முனைவர் மு.பொன்னவைக்கோ தொடக்கவுரை
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கமும் மாநாடும் நேற்று(25.08.2012) காலை 10 மணிக்குத் தொடங்கியது. மறைந்த தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார் நினைவு அரங்கில் மாநாடு நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, பிரான்சு, செர்மனி, கனடா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ஈழத்தில் நாடு காக்க உயிரிழந்தவர்களைப் போற்றும் முகமாக ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் கல்வி கற்கத் தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கி இணையத்தில் வைக்கப்பட்டுள்ளதை நினைவூட்டிய முனைவர் பொன்னவைக்கோ முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் இணையவழிக் கல்வித்துறையின் வழியாக வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்தார்.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்திற்காக எஸ். ஆர். எம்.பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை அச்சிட்டு விரைந்து வழங்க உள்ளதையும் எடுத்துரைத்தார். தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் வாழும் தமிழ்க்குழந்தைகள் கல்வி பெறுவதற்கு இயன்ற உதவிகளைச் செய்ய எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தயாராக உள்ளதை எடுத்துரைத்தார்.
மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி அவர்களின் தலைமையில் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரா.மதிவாணன் அவர்கள் குறுகிய காலத்தில் மாநாடு நடைபெறுவதன் நிலையை விளக்கி வரவேற்புரையாற்றினார். தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த திருமதி மிக்கி செட்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் விசு. துரைராசா அவர்கள் நோக்கவுரையாற்றினார். வேல்.வேலுபிள்ளை அவர்களும், துரை கணேசலிங்கம் அவர்களும் முன்னிலையுராயாற்றினர்.
இலங்கை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் சோதி குமாரவேல் அவர்கள் தங்கள் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
பகலுணவுக்குப் பிறகு பேராசிரியர் மறைமலை அவர்களின் தலைமையில் இலக்கியக் கல்வியில் இணையத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் அர்த்தநாரீசுவரன் உரையாற்றினார்.
மாலை 3 மணியளவில் தொடங்கிய ஆய்வரங்கில் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஜானகி அவர்களின் தலைமையில் முனைவர் பரமசிவம்(மலேசியா), முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி), முனைவர் வசந்தாள்(சென்னை) ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற நிகழ்வில் உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் அரு.இலட்சுமணன் கலந்துகொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார்.
முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி அவர்கள் தலைமையுரை
மேடையில் சான்றோர்கள்
பார்வையாளர்கள் ஒரு பகுதியினர்
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள் ஒரு பகுதி
பேராசிரியர் இ.மறைமலை
கனடா விசு துரைராசா நோக்கவுரை
மலேசியப் பேராளர் பா.கு.சண்முகம் அவர்களுக்குச் சிறப்புச்செய்தல்(மு.இ)
புதுவை வீர.மதுரகவி அவர்கள் முனைவர் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்




