நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தொல்காப்பிய மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்காப்பிய மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூன், 2015

மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி


மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கத்தின் சார்பில் இன்று 03.06.2015 அறிவன்(புதன்)கிழமை இரவு எட்டு மணிக்குத் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, புதுச்சேரியிலிருந்து வருகைதரும் முனைவர் மு.இளங்கோவன்  தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரு. அருள்முனைவர், திரு. மாரியப்பனார் உள்ளிட்ட தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

இடம்: கிள்ளான் தாமான் பெர்க்கிலி, பெர்க்கிலி உணவக மண்டபம்

நாளும் நேரமும்: 03.06.2015, இரவு எட்டுமணி

தொடர்புக்கு:

திரு. அருள்முனைவர் 017 – 3315341
திரு. மாரியப்பனார் 012 – 3662286

மு.இளங்கோவன் – 010 - 4356866

புதன், 18 செப்டம்பர், 2013

தொல்காப்பிய மன்றம், இலண்டன்


தமிழ்மொழியின் சிறப்பை நிலைநாட்டுவதற்கு நமக்குக் கிடைத்துள்ள அரிய ஆவணம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்த நூலின் சிறப்பினைத் தமிழ் கற்றோர் அறிவர். மொழியியல் கற்றோர் உணர்வர். மற்றையோர் அறியார்.

தமிழில் உள்ள மற்ற நூல்களைப் பரப்பவும், போற்றவும் நினைவுகூரவும் தனிமாந்தர்களும், அமைப்புகளும், கழகங்களும், மன்றங்களும், திருமடங்களும் உள்ளனர். ஆனால் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லவோ, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கவோ அறிஞர்கள் யாரும் செயல்படுவதாகத் தெரியவில்லை, அவ்வாறு ஓரிருவர் இருப்பினும் அவர்கள் கல்விப்புலத்தில் இருப்பவர்களாகவே இருப்பர்.

சிலப்பதிகாரத்திற்கு ஒரு ம.பொ.சி. அவர்களைப் போலும், திருக்குறளுக்கு அறிஞர் திருக்குறள் முனிசாமியார் போலும் பொதுமக்களிடம் தொல்காப்பியத்தைக் கொண்டு சென்று சேர்க்க ஓர் அறிஞரைக் காண விரும்பினோம். தொல்காப்பியம் என்ற இந்த நூல் தமிழர்கள் அனைவராலும் போற்றத்தகுந்த பெருமைக்குரியது என்பதை நினைவூட்டத், தக்கவர்களைத் திரட்டி ஒருங்கிணைக்கும் முயற்சியில் இலண்டனில் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இலண்டன் தொல்காப்பிய மன்றம் தொல்காப்பியம் தொடர்புடைய ஓலைச்சுவடிகளைத் திரட்டவும், இதுவரை தொல்காப்பியம் குறித்து வெளிவந்துள்ள பதிப்புகளைத் திரட்டவும், தொல்காப்பிய ஆய்வுகளை மின்னியல் பதிப்பாக்கவும், தொல்காப்பிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அறிஞர்களின் வரலாறுகளைத் திரட்டவும், ஓர் ஆய்வடங்கல் அணியப்படுத்தவும், உலகம் முழுவதும் தொல்காப்பியப் பரப்புரை செய்யவும், தொல்காப்பிய மாநாடுகள் நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பிய மன்றத்தின் முதல் பரப்புரை மாநாடு இலண்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பரவலுக்குத் தங்களின் மேலான வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய ஆய்வுகளில் முன்னின்ற ஆய்வறிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய மன்றம் முதலில் இலண்டனில் பதிவுபெற்ற அமைப்பாக விளங்கும். அதன் பிறகு உலகம் முழுவதும் கிளைகள் அமைக்கப்பெறும். தமிழ்ப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.

இலண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட உள்ள தொல்காப்பிய மன்றத்தினைத் திரு.சிவச்சந்திரன் அவர்கள் நிறுவுநராக இருந்து நெறிப்படுத்துவார். திரு.செகன் அவர்கள் செயலாளராக இருந்து செயல்படுவார்.

தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பினைக் குறித்த விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்துகொள்வோம்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com