கேட்கவும்  குவாதலூப்பு   தமிழர்கள் ஆர்வம்கொண்டு தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கூறாக குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்கள் தம் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். பிரெஞ்சுமொழி மட்டும் அறிந்து, தமிழ் தெரியாமல் இருக்கும் அவர் தம் முன்னோர் வாழ்ந்த ஊரான கும்பகோணத்திற்குச் சென்று அங்குள்ள தெருக்களில் காலார நடந்து ஆனந்தக்கண்ணீர் விட்டு வந்த கதையைச் சொன்னபொழுது அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் ஓடை பெருக்கெடுத்தது.

தமக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவைச் சொல்லிய வண்ணம் அரங்கில் பேசமுடியாமல் கண்ணீர் விட்டு ஒரு நிமையம் அமைதியாக இருந்ததை நினைத்து அவர்தம் உணர்வின் வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாறு நம்மைப் பிரித்தாலும் உணர்வால் இணைந்திருக்கின்றோம் என்று கூறித் தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புவதைச் சொன்னார்.

குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களின் தாத்தா கென்றி சிதம்பரம் அவர்கள் அந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். அவருக்குப் பிரெஞ்சு அரசு அஞ்சல் தலை வெளியிட்டுப் போற்றியுள்ளது. புதுச்சேரியில்  கென்றி சிதம்பரம் அவர்களுக்குச் சிலை வைத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். புதுச்சேரி வருகை தந்துள்ள குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களைத் தூரம் பிரித்துப் பார்க்கலாம். உணர்வால் அவர் நம் தமிழ் உறவினரே!

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு சாம் விசய், திரு. நா. நந்திவர்மன் ஆகியோர் அனைவரின் நன்றிக்கும் உரியவர்கள்.

பேராசிரியர் சிங்காரவேலு

திரு.க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ. வாழ்த்துரை

குவாதலூப்பு விருந்தினர்கள்